Store
  Store
  Store
  Store
  Store
  Store

அரபு நாட்டில் அம்மாவுக்கு சிரார்த்தம்


    பாசமிகுந்த குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் பத்து வருடகாலமாக அரபு நாட்டில் வாழ்ந்து வருகிறேன். சொந்த மண்ணில் வாழ முடியாத மனக்குறை எனக்கு நிறையவே உண்டு வெளிநாட்டில் வாழுகின்ற துர்பாக்கிய நிலை வந்த பிறகு தான் நம் ஊர் மண்ணும் தண்ணீரும் கூட எவ்வளவு புனிதமிக்கது என்று தெரிகிறது. 

ஒரு ஆத்திரம் அவசரம் என்றால் உதவி ஒத்தாசை என்று வர உறவினர்கள் யாரும் அருகில் கிடையாது. நோய்நொடி என்று படுத்து விட்டால் தனிமனிதனாக இங்கு இருப்பவர்களின் நிலையோ வார்த்தைகளால் சொல்ல முடியாத அவலம் ஆனால் என்ன செய்வது அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற்றாக வேண்டும் என்ற நிலையில் வயிறு வளர்க்க வேறு வழியே இல்லாமல் இந்த பாலைவன மண்ணிற்கு வந்து பாடுபடுகிறோம். 

இந்த நாட்டு மக்கள் அந்நியர்களான எங்களை ஒரு துரும்பை போல அடிமையை விட கேவலமாக பாக்கும் போது நம் நாட்டில் உள்ள சுதந்திரத்தின் அருமை தெரிகிறது. ஊரில் உட்கார்ந்து கொண்டு பலர் இது ஒரு ஊரா? இதற்கு விமோசனம் உண்டா என்று பேசுபவர்களை பார்த்தால் எரிச்சல் வருகிறது. ஒருநாள் இந்த நாட்டில் வந்து வாழ்ந்து பாருங்கள் அப்போது தெரியும் இந்தியாவின் அருமை என்று சொல்ல தோன்றும். ஆனாலும் சொல்ல முடியாது. 

என் கண்ணீர் கதையை சொல்கிறேன் கேளுங்கள். எனது தாய்க்கு நான் ஒரே மகன் என் தகப்பானாரின் முகத்தை கூட நான் பார்த்தது இல்லை குழந்தையாக தவழும் போதே அவர் போய்விட்டாராம். என் தாய் தான் என்னை அரும்பாடு பட்டு வளர்த்தார் அப்படி பட்ட அன்னையின் வறுமையை போக்குவதற்கே நான் அந்நிய நாட்டில் வாழ்ந்து வருகிறேன். என்னை சீராட்டி வளர்த்த எனது தாயார் சென்ற வருடம் காலமாகி விட்டார். நல்லவேளை நான் அப்போது விடுமுறையில் ஊரில் இருந்ததனால் இறுதி காரியங்கள் அனைத்தையும் தடையில்லமல் செய்தேன். 

ஆனாலும் என் தாயாரின் வருடாந்திர திவசத்தை தவறாமல் செய்ய நினைக்கிறேன். ஆனால் அரபு நாட்டில் அவர்கள் மதத்தை தவிர அவர்கள் மத சடங்கை தவிர வேறு எதையும் செய்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு சிறிய சீரடி பாபா படத்தை கூட வைத்து கொள்ள முடியாத அவல நிலை எங்களுக்கு உண்டு இந்த நிலையில் என் தாய்க்கு எப்படி திதி கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை ஊருக்கு வரவும் விடுமுறை இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை 

மகனாக பிறந்தவன் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டியது பிதுர் கடமை இது வேதங்களும் சொல்கிறது வள்ளுவரின் திருக்குறளும் சொல்கிறது. ஆனால் என்னால் ஒரு மகனுக்குரிய கடமையை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த நிலையில் பரிதவிப்பது நான் மட்டுமல்ல என்னை போல் ஏராளமான புத்திரர்கள் இங்கு உண்டு அதனால் ஐயா அவர்கள் இந்த நாட்டு சூழலுக்கு ஏற்றவாறு எங்களால் பித்துரு கடன் நிறைவேற்ற எதாவது வழியை சொல்ல வேண்டுகிறேன். நீங்கள் சொல்லும் வழிமுறை என்னை போன்ற எத்தனையோ பேருக்கு பேருதவியாக இருக்கும். தயவு செய்து வழி சொல்லுங்கள் 

