Store
  Store
  Store
  Store
  Store
  Store

மரணமே வா...!


    ரியாதைக்குரிய குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் இந்த கேள்வியை கேட்க போகும் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். பல வழிகளிலும் துன்பபட்டு துயரப்பட்டு சோதனைகளால் மோதப்பட்டு வேறு வழியே இல்லாமல் இது தான் கடேசி புகலிடம் என்ற முடிவிற்கு வந்ததனால் இக்கேள்வியை கேட்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். அதனால் மீண்டும் மீண்டும் என்னை மன்னிக்க மன்றாடுகிறேன்.

ஐயா எனது தாயாருக்கு நான் ஒரே மகன் சிறிய வயதிலேயே தந்தையை இழந்துவிட்டேன். என் அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார்கள். உள்நாட்டில் வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதனால் வெளிநாட்டில் சென்று வேலை செய்தேன் நான் அயல்நாடு சென்று ஒருவருடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை அதன் பிறகு என் தாயாருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. நிலைமை மிகவும் கவலைக்கிடமாக போகவே வேறு வழியில்லாமல் தாயை கவனிக்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு வந்தேன்.

பல மருத்துவர்கள் என் தாயின் உடல்நிலையை பரிசோதனை செய்து அவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும் அது மிகவும் முத்தி விட்டதாகவும் எந்த மருத்துவ சிகிச்சையும் இனி அவ்வளவாக பயன்தராது என்றும் கடவுளை நம்புவதை தவிர வேறு வழியில்லை என்றும் கைவிரித்து விட்டார்கள். ஆங்கில மருத்துவர்கள் மட்டுமல்ல பல சித்த ஆயுர்வேத மருத்துவர்களும் இதே விஷயத்தை உறுதிபட சொல்லி விட்டார்கள்.

நான் இப்போது வேறு எந்த வேலைக்கும் போகாமல் அம்மாவின் அறுகில் இருந்தே கவனித்து கொள்கிறேன். எனக்கு அவர்களுக்கு சேவை செய்வது மட்டுமே மன சந்தோசத்தையும் திருப்தியையும் தருகிறது. மரணத்தின் நாளை எண்ணிகொண்டிருக்கும் என் தாயின் வேதனை என்னால் சகிக்க முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது. வலியிலும் நோய்கொடுமையிலும் அவர்கள் துடிப்பதை பார்த்து கொண்டிருக்கும் துணிச்சல் எனக்கில்லை

இந்த உலகத்தில் அம்மாவை தவிர வேறு எந்த சொந்தமும் எனக்கில்லை அம்மா மட்டுமே எனக்கென்று இருக்கும் பொக்கிஷம் அவர்களை காக்கும் வகையறியாமல் தவிக்கிறேன். எந்த பாவமும் செய்யாத என் தாய்க்கு இத்தனை மரண வேதனை எதற்காக என்று எனக்கு புரியவில்லை இப்போது நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் எப்படியும் அவர்கள் இந்த வேதனையில் இருந்து விடுபட வேண்டும். ஒன்று நோய் குணமாகி விடுதலை வேண்டும். அல்லது அந்த நோய் என் தாயாரை முற்றிலுமாக எடுத்துகொள்ள வேண்டும். இதில் எது நடக்கும் என்று நீங்கள் தெளிவாக சொல்லுங்கள்.

இப்படி ஒரு மகன் கேட்பது மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கும். ஆனால் உங்களுக்கு அப்படி இருக்காது. காரணம் நீங்கள் மனிதனின் உடலை கடந்து ஆத்மாவை பார்க்கும் திறன் பெற்றவர் எனவே என்னை தவறாக கருத மாட்டீர்கள். மரணம் தான் முடிவு என்று தெரிந்த பிறகு அந்த மரணத்தை கடவுள் வேதனையாக தருவது ஏன்? அதன் மூலம் மற்றவர்களையும் துடிக்க வைப்பது ஏன்? என்பது என்னை போன்ற சாதாரண நபர்களுக்கு தெரியாது. ஆனால் அதை நீங்கள் அறிவீர்கள் எனவே தெளிவான பதிலை தந்து எனக்கு வழிகாட்டுங்கள்.

