Store
  Store
  Store
  Store
  Store
  Store

இரத்த கொதிப்புக்கு மருந்து


    குருஜி ஐயா அவர்களுக்கு எனக்கு மூலிகை மருத்துவத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு சித்த மருத்துவம் மட்டுமே தலைசிறந்தது என்று நம்புபவர்களில் நானும் ஒருவன் காரணம் மற்ற மருத்துவ முறைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அந்த அபாயம் சித்த மருத்துவத்தில் இல்லை எனவே எனக்கு புதிதாக வந்திருக்கும் ரத்த அழுத்த நோயை மூலிகை மருந்துக்களின் மூலமே குணபடுத்த விரும்புகிறேன். எனவே தயவு செய்து ரத்த அழுத்த நோயிக்கான மருந்துகளை எனக்கு தெரியபடுத்தவும்.
இரத்தினவேல்,உடுமலைபேட்டை



    சித்த மருத்துவம் என்பது இந்திய திருநாட்டின் பாரம்பரியமான வைத்திய முறை என்று சொல்வதை விட உலகில் முதல் முறையாக நோய்களை போக்க மனிதன் கண்டுபிடித்த வைத்திய முறை என்றே சொல்லலாம். பேரன் எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்து அறிவாளிகாக இருந்தாலும் தாத்தாவின் அனுபவத்தின் முன்பே குழந்தை தான். அதே போலதான் மற்ற மருத்துவ முறைகள் சித்தியவைத்தியத்தின் முன் குழந்தைகளாக இருக்கிறது.

மற்ற வைத்திய முறைகளை குழந்தகைள் என்று சொன்னவுடன் அவைகளால் எந்த பயனும் இல்லை என்று நான் சொல்வதாக எடுத்துகொள்ள வேண்டாம். பக்க விளைவுகளை அதிகமாக கொடுக்க கூடியது என்று சொல்லபடுகின்ற ஆங்கில மருத்துவத்தில் கூட பல சிறப்புகளும் பயன்களும் இருக்கின்றது.

பழைய காலத்தில் ஒருவனுக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை முழுமையாக அறிந்து அதற்க்கான சிகிச்சை முறையை நாடி பரிசோதனைக்கு பிறகே செய்வார்கள் நல்ல முறையில் நாடி பார்க்க தெரிந்த ஒரு வைத்தியன் முந்தாநாள் இரவு நோயாளி என்ன சாப்பிட்டான் என்பதை கூட தெளிவாக சொல்லிவிடுவான். இன்று அப்படி நாடி பார்க்க தெரிந்த வைத்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. உண்மையை சொல்ல போனால் இன்று சித்த வைத்திய முறையை கற்றிருக்கும் பலருக்கு நாடி பார்க்கவே தெரியாது. உண்மை கசப்பாக இருந்தாலும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் நோயின் தன்மையை துல்லியமாக அறிந்து கொள்ள ஆங்கில வைத்திய முறையே பெரிதும் பயன்படுகிறது. சரியாகவும் இருக்கிறது. ஆங்கில மருத்துவமே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால் இத்தகைய பரிசோதனை முறைகள் கிடைக்காமலே போய்விடும். மேலும் உடனடியான நோய் நிவாரணத்திற்கு சித்த மருந்துகள் பயன்படும் என்று சொல்லிவிட முடியாது. அதற்கு ஆங்கில மருத்துவத்தின் துணை கண்டிப்பாக அவசியம்.

மேலும் ஆங்கில மருத்துவத்தின் மீது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்ற பழி சுமத்தபடுகிறது. இதுவும் சரியில்லை என்று நான் நினைக்கிறேன். காரணம் சில சித்த மருந்துகள் கூட பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். உதாரணமாக சில பஸ்பங்கள் குறிப்பாக தங்கபஸ்பம் போன்றவைகள் சரியான முறையில் செய்யவில்லை என்றால் பயன்படுத்துபவனின் சிறுநீரகத்தை பாதித்து விடும். சில தைலங்கள் கூட சருமத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதை பலர் அறியலாம்.

எனவே ஒரு மருத்துவமுறை சரி மற்றவை தவறு என்று ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து விட கூடாது. சில நேரங்களில் சிலவற்றில் தவறுகள் ஏற்படுவது இயற்க்கை அதற்காக எல்லாமே தவறுகள் என்றால் அது அறிவுடைமை ஆகாது. நீங்கள் சித்த மருத்துவம் சிறப்பானது சரியானது என்று நம்பலாம் அதற்கு உங்களுக்கு பரிபூரண உரிமை இருக்கிறது அதற்காக மற்ற முறைகளை குறை கூறுவதும் நம்புபவர்களை கேலி செய்வதும் நல்ல அணுகுமுறையாகாது.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையை போலவே யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளும் சிறப்பானவைகள் தான் ஒவ்வொரு உடலுக்கு ஒவ்வொரு சமையத்திலும் எதோ ஒரு மருத்துவ முறை நல்ல நிவாரணத்தை தருகிறது. அவ்வளவு தான். என்னிடம் கேட்டால் ஒருவனின் நோயை மருந்தும் மருத்துவனும் குணபடுத்துவதை விட விதியும் கடவுளுமே குணபடுத்துகிறார்கள் என்று சொல்லலாம் இதனால் தான் ஆங்கிலத்தில் கடவுள் நோயை குணபடுத்துகிறார் மருத்துவர் கட்டணம் வாங்கி கொள்கிறார் என்ற பழமொழி இருக்கிறது.

சரி இப்போது உங்கள் ரத்தழுத்த பிரச்சனைக்கு வருவோம். பொதுவாக ரத்த கொதிப்பு நோய்க்கு மருந்துகளை விட மன அமைதியும் யோகாசன பயிற்சியும் சிறப்பான நிவாரணம் தரும் என்பது எனது கருத்து. அனுபவ பட்டவர்களும் இதை ஒத்துகொள்கிறார்கள். சித்த மருத்துவத்தில் ரத்தழுத்த நோய்க்கு சர்பகந்தி, நிலவேம்பு போன்ற மூலிகைகள் சிறப்பான பலனை தருவதாக சொல்லலாம்.

சர்பகந்தி வேரையும் நிலவேம்பு வேரையும் சமமாக எடுத்து பொடி செய்து காலை மாலை இருவேளை இரண்டு சிட்டிகை அளவு தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்கள் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து விடும். அதிகாலையில் எழும்புதல் குளிர்ந்த நீரில் குளிர்த்தல் இறைவழிபாட்டை மன ஈடுபாட்டோடு செய்தல் போன்றவைகளும் உங்களிடம் இருந்தால் அதிவிரைவிலே ரத்தழுத்த நோயை விரட்டி விடலாம்.




Contact Form

Name

Email *

Message *