Store
  Store
  Store
  Store
  Store
  Store

விரும்புகின்றவர்களுக்கு வழி காட்டுங்கள்

    ங்கள் ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார். பார்ப்பதற்கு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் தான் இருப்பார். அதிகம் பேசமாட்டார், யாரோடும் அதிகம் உறவும் பாராட்ட மாட்டார். ஆனால் ஒரு நோயாளியின் கையை பிடித்து பார்த்துவிட்டால் அவன் ஜாதகத்தையே சொல்லிவிடுவார்,

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் அன்றைய உணவில் என்ன பதார்த்தங்களை சேர்தான் என்பது வரை சொல்லி விடுவார், எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். மனுஷன் எதாவது மை வித்தையை வைத்திருக்கிறாரா? அல்லது மாய மோகினிகள் எவற்றையாவது வசியம் செய்துவைத்து இதை செய்கிறாரா? என எங்களுக்குள் பேசிகொள்வோம் அவரிடம் அதைப்பற்றி கேட்டால் எல்லாம் நாடி ஒட்டத்தை வைத்துதான் சொல்கிறேன், மாயமந்திரம் எதுவும் இல்லை என்று சொல்லி விடுவார், ஆரம்பத்தில் மிகப்பேரிய புதிராக அருந்த இந்த விஷயம் அனுபவம் விரியவிரிய, அறிவு வளரவளர தெரிய ஆரம்பித்தது,


    நாம் சாம்பார், ரசம், மோர், பழைய சாதம் என்று எதை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் அவைகள் சுவையில் தான் மாறுபாடு உடையதே தவிர அடிப்படை குணாம்சத்தில் வாதம், பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று வகையில் அடங்கிவிடும் அதாவது வாதம் என்றால் வாயுவையும், அதை உற்பத்தி செய்யும் உணவு பதார்த்தத்தையும் குறிக்கும் இதே போலவே பித்தம் என்றால் சூட்டையும் சிலேத்துமம் என்றால் குளிர்ச்சியையும் குறிக்கும்

 இந்த மூன்று வகை சத்து பொருட்கள் தான் மனித உடம்பை ஆரோக்கியம் உடையதாகவும், சுகவீனம் உடையதாகவும் ஆக்குகிறது அவைகள் ஒரு மனிதனின் சரீரத்தில் குறைகிறதா? கூடுகிறதா? என்பதை அவன் மணிகட்டில் ஒடுகின்ற நாடித்துடிப்பை வைத்து அறிந்து கொள்ளலாம். இதை துல்லியமாக கணக்கு போட தெரிந்த வைத்தியனே சிறந்த சிகிச்சையை நோயாளிக்கு வழங்குகிறான்,இதனால் தான் சித்த வைத்திய முறை ஒரு நோயாளியை பொறுத்தவரை அதிர்ஷ்டம் உடையதாகவோ, துரதிஷ்டம் உடையதாகவோ மாறுகிறது,

        சித்த வைத்தியத்திலுள்ள மிகச்சிலகுறைகளில் இதுவும் ஒன்று, எவ்வளவு தான் வீரியமிக்க மருந்தாக இருந்தாலும் அதன் பயன்பாட்டுவிதம் என்பது மருத்துவனின் திறமையை பொறுத்தே அமைகிறது, இது மட்டுமல்ல நோயிலிருந்து விடுதலை பெறுவதில் நோயாளியின் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் மிகவும் முக்கியமானது, நமது கண்ணுக்கு ஒருவர் திறமையில்லாத வைத்தியராக படலாம், ஆனால் அவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டால் தான் குணமாகும் என்று பலர் அடம்பிடிப்பதையும் நாம் பார்க்கிறோம், அப்படி அடம்பிடிப்பவர்களிடம் கேட்டால் அவர் கைராசியான டாக்டர், அவர் மருந்தே தரவேண்டாம் கையால்தொட்டாலே போதும் நோய் பறந்து விடும் என்பார்கள். இதை வாதம் பிரதிவாதம் செய்து ஆராயும் போது ஆதாரமில்லாத நம்பிக்கை என்ற முடிவுக்கே வரவேண்டியது இருக்கும் ஆனால் அனுபவத்தில் அந்த நம்பிக்கை சரியானது. முட்டாள்தனமானதல்ல என்ற உண்மையும் நமக்கு தெரியும்.


