Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஏசு என்ற ஒரே கிறிஸ்துவர்






    ரோமாபுரி மக்களின் சமய வாழ்க்கை கிரேக்கம், எகிப்து மற்றும் ஜப்பான் , சீனா ஆகிய நாட்டு மக்களின் சமய வாழ்க்கையும் குருஜியிடம் கேட்டு ஓரளவு தெரிந்துகொண்ட பின் அவர் மூலமாக ஏசு கிறிஸ்து, முகமதுநபி ஆகியோரை பற்றியும் அவர்களின் நிதர்சனமான உபதேசங்களை பற்றியும் அறிந்துகொள்ள ஆவல் ஏற்பட்டதனால் குருஜியிடம் சென்று இந்த கேள்வியை வைத்தேன்.

கேள்வி: உலகிலுள்ள பெருவாரியான மக்கள் கிறிஸ்துவமதத்தை சார்ந்தவர்களாக உள்ளார்கள். அவர்கள் மூலம் ஏசுகிறிஸ்துவின் அற்புதங்களும், உபதேசங்களும் பெருமளவில் பேசப்படுகிறதே தவிர அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எந்த தகவலும் அவ்வளவாக பேசப்படவில்லை. எனவே ஏசுநாதரின் வாழ்வின் மறுபக்கத்தை தெரிந்துகொள்ள ஆசைபடுகிறேன் அவரைபற்றியும் அவரின் குடும்பத்தாரை பற்றியும் விளக்கமாக கூறுங்கள்?

குருஜி:
இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனத்திலுள்ள கலிலி என்னும் நகரிலுள்ள நாசரத்என்ற ஊரில் ஏசு பிறந்தார். அவர் பிறந்த போது வானத்திலும் பூமியிலும் பல அதிசய காட்சிகள் நடந்ததாக புதிய வேதாகமும் சொல்லுகிறது. பொதுவாக அது அவதாரங்கள் என்று வர்ணிக்கப்படும் குருமார்களின் ஜனன காலத்தில் ஏற்படுவதாக வர்ணிக்கப்படுவது ஒரு மரபு ஆகும். ஏசு நாதரின் தாயார் மேரி ஆவார். அவர் யூத வம்சத்தை சேர்ந்த பெண்மணி அவரின் கணவர் டேவிட் என்ற அரச வம்சத்தை சேர்ந்த ஜோசப் ஆவார். ஜோசப் அரசகுடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தனது வாழ்க்கை பயணத்தை நடத்துவதற்கு தச்சு தொழிலையே செய்தார் இதை வைத்து பார்க்கும்போது அவர் ஏதாவது சிற்றரசுகளின் வழிவந்தவராகவோ அல்லது தோற்கடிக்கப்பட்ட அரச மரபை சேர்ந்தவராகவோ இருக்கவேண்டும். மேரி, ஜோசப் தம்பதியரின் ஒரே மகன் ஏசு என்று ஒருசாரரும் இல்லை ஏசு கிறிஸ்துவிற்கு ஜோசப், ஜீதாஸ், சைமன் ஆகிய சகோதரர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரிகளும் இருந்ததாக கூறுகிறார்கள் இந்த வாதம் மட்டுமல்ல ஏசுநாதர் பிறந்ததே நாசரத் அல்ல பெத்தலகேம் நகரில்தான் அவர் பிறந்தார் என்றும் ஒரு வாதம் உண்டு. இந்த இரண்டு வாதங்களையுமே தூக்கி சாப்பிடும் அளவில் இன்னொரு வாதம் இருக்கிறது. இது உண்மையில் ஏசுநாதர் என்ற நபர் உலகில் பிறக்கவே இல்லை. ஒரு குழுவினரின் கற்பனை வடிவம் தான் ஏசுவாகும் என்று வாதம்புரிகிறார்கள். ஆனால் ஏசுகிறிஸ்து பிறந்து 33 வருடகாலம் வாழ்ந்து இறுதியில் சிலுவையில் அறையப்பட்டு மாண்டார் என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் பல இருக்கின்றன, கிறிஸ்து சகாப்தத்தில் வாழ்ந்த சரித்திர ஆசிரியர்கள் பலர் அவரை பற்றி பல குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார்கள் போண்டியஸ் பைலட் என்ற அரச பிரதிநிதியின் உத்தரவுபடி அவர் சிலுவையில் அறையப்பட்டு சாகடிக்கப்பட்டார் என்று டாஸிட்டா என்ற சரித்திர ஆசிரியர் எழுதி வைத்திருக்கிறார். ஆனால் இந்த சரித்திர ஆசிரியர்கள் எவருமே ஏசு உயிரோடு இருந்தபோது பிறந்தவர்கள் அல்லர் ஏசுவை இவர்கள் நேரில் பார்த்தவர்களும் அல்லர் ஆனாலும் அந்த அறிஞர்கள் பொய்யை எழுத வேண்டிய அவசியம் இல்லை. இவர்களின் குறிப்பு என்ற ஆதாரம் தவிர வேறுசில ஆதாரங்களும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை உறுதி செய்கின்றது.

