ஜாதக கட்டத்தில் பதினோராவது இடத்தை லாபஸ்தானம் என்று சொல்வார்கள். பத்தாமிடம் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படும் போது பதினோராவது இடத்தை லாபம் என்று கருதுவதில் ஆழ்ந்த பொருளுண்டு. ஆயிரம் பாடு பட்டு உழைத்தாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தால் உழைத்து என்ன பயன்? உடம்பில் தெம்பு இருக்கிறவரை ஓடலாம் ஆடலாம் சாடலாம் என்னென்னவோ செய்யலாம். உடம்பில் பலம் குறைந்துவிட்டால் என்ன செய்ய முடியும்? பேசாமல் மூலையில் முடங்குவதை தவிர வேறு வழியில்லை எனவே மனிதன் தொழில் செய்தால் மட்டும் போதாது அதில் போதிய லாபமும் அடைந்தால் தான் சிறப்பு என்று காட்டுவதற்காகவே பத்துக்கு அடுத்த பதினொன்றை லாபம் என்று சொன்னார்கள்.
பதினோராம் இடத்தின் பெயர் கும்பம் கும்பமென்றால் பானை என்று அனைவருக்கும் தெரியும். பானைக்கும் தொழிலின் பயனாய் கிடைக்கின்ற லாபத்திற்கும் என்ன சம்மந்தம் என்று சிலர் யோசிக்கலாம். அவர்கள் தங்களது மனதை தற்காலத்திய சூழலிலிருந்து சற்று அல்ல அதைவிட அதிகமான காலத்தை நோக்கி பின்னோக்கி செல்ல வேண்டும். பணத்தை சேமிப்பதற்கான வங்கி என்ற அமைப்பை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முன்பு பணம் சேமிக்கப்படும் பொருளாக பானைகளே இருந்தன. என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அரிசி பானையில் அம்மா வைத்த காசை தெரியாமல் எடுத்து சென்று சினிமா பார்த்து பழக்கபட்டவர்களுக்கு பானையில் காசு சேர்க்கும் வழக்கம் நன்றாக தெரியும். இன்று கூட இல்லத்தரசிகளின் சிறுவாட்டு பணம் பானைகளிலேயே இருப்பதை உணரலாம்.
பானைகள் பணம் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்க்காக கும்ப ராசியின் சின்னமாக அதை வைக்கவில்லை இந்திய கலாச்சாரத்தில் பானைகளின் பங்கு மிக அதிகம் குடும்பத்து வாரிசை விருத்தி செய்வதற்காக புதிதாக வருகின்ற மருமகளை பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று சொல்வார்கள் இந்த இடத்தில் பானை என்பது செல்வத்தின் சின்னமாக ஒரு குடும்பத்தின் வளர்ச்சியின் விளக்கமாக சொல்லப்படுகிறது. பொங்குகிற பானை மங்கலத்தின் அடையாளம் பானை பொங்குவது போல உங்கள் வீடும் குழந்தைகளால் பொங்க வேண்டுமென்று புதிய மணமக்களை வாழ்த்துவது வங்காளிகளின் வழக்கம் எனவே பானை செல்வத்தின் அடையாளம் மட்டுமல்ல வாரிசுகளின் அடையாளம் வாழ்க்கையின் அடையாளம். அதனால் தான் பானையை சின்னமாக கொண்ட பதினோராம் இடத்தை லாபஸ்தானம் என்றும் பாக்கியஸ்தானம் என்றும் நமது முன்னோர்கள் அழைத்தார்கள்.