Store
  Store
  Store
  Store
  Store
  Store

கிருஷ்ணரை கடன் வாங்கிய இயேசு !

 


குருஜியின் பைபிள் பயணம் - 9


( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )


பிரகதீஸ்வரன்:- அப்படி என்றால் கிருஷ்ணன் தான் கிறிஸ்து என்று சொல்ல வருகிறீர்களா?

குருஜி:- நான் அப்படி சொல்லவரவில்லை ஆனால் அப்படியான ஒரு கருத்தும் உலகில் சில அறிஞர்களிடம் நிலவி வருகிறது. ஒருவகையில் இந்த கருத்துக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே வழிவகுத்து இருக்கிறான் என்று தான் கூறவேண்டும். பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்லுகிறான் நீ யாரை எங்கே எப்படி வழிபட்டாலும் அது என்னையே வழிபட்டதாக இருக்கும் காரணம் எல்லாவற்றிலும் நானே இருக்கிறேன். என்று கூறுகிறான். இதை வைத்து தான் சாங்கியமாமுனி கெளதம புத்தரையும் பெருமானின் அவதாரம் என்கிறோம். ஏன்? கன்னியாகுமரியில் சாமித்தோப்பில் பிறந்த ஐயா வைகுண்டரை கூட நாராயணனின் அவதாரம் என்கிறோம். அதனால் இயேசுநாதரையும் கிருஷ்ணரின் அவதாரம் என்று கருதுவதில் நமக்கு ஒன்றும் தடையில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் அதை ஒப்புக்கொள்வார்களாக? என்பது தான் மிக முக்கியமான விஷயமாகும். 


அவர்கள் ஒருபோதும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு இயேசு மட்டும் தான் கடவுள் மற்ற அனைத்தும் சாத்தான் என்ற குறுகிய மனப்பான்மை தான் கற்பிக்க பட்டு வளர்க்கபட்டு இருக்கிறார்கள். எனவே அவர்களிடம் பரந்த மனப்பான்மையை எதிர்பார்ப்பது முற்றிலும் தவறுதலானது. சரி இப்போது நான் கிருஷ்ணரையும் கிறிஸ்துவையும் ஒப்பிட்டு காட்டுகிறேன் சரிவருகிறதா என்று நீனே முடிவு செய்துகொள். 

இப்போது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்தியர்களுக்கு அமெரிக்கா என்பது ஒருகனவு தேசம் சொர்க்கபூமி உலகத்திலேயே சுகமாக வாழவேண்டும் என்றால் அமெரிக்காவில் தான் வாழவேண்டும் என்ற கனவும் எதிர்பார்ப்பும் நம்மிடையே அப்போது இருந்தது அதே போன்று தான் இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலக மக்கள் அனைவருக்கும் இந்தியா என்பது சொர்க்க பூமியாக தெரிந்தது. 

பலநாட்டு மன்னர்களும் வியாபாரிகளும் இந்தியாவோடு தொடர்பு கொள்ள ஆவலாக பறந்தார்கள். யார் யாருக்கெல்லாம் இந்திய தொடர்பு ஏற்பட்டதோ அவர்கள் எல்லாம் குபேரர்களாக வாழ்க்கை நடத்தினார்கள். இதன் அடிப்படையில் இந்தியர்களால் யவனர்கள் என்று அழைக்கப்பட்ட அயல்நாட்டுகாரர்கள் நம் நாட்டிற்குள் சகஜமாக வந்து சென்றார்கள். நம் நாட்டு வணிகர்களும் அறிவாளிகளும் பல நாட்டிற்கு பயணம் செய்தார்கள். இந்தியாவில் தங்கம் என்பது மலை மலையாக குவிந்து கிடக்கிறது என்ற கருத்துக்களால் தான் மாவீரர் அலெக்சாண்டரே இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். 

அலெக்சாண்டரின் வருகைக்கு பின்னால் மேல்நாட்டாருக்கு இந்தியா மீதான மோகம் தீப்பிடித்து கொண்டது. இந்திய கலாச்சாரம் பண்பாடு கலை மற்றும் ஆன்மிகம் இவற்றின் மீது மிக அதிகப்படியான ஈடுபாடுகள் அதிகரித்தன. கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் இந்து பெயர்கள் சூட்டிய அரசர்கள் முடிசூட்டி ஆண்டுவந்ததாக சரித்திர ஏடுகள் பறைசாற்றுகின்றன. அந்தவகையில் ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் அங்கெல்லாம் கொடிகட்டி பறந்தது. 