         தச்சு வேலையை ஜோசப் செய்தார். தனது குழந்தைக்கு கல்வி புகட்டவேண்டுமென்பதில் ஆர்வம் உடையவராக இருந்தார். ஏசுவின் ஆறு வயதில் யூதமத மரபுபடி அவருக்கு விருத்தசேதனம் செய்விக்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். அந்த காலத்தில் யூதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஹீப்ரு மொழியை கற்று கொடுப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையில் ஏசு ஹீப்ரு மொழியை கற்றதோடு அவரின் தாய்மொழியான அரமயம் என்ற மொழியையும் கற்றார் இயற்கையாகவே நுண்ணறிவும், நல்லறிவும் ஏசுவுக்கு இருந்ததாலும் அவரின் பெற்றோர்களான ஜோசப், மேரி ஆகியோர் சிறந்த ஒழுக்கமுடையவர்களாக விளங்கியதாலும் ஏசுநாதரின் அறிவு வளர்ச்சி என்பது சுயபிரகாசம் உடையதாக இருந்தது. ஏசுவின் 12-வது வயதில் ஜெருசலேம் நகரிலுள்ள ஆலயத்திற்கு முதல் முறையாக அவரின் பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டார். ஆலயத்தின் அழகை கண்டு வியந்த ஏசு கிறிஸ்து அத்தோடு நில்லாமல் அங்கு உள்ள சமய பெரியவர்களிடம் நேரம் காலம் போவது தெரியாமல் தத்துவ விவாதத்தில் ஈடுபட்டார்.

கேள்வி:
ஏசுவுக்கு வயது 12-தான் ஆகிறது. அந்த வயதில் தத்துவம் என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா அப்படியே தெரிந்திருந்தாலும் ஒரு சிறுவனின் கேள்விக்கு மதப்பெரியவர்கள் நிதானபுத்தியோடு எப்படி பதில் கூறுவார்கள்?

குருஜி: தற்கால ஆச்சார்யர்களே ஆணவத்தின் பிடியில் அகப்பட்டு ஆரவார கூச்சலில் ஈடுபட்டிருக்கின்றபோது அக்கால ஆச்சார்யமார்கள் இவர்களை விட 1000 மடங்கு ஆணவகாரர்களாகவே இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு. பாலைவனத்திலும் சோலைவனம் உண்டு என்பது போல ஒன்றிரண்டு ஆச்சார்ய பெருமக்கள் குழந்தை ஏசுவின் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்க வேண்டும். மேலும் 12-வயது பிராயத்தில் தத்துவ விசாரணை வருமா என்பது ஆன்மீக நோக்கில் சிறுபிள்ளைத்தனமான கேள்வி ஆகும். திருஞானசம்பந்தர் ==தோடுடைய செவியன்++ என்று அம்மையப்பனை பாடுகின்றபோது அவருக்கு என்ன வயது? ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடி தங்கமழை பெய்விக்கும்போது அவருக்கு வயது என்ன? சம்பந்தர், சங்கரர் இரண்டுபேருமே அப்போது 5-வயது நிரம்பிய சின்னஞ்சிறு பாலகர்களே ஆவார்கள். சங்கரருக்கும், சம்பந்தருக்கும் சக்தியை கொடுத்த இறைவன் ஏசுநாதருக்கு மட்டும் கொடுத்திருக்க மாட்டாரா? அதை நம்பும் பொழுது இதையும் நம்பிதான் ஆகவேண்டும்.


 கேள்வி: மதப் பெரியவர்களிடம் ஏசு கிறிஸ்து என்னென்ன கேள்விகள் கேட்டார் அதற்கு அவர்கள் என்ன மாதிரியான பதில்களை கூறினார்கள்?

குருஜி: ஏசுகிறிஸ்துவின் வாழ்க்கையை பற்றி பேசும் புதிய வேதாகாமத்தில் ஏசுவின் கேள்விகளை பற்றியோ மதகுருமார்களின் பதில்களை பற்றியோ எந்த தகவலும் சொல்லப்படவில்லை எனவே ஜெருசலேம் ஆலயத்தில் நடந்த உரையாடல்களை நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் தன் தாய், தந்தையருடன் வந்திருக்கிறோம் என்பதை கூட மறந்து ஆர்வத்துடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்த ஏசு தங்களிடம் இல்லாமல் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் பதைபதைத்துபோய் அவரை தேடி கண்டு பிடித்தபின் தனது தாயார் மேரியிடம் நான் பிதாவின் வீட்டில் இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும் என்று பூடகமாக பேசினாராம் ஜெருசலேம் நகரிலுள்ள ஜெகோவா என்ற கடவுளின் ஆலயத்தையே அவர் பிதாவின் வீடு என்ற கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

