அன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். என் கனவில் அடிக்கடி மான் வருகிறது. புல்வெளியில் அது மேய்வது போல் இருக்கும். பக்கத்தில் சென்று தொட்டுப்பார்க்க செல்வேன் ஓடி மறைந்துவிடும். இந்த கனவிற்கு என்ன பலன்? இப்படி கனவு காணலாமா?
இப்படிக்கு,
ராஜலஷ்மி,
மதுரை.
பொதுவாக மனிதர்களின் கனவில் அவர்கள் அடிக்கடி பார்க்கும் பொருட்கள்தான் வரும். மிருகங்கள் என்ற வரிசையில் பார்க்கும்போது ஆடு, மாடு, நாய், பூனை, யானை சில நேரங்களில் குரங்குகள் கூட கனவில் வரும். கனவில் மானை பார்ப்பது அபூர்வமான நிகழ்வாகும்.
நமது சாமுத்ரிகா லட்ஷண சாஸ்திரம், மான் என்பதை அச்சத்தின், நாணத்தின் அடையாளமாக கூறுகிறது. ஓடுகிற மானும், ஒடுங்காத மனமும் ஒன்று என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. கனவு சாஸ்திரம் கூட ஏறக்குறைய மானை இதே வரிசையில் தான் பார்க்கிறது.
ஒருவர் கனவில் அடிக்கடி மான் வந்தால் அவர் மனதும், புத்தியும் திடகாத்திரமாக இல்லை. தடுமாறும் நிலையில் இருப்பதாக அர்த்தம். உங்கள் மனது அப்படி கூட இருக்கலாம். அதை சுட்டிக்காட்ட இந்த கனவு வந்திருக்கலாம் எனவே மனதை உறுதிப்படுத்துங்கள். ஒளிமிகுந்த வாழ்வை அடைவீர்கள்.