Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனைவியின் அன்பை பெற எளிய பரிகாரம்




      குருஜி அவர்களுக்கு வணக்கம் குருஜி இந்த கடிதத்தை எனது மனம் மிக சோர்வாக இருக்கும் இந்த வேளையில் உங்களுக்கு எழுதுகிறேன். நான் படுகிற அவதி இதுதான் என்று வெளியில் சொல்ல முடியாது. சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் காரணம் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். பண பற்றாகுறை என்பதை என் வாழ்வில் எப்பொழுதுமே கண்டதில்லை. தாத்தா அப்பா சேர்த்து வைத்த சொத்துக்கள் ஏராளம் இருக்கிறது. ஊரில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மரியாதையை கொடுப்பதில் யாரும் குறை வைக்கவில்லை. சென்ற இடமெல்லாம் அவருக்கென்ன வாழ்ந்தால் அவரை போல் வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனாலும் தங்க கூண்டுக்குள் வாழுகின்ற பச்சை கிளியை போல என் வாழ்க்கை என்பது பலருக்கு தெரியாது. 

திருமணம் முடிகின்ற வரையில் கஷ்டம் என்றால் என்னவென்று அறியாதவன் நான். கூட்டு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளோடு பெரியப்பா சித்தப்பா மக்களோடு மாமன் மச்சான் உறவுகளோடு வாழ்ந்ததனால் இளமையில் எந்த பெண்ணையும் காதலிக்க எனக்கு தோன்றவில்லை அப்பா அம்மா பார்த்தே திருமணத்தை நடத்தி வைத்தார்கள். என் மனைவி அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும் ஐம்பது வயது கடந்த இன்று கூட அவளை நான் காதலிக்கிறேன். ஆனால் என் காதலும் அன்பும் அவளுக்கு எப்போதுமே புரியமாட்டேன் என்கிறது. திருமணம் முடிந்த நாளில் இருந்து இன்றுவரை அவள் என்னை வெறுப்போடும் வேதனையோடும் வேண்டாத பொருளை போலவே பாவிக்கிறாள். 

எங்களுக்கு குழந்தைகள் இல்லை அதற்கு காரணம் எங்கள் இருவரில் உடலில் எந்த குறையும் கிடையாது ஆனால் கணவன் மனைவி தனியாக சந்தோசமாக இருந்தோம் என்று ஒரு நாளை கூட சொல்ல முடியாது. அவளை நான் நெருங்குகின்ற ஒவ்வொரு வேளையும் என்னை வெறுத்தும் அவமரியாதை செய்தும் அப்புறத்தில் தள்ளி விடுவாள். பிறகு எப்படி குழந்தை பிறக்கும். ஆனால் இந்த ரகசியம் என்னையும் என் நெருங்கிய நண்பன் ஒருவனையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. குறிப்பாக வயது முதிர்ந்த என் தாய் தந்தையருக்கு இவ்விஷயம் தெரிய கூடாது என்று நினைக்கிறேன். காரணம் தனது மகனின் வாழ்வில் தாங்களே சூறாவளியை ஏற்படுத்தி விட்டோம் என்று அவர்கள் மிகவும் வறுத்த படுவார்கள் வாழ்வின் விளிம்பில் இருக்கும் அவர்களை சங்கட படுத்த கூடாது என்று நான் விரும்புகிறேன். 

வாழ்வில் எதையும் திட்டமிட்டு சீராக நடத்த வேண்டுமென்று விரும்புகிறவன் நான் என் மனைவியோ அதற்கு நேர்மாறானவள் கலைந்து கிடக்கும் புத்தக அலமாரியை கூட அப்படியே விட்டு வைப்பாளே தவிர தன்னால் முடியாவிட்டாலும் வேலைக்காரர்களை விட்டாவது சீர்படுத்த மாட்டாள். நாகரீகம் நாசுக்கு என்பதெல்லாம் அவள் அறியாத ஒன்று பிடிவாதமும் தற்பெருமையுமே சிறந்த அணிகலன் என்று கருதுவாள் எனது நண்பர்கள் என்று யாரவது வந்து விட்டால் அவர்கள் முன்னால் என்னை அவமான படுத்துவதிலேயே குறியாக இருப்பாள். இதனால் எந்த நண்பரையும் நான் வீட்டுக்கு அழைப்பதில்லை. அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. எனக்கு உடல் நலம் பாதித்தால் கூட கண்டுகொள்ளாமல் தன் போக்கிலேயே நடந்து கொள்வாள்.

