Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜெயலலிதா அரசு வரமா? சாபமா?


புதியதாக பொறுப்பிற்க்கு வந்துள்ள தமிழக அரசின் செயல் பாடு எப்படி உள்ளது?
   ட்ட ரீதியாகவும் அதிகார பூர்வமாகவும் வேண்டுமானால் இதை புதிய அரசு என்று சொல்லலாம் ஆனால் நம்மை பொறுத்தவரை இதை இதற்கு முன்பு 10  ஆண்டு காலம் பார்த்த அரசு என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் சென்ற காலத்திற்கும் தற்காலத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை மக்களும் அரசாங்கமும் உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்

 முதல் முறையாக அம்மையார் முதல்வராக செயலாற்றிய ஐந்து வருட காலத்தில் நிச்சயம் நல்ல ஆட்சியை தர வில்லை தான்தோன்றி தனமான மக்கள் நலம் விரும்பாத அரசாகவே அது இருந்தது அதனால் தான் அவர் அடுத்த கட்ட தேர்தலில் தோற்றார்


 இரண்டாவது முறையாக முதல்வர் ஆன பிறகு பெரிய அளவில் குற்றம் குறைகள் இல்லை என்றாலும் சொல்லி கொள்கிற மாதிரி எந்த நன்மைகளையும் செய்து விட வில்லை இப்போது அவரை மக்கள் தேர்ந்து எடுத்து இருப்பது நல்ல ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கையோடு அல்ல கலைஞரின் குடும்ப ஆட்சி மாற வேண்டும் என்பதற்காக தான் ஜெயலலிதா அம்மையார் மக்களால் தேர்வு செய்ய பட்டுள்ளார்

 இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்தார் என்றால் தமிழ் உலகமே அவரை கையெடுத்து கும்பிடும் முன்பு போலவே நடந்து கொண்டால் கலைஞரை விட அதிகமான தண்டனையே மக்களிடம் பெற வேண்டிய சூழல் ஏற்படும் அம்மையாரின் அரசு தமிழ் நாட்டிற்கு வரமா சாபமா என்பது போக போக தான் தெரியும்

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா எதாவது நல்லது செய்வாரா?

முதல் கட்டமாக தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை சரிவர ஏற்படுத்த போவதாக அறிவித்து இருப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது


  அதே நேரம் இரும்பு இதயம் கொண்ட மத்திய காங்கிரஸ் அரசை ஜெயலலிதாவால் மாற்ற முடியும் என்று நான் நினைக்க வில்லை காரணம் ராஜூவ் காந்தியின் காலத்திலிருந்தே மத்திய அரசின் செயல் பாடு இலங்கை தமிழருக்கு பயன் அளிக்க கூடிய விதத்தில் இல்லை

 அதை மாற்ற தமிழர்களின் உணர்வுகளை ஆத்ம பூர்வமாக தேசிய அளவில் ஜெயலலிதா எடுத்து சென்றால் நன்றாக இருக்கும் அவரிடம் இப்போது இருக்கும் கனிவு தொடர்ந்து இருந்தால் ஈழ தமிழருக்கு சிறிதாவது நன்மை ஏற்படும்

திமுக அரசின் பல திட்டங்களை முதல்வர் நிறுத்தி வைத்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறிர்கள்?

முந்தைய கலைஞர் அரசு கொண்டு வந்த நல திட்டங்கள் பல உருப்படாதவைகள் தான் உதாரனமாக மருத்துவ காப்பீடு திட்டம் விஞ்ஞான பூர்வமாக மக்களை ஏமாற்றுவது ஆகும்

 நாட்டில் அரசு மருத்துவ மனைகள் எதற்கு இருக்கிறது? தரமான நல்ல சிகிச்சையை மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்கு தானே! அரசு மருத்துவ மனைகளை செம்மை படுத்துவதை விட்டு விட்டு காப்பீடு திட்டம் அது இது என பேசியதே மோசடியாகும் இப்படி பட்ட திட்டங்களை நிறுத்துவது தவறு அல்ல 


 புதிய சட்ட சபை கட்டிடத்தை பயன்படுத்தாதது சரியா?