உதாரணமாக ஒமர் என்ற கவிஞர் எழுதிய இடிபஸ் என்ற இதிகாசம் கிரேக்கத்தில் மிகவும் புகழ்வாய்ந்த இலக்கியமாகும். இந்த இதிகாசத்தில் பெரும் பகுதிகள் கிரேக்க பண்பாடுகளை விளக்குவதோடு அல்லாமல் மஹாபாரத சிந்தனைகள் பலவற்றை தனக்குள் கொண்டிருப்பதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். மஹாபாரத இதிகாசம் கிரேக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் ஸ்ரீ கிருஷ்ணரை அந்த தேசம் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. 

அந்த வகையில் ஸ்ரீ கிருஷ்ணரின் சரித்திரம் அங்கே பலருடைய சிந்தனையையே தூண்டிவிட்டிருக்க வேண்டும். இதனால் ஒரு தேவபுருஷனின் வாழ்க்கையை உருவாக்கும் போது அதனோடு கிருஷ்ணனின் தெய்வ தன்மையை இணைப்பது என்பது தவிர்க்க முடியாத காரியம் எனலாம். அதோடு மட்டுமல்ல இயேசுவின் வாழ்க்கை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்ததாகவே இருப்பதை பைபிளில் நம்மால் அறிய முடிகிறது. எனவே ஒரு அரசியல் போராளியின் வாழ்க்கை ஆன்மீகத்தோடு இணைத்தால் தான் மதம் என்ற கட்டுமானத்தை உருவாக்க முடியும் என அவர்கள் கருதினார்கள். எனவே கிருஷ்ண சரித்திரத்தில் உள்ள சில நல்ல கருத்துக்களை இயேசுவின் சரித்திரத்தோடு இணைத்து கொண்டார்கள். 

முதலில் கிருஷ்ணர் கிறிஸ்து என்ற பெயர்களுக்கு மத்தியிலுள்ள ஒற்றுமையை நோக்க வேண்டும். உச்சரிக்கும் போது சற்று கவன குறைவாக கேட்டால் இரண்டும் ஒரே பெயரை போல இருப்பதை உணரலாம் அது மட்டுமல்ல கிருஷ்ணர் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு சரியான நேரடியான தமிழ் பொருள் என்னவென்றால் இருட்டு என்று அர்த்தமாகும். அதாவது எல்லை இல்லாமல் அகண்டு பறந்து சென்று கொண்டிருக்கின்ற எல்லாமே இருட்டாக கருப்பாக இருக்கும். கடவுளும் அகண்டவன் பறந்து விரிந்தவன் எங்கும் நிறைந்தவன் அதனால் அவன் பெயர் கிருஷ்ணர் என்றானது. 

கிறிஸ்து என்ற சொல் ஹீபுரு மொழி சொல் அல்ல கிரேக்க சொல்லாகும். இதற்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்ற பொருள் இருந்தாலும் கூட இழுத்து மூடப்பட்ட இருட்டு அறை என்ற பொருளும் கிரேக்கத்தில் உண்டு இயேசு அகண்ட இறைவன் அல்ல இறைவனின் குமாரர் எனவே அவருக்கு எல்லை உண்டு அதை விளக்குவதற்கே மூடப்பட்ட அறை என்ற பொருளுடைய கிறிஸ்து என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இயேசு பிறக்கும் போது வானத்தில் தூமகேது என்ற வால் நட்சத்திரமும் வேறு சில நட்சத்திரங்களும் தோன்றியதாக பைபிள் கூறுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த போதும் இப்படியான அறிகுறிகள் வானத்தில் தென்பட்டதாக பாகவதம் கூறுகிறது. கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்பு எப்படி அசரீரி வாக்கு அவருடைய பிறப்பை பற்றி கம்சனிடம் கூறியதோ அதை போலவே இயேசுவின் பிறப்பு ஏரோது மன்னனுக்கு அசரீரி மூலம் அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