   கருவிலேயே திருவுடைய எத்தனையோ ஞானிகள் நமது நாட்டில் அவதாரம் எடுத்துள்ளார்கள் அவர்களைப்போன்றே ஏசுநாதரும் பரிபூரணமான ஒரு ஞானி ஆவார். இந்த 12-வயது சம்பவத்திற்குப்பிறகு அவரின் 30-வது வயது வரையில் அவர் வாழ்வில் நடந்த எந்த விஷயமும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இடைப்பட்ட 18 வருடகாலம் அவர் எங்கிருந்தார்? என்ன செய்தார்? 30-வது வயதில் பெரும் ஞான விஷயங்களை எடுத்துக்கூறும் அளவிற்கு அருள் பலத்தை திடீரென்று அவர் எப்படி பெற்றார் என்பதற்கான வினாக்களுக்கெல்லாம் சரியான பதில் ஆதாரபூர்வமாக கிடைக்கவில்லை. எனது சிறிய வயதில் ஏசு கிறிஸ்துவின் 18 ஆண்டு கால மறைவு வாழ்க்கையை பற்றி சோவியத் யூனியன் நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தை படித்திருக்கிறேன். அதில் அவர் ஏசுநாதர் 18 ஆண்டுகாலம் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும், கடைசியாக அவர் இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு வந்ததாகவும் இங்குள்ள ரிஷிகள் பலரிடம் ஹடயோகம் உட்பட பலவித யோகரகசியங்களை கற்றதாகவும் எழுதி இருக்கிறார். அந்த ரஷ்ய எழுத்தாளரின் கூற்றுகளுக்கு வெறும் யூகங்கள் மட்டுமே ஆதாரமாக உள்ளதே தவிர வேறு உருப்படியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் ஏசுநாதரின் வாழ்க்கையில் நடந்ததாகக்கூறப்படும் அற்புதங்கள் பல யோகப்பியாசத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்கள் மட்டுமே செய்யகூடியதாக இருப்பதை யோக நூல்களில் தேர்ச்சி உடைய அறிஞர்கள் அறிவார்கள். எது எப்படியோ  30-வது வயதில் ஏசு செய்த மலைபிரசங்கங்கள் உலக சமய வரலாற்றில் ஒரு புதுப்புரட்சியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.


 கேள்வி: ஏசுநாதர் மலைப்பிரசங்கம் செய்தபோது யூதர்களின் நிலையும் பாலஸ்தீனத்தின் நிலையும் எப்படி இருந்தது?

குருஜி: அவரின் 30-வது வயதில் யூதர்களின் நிலைமை அறியாமை என்ற பெரும் பள்ளத்தாக்கிலே இருந்தது. யூத மக்களை ஆட்சியாளர்களும், மதகுருமார்களும், புரோகிதர்களும் பல வகைகளில் சுரண்டி கொண்டிருந்தார்கள். அதே நேரம் பாலஸ்தீன நாடு அரசியல் குழப்பங்கள் பலவற்றிற்கு ஆட்பட்டு தத்தளித்துக்கொண்டிருந்தது இந்த நேரத்தில் ஜோர்டான் நதிதீரத்தில் ஜான் என்ற தீர்க்கதரிசி தோன்றி ஆண்டவனின் அருளின்றி மனித சக்தியால் இஸ்ரேல் சமூகத்தின் குழப்பங்களை தீர்க்க முடியாது என நம்பி இறைவனின் பிரதிநிதி ஒருவர் இஸ்ரேல் சமூகத்தில் தோன்றுவார் என்றும் அவர் யூதர்களை இரட்சிப்பார் என்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்தார். தீர்க்கதரிசி ஜானின் பேச்சுக்கள் மக்களிடத்தில் காட்டுத் தீ போல் பரவியது. கூட்டம் கூட்டமாக யூதமக்கள் அவரிடம் வந்து ஞானஸ்தானம் பெற்றுக்கொண்டனர். அந்த நேரத்தில் நாசரத் நகரில் இருந்த கிறிஸ்துவும் ஜானியிடம் வந்து தீட்சை பெற்றுக்கொண்டார். ஏசு ஞானஸ்தானம் பெற்ற நேரத்தில் வானத்திலிருந்து அசரிரீ ஒன்று எழுந்ததாக கூறப்படுகிறது. அந்த அசரிரீ இதோ என் நேச மகன் இவனில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உள்ளது என்று கூறும்பொழுது கடவுளின் பரிசுத்த ஆவி ஏசுநாதர்மீது வந்திறங்கியதாகவும் இதை தீர்க்கதரிசி ஜான் உணர்ந்துகொண்டு இவரே தேவ தூதர். இஸ்ரேல் மக்களின் ரட்சகர் என்று மக்களிடம் பிரகடனபடுத்தியதாக கூறப்படுகிறது.

