அன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் உஜிலாதேவி இணையதளத்தை ஒருவருடமாக படித்து வருகிறேன் என் மனதில் ஏற்பட்ட சந்தேகம் ஒன்றிற்கு மின்னஞ்சல் மூலமாக கேள்வி அனுப்பினேன் உங்களிடமிருந்து பதில் இல்லை தபாலில் என் கேள்வியை அனுப்பி வைத்தேன் அதற்கும் நீங்கள் பதில் கூறவில்லை ஒருவேளை பல வேலைகளில் இருப்பதனால் பதில் கூற முடியாமல் இருக்கிறீர்களோ என்று உங்களை நேரில் பார்த்து கேட்கலாம் என்று வந்தேன் நீங்கள் என்னை பார்த்து பேசிய போதும் எனது வேறு பல கேள்விகளுக்கு பதில் சொல்லிய போதும் குறிப்பிட்ட அந்த கேள்வியை மட்டும் அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தவிர்த்து விட்டீர்கள் எனக்கு அதன் காரணம் புரியவில்லை ஒருவேளை நான் கேட்ட கேள்வி தவறா? அல்லது நான் அதற்க்கான பதிலை பெறுவதற்கு தகுதி இல்லாதவனா? என்று எனக்கு தெரியவில்லை இதனால் என் மனக்குழப்பம் அதிகமாக இருக்கிறது ஒருவேளை அதிகபடியான ஆர்வத்தால் பெரியவரான உங்களிடத்தில் கேட்க கூடாததை கேட்டு தவறு செய்துவிட்டேனோ என்று மனம் புழுங்குகிறது தயவு செய்து என் மனக்குழப்பம் தீர மருந்து தாருங்கள்
இப்படிக்கு
உங்களது அன்பு வாசகன்
கஜேந்திரபாபு
டெல்லி
திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்து வைத்திருக்கும் சிலர் ஒருகுறிப்பிட்ட எண்ணையோ சொல்லையோ சொன்னவுடன் அதற்க்கான பதிலை பட்டென்று கூறுவார்கள் இது நினைவாற்றல் சம்மந்தப்பட்ட விஷயம் வேறு சிலர் ஏதாவது கேள்வியை கேட்டால் தான் படித்தவற்றை கூறுவார்கள் தனக்கு தெரியாவிட்டால் சில புத்தகங்களில் தேடி குறிப்பெடுத்து பதில் சொல்வார்கள் இது அறிவு சம்மந்தபட்டது ஆனால் வேறு சிலரோ கேள்வி கேட்டவுடன் தனது எண்ணத்தை பதிலாக மளமளவென கூற துவங்கி விடுவார்கள் அல்லது என் மனது இப்போது பதில் கூறும் நிலையில் இல்லை பிறகு வா பார்த்து கொள்ளலாம் என்றுவிடுவார்கள் இது ஆத்மபூர்வமான நிலை
கேட்கப்படும் கேள்வி எதுவாக இருந்தாலும் அதற்கான பதில் இதயத்திலிருந்து வரவேண்டும் அப்போது தான் கேள்வி கேட்பவரின் மனது நிறைவடையும் அறிவும் விரிவடையும் எனவே பதில் கூறுவதற்கு மனநிலை மிகவும் முக்கியமானது நான் வேறொரு சிந்தனையில் இருக்கும் போது என்னை வற்புறுத்தி பதிலை பெற முயற்சித்தால் அதில் யாருக்கும் லாபமில்லை எனக்கே தோன்றவேண்டும் அப்படி தோன்றினால் தான் நான் பதில் கூறுவேன் இது எனது உண்மையான இயல்பு இந்த இயல்பால் சில லாபங்களையும் பல நஷ்டங்களையும் நான் அடைந்திருக்கிறேன் ஆனாலும் இதை மாற்றி கொள்ள இதுவரை நான் முயற்சி செய்ததில்லை
சிலர் என்னிடம் தனக்கு மந்திரம் கற்றுகொடுக்க சொல்லி வற்புறுத்துவார்கள் கெஞ்சுவார்கள் உண்ணாநோன்பு இருந்து கூட பிடிவாதம் செய்வார்கள் அவர்களின் செயல்களை கண்டு இறங்கி கடமைக்காக என்று சொல்லி கொடுப்பேன் ஆனால் அதில் அவர்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்காது என் மனதிற்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது செய்தால் தான் சரியாக வரும் உங்கள் கேள்விக்கு கண்டிப்பாக பதில் சொல்வேன் நீங்கள் உறக்கத்தில் இருந்தால் கூட தட்டி எழுப்பி பதில் சொல்லாமல் போகமாட்டேன் ஆனால் அதுவரை நீங்கள் பொறுக்க வேண்டும் அவசரபட்டால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை.