Store
  Store
  Store
  Store
  Store
  Store

எதிர்பார்ப்பவன் ஏமாளி! நம்புகிறவன் கோமாளி!

  ம்ம ஊர் பகுத்தறிவாதிகள் ஊரெல்லாம் மேடை போட்டு தெருவெல்லாம் கூட்டம் கூட்டி மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்டுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் கல்லை வணங்குவது மூட நம்பிக்கை கடவுள் உண்டென்று நம்புவது மூட நம்பிக்கை ஜோதிடம் சகுனம் சாஸ்திரங்கள் எல்லாமே மூட நம்பிக்கையின் மொத்த வடிவம் தான் என்று சாடுகிறார்கள்

எனக்கொரு சந்தேகம் இன்பம் துன்பம் இருட்டு வெளிச்சம் குளிர்ச்சி சூடு அறிவாளி முட்டாள் என்று இரண்டிரண்டாக இருப்பது போல் நம்பிக்கையிலும் இரண்டு வகை இருக்கிறதா மூட நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் அறிவுடைய நம்பிக்கை என்று மற்றொன்று இருக்க வேண்டுமல்லவா இத்தகைய அறிவு நம்பிக்கை எது என்று நமக்கு யாருமே அடையாளம் காட்டவில்லையே எது ஏன்

அதனால் எனக்கு தோன்றுகிறது நம்பிக்கை என்றால் நம்பிக்கை தான் அதில் மூடத்தனம் அறிவுத்தனம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது இன்னும் சொல்ல போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம் என்று தான் அனுபவத்தில் காண முடிகிறது 


காலையில் விழித்து பின்னர் குளித்து கடையை திறந்து வியாபாரம் செய்ய போகிறோம் இன்று வியாபாரம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறோம்

தான் நடித்து வெளிவருகின்ற புதிய படம் மாபெரும் வெற்றியை தரும் தனது பேரும் புகழும் வானளாவி பறக்கும் ரசிகர்கள் கூட்டம் தன்னை மொய்க்கும் என்று ஒரு நடிகன் நம்புகிறான்

பரண் மீது வைத்த விதையை மழை வந்தவுடன் எடுத்து வந்து விவசாயி நிலத்தில் விதைக்கிறான் வளரும் பலன் தரும் கடன் தீரும் என்று நம்புகிறான்

ஆகாய விமானத்தில் பரப்பவன் பத்திரமாக தரையிறங்குவோம் என்ற நம்பிக்கையில் தான் ஆனந்தமாக பயணம் செய்கிறான்

ஆனால் இவை எல்லாம் அப்படியேதான் நடக்கிறதா கண்டிப்பாக நடக்கும் என்று எவராலும் உறுதி தர முடியுமா நிச்சயம் முடியாது நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் உலகம் உலகமாக இருக்காது ஹிட்லர் நினைத்தது நடந்திருந்தால்...? ஒசாமாவின் நினைவுகள் நிறைவேறி இருந்தால்...? சுனாமி வராமலே இருந்திருந்தால்...? உலகத்தின் தலை எழுத்தே வேறு விதமாக இருக்கும் 


 ஆகவே நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம் தான் அதில் நல்லது கெட்டது என்று வித்தியாசம் இல்லை அப்படி வித்தியாசப் படுத்தி பார்ப்பதே அறிவீனம் தான்

இன்று உலகத்தவர் கண்களில் நிறைவேறிய நம்பிக்கை கெட்டிக்காரத் தனமாகவும் தோற்றுப் போன நிறைவேறாத நம்பிக்கை மூடத்தனமாகவும் பார்க்கப்படுகிறது இந்த பார்வையில் நிச்சயம் கோளாறு இருக்கிறது ஒருவன் ஒரு திட்டம் தீட்டி செயல்பட்டு வெற்றிபெற்றான் என்றால் அறிவியல் படி அடுத்தவனும் அதே திட்டத்தில் அதே செயலில் வெற்றி பெற வேண்டும் ஆனால் அது எப்போதுமே இப்படி நடப்பதில்லை அதனால் தான் சொல்கிறேன் நம்பிக்கை என்பதே மூடத்தனம் என்று

இதை படிக்கும் உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி பிறக்கும் நம்பிக்கை என்றாலே மூடத்தனம் என்றால் யாருமே எதையுமே எப்போதுமே நம்பக்கூடாதா? நம்பிக்கைவாதிகள் அனைவருமே மூடர்களா? வடிக்கட்டிய அசடர்களா? என்ற அந்த கேள்வி நியாயமானது

மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்றும் நீரும் மட்டும் அல்ல மனசாந்தியும் கூட அவசியமானது பட்டு மெத்தை விரித்திருந்தும் பாதி கண் கூட மூட முடியாமல் பரிதவிப்போர் எண்ணிக்கை நாட்டில் ஏராளம் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும் கடுகளவு கூட நிம்மைதி இல்லை என்றால் மனிதனால் வாழ முடியாது அந்த நிம்மதியை தருவது வேறு எதுவும் அல்ல நம்பிக்கை மட்டும் தான் 


அதனால் தான் மனித சமூகம் ஆயிரம் பேர் குறை சொன்னாலும் குத்தி பேசினாலும் நம்பிக்கையின் காலடியில் தொடர்ச்சியாக சென்று விழுந்து கொண்டே இருக்கிறது இந்த எண்ணிக்கை மட்டும் கடல் நீரை போல எப்போதுமே குறையாது