   ஞானஸ்தானம் பெற்ற ஏசு தனிமையாக ஓர் இடத்தை தேடிச்சென்றுதான் இனி செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன என்பதைப் பற்றிச் சிந்திக்கலானார். அறியாமையிலும், மூடப்பழக்கத்திலும் ஊறிக்கிடக்கும் யூத மக்களுக்காக தன்னை முழுமையாக அர்பணித்துக்கொள்ள உறுதிபூண்டார். வீட்டையும், உற்றாரையும் துறந்து அவர் பல இடங்களுக்குச் சென்று மக்களுடன் நெருங்கிப்பழகினார். அவர்களுக்கு நற்புத்திகளை புகட்டினார், நல்ல காரியங்களையே செய்ய வேண்டும் என்று சொல்லிய ஏசுநாதர் அதன்படியே நடக்கவும் செய்தார்.

  ஒருவன் அவரிடம் நான் நல்ல கதியை அடைய என்ன செய்யவேண்டும் என்று கேட்டதற்கு உன் தாய், தந்தையரை வணங்கி நடந்து வா, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, திருடாதே, பொய் பேசாதே, உன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க கற்றுக்கொள் என்று பதில் சொன்னார். மேலும் அவரே மலை பிரசங்கத்தில் கூறியவற்றில் மிக முக்கியமான உபதேசம் கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் மனதைப்போல தங்கள் மனதை ஆக்கிகொள்ளும் மனிதர்களுக்கு கடவுளின் இராஜ்யம் அருகில் இருக்கிறது என்பதாகும்.


 கேள்வி: ஏசுநாதரின் உபதேசங்களை எளிமையாக கூறுங்கள்

குருஜி: அவரைப்போலவே அவர் உபதேசங்களும் எளிமையானதுதான். அதே நேரத்தில் அவரின் உளப்பண்பு போல அவைகள் வைரத்தையொத்த உறுதிபடைத்தவைகளாகும். தீமைக்கு தீமை செய்ய வேண்டாம். ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் போக நெருக்கினால் நீ இரண்டு மைல் போ. ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்திலும் அறையும்படி உன் முகத்தை திருப்பி கொடு. உன் மேலாடைக்காக வழக்கு தொடுத்தால் உன் முழு ஆடையுமே அவனுக்குக்கொடு. உங்கள் பகைவர்மீதும் மெய்யான அன்பு கொள்ளுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். அவர்களுக்காக கடவுளை வேண்டுங்கள் கடவுள் நல்லவரையும் தீயவரையும் சமமாகவே பாவிக்கிறார். இருவரையுமே வெயிலால் உஷ்ணப்படுத்தி மழையால் குளிரச்செய்கிறார். உங்களை நேசிப்பவரிடத்தில் நீங்கள் நேசம் வைப்பதில் ஒரு பெருமையும் இல்லை. உதவி செய்தவர்களுக்கே உதவுவது பெரிய காரியம் அல்ல, உதவி செய்யாதவர்களுக்கும் உங்களை உதாசீனப்படுத்துபவர்களுக்கும் உதவி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் தீயவனுக்கு கூட உதவத்தயாராக இருங்கள்.

கேள்வி: உலகிலுள்ள மதங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்று பேசும்போது ஏசு மட்டும் தீயவர்களுக்கும் உதவுங்கள் என்று கூறுவது அவரின் புனிதமான கருணை மனதைக்காட்டுகிறது ஆனால் தீயவர்களுக்கும் உதவி செய்தால் தீயவர்களின் தீமை செயலானது நாளுக்குநாள் உயருமே அல்லாது குறைவதற்கு வாய்பில்லையே எனவே ஏசுநாதரின் இந்த உபதேசம் நடைமுறைக்கு சாத்தியமானதுதான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

குருஜி: உனது கேள்வி நியாயமானதுதான் கொலைகாரனுக்கு முதுகு சொறிந்து கொள்ள கத்தியை கொடுத்தால் அவன் இன்னொரு கொலை செய்ய தயாராவானே தவிர முதுகு சொறிந்து கொள்ளும் வேலையை நிறுத்தியே விடுவான் இதே போன்றதுதான் தீயவர்களுக்கு நன்மை செய்வது ஆகும். ஆனால் ஏசுநாதர் இதை அறியாத அளவிற்கு குழந்தைத்தனமானவர் அல்லர். அவர் தீயவர்க்கு உதவி செய் என்று கூறுவது அவர்களின் தீமைகளுக்கு நீயும் துணைபோ, ஒத்தாசையாக இரு என்ற அர்த்தத்தில் அல்ல தீயவனைக்கூட வெறுக்காதே அவன் உனக்கு கெடுதல் செய்தால்கூட அவனிடம் நீ அன்பு காட்டு அப்படி நீ நடந்து கொண்டால் உன் அன்பு அவனை ஒருநாள் சிந்திக்க வைக்கும் அந்த சிந்தனை தீயவனை திருத்தி நன்மையானவனாக எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டும் அளவிற்கு உயர்ந்தவனாக உத்தமனாக ஆக்கிவிடும் என்ற எண்ணத்தில்தான் அப்படி சொன்னார்.


