வணக்கத்திற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான நமஸ்காரம் நீங்கள் இணயதளத்தில் தொடர்ந்து எழுதிவரும் அனைத்து விஷயங்களையும் தவறாமல் படிக்கும் வாசகன் நான் தினசரி விடிந்தவுடன் உங்கள் பதிவுகளை படித்து விட்டு தான் வேறு காரியம் பார்ப்பேன் இலக்கியம் ஆன்மிகம் அரசியல் ஜோதிடம் என்று அனைத்து துறையிலும் நீங்கள் பெற்றிருக்கும் பாண்டித்துவம் என்னை பல நேரங்களில் வியப்பில் ஆழ்த்தும்.
இப்போது நான் கேட்கபோகும் கேள்வி என்னை போன்ற பலருக்கு பயனுள்ள கேளிவியாக இருக்கும் என்று கருதுகிறேன் எனக்கு திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சென்ற மாதத்தில் தான் மனைவி கர்ப்பம் தரித்திருக்கிறாள் நான் அடைந்திருக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை உங்களது பரிபூரண ஆசிர்வாதத்தால் என் மனைவி சுகப்ரசவம் அடைவாள் என்று நம்புகிறேன் இதில் தான் என் கேள்வியே இருக்கிறது அதாவது ஒரு பெண் சுகப்ரசவம் அடைவதற்கு நமது இந்துமத சாஸ்திரங்கள் எதாவது சடங்கு முறையை சொல்லி இருக்கிறதா? சொல்லி இருந்தால் அது என்ன? அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை எளிமையாக விளக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு வீரராகவன்,வேளச்சேரி
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தாய்மை பேற்றை பெற்றிருக்கும் உங்கள் மனைவிக்கு எனது ஆசிர்வாதங்கள் நல்ல மக்கட்பேரை நீங்கள் பெற்று வளமோடு வாழ நான் வணங்கும் ஸ்ரீமத் நாராயணனை மனமார வேண்டுகிறேன் மழலை செல்வம் என்பது மனதுக்கு மட்டும் மகிழ்ச்சி தருவது அல்ல சமூதாயத்திலும் உங்களது எதிர்கால புகழை தீர்மானிப்பது ஆகும் எனவே பிறக்க போகும் குழந்தையை சான்றாண்மை மிக்கதாக வளர்க்கும் படி வேண்டுகிறேன்.
நமது இந்து மதம் நம் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்விற்கும் அர்த்தம் உடைய பல சடங்குகளை சொல்லி இருக்கிறது அவைகளை முறைப்படி பின்பற்றினால் நன்மையை தவிர வேறு எதுவும் நிகழாது காரணம் நம் மதம் சொல்லி இருக்கும் ஒவ்வொரு சடங்கின் பின்னாலும் ஆயிரமாயிரம் விஞ்ஞான உண்மைகள் மறைந்திருக்கின்றன.
ஒரு பெண் தனது பிறப்பின் முழுமையை தாய்மை நிலையை அடையும் போது மட்டுமே பெறுகிறாள் அப்படி அவள் பெறுவதற்கு காரணமான கர்ப்பத்தை கொண்டாடும் விதத்தில் கருத்தரித்த இரண்டாவது மாதம் அரிசியில் இரட்டை பிள்ளையார் பிடித்து இரட்டை வாழை பழமும் பொங்கலும் வைத்து வழிபட வேண்டும் மூன்றாவது மாதம் அரிசி மாவில் சூலம் வரைந்து சக்கரை பொங்கல் நைவேத்தியம் வைத்து வணங்க வேண்டும் நாங்காவது மாதம் புழுங்கரிசி மாவில் நாகப்படம் வரைந்து பொங்கல் வைத்து வணங்க வேண்டும்.
ஐந்தாவது மாதம் பார்வதி பரமேஸ்வர திருவுருவ படத்திற்கு மல்லிகை மலர்மாலை சூட்டி வணங்க வேண்டும் ஆறாவது மாதம் முருகபெருமானுக்கு சம்மங்கி மலர் சூட்டி வணங்க வேண்டும் ஏழாவது மாதம் சப்த கன்னிமார்களை வழிபட வேண்டும் எட்டாவது மாதம் பகவான் நாராயணனுக்கு துளசி மாலை சூட்டி வழிபட வேண்டும் சாஸ்திரப்படி இந்த மாதத்தில் தான் சீமந்தம் செய்ய வேண்டும் ஒன்பதாவது மாதம் நவக்கிரக பூஜை வீட்டில் நடத்த வேண்டும் பத்தாவது மாதம் இஷ்டதேவதை வழிபாடு செய்யலாம்.
இந்த சடங்குகளை இரண்டு முதல் நான்கு மாதம் வரையிலும் மாத கடேசியிலும் ஐந்து முதல் பத்து மாதம் வரை சடங்குகளை மாத துவக்கத்திலும் செய்ய வேண்டும். இவைகள் நமது இந்து மத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சடங்கு முறைகளாகும் இவைகளை பற்றி ஜைமினி ஜோதிட சாஸ்திர நூலில் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சடங்குகளை முறைப்படி செய்தால் நிச்சயம் சுகப்ரசவம் நடந்து தாயும் சேயும் நலமோடு வாழ்வார்கள்.