கிருஷ்ணன் எப்படி தேவகி வயிற்றில் ஆண் சம்மந்தம் இல்லாமல் தெய்வீகமான முறையில் கருத்தரித்தாரோ அதே போன்றே இயேசுவும் கன்னிமரியாள் வயிற்றில் கருக்கொள்கிறார். கிருஷ்ணர் சிறையில் பிறக்கிறார் இதை சிறிது மாற்றி அவர் மாட்டு தொழுவத்தில் பிறப்பதாக கூறுகிறார்கள். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனித ஆத்மாக்களை வழிநடத்துகிறார் என்பதை தத்துவ நோக்கில் சித்தரிக்க அவர் பசு கூட்டங்களை மேய்த்ததாக பாகவதம் கூறுகிறது. இயேசுவும் மனித ஆத்மாக்களை ஆடுகளாக மேய்த்ததாக பைபிள் கூறுகிறது. கிருஷ்ணர் அரச வம்சத்தில் பிறந்தாலும் ஆயர் குலத்தில் வளர்ந்தார். இயேசுவும் தாவீது என்ற அரச வம்சத்தில் பிறந்தாலும் சாதாரண தச்சு தொழிலாளி மகனாக வளர்ந்தார். 

ஸ்ரீ கிருஷ்ணர் தான் கடவுள் என்பதை முற்றிலும் உணர்ந்து இருந்தாலும் உலகத்து நடைமுறைக்காக கர்க மகரிஷி என்பவரின் ஆசிரமத்தில் தங்கி வேதங்கள் சாஸ்திரங்கள் போன்றவற்றை கற்றுனர்ந்தான் இளம் பருவத்திலேயே மிகப்பெரிய அறிஞர்களோடு சரிக்கு சமமாக வாதம் புரிந்தார். இயேசுவும் குழந்தை கல்வியை முறைப்படி கற்றதோடு அல்லாமல் இயற்கையான ஞானம் பெற்று ஜெருசலேம் நகரத்து ஆலய குருமார்களோடு வாதம் புரிந்ததாக பைபிள் கூறுகிறது. 

ஒரு சிறிய வேறுபாடு கிருஷ்ணருக்கும் கிறிஸ்துவுக்கும் உண்டு ஸ்ரீ கிருஷ்ணர் பாலவயதில் பல தத்துவமயமான லீலைகள் செய்கிறார். இயேசு அப்படி எதுவும் செய்யவில்லை. இதற்கு காரணம் கீழே நாட்டு ஆன்மிகம் என்பது கடவுள் ஆனந்தமயமானவர் அவரிடம் துக்கமோ சோகமோ துளி அளவு கூட இருக்காது. ஆனால் மேலே நாட்டு ஆன்மிகம் என்பது கடவுள் எப்போதும் உயிர்களை நினைத்து துயரதோடு இருப்பதாக காட்டபடுகிறது. பைபிள் கூட இந்த கருத்தை தெளிவாக வலியுறுத்துகிறது. அதாவது துயரபடுபவர்கள் பாக்கியவான்கள் அவர்களுக்கு பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது என்பது பைபிள் கருத்து. இந்த நிலையில் கிறிஸ்து குழந்தை லீலைகள் செய்தார் என்று சொன்னால் அவர்களுடைய ஆன்மீக தத்துவமே ஆட்டம் கண்டுவிடும். அதனால் அதைவிட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். 

இன்னொரு அதிசயமான ஒற்றுமை இருவருடைய வாழ்க்கையிலும் இருக்கிறது. ஒருமுறை இயேசு சில மீனவர்களோடு கடற்பயணம் செய்கிற போது காற்றும் சூறாவெளியும் பேரலைகளும் படகை புரட்டிப்போடும் அளவிற்கு வீசுகிறது இதனால் மீனவர்களை காப்பாற்ற காற்றையும் சமூத்திரத்தையும் அமைதியாக இருக்குமாறு இயேசு கட்டளை இடுகிறார். அவருடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு காற்றும் கடலும் அடங்கிவிடுகிறது. 

