Store
  Store
  Store
  Store
  Store
  Store

என் குடும்பத்திற்கு சூனியம் உண்டா...?


   ணக்கத்திற்குரிய குருஜி அவர்களுக்கு சேலத்தில் இருந்து தங்கராஜ் எழுதும் கடிதம் எனக்கு உங்களை பற்றி அதிகம் தெரியாது எனது நண்பன் தான் உங்கள் விபரங்களை தந்தான் அதை பெற்றவுடன் கண்டிப்பாக என் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

ஐயா எனக்கு ஒரே ஒரு தங்கை எங்கள் குடும்பத்தில் யாரும் அதிகம் படிக்கவில்லை என்பதனால் அவளை நிறைய படிக்க வைக்க ஆசை பட்டோம் அவளும் நன்றாக படித்தாள் +2 வில் 1000  த்திற்கு அதிகமான மதிப்பெண்களும் பெற்றார் இதனால் அவளுக்கு சென்னையில் புகழ் பெற்ற நல்ல கல்லூரி ஒன்றில் மேல்படிப்பிற்கான இடம் கிடைத்தது.

ஆயிரம் கனவுகளோடு அவளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு நாங்கள் சந்தோசமாக இருந்தோம் அவளது தேவைக்கு தட்டாமல் பணம் வேண்டும். என்பதற்காக நானும் அப்பாவும் கடினமாக உழைத்தோம் தினசரி கூலி வேலைதான் எங்கள் பிழைப்பு என்றாலும் அவளுக்காக நாங்கள் கஷ்டபடுவது சிரமமாக தெரியவில்லை

இரண்டு வருடங்கள் விரைவாகவே கடந்து போய்விட்டது மூன்றாவது வருடம் துவங்கும் போது தான் எங்கள் குடும்பத்தில் சூறாவளி வீச ஆரம்பித்தது என் தகப்பனாருக்கும் அவரது தம்பிக்கும் பலகாலமாகவே தகராறு இருந்தது இருவருக்கும் சொந்தமான ஒரே வீட்டை பாட்டி என் அப்பாவிற்கு கொடுத்து விட்டதனால் அவருக்கு அண்ணன் மீது தீராத பகை இருந்து வந்தது இந்த நிலையில் ஒரு நாள் வீட்டுக்கு வந்த அவர் தனக்கு வீட்டில் பங்கு கொடு அல்லது அதற்க்கான பணத்தை கொடு என்று அப்பாவை கேட்டார்

என் தந்தையார் என் கையில் இப்போது பணமில்லை வேண்டுமானால் முழு வீட்டையும் நீயே எடுத்து கொண்டு என் பங்கு பணத்தை தா என் மகள் படிப்பு செலவுக்கு உதவும் என்று சொன்னார் அதை என் சித்தப்பா ஏற்றுக்கொள்ளவில்லை அண்ணனிடமிருந்து வீட்டை பிடிங்கி கொண்டாயா என்று ஊரார் பேசுவார்கள் அதனால் தனக்கு அது தேவையில்லை என்று சொன்னார் எங்கள் கையிலோ பாக பங்கு கொடுக்க பணமில்லை அதை அவரும் புரிந்துகொள்ளவில்லை

கடேசியில் பணமும் தராமல் பாகமும் தராமல் நாங்கள் அவரை ஏமாற்றுகிறோம் என்று தவறாக எண்ணிக்கொண்டு உங்களை அந்த வீட்டில் வாழவிடுகிறேனா பார் எண்ணி மூன்று மாதத்தில் உங்கள் குடும்பமே அழிந்துவிடும் என்று சாபம் கொடுத்தார் நாங்கள் அதை அப்போது பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை

ஆனால் அப்படி அவர் சொல்லி இரண்டே மாதத்தில் கல்லூரியில் இருந்து வெளியில் வந்து சாலையை கடக்கும் போது என் தங்கை மணல் லாரியில் அடிபட்டு துடிக்க துடிக்க இறந்துவிட்டாள் என் தகப்பனாரால் அவள் இழப்பை தாங்க முடியவில்லை பித்து படித்தவர் போல் சில நாள் இருந்த அவர் ஒரு நாள் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார் பல இடங்களில் அவரை தேடினேன் கிடைக்கவில்லை கடேசியில் இரண்டாவது நாள் ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார்

தங்கை மற்றும் தந்தையின் இழப்பு என்னை தாங்கமுடியாத துயரத்தில் தள்ளிவிட்டது ஓரளவு மனதுணிச்சலோடு இருக்கும் அம்மாவை நினைத்தும் என் சிறிய தம்பியை கருத்தில் வைத்தும் அடிக்கடி வரும் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொள்கிறேன் எனக்காக இல்லை என்றாலும் அவர்களுக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருக்கிறது

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உன் சித்தப்பா தான் உங்கள் குடும்பத்திற்கு செய்வினை செய்து விட்டார் அதனால் தான் இரண்டு உயிர்களை பறிகொடுத்து விட்டிர்கள் உடனடியாக அதற்கு எதாவது மாற்றுவழி செய்து இருப்பவர்களை காப்பாற்றிக்கொள்ள பாருங்கள் என்கிறார்கள் எனக்கு சித்தப்பா கோபத்தில் பேசியிருந்தாலும் அவர் அப்படி எதுவும் செய்திருக்க மாட்டார் எங்கள் தலைவிதி இப்படி அமைந்துவிட்டது என்றே இதுவரை தோன்றுகிறது

இருந்தாலும் தங்கை இறந்ததற்கும் என் தகப்பனார் காலமானதற்கும் கூட சித்தப்பா வந்து துஷ்டி கேட்கவில்லை ஒருவேளை அவர் அப்படி ஒரு காரியத்தை செய்ததால் தான் வரவில்லையோ என்றும் நினைக்க தோன்றுகிறது. இருந்தாலும் ஒரே வயிற்றில் பிறந்த சகோதர பாசம் சாகடிக்கும் அளவிற்கு விடுமா என்றும் சந்தேகம் வருகிறது.

