திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஸ்தல புராணத்தில் ஓடிவரும் அம்மை என்று அம்பிகையை குறித்து சொல்கிறார்கள் இத்தகைய அம்பாள் எந்த கோவிலில் இருக்கிறாள்? அவளது சிற்ப வடிவம் எப்படி இருக்கும்? என்பதை விளக்க முடியுமா?
இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகன்,
குமரேச குருக்கள்,
சிங்கப்பூர்.
“அவதாரம்” என்ற வார்த்தையே சகல வல்லமை பொருந்திய இறைவன் பக்தர்களின் மீது அன்பு கொண்டு தனது நிலையிலிருந்து கீழிறங்கி வந்து அருள்பாலிப்பது, அன்புசெய்வது, வழிகாட்டுவது என்பது தான் பொருளாகும். குமரகுருபர சுவாமிகள் போன்ற மகான்கள் இறைவனுக்கு இருக்கும் வாகனங்களே அவன் நம்மை நோக்கி வருகின்ற சாதனங்களை தான் குறிக்குமென்று பாடி, மற்ற கடவுளை விட, குமரக்கடவுள் மயில் மீது அதிவிரைவாக அன்பரை காக்க ஓடிவருவான் என்று கூறுகிறார்.
அன்னை பார்வதி தேவியோடு ஒப்பிடும்போது நேற்று பிறந்த குமரனே பக்தர்களை நோக்கி ஓடிவருவான் என்றால் அன்னையானவள் ஓடிவர மாட்டாளா என்ன? அவள் ஓடி வந்ததற்கான எத்தனையோ சம்பவங்களை புராணங்களிலும் வரலாறுகளிலும் காண்கிறோமே! பசியால் அழுத ஞானசம்மந்தனுக்கு ஞானப்பால் ஊட்ட அம்மை ஓடிவந்த ஒரு ஆதாரம் போதாதா? அவள் பக்தர்களை கண்ணிமை போல பாதுகாப்பாள் என்பதற்கு.
அதனால் தான் திருநெல்வேலி ஸ்தல புராணம் அவளை ஓடோடி வருபவள் என்று வர்ணனை செய்கிறது அப்படி ஓடி வருகிற அம்மையின் திருக்கோலம் நெல்லையப்பர் ஆலயத்தில் உள்ள காந்திமதி அம்மனின் அருட்கோலமாகும். அங்கே உள்ள காந்திமதி அம்மை ஒரு காலை தூக்கிய வண்ணம் காட்சி தருகிறாள் இந்த திருக்கோலமே அப்படி வர்ணிக்கப்படுகிறது.