இங்கே பாகவதத்தில் இந்திரனுக்கு விழா எடுப்பதை கிருஷ்ணர் தடை செய்கிறார் இதனால் ஆத்திரம் அடைந்த இந்திரன் மழையையும் காற்றையும் கோகுலத்தில் மேலே தாக்குதல் நடத்த கட்டளையிடுகிறான் கிருஷ்ணர் அப்பாவிகளான ஆயர்பாடி மக்களை காப்பாற்ற கோவர்த்தன கிரியை சுண்டுவிரலால் தூக்கிப்பிடித்து மக்களையும் கால்நடைகளையும் காப்பாற்றுகிறார். இயேசு பல நோயாளிகளை குணப்படுத்துகிறார் கிருஷ்ணரும் அப்படியே செய்கிறார். இறந்து போன மனிதரை கிருஷ்ணர் உயிரோடு எழுப்புவது போலவே இயேசுவும் செய்கிறார். 

ஆணவம் பேராசை என்பது கொடிய நச்சு பாம்பிற்கு சமமானது அந்த பாம்பை அடித்து கொன்றால் தான் மனிதன் ஆனந்தமான பரவெளியை அடையமுடியும். என்பதை எளிமையாக விளக்குவது தான் ஸ்ரீ கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனமாகும். காளிங்கன் என்ற நாகத்தின் தலைமீது ஏறி கிருஷ்ணர் நடனமாடுவதனால் பாம்பு விஷம் கக்கி செத்து மடிகிறது என்று பாகவதம் கூறுகிறது. 

பைபிளிலும் சாத்தான் என்ற பாம்பு இயேசுவினிடத்தில் வந்து உன்னை ராஜாவாக்குகிறேன் அளப்பெரிய செல்வங்களை அள்ளி தருகிறேன் சுகபோகமாக காம மயமான வாழ்க்கையை தருகிறேன் எனக்கு பணிந்து நட என்று ஆசை காட்டுகிறது. எப்படி பகவான் கிருஷ்ணர் பாம்பின் தலையின்மீது ஏறி மிதித்து ஆசையை கொன்றாரோ அதே போலவே இயேசுவும் பாம்பை அசட்டை செய்து அவமான படுத்தி அனுப்பி வைக்கிறார். 

இறுதியில் வருவது இயேசுவின் சிலுவை மரணம் அவர் துக்கப்படுபவர்களுக்கு சாந்தி வழங்கியதற்காக தண்டனை கொடுக்கப்படுகிறார். அவரது மென்மையான உடல் சாட்டையால் அடிக்கப்பட்டு கிழிக்க படுகிறது. உடல் முழுவதும் இரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனாலும் இரக்கமே இல்லாமல் மீண்டும் மீண்டும் சாட்டையால் அடிக்கப்படுகிறார். கொடுமை அத்தோடு நிற்கவில்லை இரும்பு முட்களால் ஆன கிரீடம் தலையில் வைக்கப்பட்டு சம்மட்டியால் அடிக்கிறார்கள். அவர் முகம் முழுவதும் இரத்தம் வடிகிறது இரத்தத்தின் காரம் அவர் கண்களுக்குள் புகுந்து தடுமாறுகிறார். ஆனாலும் அவரைவிட பல மடங்கு பாரமான சிலுவை மரத்தை சுமக்க வைக்கப்படுகிறார். தள்ளாடி அவர் கற்களின் மீது விழுகிற போது மீண்டும் அடிக்கப்படுகிறார். இறக்கிமே அற்ற கொடியவர்கள் அவரை சிலுவை மரத்தில் கட்டிவைத்து ஆணியால் அடித்து தொங்கவிட படுகிறார். சுட்டெரிக்கும் மதிய வெயிலில் உடல் முழுவதும் இரத்தம் தாரை தாரையாக ஒழுக தேவ குமாரர் சிலுவையில் தொங்குகிறார். 

அப்படியே கல்வாரி மலையிலிருந்து இறங்கி பாகவத காவியத்திற்குள் நுழைவோம். கிருஷ்ணரின் இறுதிக்கட்டம் அவர் பாண்டவர்களை காப்பாற்ற பூமி பாரத்தை குறைக்க கெளரவர்களை குருசேத்திர யுத்தத்தில் தோற்கடிக்கிறார் தீயவர்கள் யாருமே தப்பிக்காத வண்ணம் அவர்களை சாகடிக்கிறார். இதனால் புத்திரர்கள் அனைவரையும் இழந்த காந்தாரி கிருஷ்ணருக்கு சாபம் கொடுக்கிறாள். கொள்ளி வைப்பதற்கு கூட குழந்தைகள் இல்லாமல் கொன்று விட்டாயே நீ அனாதையாக செத்து போவாய் என்பது காந்தாரியின் சாபம். 

