- கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே தள்ளாத வயதில் கலைஞரின் பிள்ளைபாசத்தையாவது மனதில் கொண்டு ஜாமீன் கொடுத்திருக்கலாம் அல்லவா?
பிள்ளை பாசம் என்பது உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது ஆகும் இதில் ஒருவர் பிள்ளை பாசம் உயர்ந்தது மற்றவர்களுடையது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது பிள்ளைகளை சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டு வெளியில் வர மாட்டார்களா என்று இந்த நாட்டில் ஏராளமான பெற்றோர்கள் ஏங்கி தவித்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஏக்கத்தை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டுமென்றால் நாட்டில் சட்டம் நீதி என்று எதுவுமே தேவையில்லை
மேலும் கனிமொழி பெண் ஒரு குழந்தைக்கு தாய் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை அதற்காக தப்பு செய்தால் விசாரிக்க கூடாதா தண்டனை தான் தரக்கூடாதா? முறைகேடுகளில் இடுபடுவதற்கு முன்பு நாம் ஒரு பெண்ணாயிற்றே குழந்தைக்கு தாய்யாயிற்றே தப்பு செய்யலாமா என்று யோசித்திருக்க வேண்டும் நாட்டின் நிதி ஆதாரத்தையே அசைத்து பார்க்க கூடிய குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட பிறகு நான் பெண் என்னை விட்டு விடு என்று சொல்வது பெண்ணினத்தை இழிவு படுத்துவதாகும் இன்னும் சொல்ல போனால் மிக பெரிய மோசடியாகும்
- தமிழக முதல்வர் அண்ணா நூலகத்தை மாற்றி குழந்தைகள் மருத்துவமனை அமைக்க போகிறாராமே?
அரசு என்பது நாட்டினுடைய எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ குழந்தை பருவத்திலிருந்தே சரியான மருத்துவ வசதிகள் மக்கள் பெறும்படி செய்ய வேண்டும் இது நல்ல அரசாங்கத்தின் கடமை அந்த வகையில் குழந்தைகளுக்காக தனிமருத்துவ மனை அமைக்க இருப்பது வரவேற்க படவேண்டிய விஷயமாகும்
அதே நேரம் அந்த மருத்துவமனை நல்லபடியாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை நகர்த்தி விட்டு ஆரம்பிக்க பட வேண்டும் என்று சிந்திப்பதை கூட ஜீரணிக்க இயலாது காரணம் ஒரு மனிதனின் உடல் நலத்தை பாதுகாக்க மருத்துவம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மனநலத்தை வளர்க்கும் நூல்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது
புதிய சட்டமன்ற கட்டிடத்தை புறக்கணித்தல் செம்மொழி பூங்காவை மாற்றுதல் சமசீர் கல்வியை நிறுத்தி வைத்தல் போன்ற செயல்கள் அம்மையாரின் ஆட்சியில் களங்கம் என்றே சொல்ல வேண்டும் அந்த களங்க வரிசையில் இப்போது நூலகமும் சேர்ந்திருக்கிறது
மீண்டும் மீண்டும் நான் சொல்வது கலைஞர் போட்ட திட்டங்களை எல்லாம் நீக்குவது நிறுத்துவது என்று முதல்வர் முடிவு செய்துவிட்டால் முதலில் இலவச சலுகைகளையும் டாஸ்மார் கடைகளையும் நிறுத்தட்டும் இழுத்து மூடட்டும் அதன் பிறகு மற்ற திட்டங்களை பார்த்து கொள்ளலாம் இதை செய்ய அரசுக்கு துணிச்சல் இல்லை தைரியம் கிடையாது மக்கள் நலத்தில் உண்மையாகவே ஜெயலலிதா அவர்கள் அக்கறை கொண்டவர் என்றால் கருணாநிதி கொண்டுவந்த மது கடைகளை மூடட்டும் அதை செய்ய அவருக்கு மனம் வரவே வராது
- உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பாராத வண்ணம் வைகோ அவர்கள் நல்ல வளர்ச்சியை காட்டியிருக்கிறாரே இது எதை காட்டுகிறது?
நமது தமிழ் நாட்டில் திமுக,அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தேமுதிக வை பரவலாக கருதுகிறார்கள் அக்கட்சி புதியது என்றாலும் சீரான முறையில் வளர்ந்துவருவதை பார்க்கும் போது இந்த கூற்று சரியாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது
ஆனால் தேமுதிக வை பொறுத்தவரை அந்த கட்சியின் அதிகார பீட தலைவர்கள் யாருக்கும் பண்பட்ட அரசியல் ஞானம் இருப்பதாக கருத முடியவில்லை இந்த நிலையில் அதன் வளர்ச்சி என்பது சினமா கவர்ச்சியை மையமாக வைத்து எதேச்சையாக நடக்கும் விபத்து என்றே என் அனுபவ அறிவு சொல்கிறது இந்த விபத்தை சாதகமாகவோ பாதகமாகவோ கொண்டுவருவது அக்கட்சி தலைவரின் கையில் உள்ளது
ஆனால் மதிமுக என்பது கவர்ச்சியால் உருவான கட்சி அல்ல ஒரு பண்பட்ட அரசியல் இயக்கம் எப்படி பிறக்க வேண்டுமோ அப்படி பிறந்தது ஆகும் அதன் தலைவரும் ஒரு சராசரி மனிதர் அல்ல இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அறிவிலும் மக்கள் நலனில் நாட்டம் கொள்வதில் முதல்மையானவர் வைகோ என்பதே என் கருத்து
அரசியலில் கலைஞரை விட ஜெயலலிதவை விட சிறந்தவர் வைகோ ஆனால் அவரிடம் இருக்கும் ஒரே பலவீனம் உணர்ச்சி வசப்படல் காலத்திற்கு ஏற்ற நடைமுறைக்கு உகந்த செயல்களை செய்வதில் அவருக்கு ஏனோ அதிக அக்கறை இல்லை
பல்வேறு பொது பணிகளில் அறிவு பூர்வமாக அவர் செயல்பட்டாலும் தமிழக தமிழர் மீது காட்டுகிற அக்கறையை விட ஈழத்தமிழர்களின் மீது அதிகமாக காட்டுகிறார் என்ற குற்ற சாட்டும் அவர் மீது இருக்கிறது இதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்
மேலும் ஒரு கட்சியோடு கூட்டு வைத்து விட்டால் தன் சொந்த கட்சியை அவர் மறந்து விடுகிறார் அப்படி இல்லாமல் பட்டி தொட்டி எங்கும் கட்சியை வளர்ப்பதில் அவர் அக்கறை செலுத்தினால் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மதிமுக வளரும் என்பதில் ஐயம் இல்லை உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தந்திருக்கும் அங்கிகாரத்தை ஆதாரமாக கொண்டு இனிவரும் காலங்களில் அவர் செயல்பட்டால் நாட்டுக்கும் நல்லது அவருக்கும் நல்லது.