மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் உங்கள் இணையதளத்தை ஒரு வருடமாக படித்து வருகிறேன். காவல் துறையில் மிகச் சிறிய உத்தியோகத்தில் இருக்கும் நான், லஞ்சம் வாங்குவதில் அச்சம் உடையவன். காரணம் தவறான வழியில் வருகிற பணம், என் பிள்ளை குட்டிகளை பாதித்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனாலும், என் துறையில் லஞ்சம், மாமுல் என்று வாங்கவில்லை என்றால் வாங்காதவனை கட்டம் கட்டி அவஸ்தை படுத்திவிடுவார்கள். இதனால் நானும் வேறு வழி இல்லாமல் பணத்தை வாங்கி, அதை குடும்பத்திற்கு செலவிடாமல் கோவில்கள், அநாதை ஆசிரமங்கள் என்று தானம் கொடுத்துவிடுகிறேன். நான் செய்வது சரியானதா? அல்லது தெரிந்தே பெரிய குற்றம் செய்கிறேனா? என்று குழப்பமாக இருக்கிறது. குருஜி ஐயா அவர்கள் என் சந்தேகத்தை தெளிவுபடுத்தி நல்வழி காட்டுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்,
நெல்லை.
திருமங்கை என்று ஒரு மன்னர் ஆதி காலத்தில் இருந்தார். இவர் பெருமாளுக்கு கோவில் கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு, தன் கஜானாவில் இருந்த எல்லா பணத்தையும் செலவழித்தார். பணம் போதவில்லை. மக்களின் வரி பணத்தையும் எடுத்து செலவு செய்தார். அப்போதும் போதவில்லை. பல வழிகள் எல்லாம் பார்த்துவிட்டு எதிலும் கோவிலை கட்டி முடிப்பதற்கான முழு பணம் கிடைக்காமல், அவதிப்பட்டு இறுதியில் வேறு வழியில்லமல் கொள்ளை அடித்தாவது கோவில் கட்டியே தீருவது என்று முடிவுக்கு வந்தார். அவரை நாம் இன்று திருமங்கையாழ்வார் என்று போற்றி வணங்குகிறோம்.
ஆழ்வார் நல்ல எண்ணத்திற்காக கொள்ளையடித்திருக்கலாம். ஆனாலும், அவர் செய்தது தர்மத்தின் பாதையில் தவறு. ஊரில் உள்ளவன் பணத்தை பிடுங்கி கோவில் கட்டவேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது. நாலு பேர் பணத்தில், நயவஞ்சகமாக கோவில் எழுப்பினால் தான் அதில் வந்து உட்காருவேன் என்று பெருமாள் கூறினால் அந்த பெருமாள் வெயிலிலும், மழையிலும் தாரளமாக கிடக்கலாம். அவருக்கு கூரை தேவையில்லை.
லஞ்சம் வாங்குவது தவறு என்று நினைத்தால், அதை எந்த நிலையிலும் வாங்க கூடாது. வாங்கி நல்ல காரியத்திற்கு தான் செலவிடுகிறேன் என்று சொன்னால், பத்து பேர் நலனுக்காக ஒருவனை கொலை செய்தால், கொலை கொலை தானே சட்டம் அவனை விட்டு விடுமா? அதைப் போலதான் தர்மமும், தர்மத்தின் சிம்மாசனத்தின் முன்னால் சமாதான விளக்கங்கள் வலுவிழந்து போகும். லஞ்சம் வாங்கினால் தான் வேளையில் இருக்க முடியும் என்றால், அந்த வேலையிலிருந்து வாங்கும் சம்பளத்தை பெட்டிக்கடை வைத்து சம்பாதிக்கலாமே! அதை விட்டு, விட்டு இவர் கூறுகின்ற எந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. விளக்கு ஏற்றுவது வீட்டுக்குள் வைப்பதற்கு தானே தவிர வீட்டை கொளுத்துவதற்கு அல்ல.
லஞ்சம் வாங்குவதிலுள்ள ஒரு சிறிய ஈர்ப்பு இவர் மனதில் இருக்கிறது. அதற்காக லஞ்சம் வாங்கி அநாதை இல்லங்களுக்கு கொடுக்கும் போது கிடைக்கும் பாராட்டு, இவரை மயக்குகிறது. இதற்காக மாமுல் வாங்குவதை நியாயப்படுத்துகிறார். தன்னையும் நியாயஸ்தர் போல காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார். எனவே உடனடியாக உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குவதை நிறுத்துங்கள் உங்கள் தலைமுறை இனிதாக வாழும்.