மதிப்புமிக்க குருஜி ஐயா அவர்களுக்கு, கனடாவிலிருந்து செண்பகவல்லி எழுதுவது. எனது மகன் நல்ல வேலையில் இருக்கிறான் பார்ப்பதற்கு வடிவாகவும் இருப்பான் அயல்நாட்டில் வாழும் பெருவாரியான தமிழ் பொடியன்களை போல் இவனிடம் எந்த கெட்டபழக்கமும் கிடையாது. ஆனாலும் இவனுக்கு ஏனோ திருமணம் அமைய மாட்டேன் என்கிறது எவ்வளவோ முயற்சி செய்தாலும், மனதளவில் விட்டு கொடுத்து பெண் தேடினாலும் கூட எதுவும் அமையமாட்டேன் என்கிறது இவன் ஜாதகத்தை பார்த்து சில ஜோதிடர்கள் செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறுகிறார்கள் அதற்கான பரிகாரமும் செய்து விட்டோம் ஆனாலும் எந்த பலனும் இதுவரை இல்லை இவருக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா? என்று தயவு செய்து பார்த்து சொல்லுங்கள் எந்த பரிகாரம் ஆனாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்
இப்படிக்கு,
செண்பகவல்லி,
கனடா.
நிறைய பேர் செவ்வாய் தோஷத்தை பரிகாரம் செய்தால் விலகிவிடும் தோஷமென்று தவறுதலாக நினைக்கிறார்கள். காலசர்ப தோஷம் என்பது எப்படி ஆயிரம் பரிகாரம் செய்தாலும் முப்பத்தி மூன்று வயது வரை தொடர்ந்து வருமோ அதை போலவே செவ்வாய் தோஷம் என்பதும் ஆயுள் பரியந்தம் வரை ஒருவனை தொடர்ந்து வரக்கூடியது என்ன பரிகாரம் செய்தாலும் விலகாது.
காரணம் செவ்வாய் என்பது மனிதனின் இரத்தத்தை ஆதிபத்தியம் செய்கின்ற கிரகமாகும். அந்த கிரகம் தோஷம் அடையும் போது அதனோடு சம்மந்தப்பட்ட இரத்தமும் தோஷம் அடைந்து விடுகிறது. மனிதனின் இரத்தத்தின் தன்மை எப்படி பிறப்புமுதல் இறப்புவரை மாறாதோ அதே போன்றது தான் செவ்வாய் தோஷம் என்பதும்.
மாறாது என்றவுடன் செவ்வாய் தோஷத்தை பற்றி அச்சம் அடையவேண்டிய அவசியமில்லை காரணம் பலரும் நினைப்பது போல செவ்வாய் தோஷத்திற்கும் திருமண வாழ்விற்கும் சம்மந்தம் இல்லை. செவ்வாய் தோஷமில்லாத ஒரு வாழ்க்கை துணையோடு இணைந்து வாழும் போது பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கிய பலமில்லாத குழந்தைகளாக பிறக்குமே தவிர வேறு ஒன்றும் பாதிப்பு கிடையாது. அதுவும் தோஷம் உள்ள ஜாதகமாக இருந்து விட்டால் எந்த பயமும் இல்லை.
ஆனாலும் பரிகாரமே இல்லாத தோஷங்கள் என்றாலும் கூட மிக தீவிரமான இறை பக்தி என்பது எந்த தோஷத்தையும் நிர்மூலம் ஆக்கிவிடும். செவ்வாயின் அதிபதி தெய்வம் முருகன். இவர் சிவன், விஷ்ணு, பிரம்மா, அம்பிகை, சரஸ்வதி மற்றும் லஷ்மி ஆகிய ஆறு தெய்வங்களின் கூட்டு வடிவமாக திகழ்கிறார்.
இவர் ஒருவரை வணங்கினாலே ஆறு தெய்வங்களின் அருளும் ஒருசேர கிடைக்குமென்று புராணங்கள் கூறுகின்றன. தீமைகளை வெல்லும் திருமால் மருமகனான முருகப்பெருமானை ஆறு சஷ்டிகள் அல்லது கந்தர் சஷ்டி விரத நாட்களில் முறைப்படி விரதமிருந்து வணங்கி வரம் கேட்டால் தீராத குறைகளையும் தீர்த்து வைப்பார். ஆயிரம் பரிகாரங்கள் நீங்கள் செய்திருந்தாலும் கூடவே இதையும் செய்யுங்கள் முருகனின் அருள் கண்டிப்பாக கிடைக்கும்.