 அரியலூரில் தஞ்சாவூர் செல்லும் முக்கிய சாலையில் மருத்துவமனை வைத்திருக்கும் டாக்கர்  KH.M.ஸரூக் M.S., அவர்களை பற்றி இங்கே குறிப்பிட வேண்டும், அவர் எனது இனிய நண்பர், கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும் ஆவார் தமிழகம் முழவதும் சிக்கன் - குன்யா நோய் மக்களை அவதி படுத்தியபோது இவரிடம் எராளமான நோயாளிகள் வருவார்கள்

 வந்தவர்கள் அனைவருமே ஆச்சர்யப்படும் விதத்தில் சில நாட்களில் குணமடைந்து விடுவார்கள், அதில் கவனிக்க வேண்டியது என்னவேன்றால் சிக்கன்- குன்யா வந்து சென்ற பிறகு கால், கை எல்லாம் அடித்து போட்டது போல் வலி இருக்கும் அந்த கொடுமை ஆறு மாதம் வரைக்கும் கூட நீடீக்குமாம் ஆனால் டாக்டர் ஸரூக்கிடம் சிகிச்சை பெற்ற எவருக்கும் அந்த வலி வேதனை என்பதே கிடையதாம்

 அதற்கு எதாவது விஷேச மருத்து கொடுக்கிறீர்களா என்று அவரிடம் கேட்ட போது அப்படி எதுவும் கிடையாது. வழக்கமாக கொடுக்கும் மருந்துகள் தான் கொடுக்கிறேன் என்கிறார் ஆனால் இதை அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் யாரும் நம்ம தயராக இல்லை, அவரிடம் ஏதோ ஒன்று யாரிடம் இல்லாதது இருக்கிறது என்று பிடிவாதமாக சொல்கிறார்கள்.


  வெறும் அறிவியல் கண் கொண்டு பார்த்தால் இந்த நம்பிக்கைகளுக்கும், கருத்துகளுக்கும் போதிய நம்பகதன்மை கிடைக்காது. அறிவியல் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு யதார்த்தனமான பார்வையோடு இவ்விஷங்களை அணுக வேண்டும்

ஒரு நோய் ஒரு மருத்துவனால் குணப்படுத்தப்படுகிறது என்றால் முதலில் நேயாயாளியின் நேரம். காலம் நன்றாக இருக்க வேண்டும், அடுத்தது வைத்தியனுடைய கிரகச்சாரமும், நோயாளியின் கிரகச்சாரமும் வசியப்பட்டு வரவேண்டும், அதற்கு அடுத்ததாக கொடுக்கப்படும் மருந்து ஜீவன் உள்ளதாக இருக்க வேண்டும். கடைசியில் தான் மிக முக்கியமான விஷயம் இருக்கிறது. நோய்க்கான சிகிச்சை ஆரம்பிக்கும் நேரம் ரோகம் மிகுந்ததாகவோ, விஷமுடையதாகவோ இருக்க கூடாது, இப்படி எல்லாமே சரியாக அமைந்துவிட்டால் நோயும் ஒடியே விடும்,   
   
இந்த இடத்தில் சில கேள்விகளை உங்களுக்கு கேட்க தோன்றும். ஒருவனுடைய நேரம். காலம் கெட்டு போனால்தானே நோய் என்பதே வரும், பிறகு எப்படி நோயாளியின் நேரம் நன்றாகஇருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று. இது நிச்சயம் சரியான கேள்விதான் ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் அவனது மூன்றாம் இடம் மற்றும் ஆறாம் இடத்திற்கு உரிய கிரகத்தின் தசா புத்தி நடக்கும் போதோ அல்லது அக்குறிப்பிட்ட கிரகத்தின்  தன்மை கெட்டு போய் இருக்கும் போதோ மனிதனை நோய் தாக்குகிறது


 அந்த கெட்ட கிரகமும் மற்ற நல்ல கிரகமும் தினசரி ஒவ்வொரு மணி நேரத்தையும் ஆட்சி செய்கிறது அப்படி ஆட்சி செய்யும் போது குறிப்பிட்ட மனிதனுக்கு நல்லது நடக்கும் கிரக ஒரையில் வைத்தியம் செய்ய போகலாம் உடனடி அபாயத்தை கொடுக்கும் நோய்களை தவிர மற்ற நோய்களுக்கு இம்முறையை பின்பற்றுவது ஒன்றும் சிரமம் இல்லை.