 கேள்வி: ஏசுவின் உயர்ந்த உள்ளம் இப்போது எனக்கு நன்கு புரிகிறது. இந்த கேள்வியை நான் கேட்டதற்கு காரணமே ஏசுநாதர் மீதுள்ள ஒருவித வெறுப்புதான் என்று சொல்ல வேண்டும். அவர் மீது வெறுப்பு வருவதற்கு காரணம் ஏசு கிறிஸ்துவின் வழியில் நடப்பதாக கூறிக்கொள்ளும் பல கிறிஸ்துவர்கள் நாகரீகமற்ற முறையில் மதமாற்றம் செய்வதும், மாற்று மதத்தினரை சகட்டுமேனிக்கு சாத்தானின் பிள்ளைகள் என்று சபிப்பதும்தான் ஆகும்.

குருஜி: பல கிறிஸ்துவபாதிரியார்களின் முறையற்ற இந்த செயல்களால் ஏசு என்ற ஞான சூரியன் கறைபட்டு கிடக்கிறார் என்பது உண்மைதான். பாதிரியார்களின் மதவெறியால் எண்ணற்ற மனிதர்கள் மனவேதனை அடைந்திருக்கிறார்கள். ஏன் நானே கூட எனது குழந்தைப்பிராயத்தில் நாமம் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதனால் வகுப்பு ஆசிரியரால் தண்டிக்கப்பட்டு இருக்கிறேன். அந்த தண்டனை சில காலம் முன்பு வரை கூட என் மனதில் ஆறாத ரணமாக பதிந்திருந்தது. அந்த கோபம் உன்னைப் போலவே என்னையும் ஏசுநாதர் மீது சினம் அடையவைத்தது. கிறிஸ்துவையும், கிறிஸ்துவத்தையும் மேடைதோறும் விமர்சிக்கவேண்டும் என்ற வெறியில் பலமுறை பைபிளை படித்து அதில் உள்ள பலஹீனமான பகுதிகளை எனது ஆரம்பகால மேடைகளில் மிக காட்டமாகவே பேசி இருக்கிறேன். ஆனால் ஏசுநாதர் தமது சீடர்களுக்கு கூறிய உபதேசத்தை ஆழ்ந்து சிந்தித்ததிலிருந்து அவர் மீதிருந்த கோபம் குறைந்துவிட்டது என்றே கூறலாம். அதே நேரம் அவரின் வழி நடப்பவர்களாக கூறிக்கொள்ளும் சில பிரசங்கிகளையும், மதமாற்றக்காரர்களான பாதிரியார்களையும் பார்க்கும்போது ஏசுவைப்பற்றி இன்னும் இவர்களே அறியாமல் இருக்கிறார்களே என்றால் இவர்கள் எப்படி ஏசுவின் போதனைகளை பரப்பும் தகுதி பெற்றார்கள் என்று வேதனையாக இருக்கிறது, அவர்களின்மீது பரிதாபம் ஏற்படுகிறது.



கேள்வி: அப்படி ஏசுநாதர் தமது சீடர்களுக்கு என்ன உபதேசம் செய்து இருக்கிறார் அதை இவர்கள் எந்த அளவிற்கு மறந்து போய் இருக்கிறார்கள்?

குருஜி: உன்னிடத்தில் நீ அன்பு கொண்டிருத்தல் போலவே அயலார் இடத்திலும் அன்பு வை என்கிறார் ஏசு இது மனிதனுக்கு மனிதன் காட்டும் சாதாரண அன்பையும் சுட்டும் மற்றவர்களின் கருத்துகளை மதிக்கவேண்டும் என்ற பண்பையும் சுட்டும். நமக்கு நம் கருத்து எவ்வளவு முக்கியமானதோ எவ்வளவு புனிதமானதோ அதே போன்றுதான் மற்றவர்களுக்கும் அவர்கள் கருத்துகள் உயர்வானதாக இருக்கும். ஏசுநாதரின் இந்த உயரிய எண்ணத்தை துரதிருஷ்டவசமாக அவரின் சீடர்கள் அல்லது வழிநடப்பவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஒரு கருத்தைத்தவறாக புரிந்துகொண்டால் அது கருத்தின் குற்றமல்ல. புரிந்து கொண்டவனின் குற்றமாகவே அதை கொள்ளவேண்டும் ஏசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே பரலோக ராஜ்ஜியம் கதவை திறக்கும் என்று பாதிரியார்கள் தெருத்தெருவாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள் இப்படி செய்கின்ற இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் ஏசு பிறந்த பிறகு உருவான சமுதாயத்திற்கு அவரைத்தெரியும் அவருக்கு முன் பிறந்த பலகோடி மனிதர்களுக்கு ஏசு என்றால் யார் என்றே தெரியாது. அப்படியென்றால் அவர்கள் எல்லோரும் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் நரகத்தில் விழவேண்டியது தானா? அவர்களுக்கு விமோட்சனமே கிடையாதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். மேலும் கிறிஸ்துவனாக இருந்துகொண்டு தினசரி பாவமன்னிப்பு வாங்கிகொண்டு தர்மத்திற்கு விரோதமாகவே நடந்துகொண்டு இருப்பவன் ஏசுவை ஏற்றுக்கொண்டான் என்ற ஒரே காரணத்திற்காக சொர்க்கத்திற்கு சென்றுவிட முடியுமா? ஆமாம் முடியும் என்று பாதிரியார்கள் சொன்னால் அது வேடிக்கையானது மட்டுமல்ல ஏசுவை இழிவுபடுத்தும் விஷமத்தனமான சிறுபிள்ளைத்தனமான செயல்களாகும்.
கேள்வி: ஏசுநாதர் தமது சீடர்களுக்கு செய்துள்ள உபதேசங்களை எனக்கு விளங்கும் வகையில் கூறுங்கள்?