இளங்கோ,பண்ரூட்டி


    மாகாத்மா காந்தியின் கருணை மனம் நமக்கே தெரியும் ஆனால் அந்த அஹிம்சா மூர்த்தி வாயில்லாத ஜீவன் ஒன்றை கொலை செய்ய சொன்னார் அது ஏன்? சமர்பதி ஆசிரமத்தில் உள்ள இளம்பசு கன்று ஒன்று மரண வேதனையில் துடித்து கொண்டிருந்தது. அதை காப்பாற்ற வழி எதுவும் இல்லை என்று கைவிடவும் பட்டு விட்டது. இந்த நிலையில் அது துடிக்கும் துடிப்பு பார்ப்பவர் மனதையெல்லாம் கலங்கும்வண்ணம் செய்தது. அதனால் தான் காந்தி வேறு வழியே இல்லாமல் அதை கொன்றுவிட சொன்னார்.

மனிதனை பொறுத்தவரை மரணம் என்பது வரவேற்க முடியாத ஒரு பெரிய சோகம். மரணத்தையும் நோய்களையும் இன்முகத்தோடு வரவேற்பவர்கள் நிச்சயம் மனநலம் குன்றியவர்களாகவே இருக்க வேண்டும். இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படும் மரணத்தை சில நேரம் நாம் வேண்டி விரும்பி வரவேற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளபடுகிறோம்.

பத்து வருடத்திற்கு முன்னால் என் நண்பர் ஒருவரின் மகள் தன் கணவன் மீது கொண்ட வெறுப்பால் உடல் முழுக்க நெருப்பு வைத்து கொண்டாள். தீயில் அந்த இளம்பெண் முற்றிலுமாக கருகி கட்டையாகி விட்டாள். ஆனால் அவள் உயிர் மட்டும் ஊசலாடி கொண்டிருந்தது. அவள் படும் வேதனை யாராலையும் சகிக்க முடியவில்லை அதை தாங்க முடியாத அந்த பெண்ணின் தாயார் உரத்த குரலில் ஐயோ பாழும் தெய்வமே என் மகளை துடி துடிக்க வைக்காதே உன்னோடு எடுத்துகொள் என்று கதறி அழுததை இன்று என்னால் மறக்க முடியாது.

உங்கள் கேள்வியை படித்தவுடன் எனக்கு அந்த சம்பவம் தான் நினைவுக்கு வந்தது. காரணம் நமது அன்புக்குரியவர்கள் காப்பாற்ற முடியாத நோய்களால் துயரப்படும் போது அவர்களுக்கு கடேசி நிவாரணம் மரணம் மட்டுமே என்ற முடிவிற்கு நம்மை போன்ற சராசரி மனிதர்கள் கூட வந்துவிடுகிறார்கள். ஏனென்றால் பல நேரங்களில் மரணத்தை விட நோய்கள் கொடுமையாக இருக்கிறது.

உங்கள் ஜாதகத்தில் பத்தமிடத்து அதிபதி நேர்பார்வையில் தற்போது கோச்சார சனி வந்துள்ளது. இந்த நேரம் உங்கள் தாயாருக்கு அமரத்தன்மை ஏற்படுமென்று ஜாதக அலங்காரம் உள்ளிட்ட சில ஜோதிட நூல்கள் சொல்லுகின்றன. எனவே உங்கள் மனதை அதற்கு தயார்படுத்தி கொள்ளுங்கள். கருணை வடிவான கண்ணபிரான் உங்களுக்கு மன துணிச்சலை தருவதற்காக பிராத்தனை செய்கிறேன்.


Contact Form

Name

Email *

Message *