    அடுத்ததாக நோயாளி மற்றும் வைத்தியனின் கிரகச்சாரம் சரியாக இருக்க வேண்டும் என்பது எப்படி என கேட்கலாம் அதவாது இந்த இடத்தில் மருத்துவனின் மனோநிலை மிகவும் முக்கியமானது இக்கட்டான விஷயங்களை சந்தித்து கொண்டிருக்கும் போதோ பரபரப்பான எண்ண ஒட்டங்கள் ஒடும் போதோ கிளர்ச்சி மற்றும் கோபத்தில் இருக்கும் போதோ ஒரு மருத்துவன் வைத்தியம் செய்ய முயல்வானே ஆனால் அவனால் நிச்சயம் நோயின் தன்மையை சரியாக கணிக்க முடியாது

 ஒரு தலைவலி வருவதற்கே ஆயிரம் காரணங்கள் இருக்கிறது ஒழுங்காக ஆராய்ந்து மருந்து கொடுக்காவிட்டால் படுபயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் அதனால் தான் வைத்தியம் தெரிந்தவர்கள் நோயாளிகளை பரிசோதிக்கும் போது பெண்டாட்டியிடம் அடிவாங்கியது, புருஷன் வாங்கி தராத புடவையை நினைத்து கொண்டோ இருக்ககூடாது என்பது இதை தான் பரஸ்பரம் கிரகச்சாரம் ஒத்து வரும் நேரம் என்பது.


 அடுத்ததாக வருவது மருந்து ஜீவனோடு இருக்க வேண்டும் என்ற விஷயமாகும் இதை தான் இந்த கட்டுரையில் மிக முக்கியமாக பேச போகிறோம் என்பதினால் வைத்திய சிகிச்சை ஆரமிக்கும் நேரம் விஷம், ரோகம் என்றால் என்ன என்பதை ஆராய்வோம் உங்கள் வீட்டில் தினசரி காலண்டர் இருந்தால் திருப்பி பாருங்கள் அதில் கௌரி பஞ்சாங்கம் என்ற ஒன்று போட்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள்

 அதில் சோரம், ரோகம், விஷம் என்ற வார்த்தைகள் இருக்கும் ரோகம், விஷம் என்ற வார்த்தைகள் சில மணி நேரங்களுக்கு குறிப்பிட்டு இருப்பார்கள் இதில் சோரம் என்ற நேரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது, சோதனைக்காக அந்த நேரத்தில் கொடுத்து பாருங்களேன் அவ்வளவு சீக்கிற கடன் திருப்பி வராது. கடன் கொடுக்க கூடாது என்பதோடு கூட வாங்க கூடாது என்பதும் அடங்கியிருக்கிறது ,ரோகம், விஷம் என்று குறிப்பிட்டு இருக்கும் பொழுதில் சிகிச்சையை ஆரம்பித்தாலோ மருந்துண்ண துவங்கினாலோ நோய் அவ்வளவு சீக்கிரம் உடலை விட்டு விலகாது.

        இப்போது நாம் முக்கிய விஷயத்திற்காக வருவோம். மருந்துக்கு ஜீவன் உயிர் என்று சொல்வதெல்லாம் விளையாட்டான காரியங்கள் அல்ல, பொதுவாக உயிர் உடையவைகளை ஜீவவஸ்துக்கள் என்றும் ஜட வஸ்துக்கள் என்றும் இரண்டாக பிரிப்பது வழக்கம் ஆனால் தர்க்க ரீதியில் ஆராயும் போது உலகில் ஜட வஸ்துக்கள் அதாவது உயிர் இல்லாத பொருட்கள் என்று எதுவுமே கிடையாது. காரணம் உயிரற்றவைகளில் இருந்து உயிர் உள்ள பொருட்கள் தோன்ற முடியாது. ஜட வஸ்து என்று சொல்லப்படும் ஒரு மரகட்டையில் கூட சில புழு பூச்சிகள் தோன்றுகின்றன. அவைகளின் தோற்றத்திற்கு மரகட்டையானது முழுமுதற் காரணமல்ல அவற்றை ஒட்டி வாழும் உயிரினங்களே காரணம் என்று சொல்லி வாதிடலாம் ஆனால் உயிரில்லாத பொருட்கள் எதுவும் ஒரே திரளாக சேர்ந்திருக்காது. தூள்தூளாகி காற்றோடு கலந்துவிடும். மரகட்டை தூளானாலும் கூட வேறொன்றாக மாறுகிறதே தவிர அது முற்றிலும் இல்லாமல் போவதில்லை.
ஆக நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாவற்றிலும், பார்க்காத பொருளிலும் ஜீவன் இருக்கிறது.


