மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நிறைய பேர் உங்களிடம் நல்ல கேள்விகளை கேட்டு தானும் பலனடைந்து மற்றவர்களையும் பலனடைய செய்கிறார்கள் அதே போலவே நான் இப்போது கேட்கபோகும் கேள்வியும் இருக்குமென்று நிச்சயமாக நான் நினைக்கவில்லை காரணம் எனக்கு உள்ளதை போன்ற பிரச்சனைகள் மற்றவர்களுக்கும் இருக்குமென்று சொல்ல முடியாது இருக்கவே கூடாது என்றும் நினைக்கிறேன் என்னை போன்ற பாவி நான் ஒருவனாகவே இருக்க வேண்டும் என்பதும் எனது ஆசை.
ஐயா ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் முடித்தேன் என் மனைவி ஒன்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் அல்ல நான் பெண்பார்க்க சென்று பார்த்த முதல் பெண்ணே இவள் தான் பெண் பார்க்கிறேன் என்று பல வீடுகள் ஏறி இறங்கி பலரின் மனதையும் புண்படுத்த விரும்பாததாலும் பார்த்த மாத்திரத்திலேயே இவள் நமக்கு போதும் என்று தோன்றியதாலும் வேறு பெண்ணை பார்க்காமலேயே திருமணம் செய்து கொண்டேன். அப்படி செய்தது தவறோ என்று இப்போது எண்ணி வருத்தப்படுகிறேன்.
என் மனைவி நன்றாக சமைப்பாள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வாள் ஆனால் அவளிடம் இருக்கும் பெரிய கெட்டபழக்கம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை. கையில் காசு இருக்கிறதோ இல்லையோ நம் வருமானத்திற்கு முடியுமோ முடியாதோ என்றெல்லாம் யோசிக்க மாட்டாள் கடன் வாங்கியாவது கெளவரத்தை காப்பாற்ற வேண்டுமென்று பிடிவாதம் செய்வாள். அந்த வகையில் நான்பட்ட கடன் ஆயிரங்கள் அல்ல பல லட்சம்.
குடும்பத்தில் சண்டை வரக்கூடாது அமைதி கெட்டு விடக்கூடாது என்பதற்காக அவள் முன்னால் வித்தைக்காரன் கையில் உள்ள குரங்காக குட்டிக்கரணம் போட்டு வருகிறேன் வட்டி கட்டுவதற்கும் கடனை அடைப்பதற்கும் நான் படுகிற அவஸ்தை கொஞ்சநஞ்சம் அல்ல வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அவதிப்படுகிறேன் ஊரில் பரம்பரையாக பெரிய வீட்டு பிள்ளை என்பதனால் கடன் கொடுத்தவர்கள் கழுத்தில் துண்டை போடாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்இந்த நிலை என் மனைவிக்கு புரியவில்லை புரிந்து கொள்ளவும் அவள் விரும்பவில்லை நகை புடவை ஆடம்பர பொருள்கள் என்று வாங்கி குவிப்பதிலே கவனம் செலுத்துகிறாளே தவிர மற்றவற்றை பற்றி கவலைப்படவில்லை.
நிலைமை இப்படியே போனால் வெகுவிரைவில் நடுத்தெருவிற்கு வந்துவிடுவேன் என் பெண்டாட்டியின் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் அவள் திருந்துவாளா? அல்லது ஆயுள் மட்டும் இப்படியே இருப்பாளா? என்று விளக்கமாக சொல்லவும் உங்கள் பதிலை பொறுத்து என் வாழ்க்கையை திருத்தி அமைத்து கொள்கிறேன்.
இப்படிக்கு
வைகுண்டநாதன்
கூடங்குளம்
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே என்று கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்பட பாடலில் சொல்வார். இது குழந்தைகளுக்கு மட்டும் பொருந்துகிற விஷயம் அல்ல மனைவிகளுக்கும் பொருந்தும். அக்னி சாட்சியாக கரம்பிடித்து மனைவி வீடு வந்தவுடன் எந்த மாப்பிளையும் புதுமனைவி மோகத்தால் தான் செய்வது என்னவென்று தெரியாமலே பல காரியங்களை செய்துவிடுகிறான் அவள் நடந்து போனால் பாதம் வலிக்குமென்று தன் கைகளாலேயே தாங்குவதற்கும் தயாராக இருக்கிறான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று நிதானத்திற்கு வந்தபிறகு வருத்தப்படுகிறான்.
இதுவரை தனது வாழ்நாளில் கண்டறியாத ஆசை மிகுந்த சலுகைகளை பெறுகின்ற பெண்களில் சிலர் அந்த சலுகைகள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமென்று விரும்புகிறார்கள் அது கிடைக்காத போது சம்பந்தபட்டவர்கள் மீது கோபப்படவும் துவங்கி விடுகிறார்கள் எனவே ஆரம்ப நாட்களிலேயே தனது நிலைமை இன்னது தான் என்று மனைவிக்கு புரியவைக்க முடியாத கணவன்மார்கள் காலம் முழுவதும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.
ஆசைப்படுவது ஒருவகையில் தவறு அல்ல சில ஆசைகள் இருந்தால் தான் வாழ்வில் முன்னேற்றமும் காணமுடியும் அதற்காக ஆசைப்படுவதையே தொழிலாக வைத்து கொண்டால் நிலைமை விபரீதமாகி விடும். இது பலருக்கு புரிவதில்லை மேலும் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்தி செல்ல எது அவசியம் எது அனாவசியம் என்ற தெளிவு வேண்டும். அவசியம் என்று கருதி அனாவசியங்களை சேர்த்து கொண்டால் வீடு முழுவதும் தட்டுமுட்டு சாமான்கள் குப்பைமேடாகவே கிடக்கும். பலர் விடுகள் இன்று அப்படியே இருக்கிறது
பொதுவாக ஒரு ஜாதகத்தில் குரு எட்டமிடத்தில் இருந்தால் அந்த ஜாதகர் சூதாட்ட குணம் மிகுந்தவராகவும் ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்படுபவர்களாகவும் இருப்பார்கள் அதே போல பனிரெண்டில் இருக்கும் ராகுவும் இதே பலனை தருவார் கடன் வாங்கியாவது ஆடம்பர வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலருக்கு இந்த வகையான ஜாதகமே அமைந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகம் இப்படி தான் இருக்கிறது எனவே ஆடம்பரத்திற்கு ஆசைப்படுவது அவரது பிறவி குணம் என்றாலும் அந்த குணம் என்ற நெருப்பு வளர நீங்கள் சில சலுகைகள் என்ற நெய்யை வார்த்து வருகிறீர்கள் முதலில் அதை நிறுத்துங்கள் சிறிது காலம் சண்டை வந்தாலும் பிறகு சமாதானம் ஏற்படும்.
சூதாட்ட குணம் மேலோங்கி இருக்க பிறந்தவர்கள் நிதானமான புத்தியை அடைவதற்கு இருபத்தி ஏழு வியாழக்கிழமைகளில் குருவோரையில் தக்ஷ்ணாமூர்த்தி சன்னதியில் மூன்று நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்ய விரும்பவில்லை என்றாலும் அவர்களுக்காக பெற்றோர்களோ கணவன் அல்லது மனைவியோ செய்யலாம் கண்டிப்பாக பலன் உண்டு.