குருஜி ஐயா நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேர் எங்கள் அப்பா சென்ற வருடம் காலமாகி விட்டார் அவர் வாழும் போதே எங்களுக்கு சொத்தை பிரித்து தரவில்லை இப்பது நாங்கள் பிரித்து கொள்ள விரும்புகிறோம் இருந்தாலும் எங்களுக்குள் அது சம்மந்தாமான சில மன கசப்புகள் ஏற்படுகிறது. அண்ணன் தம்பி மத்தியில் சொத்துக்காக தகராறு ஏற்பட்டுவிட கூடாது என்று நான் விரும்புகிறேன். ஆனாலும் விரிசல் இன்னும் அதிகமாகி கொண்டே போகிறது உங்களுக்கு என் ஜாதகத்தையும் என் சகோதரர்களின் ஜாதகத்தையும் அனுப்பி இருக்கிறேன் எங்களுக்குள் சுமூகமான முறையில் பாக பிரிவினை ஏற்படுமா என பார்த்து சொல்லவும்.
இப்படிக்கு
கோபால கிருஷ்ணன்
கூடுவாஞ்சேரி
பூமிக்கான தகராறு என்பது மனிதன் வளர்ந்து விவசாயத்தை கண்டறிந்த போதே ஏற்பட்டு விட்டது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். கையளவு இடத்திற்காக மலையளவு செலவு செய்பவர்களை பார்க்கிறோம். மஹாபாரதம் என்ற இதிகாசமே அண்ணன் தம்பி சொத்து தகராறில் வந்தது தானே.
நிலத்திற்காக அடித்து கொள்பவர்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும் இந்த வாழ்க்கை என்பது ஒரு மரணத்தோடு முடிந்து விடுகிறது அடுத்த பிறவியில் நாம் எங்கே பிறக்க போகிறோம் யாரெல்லாம் நமது பெற்றோராக சகோதரர்களாக வருவார்கள் என்பதை அறிந்து கொள்ள இயலாது. எனவே கிடைக்கும் இந்த காலத்தில் ஒருவர்கொருவர் தகராறு இல்லாமல் வாழ்வதே சிறந்த பண்பாகும் .
ஒரு ஜாதகத்தில் வழக்கு சண்டை சச்சரவு போன்றவற்றை குறிக்கும் கிரகமான கேது அசையா சொத்துக்களை குறிக்கும் செவ்வாய் அல்லது புதனை பார்க்கும் போது சொத்து தகராறு ஏற்படும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உங்கள் ஜாதகப்படி அப்படி ஒரு நிலை இருக்கிறது. எனவே சொத்து தகராறை தவிர்ப்பது உங்களுக்கு மிகவும் கடினம்.
இருந்தாலும் பொறுமையோடு அமைதியாக ஒரு ஒருவருடம் காத்திருங்கள் உங்கள் சிக்கல்கள் அடியோடு தீர்ந்துவிடும் அதற்குள் அவசரப்பட்டு வழக்கு வம்பு வாய்தா என்று போனால் தீர்வுக்கு வருவதற்கு பல வருடங்கள் ஆகும். அங்காடி நாய் பெற்ற தெங்கம் பழத்தால் என்ன பயன் என்பார்கள் அதாவது வேலை வெட்டி இல்லாமல் கடைத்தெருவில் சுற்றுகின்ற நாய்க்கு தேங்காய் கிடைத்து பயனில்லை என்பது இதன் பொருளாகும். நாய் பெற்ற தேங்காயும் வழக்குக்கு ஆட்பட்ட நிலமும் ஒன்று இதை தவிர்க்க பொறுமை இருந்தால் சுமூகமாக வெற்றி பெறலாம்.