ஐயா எனக்கு இருபது வயதாகிறது இணையதளத்தில் பலருடைய எழுத்துக்களை படிக்கும் போதும் பல இலக்கியவாதிகளின் புத்தகங்களை வாசிக்கும் போதும் நாமும் அதை போல எழுத வேண்டும் என்ற ஆசை வருகிறது ஆனால் நம்மால் எழுத முடியுமா? எழுதினால் மற்றவர்கள் படிப்பார்களா? படித்து விட்டு பாராட்டவில்லை என்றாலும் திட்டாமலாவது இருப்பார்களா? என்று கூச்சமாக இருக்கிறது. நீங்கள் என் ஜாதகத்தை பார்த்து நான் எழுத்தாளர் ஆகமுடியுமா? என்று சொல்லுங்கள்.
நன்றி
பெயர் குறிப்பிட விரும்பாத
பிரான்ஸ் வாசகர்
என்றைக்குமே எழுத விரும்புகிற நபர்கள் தான் எழுதினால் மற்றவர்கள் புகழ்வார்களா? இகழ்வார்களா? என்று நினைக்கவே கூடாது. மற்றவர்கள் எது நினைத்தாலும் என் திருப்திக்காக என் கருத்தை எழுதுவேன் என்ற உறுதி வேண்டும் உறுதி இல்லாதவன் எழுதுகிற எழுத்து எதுவும் ஜெயிக்காது எனவே மனதில் உள்ள கோழைத்தனத்தை எடுத்து போடுங்கள் அப்படி எடுத்து போட முடியவில்லையா? எழுதும் ஆசையை விட்டு விடுங்கள்.
முட்டையிலிருந்து வெளிவருகிற கோழிக்குஞ்சு போல இப்போது தான் நீங்கள் உலகத்தை அறிவு கண்ணோடு பார்க்க துவங்கி இருக்கிறீர்கள் இளமையும் வேகமும் அபரீதமாகவே உங்களிடம் வேலை செய்து உங்கள் ஆற்றலை உயர்த்தும் சினிமாக்காரனின் பின்னால் சென்று கற்பூரம் காட்டும் வயதில் எழுத வேண்டுமென்ற எண்ணம் வந்ததே அதற்கே உங்களை பாராட்டலாம்.
மேலும் ஜாதகத்தில் ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் புதன் அல்லது சந்திரன் இருந்தால் கதை கவிதை போன்றவைகளை தெளிவாகவும் அழகாகவும் மற்றவர்களை கவரக்கூடியதாகவும் ஒருவரால் எழுத முடியும். அது உங்கள் ஜாதகத்தில் நன்றாகவே இருக்கிறது சபாஷ் எழுத துவங்குங்கள் வெற்றி கிடைக்கும்.