குருஜி அவர்களுக்கு வணக்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கள் ஊர் அருகிலுள்ள ஒரு ஜோதிடரை சந்தித்தேன் அவர் எனது ஜாதகத்தை பார்த்து விட்டு பயணங்கள் செய்யும் போது ஜாக்கிரதையாக இருங்கள் கூடியமானவரை பயணங்களை தவிர்த்து விடுங்கள் வரக்கூடிய ஒருவருட காலம் உங்களுக்கு பயணத்தின் போது அபாயம் இருக்கிறது என்று சொன்னார். அது முதல் பயணம் செல்லும் போதெல்லாம் எனக்கு சற்று அச்சமாக உள்ளது. அவர் சொல்லியது சரியா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் கூறியது உண்மையாக இருந்து அதை அசட்டை செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடாது என்று நினைக்கிறேன். அதனால் என் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன் சிரமம் பாராது தயவு செய்து என் ஜாதகப்படி பயணத்தில் ஆபத்து இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரியபடுத்தவும்.
இப்படிக்கு
வாசுதேவன்
குடியாத்தம்
ஆபத்து என்பது ஒரு மனிதனை எப்போது எந்த வடிவத்தில் தேடி வருமென்று சொல்ல முடியாது. காரணம் விதி என்ற பாதையில் பயணம் செய்யும் போது வருவதை எதிர்கொள்ள வேண்டிய கட்டத்திலேயே மனிதன் இருக்கிறான். நடப்பதை தடுத்துவிடுவதோ நடக்காததை நடத்தி விடுவதோ மனிதனின் கையில் கிடையாது. கண்ணுக்கு தெரியாத விதி என்ற சூச்சம கையிற்றை இறைவன் வைத்து கொண்டு நம்மை ஆட்டுவிக்கிறான்.
இருந்தாலும் ஜாதகம் ஜோதிடம் என்பவைகள் எல்லாம் இன்னது வரப்போகிறது என்பதை நமக்கு ஓரளவு கோடிட்டு காட்டுவதற்கே இருக்கிறது. வருகின்ற மழையை தடுத்து நிறுத்த முடியாது என்றாலும் அதிலிருந்து குடைபிடித்து சிறிதளவு ஒதுங்கி கொள்ளும் வாய்ப்பை ஜோதிடம் நமக்கு தருகிறது. அதனால் ஜாதகம் காட்டுகிற குறியீடுகளை நம்பாமல் புறக்கணித்து விடுவதும் புத்திசாலித்தனமான செயலாக இருக்காது.
ஒரு சாதகனின் ஆயுள்காலத்தை இரண்டு கிரகங்கள் காட்டுகிறது ஒன்று ஜீவகாரகன் என்று அழைக்கப்படும் குரு மற்றொன்று கர்மகாரகன் என்று அழைக்கப்படும் சனி. இந்த இரண்டு கிரகத்தின் சஞ்சாரத்தை வைத்து ஒரு மனிதனின் ஆயுளையும் அதற்கு வரும் ஆபத்தையும் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அதை போல திடீரென்று ஏற்படும் விபத்து பெரிய காயங்கள் ஆகியவற்றை ராகு கிரகத்தின் இயக்கத்தை வைத்து அறிந்து கொள்ள முடியும்.
ஒரு ஜாதகத்தில் குரு அல்லது சனியோடு ராகு சேரும்போது அவனுக்கு விபத்துக்கள் ஏற்படும் காலமென்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது தற்போது நடந்திருக்கும் ராகு பெயற்ச்சி சனியொடு சம்மந்தப்பட்டு உங்களது எட்டாம் பாவத்தில் இருப்பதால் இந்த காலகட்டம் பயணத்தின் போது அபாயத்தை தருகின்ற காலம் என்றே சொல்லலாம். எனவே உங்கள் ஊர் ஜோதிடர் சொன்னது சரியே.
இருந்தாலும் தினசரி ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள் முடிந்தவரை அனுமன் சாலீசா படித்து வாருங்கள் பயணங்களால் ஏற்படும் ஆபத்தை விலக்கி கொள்ளலாம். இறைவன்மீது பரிபூரணமான நம்பிக்கை இருக்கும் போது எந்தவகையிலும் அவன் நம்மை கைவிட மாட்டான். அச்சமின்றி வாழுங்கள் அனந்தசயனன் காப்பாற்றுவான்.