வணக்கத்திற்குரிய குருஜி அவர்களுக்கு, நமஸ்காரம். நான் உள்ளூரில் சென்று ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் என் பிரச்சனைக்கு பரிகாரமாக இராசிக்கற்கள் அணியச் சொல்கிறார். எனக்குரிய இராசிக்கல் எது? என்று ஆராயும் போது, பலரும் பலவிதமாக கருத்து தெரிவிக்கிறார்கள். அதில் எதை எடுத்துக் கொள்வது என்பது புரியவில்லை. பொதுவாக இராசிக்கல் அணியவேண்டுமானால் எதை அடிப்படையாகக் கொண்டு அணியவேண்டும் என்பதை தயவு செய்து விளக்கமாக கூற வேண்டுகிறேன். நீங்கள் தருகின்ற தகவல்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதனால் இந்த கேள்வியை கேட்கிறேன்.
இப்படிக்கு,
வின்சென்ட் ராஜ்,
மலேசியா.
ஒரு மனிதனுக்குரிய இராசிக்கல் எதுவென்று தேர்ந்தெடுப்பதற்கு பல வகைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக பிறந்த நட்சத்திரப்படி, பெயர் எழுத்தில் முதல் எழுத்தை கணக்கிட்டு அல்லது ராசியை அடிப்படையாக வைத்து பிறந்த ஆங்கில தேதி அல்லது மாதத்தை கருத்தில் வைத்து பெயர் இராசிப்படி, எண்கணித முறையில் பெயர் எண்ணின் படியும், ஜென்மலக்னத்தின் படியும் கணக்கிட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருசிலர் ஜாதகத்தில் லாபஸ்தானத்தை அனுசரித்து கணக்கெடுக்கிறார்கள்.
என்னைக்கேட்டால் இவைகளில் இலாப ஸ்தானத்தை கருத்தில்கொள்ளும் முறை ஒன்றை தவிர, மீதம் அனைத்துமே தவறு என்று சொல்வேன். அதற்கு பலவித காரணங்கள் என்னால் கூற முடியும். ஆனால், அவைகளை இங்கு கூறி கேள்வி கேட்டவரின் கவனத்தை திசைதிருப்ப நான் விரும்பவில்லை. இன்னும் ஒருவகையில் சொல்லப்போனால் இலாப ஸ்தானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டால் அதுவும் தவறாகத்தான் இருக்கும் என்பதும் என் எண்ணம்.
பொதுவாக இராசிக்கற்களை ஏன் அணியவேண்டும் என்று கேட்டால் ஒருவனுக்கு எந்த கிரகம் சக்தி குறைந்ததாக இருக்கிறதோ, எந்த கிரகத்தின் சக்தி அதிகப்படியாக தேவைப்படுகிறதோ, அந்த கிரகத்தினுடைய கற்களை அணிவதனால் குறிப்பிட்ட கிரகத்தின் ஆகர்ஷணம், வீரியம் உள்ளதாக அமையும். அந்த ஒரே நோக்கம் தான் இராசிக் கல் அணிவதின் தாத்பர்யமாகும். எனவே இராசிக் கல் எது என்று தேர்ந்தெடுப்பதற்கு ஜென்ம ஜாதக அடிப்படையில் எந்தெந்த கிரகம் எப்படி இருக்கிறது, எந்த கிரகத்தின் ஆற்றல் நமக்கு தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவனுக்கு சுக்ர திசை நடப்பதாக வைத்துக் கொள்வோம். அவனது ஜாதகத்தில், சுக்கிரன் பலம் குன்றி இருந்தால், அந்த திசைக்குரிய இருபது ஆண்டுகள் காலம் வரையில் அவன் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழல் வரும். எனவே அவன் சுக்கிரன் பலத்தை அதிகரித்து கொடுக்ககூடிய கல்லை அணியவேண்டும். அப்படி திசை பார்த்து, கிரகங்களின் தன்மை பார்த்து இராசிக் கல் அணிந்தால் தான் பலன் கிடைக்குமே தவிர, பொத்தாம் பொதுவாக அணிந்தால் நன்மை ஏற்படுவதில் சிக்கல் இருக்கும் என்பது எனது அபிப்ராயம்.