குருஜி: வழி பயணத்திற்காக உணவு, பணம் கொண்டுபோக வேண்டாம் உடுத்திருக்கும் உடைதவிர வேறு ஆடை வேண்டாம் வழியிலே சந்திப்பவர்களுடன் வீண் வார்த்தையாடி காலதாமதம் செய்ய வேண்டாம் என்று உபதேசம் செய்யும் ஏசு, புரட்சிகரமான இன்னொரு கொள்கையை உலகிற்கு வழங்குகிறார். வருத்தப்பட்டு உழைப்பவனே உணவு உண்ணும் தகுதியை பெறுகிறான் என்பதே அந்த கொள்கை. அடுத்தவனைச் சுரண்டுவது, மாற்றானின் உழைப்பில் அண்டி பிழைப்பது. சோம்பேறியாக திரிவது எல்லாமே மனித குலத்தின் அவமானமாக கருதவேண்டும். குருடனாக இருந்தாலும், வயோதிகனாக இருந்தாலும் தன்னால் முடிந்ததை உழைத்தே உண்ண வேண்டும் குழந்தைகளும், நோயாளிகளும் மட்டுமே மற்றவர்களால் பராமரிக்கப்படவேண்டும் என்பதே ஏசுவின் விருப்பமாகும்.

   உழைப்பை வற்புறுத்தும் ஏசு அந்த உழைப்பால் கிடைக்கும் ஊதியத்தை சேமித்து வைப்பதை எதிர்க்கிறார். மனிதன் சேமிக்க வேண்டிய செல்வம் பூலோக பொருட்கள் அல்ல பரலோக ராஜ்ஜியத்தை வாங்கி தரும் புண்ணிய செயல்களே ஆகும். திரட்டி வைக்கப்பட்ட செல்வம் அழிவதற்கும் திருடப்படுவதற்கும் இலக்காகலாம்.

   ஆனால் பரலோக செல்வத்தை நீங்கள் தேடிக்கொண்டால் அது அழியவும் அழியாது. யாராலும் திருடவும் முடியாது என்கிறார். பொருட்களை பதுக்குவதினால் சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளும் வறுமையும் மிகுந்திருக்கும் என்பதை ஏசு நன்றாகவே அறிந்தவராக இருந்திருக்கிறார். ==அல்லியைப் பாருங்கள்; அவை நூற்பதுமில்ûல் நெய்வதுமில்லை. ஆனால் மன்னாதி மன்னர்கூட அவற்றைப் போல ஆடை தரித்தாரில்லை. இன்று மலர்ந்து நாளை கருகும் காட்டுப்பூவை ஆண்டவன் இவ்வாறு அலங்கரிப்பாராயின், அவர் ஆடை அளிப்பது நிச்சயத்திலும் நிச்சயம், என்ன உண்போம், எதை உடுப்போம் என்ற கவலை வேண்டாம் உங்களுக்கும் அவசியமானவற்றைக் கடவுள் அறிவார். கடவுள் அரசை நாடுங்கள்++ என்றும் அவர் கூறுகிறார் இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் மனிதன் எதைப்பெற்றாலும் அது இறைவனிடமிருந்து பெற்றதே ஆகும். துக்கங்களும், தோல்விகளும் கூட இறைவனால் கொடுக்கப்படுபவைகள்தான் எனவே இன்பத்தை கண்டு குதூகலிப்பதும், துன்பத்தைக்கண்டு முகம் சுளிப்பதும் அறியாமை ஆகும். வருவது வந்தே தீரும், நடப்பது நடந்தே தீரும் என்ற நம்பிக்கை நமக்குள் பெருகினால் மட்டுமே நிரந்தர அமைதியும் சந்தோஷமும் மனிதர்களுக்கு கிடைக்கும். ஏசுவின் இந்த உயரிய கருத்தை ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உறுதிபடுத்திக்கொண்டால் இந்த பூமி யுத்த பூமியாக இல்லாமல் புத்த பூமியாக இருக்கும்.


