நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்களை ராசி கற்கள் அணிதல், ராசி நிறங்களை பயன்படுத்துதல் போன்ற
பரிகாரங்களால் சரி செய்து விடலாம் என்று, பல காலமாக நம்பப்பட்டு வருகிறது. இவைகளால் மட்டுமல்ல பச்சை மூலிகைகளாலும்,
கிரஹ தோஷங்களை நிவர்த்தி
செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள் அது எந்த வகையில் சாத்தியம்?
ராசிக்கற்களை அணிந்து கொள்ள சொல்பவர்கள், அதற்கு என்ன காரணத்தை கூறுகிறார்கள் என்று
சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த உலகம் முழுவதும் மற்ற கிரஹங்களின் ஆகர்ஷனம்
பரவிக்கிடக்கிறது. நாம் அந்த ஆகர்ஷனத்தை மிக சுலபமாக பெற்றுக்கொள்ள ராசி கற்களில்
ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. அந்த ஈர்க்கும் சக்தியானது, நவக்கிரஹ ஆகர்ஷனங்களை நமது உடம்பிற்கு பெற்றுத்
தருகிறது என்று தான் கூறுகிறார்கள்.
ராசி கற்களின் மூலப்பொருள் மண். அதாவது வைரம் துவங்கி, முத்து வரையிலும் அவைகளின் உற்பத்திக்கு
ஆதாரப்பொருளாக இருப்பது மண். மண்ணிற்கு ஈர்ப்பு விசை இருப்பதை யாரும் மறுக்க
முடியாது. அதை தான் புவியீர்ப்பு விசை என்றும் அழைக்கிறோம். ஆனால் மண்ணிற்கு
இருப்பதை விட ஒரு பங்கு அதிகமான ஈர்ப்பு விசை தாவரங்களுக்கு இருக்கிறது. காரணம்
தாவரங்கள் தனக்கு தேவையான ஆகாரத்தை, சூரிய வெளிச்சத்திலிருந்து பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நிமிடமும் ஈர்ப்பு சக்தியை
அதிகரித்து கொண்டே போகிறது. எனவே அந்த தாவரப்பகுதிகளை முறைப்படி மனிதன் பயன்படுத்தினால் கிரஹங்களின்
ஆற்றல்களை உடனடியாக பெறுவான்.
மூலிகைகளுக்கு சில விசேஷ சக்திகள் உண்டு. சிவப்பு
வண்ணத்தில் உள்ள மூலிகைகள் செவ்வாயின் ஆற்றலையும், நீல வண்ணத்தில் உள்ள மூலிகைகள் சனியின்
ஆற்றலையும், தனித்தனியாக
பிரித்தெடுத்து கொடுக்க கூடியது. அதனால் தான் ராசி கற்களை விட மூலிகைகள் அதிவேகமான
பலன்களை தரக்கூடியது என்று நான் நினைக்கிறேன்.
மூலிகைகள் நவக்கிரஹங்களின் ஆற்றலை பெறுவதற்கு மட்டும் தான் பயன்படுமா? மற்றவகையான அதாவது ஜோதிட சாஸ்திரம் அல்லாத
அமானுஷ்ய, ஆன்மீகப்பலன்களை
மனிதனுக்கு கொடுக்குமா? அப்படி
கொடுப்பதாக இருந்தால் சில விபரங்களை தாருங்கள்.
வன்னிமரத்தை பற்றி கேள்விப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்த வன்னிமரம்
வழிபாட்டிற்கு மட்டுமல்ல. மனிதனின் வாழ்க்கையில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பல
சூட்சம சக்திகளை கொடுக்க வல்லதாகவும் இருக்கிறது. புதியதாக நாம் ஒரு மனை வாங்கி,
வீடு கட்ட நினைத்தால்
அந்த வீட்டு மனையின் மண் மிகவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்
தான் வாஸ்துப்படி வீடு இருந்தாலும் கெட்டபலன் நடக்காமல் தடுக்கும். இந்த
வன்னிமரத்தின் எட்டு குச்சிகளை ஒடித்து, அமாவாசை அன்று மனையின் எட்டு திசையிலும் பள்ளம் பறித்து உள்ளே வைத்து மூடிவிட
வேண்டும். அப்படி மூடிய இரண்டு மாதத்தில் அந்த மண்ணில் இருக்கும் எலும்புகள் உட்பட,
பல அசுத்தப்பொருட்கள்
தானாக மக்கி போய்விடும் அவைகளால் மீண்டும் நமக்கு தொல்லைகள் வராது.