   குறிப்பாக மூலிகை வகைகளில் அவைகள் காய்ந்து சருகாக போனால் கூட வீரியம் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் உயிர்தன்மை என்பது மாறாது இருப்பதே ஆகும். ஒருவருக்கு மூலம் இருக்கிறது என்றால் அவருக்கு நத்தை பஷ்பம் கொடுக்கப்படும். ஆனால் அது சில நேரங்களில் வேலை செய்யாமல் போய் விடுவதுண்டு, அதே பஷ்ப்பம் வேறொரு முறை கொடுக்கப்பட்டால் நோய் நல்லவிதத்தில் குணமாகி விடும்.

 ஒரு நேரத்தில் வேலை செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் நோயாளியின் உடல் கூறு அல்ல. மருந்தின் தன்மையேயாகும் அதாவது அந்த மருந்தினுள் இயற்கையாக இருக்கின்ற ஜீவன் மாறி போய்விட்டது என்பதே உண்மை காரணமாகும்.

 அது எப்படி மாறும் என சிலர் யோசிக்கலாம். ஒரு இறந்த உடலிருக்கிறது என எடுத்து கொள்வோம். அதிலிருந்து ஜீவன் பிரிந்தவுடன் அது வோறொரு தன்மையை அடைகிறது. சிறிது நேரம் செல்ல செல்ல விறைப்பு ஏற்பட்டு கடைசியில் அழுக ஆரமித்து விடுகிறது. அழுகிய சரீரத்தில் கிருமிகள் உற்பத்தியாகுதல் புழுக்கள் தோன்றுதல் என வரிசையாக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கடைசியில் உடல் பல கூறுகளாக ஆகி அதிலிருந்து தோன்றிய ஜீவன்கள் எல்லாம் வேறு வேறு இடத்திற்கு போய்விடுகின்றன


  இதே நிலை தான் ஒரு மூலிகை செடியில் நடக்கிறது. மண்ணிலிருந்து பறிக்கப்பட்ட உடன் ஒரு மாதிரியாகவும், சில நாட்களில் வேரு மாதிரியாகவும் ஆகி விடுகிறது. ஆனால் குளிருட்டப்பட்ட அறையில் பெட்டியில் பாதுகாக்கப்படும் உடல் விரைவில் கெட்டு போகாதது போல மூலிகைகளின் ஜீவதன்மை மிக விரைவில் மாற்றமடையாமல் ஒரே சீராக இருப்பதற்கு நமது பழைய கால சித்தர்கள் ஒரு ரகசிய வழியை கண்டறிந்துள்ளனர்.

 அந்த ரகசிய வழிக்கு காப்பு கட்டுதல், சாப நிவர்த்தி செய்தல் என்று வேறு வேறு பெயர்கள் இருக்கின்றன. அத்தகைய முறைப்படி எடுக்கப்பட்ட மூலிகைகளில் இருந்து உருவாகும் மருந்துகள் அதிசயப்படும்படியாக நோய்களை குணப்படுத்துகிறது. இந்த முறையை முறைப்படி தெரிந்த வைத்தியர்கள் செய்கின்ற மருந்து மற்ற மருந்துகளை விட வீரியம் உடையதாகவே இருக்கிறது. சில வைத்தியர்கள் அதிசய சிகிச்சைகள் செய்வதும் இதை வைத்துதான்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களும் அரிதான பொருட்களும் இயற்கை நியதிப்படி சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே சக்தி உடையதாக இருக்கிறது. உதாரணமாக நவரத்தினங்களில் ஒன்றான முத்து கடலில் வாழும் ஒருவித நத்தைக்குள் உற்பத்தியாகிறது என்பது நமக்கு தெரியும். அந்த வகை நத்தைகளில் எல்லாவற்றிலும் முத்துக்கள் இருக்காது. ஆவணி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் அன்று மழைதுளியை தனக்குள் வாங்கி கொள்ளும் நத்தைகளிலேயே முத்துக்கள் வளர்வதாக மிக பழையகால ரத்தின சாஸ்திர நூல்கள் சொல்லுகின்றன. பல அனுபவப்பட்ட முத்து குளிப்பவர்களும் இக்கருத்தை ஒத்து கொள்கிறார்கள் 