அவளை திருத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஒன்றும் முடியவில்லை அன்பாக பேசி பார்த்தேன் அதிகாரம் செய்து பார்த்தேன் அதிரடியாக நடந்து பார்த்தேன். எல்லாமே அவளிடம் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வி அடைந்து போகிறதே தவிர இதுவரை வென்றதில்லை. இப்படிபட்ட பெண்ணோடு உணர்ச்சி அற்ற ஜடமாக வாழ வேண்டுமா? விவாகரத்து செய்தால் அவளும் நிம்மதி அடைவாள் நாமும் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து என்னை பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடு இருவரும் சம்மதித்தே பிரிந்துவிடுவோம் என்று கேட்டு பார்த்தேன். அழுது ஆர்பாட்டம் செய்து ஊரை கூட்டி பஞ்சாயத்து வைக்கும் அளவிற்கு போய்விட்டாள் இதற்கு மேலும் அவளை கட்டயபடுத்தினால் நம் மானத்தை கப்பலேற்றி விடுவாள் என்று இதுவரை அமைதியாக வாழ்ந்தேன்.

சரி நமது தலைவிதி இவ்வளவு தான் என்று மனத தேற்ற நினைத்தாலும் முடியவில்லை. நானும் சராசரி மனிதன் தானே? என் மனமும் உணர்வுகளும் ஓரளவு தானே தாக்கு பிடிக்கும்? மனம் போனபடி உணர்வுகள் இழுத்தபடி நடந்து கொண்டால் மானம் மரியாதை இழந்து அவமான சின்னமாக வாழ்ந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் போல அலைகிறேன். எப்படியாவது நான் நிம்மதியாக வாழ வேண்டும் ஒழுக்கம் கெட்டு போய்விட கூடாது. அப்படி நான் போனால் என் தலைமுறைக்கே பாவம் செய்தவனாக ஆகிவிடுவேன். 

அதனால் குருஜி அவர்கள் தயவு செய்து என் மனது சாந்தி அடையும் வழியை சொல்லுமாறு தயவோடு கேட்கிறேன். நீங்கள் கூறுகின்ற ஆறுதல் மொழிகள் தான் பாலைவனத்தில் ஒரு சொட்டு தண்ணீருக்காக அலைகின்ற பயணி போல் இருக்கும் என்னை ஆசுவாச படுத்தி கரையேற்ற வேண்டும். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்த பிறகு உங்களை நான் சாதாரண மனிதராகவே பார்க்கவில்லை நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் தெய்வ வாக்காக எடுத்து கொள்கிறேன். தயவு செய்து இந்த பாவியின் பாவ சுமைகள் தீர வழிகாட்டுங்கள்.
இப்படிக்கு 
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.
சென்னை 




     மது நாட்டில் நடைபெறுகின்ற திருமணங்கள் பல சொர்க்கத்தில் நிச்சவிக்க படுகிறதோ இல்லையோ ஜோதிடத்தில் கண்டிப்பாக நிச்சவிக்க படுகிறது. பொதுவாக பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் போது பத்துவித பொருத்தங்கள் இருக்கிறதா என்பதை மட்டுமே முக்கியமாக கவனிக்க படுகிறது. மற்ற கிரகங்களின் நிலை பாடுகளை யாரும் அதிகமாக கவனத்தில் எடுத்து கொள்வதில்லை. இந்த தவறை பெற்றோர்கள் மட்டுமல்ல ஜோதிடர்களும் செய்கிறார்கள். 