கேள்வி: திருப்தி இருக்கும் இடத்திலேயே அமைதி இருக்கும் என்று ஏசு நாதரின் கொள்கை மிகவும் உத்தமமானது இந்த கொள்கையை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவாவது கடைபிடித்தால் உலகில் அமைதியும், சாந்தியும் நிலவும் என்பதில் ஐயம் இல்லை, ஏசு நாதரின் இந்த கொள்கைகளை ஏற்றுக்கொண்ட மக்கள் இன்று உலகின் எந்த மூலையிலும் இல்லை என்றே தெரிகிறது. காரணம் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியின் சங்கநாதம் கேட்பதற்கு பதிலாக வெடிகுண்டுகளால் ஏற்பட்ட அவல ஓலம்தான் கேட்கிறது இதற்கு என்ன காரணம்?

குருஜி
: ஏசுநாதரின் கொள்கைகளின்படி கிறிஸ்துவ மதம் உருவாகி இருந்தால் இன்று உலகில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் சிக்கல்களுக்கு இடமே இல்லாது போயிருக்கும் ஆனால் அப்படி நிகழாமல் மாறிப்போனதற்கு காரணம் ஏசு கிறிஸ்து கிறிஸ்துவ மதத்தை உருவாக்காமல் போனதே ஆகும்.
கேள்வி: நீங்கள் கூறுவது பெரும் அதிசயமாக இருக்கிறது. புத்தர் புத்தமதத்தை தோற்றுவித்தார். மகாவீரர் சைன மதத்தை தோற்றுவித்தார். முகமது நபி இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்தார். அதேபோல் இயேசு கிறிஸ்தவமதத்தை தோற்றுவித்தார் என்றே இதுவரை நான் படித்து வந்திருக்கிறேன் அதை நம்பியும் வந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ஒட்டுமொத்தமாக கிறிஸ்துவ மதத்தை ஏசு தோற்றுவிக்கவில்லை என்று கூறுவது அதிர்ச்சியாக மட்டுமல்ல அதிசயமாகவும் இருக்கிறது. எதை வைத்து இந்த கருத்தை கூறுகிறீர்கள்? குருஜி: கசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்ள மறுத்தால் அறிவு ஆராய்ச்சிக்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்றே ஆகும். இன்று உலகில் உள்ள மதங்களிலேயே இஸ்லாமிய மதம் மட்டும் தான் அதை உருவாக்கியவர் காலத்திலேயே மதமாக அல்லது மார்க்கமாக பிரகடனபடுத்தப்பட்டது ஆகும். முகமது நபியேதாம் வாழும் காலத்தில் தனது பிரதேசமக்களையும் மற்றவர்களையும் இஸ்லாமை தழுவிக்கொள்ள வேண்டுகோள் வைத்தார். அவரைப்போன்று புத்தரோ, ஏசுவோ தமது கருத்துகளை மதம் என்ற ரீதியில் பிரகடனப்படுத்தவில்லை. புத்தரின் கொள்கைகளை அவர் சீடர்கள் பல இடங்களில் பிரச்சாரம் செய்தார்களே தவிர அதை ஒரு மதமாக எங்கும் குறிப்பிடவில்லை. நேரடி சீடர்களுக்கு பிறகு வந்த நாகார்ஜீனர், தின்நாதர் போன்றோர்களே புத்தரின் உபதேசங்களை சமயமாக மாற்றினர். ஆனால் ஏசுநாதர் விஷயத்திலோ இது கூட நடக்கவில்லை. அவரின் 12-சீடர்களும் ஆளுக்கொரு பகுதியாகச் சென்று அவர் கருத்துகளை பரப்பினார்களே தவிர மதமாக அதை உருவாக்கவில்லை. ஏசுவுக்கும், ஏசுவின் கொள்கைகளுக்கும் சம்பந்தமே இல்லாத ஐரோப்பிய அரசியல்வாதிகளே கிறிஸ்துவ சமயத்தை தோற்றுவித்தவர்கள் ஆவார்கள். உலக சரித்திரத்தையும் சமயங்களின் சரித்திரத்தையும் படித்தவர்கள் தங்களது கண்ணாடிகளை துடைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை அவைகளை படித்தார்கள் ஆனால் இந்த உண்மை அவர்களுக்கு நன்கு புலப்படும். ஐரோப்பியர்கள் குடியேற்ற நாடுகளை உருவாக்கியபோது அந்தந்த பகுதியின் பூர்வ குடிமக்களை ஆயுதங்களாலும், அரசியல் பிரயோகங்களாலும் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது காலகாலமாக மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கவும் முடியாது என்று கருதி பூர்வ மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மாற்றியமைக்க சமயத்தை பயன்படுத்தினால் மட்டுமே முடியும். தங்களது அரசியல் ஆதிக்கத்தையும் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்று அவர்கள் கருதியதனால் யூதர்களின் ஒரு குறிப்பிட்ட குழுவினர் பயன்படுத்தி வந்த ஏசுவின் போதனைகளை தங்களது விருப்பத்திற்கேற்ப விரிவுபடுத்தி கிறிஸ்துவ சமயமாக தோற்றுவித்தனர்.