 அதே போலவே நோய் தீர்க்கும் அபூர்வ மூலிகைகளில் சில நாட்கள் மட்டுமே மருத்துவ குணம் மேலோங்கி நிற்கிறது. அது எந்த நாள் என கண்டறிந்து அந்த நாளில் மூலிகைகளை காப்பு கட்டி சேகரித்தால் தான் மருந்து வீரியம் மிக்கதாக நோயை உடனடியாக குணப்படுத்துவதாக இருக்கும் என அனுபவப்பட்ட பல சித்த வைத்தியர்கள் சொல்கிறார்கள். அது உண்மையும் கூட.

       மூலிகைகளை சேகரிக்கும் ஜீவனுடைய நாள் எதுவென அறுதியிட்டு நம்மால் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு நாள் சொல்லப்படுகிறது. இதை அனுபவம் வாய்ந்தவர்களிடம் உட்கார்ந்து முறைப்படி கற்காவிட்டால் நமக்கு தெரியாது. ஆனால் மூலிகைக்கு காப்பு கட்டும் மந்திரத்தைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்

 இதை யாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றால் கட்டுரையின் துவக்கத்தில் ஒரு வைத்தியரை பற்றி சொன்னேன் அல்லவா ? அவரிடம் இருந்து தான் கற்றுகொண்டேன் அவர் பெயர் பாபகான் பாய் என்று எல்லோரும் சொல்வார்கள். அவர் பிறப்பால் முஸ்லிம் என்றாலும் குரானை தலைகீழ் பாடமாக கற்றவர் என்றாலும் ஒரு நாள் கூட பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை செய்ததை நான் பார்த்தது இல்லை


 நீங்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்வதில்லை என்று கேட்டால் பள்ளியில் சென்று தொழுவது நாலு பேருக்கு தெரியவேண்டும் என்பதற்காக தான் நான் தொழுவது கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று பளிச்சென பதில் சொல்வார். மத துவேசம் என்பது அவரிடம் துளிகூட நான் பார்த்தது இல்லை. நான் சந்தித்த பரந்த மனபான்மை உள்ள முஸ்லிம்களில் அவரும் ஒருவர்

 அவர் எனக்கு அந்த மந்திரத்தை சொல்லித் தரும் போது 97- வயதை கடந்த வராக இருந்தார். ஆனாலும் இருபது வயது பையனின் சுறுசுறுப்போடு தான் அவர் காணப்படுவார். கடினமான கரும்பை கூட மிக சுலபமாக கடித்து மெல்வார். வேளை  தவறாத எளிய உணவு கூடியமான வரை உண்மை பேசுதல், கட்டுபாட்டுடன் கூடிய புலன் இன்பம் இவைகளே தனது ஆரோக்கியத்தின் ரகசியமென அடிக்கடி சொல்வார். அவரிடம் பரம்பரையாக கற்று கொண்ட எத்தனையோ வித்தைகள் உண்டு என்றாலும் அதை வெளிகாட்டி கொள்ளமாட்டார். அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் சொல்லி தரவும் மாட்டார்.    

    இனி அவரிடமிருந்து  நான் கற்றுக் கொண்ட காப்பு கடடு மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது அவரிடம் பலநாட்களாக கெஞ்சி கூத்தாடி கற்ற விஷயம் என்றாலும் பகிரங்கமாக இங்கே வெளிப்படுத்துவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. மந்திரங்களை மனப்பாடம் செய்து ஆயிரகணக்கான உருபோட்டு கொண்டாலும் மன ஒரு நிலைப்பாடு இல்லையென்றால் எந்த மந்திரமும் வேலை செய்யாது. மன ஒருநிலைபாடு இருக்கும் மனிதன் அவ்வளவு சீக்கிரம் தப்பு தண்டா செய்யமாட்டான். அதனால் தான் தைரியமாக வெளிப்படுத்துகிறேன்.