புதிய சட்டசபை கட்டிடம் கலைஞரின் குடும்ப வருமானத்தில் கட்டப்பட்டது அல்ல முழுக்க முழுக்க மக்களின் வரி பணத்தில் உருவானது அதை பயன்படுத்தாமல் விடுவது பெரிய தவறாகும்

 ஒரு அரசு கொண்டு வந்ததை இன்னொரு அரசு செயல் படுத்தினால் எதுவும் குறைந்து போகாது அந்த கட்டிட அமைப்பில் குறை இருந்தால் அதை சீர் செய்து பயன் படுத்துவது தான் முறையான செயல்

 அதை விட்டு விட்டு வீண் பிடிவாதத்தால் மக்கள் பணத்தை விரையம் செய்வது ஒரு நல்ல அரசிற்கு அழகு அல்ல

சமச்சீர் கல்வி கைவிடப்பட்டது சரியா?


இந்த கல்வி திட்டத்தில் குறைப்பாடுகள் இருந்தால் அதை வரும் கல்வி ஆண்டில் சீர் படுத்தலாம் அதே செய்யாமல் அச்சடித்த நூல்களை விணாக்குவது தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்றது அல்ல இந்த நடவடிக்கை பழையப்படி கல்வியில் வியாபார மயமாக்குதலை ஊக்கு விக்கவே செய்யும் 


தமிழக நதிகள் இணைக்கப்பட போவதாக சொல்லி இருப்பது வரவேற்க தக்கதா?

நதிகள் இணைப்பு என்பது வரலாற்று நோக்கிலும் சுற்று சூழல் நோக்கிலும் இதுவரை எந்த நாட்டிலும் சரியானதாகவும் பின்விளைவு இல்லாததாகவும் இல்லை என்பதே உண்மை ஆகும்

 ரஷ்யாவில் இருந்த பல நதிகள் இணைக்கப்பட்ட பிறகு அந்த நாட்டில் புவி அமைப்பிலேயே பல விரும்ப தகாத மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன

 கங்கை காவேரி இணைப்பு தமிழக நதிகள் இணைப்பு என்பவைகள் எல்லாம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும் செயல் படுத்தினால் பல பின் விளைவுகள் ஏற்படும் இதை ஏனோ நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பது இல்லை

 உண்மையாக நீர் ஆதாரங்களை காப்பாற்ற வேண்டும் என்றால் முற்றிலுமாக ஆற்று படுகைகளில் மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும் நாடு முழுவதும் உள்ள ஏரி குளங்களை ஆழப்படுத்தி நீர் வரத்து வாய்க்கால்களை செம்மைப்படுத்த வேண்டும்

 விவசாய நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றுவதை தடுக்க வேண்டும் நதி இணைப்புக்காக செலவிடும் பணத்தை நாடு முழவதும் உள்ள வனங்களை பாதுகாக்கவும் புதிய வனங்களை உருவாக்கவும் செலவிட்டால் நல்ல பலன் நிரந்தரமான பலன் கிடைக்கும் இத்தகைய கவர்ச்சி திட்டத்தால் பூமி மேலும் கெடத்தான் செய்யும் 


சூர்ய மின்சார திட்டம் நடை முறைக்கு சாத்தியமா?

நிச்சயம் அது நல்ல திட்டம் நம் தமிழ் நாட்டில் வெயிலுக்கு பஞ்சம் இல்லை தெரு விளக்குகள் வீட்டு உபயோகத்திற்குகான மின்சார தேவைகள் போன்றவற்றிக்கு முதல் கட்டமாக சூரிய சக்தியை பயன் படுத்தலாம்

 சூரிய மின்சாரத்தை விரும்பியவர்கள் பெறுவதற்கான வழி எளிமையாக இருக்க வேண்டும் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் மின்சார உபகரணங்கள் அடிக்கடி பழுது படாமலும் உடனுக்குடன் பரமாரிக்க கூடியதாகவும் இருந்தால் நிச்சயம் மக்கள் விரும்பி ஏற்று கொள்வார்கள்

தற்போதைய மின்சார வாரியத்தின் ஆமை வேக செயல் பாடுகளை மாற்றி கொண்டால் தான் இந்த திட்டம் பயன் தருமே அல்லாமல் இதே கட்டுமானத்தில் செயல் பட்டால் இது ஒரு கனவு திட்டமாகவே தொடரும்

Contact Form

Name

Email *

Message *