பத்துவித பொருத்தங்களை பார்ப்பது குற்றமென்று நான் சொல்ல மாட்டேன். அவைகளும் பார்க்க பட வேண்டும் அத்தோடு மற்ற கிரகங்களின் தன்மையை கவனத்தில் வைத்தே திருமண பொருத்தத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் பத்தாம் இடத்தில் இருந்தால் அந்த பத்தாம் இடம் ஜலராசியாக இருந்தால் கண்டிப்பாக திருமண வாழ்க்கையில் ஆனந்தமாக இருக்காது. சூரியன் அல்லது சந்திரனோடு சுக்கிரன் கூடி ஜல ராசியில் இருந்தால் கணவன் மனைவி இருவருக்கிடையில் அன்பும் அறவனைப்பும் அரிதாகவே இருக்கும் மேலும் ஏழாம் இடத்தில் சனிகிரகம் இருந்தால் திருமண வாழ்வில் சுவையும் சுகமும் இருப்பது கடினம்.

இந்தமாதிரியான கிரக நிலைகள் அமைந்து அதை கவனிக்காமல் திருமணம் செய்து அவதி படுவபர்கள் நமது தலையெழுத்து இவ்வளவு தான் இனி விமோசனம் என்பது கிடையாது என்று சோர்ந்து போய் முடங்கி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இறைவனின் அனுக்ரகமும் மனதில் தெம்பும் முயற்சியில் முனைப்பும் இருந்தால் நரகமாக காட்சி அளிக்கும் இல்லறத்தை ஓரளவாவது செப்பனிட்டு கொள்ள முடியும். மனச்சோர்வு வந்துவிட்டால் இறைவன் கூட கைவிட்டு விடுவான். 

சுக்கிரன் என்ற கிரகம் மனிதனது திருமண வாழ்வை தீர்மானம் செய்கிறது. அந்த கிரகத்தின் சஞ்சாரத்தை பொறுத்தே ஒருவனது திருமண வாழ்வு மகிழ்வோடு இருக்கிறதா? அல்லது அதற்கு நேர்மாறான நிலையில் இருக்கிறதா? என்பதை முடிவு செய்து விடலாம். சுக்கிரனின் தன்மை எதிர்மறையாக இருப்பவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த கிரகத்தின் ஈர்பாற்றலை நல்ல முறையில் பெற்றுக்கொள்ள சுலபமான சில வழிமுறைகள் இருக்கின்றன அவற்றை நம்பிக்கையோடு செய்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். 

சுக்கிரனது ஆகர்சனத்தை மிக சுலபமாக ஈர்க்க கூடிய ஆற்றல் மொச்சை பயிருக்கு உண்டு மனைவியின் அன்பையோ கணவனின் பாசத்தையோ பெற நினைப்பவர்கள் மொச்சை பயிரில் இருபத்தி ஏழு மட்டும் எண்ணி எடுத்து ஒரு வெள்ளை துணியில் சிறிய மூட்டையாக கட்டி தலையணைக்கடியில் நூற்றி எட்டு நாட்கள் வைத்து படுக்க வேண்டும். தினசரி இரவில் அப்படி படுத்து விட்டு காலையில் கண்விழித்தவுடன் மொச்சை பயிர்களை உள்ளங்கையில் வைத்து மூடி கொண்டு சுக்கிர கிரகத்தை மனதில் நினைத்து பிராத்தனை செய்து அல்லது சுக்கிர காயத்திரியை இருபத்தி ஏழு முறை உதடுகள் அசையாமல் மனதிற்குள் சொல்லி வழிபட வேண்டும். இப்படி நூற்றி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக சுக்கிரனின் ஆகர்சனம் நல்ல முறையில் வந்து இல்லற வாழ்வில் வசந்த காற்றை வீச செய்யும். இது எளிய சுலப பரிகாரமாக தெரிந்தாலும் மிக அற்புதமான பலனை கைமேல் தரக்கூடும் உடல்கள் இரண்டாக இருந்தாலும் மனம் ஒன்றாக ஆணும் பெண்ணும் வாழ்வார்கள்.


Contact Form

Name

Email *

Message *