    நாம்  எந்த மூலிகையை மருந்துக்காக எடுக்க வேண்டுமோ அந்த மூலிகை செடியை குறுப்பிட்ட நாளுக்கு இரண்டொரு தினங்களுக்கு முன்பாகவே அந்த செடியிருக்கும் இடத்தை புல்பூண்டு இல்லாமல் சுத்தப்படுத்தி கொள்ளவேண்டும். கூடியமானவரை மஞ்சள் நீர் அல்லது பசுங்கோமியம் தெளித்து மணலில் உள்ள தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அதன் பிறகு குறிப்பிட்ட நாளில் மஞ்சள் கயிரை மூலிகை செடியில் கட்டி பழம் தேங்காய் படைத்து தீபாராதனை செய்து

            ஓம் மூலி சர்வ மூலி
            உன்னுடைய உடல், உயிர்
            எப்போதும் பிரியாமல்
            முக்காலம் நிற்க ஸ்வாகா


                        என்ற மந்திரத்தை 32 முறை ஜெபம் செய்து மீண்டும் ஒரு முறை தீபாராதனை செய்து ஒரு தாயிடமிருந்து குழந்தையை எப்படி பெற்று கொள்வோமோ அப்படி சுண்டு விரல் படாமல் இலைகளை சிதைக்காமல் மண்ணில் இருந்து பிடுங்கவேண்டும். அதன் பிறகு

            ஓம் சக்தி சாபம் நசி நசி
            ஓம் சகல சாபம் நசி நசி
            ஓம் சித்தர் சாபம் நசி நசி
            ஓம் மூலிகை சாபம் நசி நசி
            ஓம் சகலதேவர் சாபம் நசி நசி
            ஓம் காளி ஓம் பிடாரி
            ஓம் நசி நசி வய ஸ்வாகா


 என்ற மந்திரத்தை நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும். அதன் பிறகு மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட மூலிகை செடியை சுத்தமான ஈரத் துணியில் சுற்றி கொண்டு வந்துவிடலாம்.

             இதில் கவனிக்க வேண்டியது இந்த இரண்டும் மந்திரங்களை நன்றாக மனப்பாடம் செய்திருக்க வேண்டும். நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து படிக்கும் வேலை எல்லாம் கூடாது. மேலும் இந்த மந்திரத்தை வாய்விட்டு சத்தமாக சொல்லக்கூடாது. மனதிற்குள் சொல்ல வேண்டும். இதை விட கவனிக்க வேண்டியது இந்த மந்திரங்களை ஆடி அல்லது புரட்டாசி அமாவாசையிலோ தை அமாவாசையிலோ  அமைதியான இடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து ஆயிரத்தெட்டு முறை ஜெபிக்க துவக்க வேண்டும்.

  அப்படி தொடர்ச்சியாக தொன்னூறு நாட்கள் ஜெபித்த பிறகு மந்திர சித்தி ஏற்படும். மந்திர சித்தி இல்லாமல் மூலிகைக்கு காப்பு கட்ட முயற்சித்தால் எந்த பயனும் இல்லை. இப்படி முறைப்படி காப்பு கட்டி செய்யும் மூலிகை மருந்துகளே நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும். மற்ற மருந்துகள் அவ்வளவாக  பயன் தராது. இதனால் தான் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் மூலிகை மருந்துகள் வீரியம் இல்லாததாக இருக்கிறது.

ஆங்கில மருந்துக்கள் நீங்கள் சொல்லுகின்றபடியான காப்புகட்டி மந்திரம் சொல்லியா தாயாரிக்கப்படுகிறது? அவைகள் நோய்களை குணப்படுத்தவில்லையா ? என்று சிலர் கேட்கலாம். எனக்கு ஆங்கில மருந்துவத்தை பற்றி கடுகளவு கூட தெரியாது எனக்கு தெரிந்ததெல்லாம் மூலிகை மருந்துகளை மட்டும் தான். தெரிந்ததை பேசாமல் விட்டாலும் பயன் இல்லை தெரியாததை பேசினாலும் பயன் இல்லை. இதை படித்தவர்கள் முயன்று பாருங்கள். மற்றவர்கள் விரும்புகின்றவர்களுக்கு வழி காட்டுங்கள்.  




 

Contact Form

Name

Email *

Message *