ஐயா நான் சமீபத்தில் கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அம்மன் கோவில் ஒன்றிற்கு சென்றிருந்தேன் அங்கு வந்த நிறைய பக்தர்கள் அம்மனுக்கு உப்பு மற்றும் மிளகை காணிக்கை பொருளாக செலுத்தினார்கள். மனிதன் அன்போடு படைக்கும் எந்த பொருளையும் இறைவன் பெற்று கொள்கிறான் என்றாலும் நமது இந்து மதத்தில் படைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிதனி காரண காரியங்கள் இருப்பதை நான் அறிவேன் அந்த வகையில் மிளகு உப்பு இவைகளை காணிக்கையாக செலுத்துவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை அதற்க்கான விளக்கத்தை தாங்கள் தந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன். என் கேள்வியில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
மணிமேகலை
சென்னை
இறைவனுக்கு செலுத்தப்படும் பிராத்தனையின் முறைகள் என்பது இடங்களுக்கு ஏற்றவாறு மாறி அமைகிறது. ஒரு இடத்தில் மிக சிறப்பான பிராத்தனை பொருளாக கருதப்படும் ஒன்று வேறொரு இடத்தில் மதிப்பு இழந்ததாக இருக்கிறது. உதாரணமாக சில தெய்வங்களுக்கு மாமிச படையல் செய்கிறார்கள் சாராயம் சுருட்டு கூட தெய்வங்களுக்கு படைக்கபடுகிறது. படையல் பொருளாக கருதப்படும் இவைகளே வேறொரு தெய்வத்தின் முன்னால் அபச்சாரமாக ஆகி விடுகிறது. எனவே படையல் பொருள் என்பது மனிதனின் மனபக்குவங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.
பூஜையில் மிக அதிகமாக படைக்கப்படும் தேங்காய் பழம் போன்றவைகள் என்ன தத்துவத்தின் அடிப்படையில் படைக்கபடுகிறது என்பதை நாம் அறிவோம் என்றாலும் அதை மீண்டும் ஒருமுறை சிந்தித்து பார்ப்பதில் தவறுகள் இல்லை தேங்காயின் சிரட்டை அதாவது ஓடு மிக கடினமாக இருக்கிறது. அதன் மேலே சிக்கலான நார்களும் உண்டு வாழ்க்கை என்பதும் கடினமானது தான் சிக்கல்கல பல மலிந்தது தான் ஆனால் அதை பரிபூரணமாக இறைவனிடம் சமர்பித்து விடடால் சுவை மிகுந்த மாசு மருவில்லாத தேங்காய் பருப்பு போல ஆக்கிவிடலாம் என்பதே தேங்காயின் தத்துவம் ஏறக்குறைய இதே தத்துவம் தான் பழங்களுக்கும் சொல்லப்படுகிறது.
உப்பு மற்றும் மிளகை கடவுளுக்கு படைப்பதில் இதே போன்ற அறிவுபூர்வமான தத்துவம் அடங்கி உள்ளது ஆனால் இந்த படையல் மிக அரிதான யாரது ஒருவர் எங்கையோ செய்வதனால் பலருடைய கண்களுக்கு அகப்படுவதும் இல்லை கருத்துக்களில் சிக்கபடுவதும் இல்லை இந்த படையல் பொருளில் மிக முக்கிய பங்குவகிக்கும் உப்பு என்பது மனித சரீரத்தை குறிக்கும் பல சித்தர்கள் நமது உடம்பை உப்பிருந்த பாண்டம் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம். அதை போலவே மிளகு என்பது உடம்பில் உள்ள அகங்காரத்தை இச்சையை தவறான உணர்சிகளை குறிப்பதாகும்.
பொதுவாக நமக்கு வருகின்ற நோய்கள் அனைத்துமே நெறிபடுத்த படாத உணர்சிகள் மூலமும் தவறான அபிலாசைகள் மூலமும் ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம் எனவே உடம்பை கெடுக்கும் அகங்காரத்தை இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து விடடால் கெட்டு போன சரீரம் கூட நைவேத்திய பொருளாகிவிடும் இந்த தத்துவத்தை நன்கறிந்த நமது முன்னோர்கள் உடம்பிற்கு எதாவது நோய்வந்து விடடால் அது விலகுவதற்காக கடவுளை வேண்டி உப்பு மிளகை காணிக்கையாக செலுத்துவார்கள் மிக குறிப்பாக சர்ம சம்மந்தப்பட்ட நோய்கள் தீர்வதற்கு இந்த காணிக்கை செலுத்தபடுகிறது.
உப்பு மிளகை காணிக்கையாக செலுத்துவது இந்து மதத்தில் மட்டும் தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு நான் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஆற்றாங்கரை பள்ளிவாசல் என்ற ஊரில் உள்ள தர்க்காவில் மிலாடி நபி அன்று பூக்குழி என்ற நெருப்புகுண்டம் வளர்த்து விரதமிருந்த சிலர் அதில் இறங்கி நடப்பார்கள் அப்போது உடம்பில் கட்டி மற்றும் மருக்கள் வந்தவர்கள் உப்பு மிளகை யா அலி யா உசேன் என்று கோஷமிட்டவாறு நெருப்பில் போடுவார்கள் இது இன்றும்கூட பழக்கத்தில் இருக்கிறது.
அதே போலவே உவரி என்ற கடல்கரை கிராமத்தில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் திருவிழாவின் போது உப்பு மிளகை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள் இந்த பழக்கம் இந்து மதத்தில் இருந்து தான் அவர்களிடம் சென்றது என்றாலும் மதமாறினால் கூட தனது ஆதி பண்பாட்டை இவர்கள் விட்டுவிடவில்லை என்பதை சிந்திக்க வேண்டும். அம்மன் கோவில்கள் பலவற்றில் இந்த வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. எனது அகங்காரத்தை நீக்கி நல்ல உடம்பை தா என்று பகவானிடம் விண்ணப்பிக்கும் இந்த பிராத்தனை பொருள் புரிந்து இன்னும் வளரட்டும் என்பதே நமது எண்ணம்.