இங்கு அமெரிக்காவில் சிவாச்சாரியார் ஒருவரை சந்தித்தேன். அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் இறைவனை வழிபடும் போது தனியான சிவனாகவோ, அம்மையப்பனோடு கூடிய பெருமானகவோ வழிபடுவதை விட சிவக்குடும்பமாக வழிபடுவதே சிறந்தது என்று சொன்னார். அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது சரியான பதிலை சொல்ல அவரால் முடியவில்லை. பெரியவர்கள் சொல்கிறார்கள் அதை நான் சொல்கிறேன் என்று கூறு விட்டார். எனக்கு அவர் பதிலில் திருப்தி இல்லை. காரணம் இல்லாத காரியங்கள் எதுவுமே இந்து மதத்தில் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி என்றால் இதற்கான முழுமையான காரணம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை சொன்னால் பலருக்கும் பயன் கிடைக்கும்.
இப்படிக்கு,
டாக்டர். லலிதா சிவத்தம்பி,
கலிபோர்னியா.
உலகிலேயே மிக அதிசயமான அமைப்பு எது தெரியுமா? உலகிலேயே நிர்வாகம் செய்வதற்கு மிக கடினமான நிறுவனம் எது தெரியுமா? ஒன்றும் பெரியதாக மண்டையை போட்டு குழப்ப வேண்டாம். மிக சுலபமான பதில் தான் இதற்கு உண்டு வேறொன்றும் இல்லை நமது குடும்பம் தான் அதிசயமானதும் கடினமானதுமான நிறுவனமாகும். ஒரு நிறுவனம் என்றால் அதிகாரி இருப்பார்கள், அவருக்கு கீழே பணி செய்ய கூடிய பணியாளர்கள் இருப்பார்கள். ஒருவர் போடுகிற கட்டளையை மற்றவர்கள் ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல் செயல்பட வேண்டும் என்ற சட்டம் இருக்கும். இது தான் நிறுவனத்தின் விதி.
ஆனால் நமது குடும்பத்தின் அதிகாரி யார்? தலைவனா? தலைவியா? கட்டளைக்கு பணிந்து நடக்கும் வேலைக்காரர்களா குழந்தைகள்? ஒப்பந்தக்காரர்களா பங்காளிகள்? இது இப்படி தான் நடக்க வேண்டுமென்று இல்லை என்றால் தண்டனை கிடைக்குமென்று சட்டமா இருக்கிறது? எதுவும் கிடையாது. ஆனாலும் உண்மையை சொல்வது என்றால் ஒரு நிறுவனத்தை விட நமது குடும்பங்கள் மிக நன்றாக நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
இதில் விந்தை பாருங்கள் அப்பன் ஒரு குணம். அம்மா வேறொரு குணம். பிள்ளைகளை பற்றியோ கேட்கவேண்டாம். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் உறவினர்களோ எப்போதுமே இணையாத நவகிரகங்கள் ஆனால் இவர்கள் அனைவருமே இணைந்து தான் குடும்பம். இந்த தத்துவத்தை விளக்குவது தான் சிவ குடும்பம் என்ற இறை ஓவியத்தின் நிஜமான பொருள்.
அரசாட்சியின் வடிவமான அப்பன், அன்பே வடிவமான அம்மை, ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாய் முருகன், ஞான சொரூபம் கணபதி, இவர்களின் வாகனங்களாக காளை, சிங்கம், மயில், பெரிச்சாளி இவர்களின் ஆபரணங்களாக பாம்புகள் இதில் எதிலாவது ஒற்றுமை இருக்கிறதா பாருங்கள்? இல்லை வேற்றுமை மட்டுமே நமது கண்களுக்கு தெரிகிறது. குடும்பம் என்பதும் அப்படித்தான் வெளியில் வேற்றுமையாக தெரிந்தாலும் கூட உள்ளுக்குள் உறுதியான ஒற்றுமை இருக்க வேண்டும். அதன் பெயர் தான் குடும்பம் என்பது. எனவே சிவாச்சாரியார் சொன்னபடி இல்லறத்தார்கள் சிவக்குடும்பத்தை வழிபட வேண்டும் என்று கூறியதன் தத்துவம் இது தான். இப்போது காரணம் இல்லாத காரியங்கள் இல்லை என்பது தெரிகிறதா?