சிலருக்கு எதிரிகள் தொல்லை, நீதிமன்ற
பிரச்சனை, அரசு அலுவல்களில்
சிக்கல் என்பவைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தான் முயற்சி
செய்து தள்ளிப்போக பார்த்தாலும் ஆளை விடாது. வேட்டை நாயானது, சிறிய முயலை துரத்தி துரத்தி பிடிப்பது போல,
இந்த பிரச்சனைகள் அவர்களை
நிம்மதி என்ற இளைப்பாறுதலை தராமல் துரத்திக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள்
வளர்பிறை தசமி திதியில், ராகுகால
நேரத்தில், வன்னிமரத்தை
கற்பூரம் ஏற்றி வைத்து, ஒன்பது முறை
சுற்றி வந்து விழுந்து வணங்க வேண்டும். அப்படி வணங்கி விழுந்தால், நமது கோரிக்கைகள் வன்னிமரத்து வழியாக, மகாகாளியிடம் செல்வதாகவும், அவள் நம்மை உடனடியாக காப்பதாகவும் சாஸ்திரங்கள்
கூறுகின்றன.
நீங்கள் சொல்வது சுலபமாகவும், செய்யக்கூடியதாகவும்
இருக்கும் பரிகாரமாகும். இதனால் இதே போன்ற வேறு வகையான பரிகாரங்கள் எதுவும்
இருந்தால் அதையும் கூற இயலுமா?
ஜாதகத்தில் செவ்வாய்தோஷம், ராகுதோஷம்
போன்றவைகள் கேள்விபட்டிருக்கிறோம். ஒன்பது கிரஹங்களுமே தோஷமாக இருக்கும் நவக்கிரஹ
தோஷத்தை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இந்தமாதிரியான தோஷம் இருப்பவர்கள்
நிவர்த்தி பெறவும், கிரஹங்கள் எந்த
நன்மையான இடத்தில் அமர்ந்தாலும் முன்ஜென்ம தோஷப்படி, நல்ல பலனை ஒருவர் அடைய முடியவில்லை என்றாலும்,
அவர் சனிக்கிழமை
ஆரம்பித்து இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை வரை அதாவது ஒன்பது நாட்கள் மது-மாமிசம்
தவிர்த்து, தாம்பத்திய உறவு
இல்லாமல், பிரம்மச்சரிய
விரதத்தை மேற்கொண்டு, வன்னிமரத்து இலை,
அறுகம்புல் இரண்டையும்
எடுத்து அரைத்து, சுமார் நூறு
மில்லி சாறு எடுத்து அதனோடு சிறிது மிளகையும் தூள்செய்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து
வரவேண்டும். அதன்பிறகு இரண்டுமணி நேரம் கழித்தே மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள
வேண்டும்.
இப்படி வன்னிமர இலையும், அறுகம்புல்லும்
மிளகோடு நமது உடம்பில் காலை நேரத்தில் கலப்பதனால் தீய கிரஹங்களின் ஆகர்ஷணம் நமது
உடலிலிருந்து விலகி போய்விடுகிறது. அதே நேரம் பூர்வ ஜென்ம புண்ணியத்தை தரும்
ஐந்தாம் இடத்து அதிபதி நல்ல ஈர்ப்பு விசையையும், நமது உடம்பிற்குள் தள்ளுவதனால் பூர்வ கர்ம
தோஷமும் விலகி விடுகிறது. இப்படி நிறைய தகவல்களை நமது முன்னோர்கள் சொல்லி
சென்றிருக்கிறார்கள். இத்தகைய அறிவு பொக்கிஷங்கள் பலவற்றை மந்திர - தந்திர வித்தை
என்று நம்மில் பலர் ஒதுக்கி வைத்து, பலவற்றையும் இழந்துவிட்டோம். இனியும் அப்படியே நாம் தொடர்ந்து நடந்து வந்தால்
பல இழப்புகள் நமக்கு ஏற்படும்.