இப்படிக்கு 
துரைபாண்டியன் 
சவுதிஅரேபியா 

     ந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு உரிமைகள் இல்லை என்று சொல்பவர்கள் கட்டாயம் சில வருடங்களாவது அரபு நாடுகளில் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் சுதந்திரத்தை அனுபவிப்பதில் இந்திய மண் எத்தகைய சொர்க்கபுரி என்பது விளங்கும். ஒரு மனிதனுக்கு உணவு உடை உறைவிடம் எப்படி அவசியமோ அப்படியே தன் மனதிற்கு ஏற்ற வழிபாட்டை தடையில்லாமல் நடத்தும் உரிமை என்பது அவசியமாகும். அன்பும் அறமும் அரபு நாட்டில் தவழ்வதாக இங்கு சிலர் பேசிக்கொண்டு திரிவது எத்தகைய பேதமை என்பது புரியும். 


நமது சாஸ்திரப்படி பித்துருகடன் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு மனிதன் தான் உருவாக காரணமாக இருந்த முன்னோர்களை நினைக்காவிட்டால் நன்றி கொன்றவனாகவே கருதபடுவான். அதுவும் குறிப்பாக தாய் தந்தையருக்கு ஒரு மகன் அவர்கள் வாழும் காலத்திலும் மரணத்திற்கு பிறகும் தனது கடமையை செய்யவில்லை என்றால் அது பஞ்சமகா பாவங்களை விட கொடிய பாவமாகும். எனவே பித்துரு கடன் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத கடமையாகும். 



ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் இடர்பாடுகள் இருந்தாலும் புத்திரனாக பிறந்தவன் தனது கடமையை அவன் எங்கே வாழ்ந்தாலும் அங்கே தவறாமல் செய்ய வேண்டும் என்பதே நமது சாஸ்திரங்களின் கட்டளையாகும். ஆனால் இப்படிப்பட்ட மற்றவர்களின் மன உணர்வுகளை பற்றி சிறிது கூட அக்கறை இல்லாத அரக்கர் பூமியில் வாழுகின்ற நிர்பந்தம் ஏற்பட்டவர்கள் கூடியமானவரை அந்த காலத்தில் தனது சொந்த ஊருக்கு வருவதற்கு முயல வேண்டும். முயன்றும் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்காதவர்கள் தனக்கு பதிலாக மிக நெருங்கிய உறவினர்கள் வசம் அந்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு தர்ப்பை புல் மூலம் அதிகாரம் கொடுத்து திதி செய்யலாம். அந்த திதி காலத்தில் நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் முன்னோர்களை நினைத்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும். 



இதற்கு கூட வாய்ப்பு இல்லாதவர்கள் முன்னோர்களிடம் மனமுருகி பிராத்தனை செய்து மன்னிப்பு கோரி விரதங்களை செய்யலாம். சிரார்த்த கர்மாக்களை நிறைவேற்றுவதற்கு வழி இல்லாத போது நீங்கள் வசிக்கும் பகுதில் உள்ள நீர்நிலைகளில் வாழுகின்ற மீன்களுக்கு சாத்வீக உணவை கொடுக்கலாம். மீன்கள் வழியாகவும் முன்னோர்கள் உங்களது பிண்டத்தை ஏற்று கொள்வதாக சில உபநிசதங்கள் சொல்கின்றன. எனவே எதுவும் செய்ய முடியவில்லையே என்று சும்மா இருப்பதை விட இத்தகைய காரியங்களை செய்து தங்களது கடமைகளை நிறைவேற்றி கொள்ளலாம்.


Contact Form

Name

Email *

Message *