இறுதி காட்சி ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மரத்தினடியில் யாருமே இல்லாத வனப்பரப்பில் மதிய வேளையில் படுத்திருக்கிறார். தூரத்திலிருந்து ஜாரா என்ற வேடன் அவர் பாதங்களை குறிபார்த்து அம்புவிடுகிறான். அவர் பாதம் அவனது கண்ணுக்கு மான்களின் காதுகளை போல தெரிந்தது. அம்பு வருகிறது கிருஷ்ண பாதத்தை துளைத்து அவர் உடலுக்குள் பாய்கிறது. இரத்தம் ஆறாக கொட்டுகிறது. மரணவலி உடல் முழுவதும் பரவுகிறது அந்த நேரத்திலும் தாமரை பூவை போல ஸ்ரீ கிருஷ்ணர் சிரிக்கிறார் தன்மீது அம்பு எய்த ஜரா என்ற வேடனை ஆசிர்வாதம் செய்கிறார் சிறிது சிறிதாக உடலைவிட்டு கிருஷ்ணர் வெளியேறுகிறார் இப்போது அவரது பூத உடல் நடுகாட்டிற்குள் கேட்பாரற்று கிடக்கிறது 

தேவகியும் யசோதையும் பாலூட்டி வளர்த்த உடல் ராதையும் கோபியரும் காதலித்த திருமேனி பாமாவும் ருக்மெனியும் ஆராதித்த திவ்விய தேகம் கோடான கோடி ரிஷிகளும் ஞானிகளும் அறிஞர்களும் வீரர்களும் போற்றி வணங்கிய வீர திருவுடல் காட்டிற்குள் அனாதையாக கிடக்கிறது. கழுதை புலிகள் உடம்பை மோப்பம் பிடித்து வருகின்றன. உலகத்தில் அனைவரையும் ஆசிர்வதித்த ஸ்ரீ கிருஷ்ணரின் திருக்கரங்கள் கழுதை புலிகளால் குதரப்படுகிறது நல்லதுக்காகவே நடந்து சென்ற அவர் கால்களும் பாதமும் நரிகளால் துண்டிக்கப்படுகிறது. ஒருமுறையேனும் காணமாட்டோமா என்று ஞானிகள் தவம் கிடந்து பார்க்க துடித்த அவரது திருமுகம் கழுகுகளால் கொத்தப்படுகிறது ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்க கூடிய இறுதி கிரியை கூட உலகை படைத்த கிருஷ்னின் உடம்பிற்கு கிடைக்கவில்லை.

கிறிஸ்து கிருஷ்ணர் இருவரது முடிவுகளுமே மிக சோகமானது மனதில் ஆறாத பாரத்தை தரக்கூடியது. இதனால் தான் கிருஷ்ணரின் வாழ்க்கை சித்திரத்திலிருந்து இயேசுவின் சரித்திரம் உருவாக்கப்பட்டதாக இன்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள். 


கிறிஸ்துவின் வாழ்க்கை எப்படி கிருஷ்ணனின் வாழ்க்கையிலிருந்து கடன்வாங்கப்பட்டதோ அதே போலவே இயேசுவின் உபதேசங்களும் இந்தியாவிலிருந்தே கடன்வாங்கபட்டதாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். 

பிரகதீஸ்வரன்:- இரண்டுபேருடைய வாழ்க்கை முடிவையும் பார்க்கும் போது மனம் மிகவும் சோகமாக மாறுகிறது இதிலொரு கேள்வியும் வருகிறது. இயேசுவின் மரணம் பெரியதாக பேசப்படுவது போல கிருஷ்ணனின் மரணம் பேசப்படுவது இல்லையே அது ஏன்? மேலும் அவரது உபதேசங்களும் கிருஷ்ணனின் கீதையிலிருந்து எடுக்க பட்டதா அல்லது வேறு யாருடைய உபதேசத்தில் இருந்தாவது எடுக்கபட்டதா?


தொடரும்.... 



Contact Form

Name

Email *

Message *