ஐயா அவர்கள் இத்தகைய கேள்வியை ஒரு பொருட்டாக கருதி என் குடும்பத்தில் ஏற்பட்டிற்கும் பிரச்சனைக்கு காரணம் செய்வினை கோளாறா? கிரக கோளாறா? அல்லது முந்தய ஜென்மத்தின் வினையா? இல்லை என்றால் முன்னோர்களின் சாபமா? என்பதை தெளிவாக இந்த ஏழைக்கு சொல்லி உதவி செய்ய பணிவோடு வேண்டுகிறேன் மிக நீண்ட கடிதம் எழுதி உங்களை சிரமபடுத்தியதற்காக மன்னிக்கவும்

தங்கராஜ்,சேலம்


    சாதரணமாக மனிதன் ஒரு தவறு செய்தால் அதை நான்தான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று கூறி தவறை ஒற்றுக்கொள்ள மாட்டான் என்னால் தவறு நடக்கவில்லை என் கூடவே மஞ்சள் சட்டை போட்டுகொண்டு ஒருவன் வந்தான் பார் அவனால் தான் அந்த தவறு நடந்துவிட்டது என்று கூறி தப்பிக்க பார்ப்போம் அதுமட்டுமல்ல நமது செயல்களால் வருகின்ற வாழ்க்கை துயரத்தை கூட மற்றவர்களின் மீது பழி போட்டு பகையை வளர்த்து கொள்வோமே தவிர உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டோம்

ஆனால் இந்த தங்கராஜ் என்ற இளைஞர் தனக்கு ஏற்பட்டிற்கும் மிகப்பெரிய துன்பத்திற்கு கூட மற்றவரின் மீது பழி போட தயங்குகிறார் எல்லாம் முடிந்த பிறகு கூட இது அவர் செய்திருக்க மாட்டார் அந்த அளவு அவர் கெட்டவர் அல்ல என்றே நம்புகிறார் இது தான் ஒரு நல்ல மனிதரின் இலக்கணம் என்பது தனக்கு பெற்றோர்கள் வைத்த பெயருக்கு ஏற்றார் போல மனதளவில் தங்க ராஜாவாகவே இருக்கிறார் முதலில் அவருக்கு எனது வாழ்த்துக்கள்

பொதுவாக ஒரு மனிதனின் ஜாதகத்தில் ராகு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தை கொண்டு அவனுக்கு மாந்திரீகம் என்ற அபீசார பிரயோகத்தால் பாதிப்பு உள்ளதா? இல்லையா என்பதை கணக்கிட்டு விடலாம் அதாவது ராகு துஷ்ட தேவதைகள் மற்றும் தீய ஆவிகளை கட்டுபடுத்தும் கிரகமாகும் அதே போல சந்திரன் மன பலகீனத்தை காட்டும் கிரகமாகும் செவ்வாய் கொலை மற்றும் கொடூர செயல்களை காட்டும் கிரகமாகும் இந்த மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் இருந்தாலோ ஒரே ராசியில் செயற்கை பெற்று இருந்தாலோ பில்லி சூனியத்தால் பாதிப்பு வரும் என்று சொல்லலாம்

இவர் அனுப்பிய மறித்து போன தந்தை மற்றும் தங்கையின் ஜாதகங்களில் அத்தகைய சூழல் இல்லை இவர் ஜாதகத்திலும் இவர் தம்பி ஜாதகத்திலும் அப்படிப்பட்ட அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை பராசர முனிவரின் ஜோதிட கணிதத்தை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்து பார்த்தால் பூர்வ ஜென்ம கர்மாவால் இத்தகைய சோதனை ஏற்பட்டதற்கான வாய்ப்பே அதிகமாக தெரிகிறது எனவே வீணாக சிற்றப்பன் மீது கோபபட வேண்டிய அவசியமில்லை காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவர் சொல்லவும் இப்படி நடக்கவும் சரியாக இருந்திருக்கிறது.

எனவே தங்காராஜ் வீணான மன குழப்பங்களில் ஆட்படாமல் செய்யும் தொழிலில் கவனம் செலுத்தினால் மேன்மை அடைவார் என்று ஜாதகம் சொல்கிறது இப்படி ஒரு தொடர் சோகம் இனி இவர் குடும்பத்தில் நடக்காது என்று என்னால் உறுதி கூற இயலும் தாய் மற்றும் தம்பியை பார்த்து இழந்ததை மறந்து வாழ முயற்சி செய்யுங்கள் நாராயணன் துணை செய்வான்.


Contact Form

Name

Email *

Message *