அன்புள்ள குருஜிக்கு, வணக்கம். எங்கள் வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கிறது. இருந்தாலும் தினசரி உணவருந்த அமருகின்ற போது, எப்படியாவது சண்டை - சச்சரவு வந்துவிடுகிறது. அதை மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதை மாற்ற ஆன்மீக வழியில் ஏதாவது மார்க்கம் காட்டுங்கள். எங்களது மனசஞ்சலம் நீங்க வழி செய்யுங்கள்.
இப்படிக்கு,
சாரதா,
சென்னை.
அறுசுவை உணவு சமைத்தாலும், சமைப்பவர் மனதில் அன்பு இல்லாமல் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், மற்றவர்களின் மனதும், வயிறும் குளிர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சமைத்தால், அதில் ஒரு சுவை கூட இருக்காது. நல்ல எண்ணத்தோடு கொடுக்கப்படுகிற பழைய சாதம் கூட, தேவாமிர்தம் போல சுவைக்கும்.
நட்சத்திர ஓட்டலில் உண்டாலும் அழகான மனைவி, அன்பான மகள், நல்ல நண்பர்கள் இப்படி யார் கையில் உண்டாலும் கூட, அவைகளில் எல்லாம் இல்லாத சுகமும், சுவையும் அம்மாவின் சமையலில் இருப்பதற்கு மிக முக்கிய காரணமே அம்மா வடிக்கிற சாதத்தில் வாஞ்சை இருக்கும். அம்மா வைக்கிற சாம்பாரில் வருடி கொடுக்கும் சுகம் இருக்கும். என் பிள்ளைக்கு இது தான் பிடிக்குமென்று கணக்குப் போட்டு சமைப்பவள் அம்மா. அதனால் தான் அன்னையோடு அறுசுவைப்போம் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.
சமைக்கும் போது, கோபத்தோடு சமைக்க கூடாது. சமைக்கும் போது அச்சம் கூடாது. அகங்காரமும் கூடாது. சுவாமிக்கு நைவேத்தியம் செய்கின்ற போது எப்படி பக்தி சிரத்தையாக சமைப்போமோ அதே பக்தி சிரத்தை, அன்பாக கருணையாக மனிதர்களுக்கு சமைக்கும் போதும் இருக்க வேண்டும். சமையல் என்பது கலை மட்டுமல்ல, மனித வடிவில் இருக்கின்ற பகவானின் பசியை போக்கும் தவமும் கூட.
உங்கள் வீட்டில் சமையல் செய்பவரின் மனதை மாற்றுங்கள் அல்லது அவரை மாற்றுங்கள். இதை செய்தால் சாப்பாடு கூடத்தில் ஏற்படுகிற சண்டை நிற்கும் என்பது எனது அபிப்ராயம். மனமாற்றம் அடைய வேண்டுமானால்
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
எண்ணம் பாலிக்கு மாறு கண்டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலை மனமுருகி பாடி சமையல் வேலையில் ஈடுபடுங்கள். சண்டையும் மாறும், சமாதானமும் கூடும்.