நான் கடல் கடந்து போனாலும் கை பிடித்த மனைவி கள்ள புருசன் தேடமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தால் தான் அயல்நாட்டில் என்னால் உழைக்க முடியும் கண்ணகியும் சீதையும் மட்டும்மல்ல என் தாயும் தாரமும் கூட கற்புக்கரசிகள்தான் என்ற நம்பிக்கை தருகின்ற சுகத்தை பாதுகாப்பை கோடிக்கணக்கான செல்வம் கூட தரமுடியாது அதனால் நம்பிக்கை என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமாகும் அது மூடத்தனம் முட்டாள் தனம் என்றாலும் கூட

புற்று நோய் வந்து படுக்கையில் கிடப்பவன் கூட இவன் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறந்து விடுவான் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டவன் கூட சாவின் பிடியிலிருந்து எப்படியும் நான் மீண்டு விடுவேன் என்று நம்புகிறவன் தோற்றதாக சொல்ல முடியாது

கையில் சிறிய கட்டி வந்தால் புற்று நோயாக இருக்குமோ சிறுநீர் சற்று எரிச்சலாக வந்தால் கிட்னி செயலிழந்து விடுமோ காரில் வேகமாக ஊருக்கு போனால் மரத்தில் மோதி செத்து விடுவோமோ என்று அஞ்சுகிறவன் எதிலும் நம்பிக்கை இல்லாமல் குளம்புகிறவன் ஒவ்வொரு வினாடியும் மரணமடைந்து கொண்டே இருப்பான் 


 கடவுள் நம்பிக்கை மூடத்தனமானது என்று விஞ்ஞானம் சொல்லவில்லை பகுத்தறிவாதி என சொல்லிக்கொள்கிறவன்  எல்லாவற்றையுமே இல்லை இல்லை என்று ஒதுக்கி தள்ளுகிறவன் அவ நம்பிக்கை கொள்ளுகிறவன்தான் சொல்கிறான் கடவுளை இல்லை என்று இவர்களுக்கு எதிலுமே நம்பிக்கை கிடையாது அதனால் இவர்கள் ஒழுக்கத்தை கூட நம்பாமல் அவதிப்படுகிறார்கள்

பகுத்தறிவு என்பது கண்ணை மூடி கொண்டு எல்லாமே பொய் எதுவுமே இல்லை என்று பல்லவி பாடுவது இல்லை அனைத்திற்கும் மூலம் எதுவன ஆதாரத்தை தேடுவது தான் பகுத்தறிவாகும் ஆனால் துரதிஷ்ட வசமாக நமது பகுத்தறிவாளர்கள் அனைவருமே நுனிப்புல் மேய்ந்து விட்டு அடிவேரே இல்லை என்று வாதிடுபவர்களாக இருக்கிறார்கள் இதனால் நம்பிக்கைவாதிகள் மூட நம்பிக்கையாளர் என விளம்பரப்படுத்தப் படுகிறார்கள்

எனவே நம்பிக்கை என்பது எதிர்பார்ப்பு என்றாலும் அது மனிதனுக்கு மிகவும் தேவை நான் அழும் போது வலியால் துடிக்கும் போது நெஞ்சத்தை பிளந்துவிடும் துயர நெருப்பு என்னை சுட்டரிக்கும் போது ஆறுதல் சொல்ல ஒரு நாவு வரும் அரவணைக்க ஒரு கரம் வரும் என் புண்ணுக்கு மருந்து போட மயிலிறகு வரும் என்று நம்புகிறவன் மட்டும் தான் வாழ்க்கையை வெற்றி கொள்கிறான் நம்பாதவன் வாழ்க்கையால் வெல்லப்படுகிறான் 


அதனால் இந்த உலகம் உங்களை மூடத்தனமானவர்கள் என்று கேலி பேசினாலும் கை கொட்டி சிரித்தாலும் அதை பற்றி கவலை படாதிர்கள் நம்புங்கள் வாழ்க்கை முழுவதும் நம்புங்கள் ஏன் ஒவ்வொரு வினாடியும் கூட நம்புங்கள் எதாவது ஒரு திருப்பு முனை எதாவது ஒரு ஏணி உங்களுக்கு கிடைக்கும் யாரோ ஒரு படகுக்காரன் வந்து உங்களை கரை சேர்ப்பான்

எதிர்பார்ப்பவன் ஏமாளி நம்புகிறவன் கோமாளி என்றாலும் கூட நான் ஏமாளியாகவும் கோமாளியாகவும் வாழ்வதற்கே பிரியப்படுகிறேன் காரணம் கல்லிலும் முள்ளிலும் நடந்து செல்ல நீரையும் நெருப்பையும் கடந்து செல்ல எனக்கொரு துணை இருக்கிறது இந்த உலகில் நான் தனியாள் அல்ல கண்ணுக்கு தெரியும் மனிதன் துவங்கி கண்ணுக்கே அகப்படாத கடவுள் வரையிலும் எனக்கு துணையாக இருக்கிறார்கள் என்ற இந்த நம்பிக்கை யாரையும் தோற்க விடாது நம்புவது மூடத்தனம் என்று சித்தாந்தம் பேசும் பகுத்தறிவு வாதிகள் கூட கடைசிக் காலத்தில் இந்த மரநிழலில் தான் இளைப்பாற வேண்டும் 




Contact Form

Name

Email *

Message *