Store
  Store
  Store
  Store
  Store
  Store

முதுகில் இருக்கும் மரண தேதி !


   யிரை குடிக்கும் கொடிய நோய்கள் ஒரு மனிதனை தாக்கினால் அவன் மரண பாதையில் மிக வேகமாக நடைபோட்டு விரைவில் சாக போகிறான் என்பது உறுதியானால் அவனிடம் அவன் நிலைமையை விளக்கி சொல்லலாமா? அப்படி சொல்வதனால் நன்மைகள் உண்டா? இல்லையா? இந்த மாதிரியான கேள்விகள் பலருக்கு பல நேரம் வருவதுண்டு.

ஒரு மனிதன் தான் எத்தகைய ரோகத்தால் பாதிக்கபட்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வது அவனது உரிமை அதை தடுக்க நாம் யார்? எனவே சம்மந்தப்பட்ட நோயாளியிடம் விவரத்தை சொல்லிவிடுவது தான் முறையானது என்று சிலர் வாதிடுகிறார்கள் இது உண்மைதான் நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை முதலில் நான் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொள்ள எனக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு விஷயத்தை என்னிடமிருந்து மறைப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது என்னை தாக்கி இருக்கும் நோய் இத்தகையது என்பது தெரிந்தால் நான் எடுக்க வேண்டிய சில முடிவுகளை தெளிவாக எடுத்து விடுவேன். எனது சொந்த பந்தங்களுக்கு சிக்கல்களை வைத்து விட்டு போகமாட்டேன். எனவே எனது வியாதி எனக்கு தெரியவேண்டும். இப்படி பேசுவதும் நியாயமாகவே நமக்கு படுகிறது.

ஆனால் நடைமுறைக்கு இது சரியானது தனா? என்பதை சிந்திக்க வேண்டும். மரணத்தை விட மிக கொடியது மரணத்திற்காக காத்திருப்பது ஒவ்வொரு மனிதனும் பூமியில் பிறக்கும் போதே தனது மரண தேதியை குறித்து விட்டு தான் பிறக்கிறான். ஆனால் அது எந்த நாள் எந்த மணி என்பது யாருக்கும் தெரிவதில்லை அப்படி தெரிந்தால் என்ன ஆகும்? எந்த மனிதனும் செயல்பட மாட்டான் ஒரு மண்ணாங்கட்டியை போல போட்ட இடத்திலையே கிடந்தது மக்கி விடுவான். முப்பத்து வயதில் இறந்து விடுவேன் என்பது தெரிந்தால் யாருக்கு தான் வாழ்க்கையின் மீது ஆர்வம் வரும். என்ன ஆட்டம் ஆடினாலும் எந்த கூத்து நடத்தினாலும் முப்பது வயதில் செத்துவிட போகிறோம் பிறகு எதற்கு ஆர்பாட்டம் எல்லாம் என்ற எண்ணம் தலைதூக்கி விடும்.

ஒருவனை மிகக்கொடிய புற்று நோய் தாக்குகிறது என்று வைத்து கொள்வோம். நேற்றுவரை சுறுசுறுப்பாக நடமாடியவன் இன்று தனது நோய் இன்னதென்று தெரிந்தவுடன் பெட்டிக்குள் அடைபட்ட பாம்பு போல சுருண்டு விடுவான். உண்பதும் உறங்குவதும் அவனுக்கு சுமையாகி விடும். ஒரு தூக்கு கைதி மரண தேதியை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் துடிப்பது போல அவனது வாழ்க்கை ஆகி விடும். எப்படியும் அவன் சாகபோகிறான் யாராலும் அவனை காப்பாற்ற முடியாது என்பது உறுதியான பிறகு அதை அவனிடம் சொல்லி ஒவ்வொரு வினாடியும் அவனை ஏன் சாகடிக்க வேண்டும் உனக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறாய் இன்னும் சில நாளில் பூரண ஆரோக்கியத்தை அடைந்து விடுவாய் என்று சொன்னால் அவன் மனது ஆறுதல் மட்டுமல்ல நம்பிக்கையும் பெரும். எனவே கொடிய நோய் பற்றிய விபரத்தை நோயாளிக்கு சொல்லவேண்டியது இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். இதுவும் சரியாக தான் நமக்கு படுகிறது.

எனக்கு தெரிந்த ஒரு அம்மையாருக்கு கொடுமையான எலும்பு புற்று நோய் மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள் இனி அவர்களது வாழ்நாள் சில மாதங்களோ சில வாரங்களோ என்ற நிலைக்கு வந்துவிட்டது ஆனால் அவரை பார்க்கும் போது மிக சாதரணமாக இருந்தார்கள் இன்னும் சில நாளில் தான் சாக போகிறோம் என்ற எண்ணம் அவர்களை அழுத்தவே இல்லை சாதாரணமாக சிரித்து நடமாடி கொண்டிருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் கணவரிடம் கேட்டேன் உங்கள் மனைவிக்கு மரணத்தை துச்சமாக மதிக்கும் மனோதிடம் இருக்கிறது என்று பாராட்டினேன்.

அதற்கு அவர் வேதனையாக சிரித்தார். என் மனைவிக்கு வந்திருப்பது புற்று நோய் அது சிறிது சிறிதாக தன்னை விழுங்கி கொண்டிருக்கிறது என்பது தெரியவே தெரியாது நாங்கள் அதை கடும்பாடு பட்டு மறைத்து வருகிறோம் இது தான் கதையே தவிர மரண துணிச்சல் ஒன்றும் அவருக்கு இல்லை என்றார். அவர் மேலும் அவளை நோய் கொன்றுகொண்டிருக்கிறது அவள் சரிரம் கரையான் பிடித்த மர துண்டுபோல் கரைந்து கொண்டிருக்கிறது இத்தனை வேதனைகளை அவள் அனுபவிக்கும் போது நீ சிறிது நாளில் செத்து விடுவாய் என்ற உண்மையை சொல்லி மன வேதனையும் கொடுக்க வேண்டுமா? என்று என்னிடம் கேட்டார். அவரது செயலை தவறு என்று சொல்ல எனக்கு துணிச்சல் வரவில்லை

இருந்தாலும் ஒரு விஷயத்தை நாம் மறந்து விட கூடாது. நம்மை நமது தந்தையார் அடிக்க வருகிறார் என்றால் அப்பா அடிக்க போகிறார் என்ற எண்ணம் நமக்கு முன்பே வந்து விட்டால் அந்த அடியின் வலி அதிகமிருக்காது காரணம் அந்த வேதனையை தாங்கவும் அதிலிருந்து விடுபடவும் நாம் தயாராகி விடுகிறோம். அதே அடி எதிர்பாராத விதமாக கிடைக்கிறது என்றால் அதன் வேதனை மிக அதிகமாக இருக்கும் அதாவது நமது மனதிற்கு இதை தாங்க வேண்டும் இதிலிருந்து கடந்து வெளிவர வேண்டும் எப்படியும் வெளிவந்து விடுவேன் என்ற துணிச்சல் இருந்தால் எத்தகைய கடுமையான நோயும் தனது வேகத்தை குறைத்து கொள்ளும் அதாவது நோயை எதிர்க்கும் சக்தி மருந்துக்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் உண்டு. இதை எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

என்னிடம் வந்த ஒருவருக்கு சிறுநீரகங்கள் இரண்டும் பலத்த பாதிப்பை அடைந்து விட்டது. அவர் வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுக்கும் பரிசு என்பது உறுதியாகி விட்டது அது எனக்கும் தெரியும் ஆனால் அவர் தனது ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் நான் இன்னும் எவ்வளவு நாள் வாழ்வேன் என்று கேட்டார் ஜாதகப்படி சில மாதங்கள் மட்டுமே அவர் ஆயுள் என்று தெரிந்தது ஆனாலும் நான் அதை அவரிடம் சொல்லாமல் உங்கள் ஆயுள் மிக தீர்க்கமாக இருக்கிறது கவலை படாதீர்கள் இந்த நோய் உங்களை ஒன்றும் செய்யாது என்று உறுதியோடு பேசினேன் மருத்துவர்கள் அவருக்கு வைத்த காலக்கெடு ஆறு மாதம் மட்டுமே ஆனால் அவர் அதையும் தாண்டி இரண்டரை வருடகாலம் இருந்தார் தனக்குள்ள நோயை எதிர்க்கும் வலிமையை மனது பெற்றால் மருந்துக்களின் வீர்யம் பன்மடங்கு உயரம் என்று அப்போது நான் உணர்ந்தேன்.

சும்மா இருப்பவனையையே உனக்கு ஒரு நோய் அது தீரவே தீராது என்று பயமுறுத்தி பாருங்கள் இரண்டு நாளில் அவன் படுக்கையில் படுத்து விடுவான். நோயை அவனுக்கு இருப்பது உண்மையென்றாலும் ஒன்றுமில்லை உனக்கு தைரியமாக இரு என்று நம்பிக்கை ஊட்டி பாருங்கள் படுக்கையில் கிடக்கும் நோயாளி கூட எழுந்து உட்கார்ந்து விடுவான். எனவே நோயயாளிடம் நோயின் விவரத்தை சொல்லிவிடுவது ஒருவகையில் சிறந்தது. அதே நேரம் நீ அவ்வளவு தான் என்று அதைரிய படுத்த கூடாது. சாவின் விழும்பில் அவன் நின்றால் கூட நீ அதை வெல்வாய் உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொடுத்து பாருங்கள் கண்டிப்பாக நோயின் வேகம் குறையும்

இதை நான் நோயாளிகளுக்காக மட்டும் சொல்லவில்லை நமது மனம் இருக்கிறதே அது அலாவுதீன் பூதம் மாதிரி அதனிடம் அளவிடற்கரிய சக்திகள் உண்டு அந்த சக்தியை நீங்களாகவே உங்களுக்குள் தூண்டி விட்டு கொண்டால் சூடர் விளக்கு போல் வாழ்வீர்கள் மன துணிச்சல் கொடிய நோயையே விரட்டுமென்றால் உங்கள் தோல்வியை விரட்டாதா என்ன?





Contact Form

Name

Email *

Message *