   இன்னொரு விஷயம் மிகவும் முக்கியமானது ஏசுநாதரின் காலத்தில் யூதர்கள் ரோமசாம்ராஜ்ஜியத்திற்கு அடிமைகளாக இருந்தார்கள். அப்படி அடிமைகளாக இருந்ததுகூட கொடுமையில்லை. தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டு சுதந்திரம் இழந்தவர்களாக இருக்கிறோம் என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அடிமைகளாக இருந்தார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை ஆகும். இந்த அறிவு குருடர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதே தனது தலையாய கடமையாக ஏசு கருதினார். யூதர்களின் நல்வாழ்வு ஒன்றே அவரின் லட்சியமாக இருந்தது. இதற்கு ஆதாரமாக புதிய ஏற்பாட்டில் சில வசனங்கள் உள்ளன. உங்கள் உபதேசம் யாருக்கு என்று ஏசுவிடம் சிலர் வினவியபோது அவர் உன்னிடம் ஒரு ரொட்டி துண்டு இருந்தால் அதைப்பசியால் அழுகின்ற உனது குழந்தைக்கு கொடுக்காமல் நாய்க்கு கொடுப்பாயா என்று பதில் சொன்னார் அதாவது தனது உபதேசம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி சுதந்திரம் தவறி கிடக்கும் இஸ்ரேலியர்களுக்கே என்பது இதன் பொருள் ஆகும்.

   மேலும், ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு காரணமாக இருந்த சூழலை நாம் பார்க்க வேண்டும் யூதமத குருக்கள் மக்களை மூட நம்பிக்கையில் தள்ளி மௌடீகம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்கள். ரோமாபுரி ஆட்சியாளர்களும் மதகுருமர்களின் அட்டூழியங்களைத் தங்களது சுயலாபத்திற்காக கண்டு கொள்ளாதே இருந்தார்கள் இந்த வேளையில் ஏசுவின் போதனை மக்களை குருமார்களின் கொடூர பிடியிலிருந்து நீக்குவதாக இருந்தது. இதனால்தான் அவர் மீது தன்னைக் கடவுளின் குமாரர் என்று கூறி தெய்வ நிந்தனை செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறைப்பட்டார். தாம் சிலுவையில் மாண்டு போவதற்கு தன்னால் நேசிக்கப்பட்ட யூதர்கள்தான் காரணம் என்பதை நன்கு அறிந்திருந்தும் அவர்களின் மீது கோபம் கொள்ளாமல் அவர்களை மன்னித்துவிடுமாறு ஆண்டவனிடம் மன்றாடினார். முழுக்க முழுக்க யூதர்களின் ரட்சகராகவே வாழ்ந்த, வாழ விரும்பிய ஏசு அரசியல்வாதிகளால் உலக ரட்சகராக ஆக்கப்பட்டார். அவர் மட்டும் யூதர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு உலகமக்கள் அனைவருக்காகவும் தனது பணியைத் தன் வாழ்நாளில் செய்திருப்பாரேயானால் இன்று குண்டுகளுக்கு பதிலாக மலர் சென்டுகள் உலகம் முழுக்க நிரம்பி இருக்கும்.

   காரணம் சுயநலமே இல்லாத ஏசு என்ற மகாபுருஷர் தனது நேரடிபார்வையில் ஒரு மதத்தை உருவாக்கி இருந்தால் அந்த மதம் மற்ற மதங்களை அழிக்க நினைக்காது. அரவணைத்து அன்பு செலுத்தி சமரச வாழ்விற்கு வழி வகுத்திருக்கும் அரசியல்வாதிகளால் அந்த மதம் உருவானதால்தான் அணுகுண்டுகளால் செத்தவர்களைவிட அதிகமான மனித உயிர்கள் சிலுவை போர்களினால் காவு கொள்ளப்பட்டது. இன்றும் மதமாற்றங்களினால் சமய பூசல்களை உருவாக்கி கொண்டிருக்காது.



கேள்வி: கிறிஸ்துவர்கள் செய்யும் மதம் மாற்ற முயற்சிகள் மட்டுமே தவறு என்று சொல்லலாம் மற்றபடி அவர்களால் செய்யப்படும் மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை நம்மால் தவறுதலாகக்கூறமுடியாதே?

குருஜி:
ஓர் உண்மையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கல்வி கொடுக்கிறார்கள் மருந்து கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான் ஆனால் அதை ஏன் கொடுக்கிறார்கள் என்பதைப்பார்க்க வேண்டும் வறுமையிலும், அறியாமையிலும் இருப்பது மற்ற நாட்டு மக்கள் மட்டுமல்ல கிறிஸ்துவ சமயத்தை ஒட்டுமொத்தமாக தழுவிய மக்கள் வாழும் நாடுகளிலும் இந்த கொடுமைகள் இன்னும் இருக்கிறது சேவை மட்டும்தான் இவர்களின் நோக்கம் என்றால் நிர்கதியில் கிடக்கும் ஆப்பிரிக்க, அமெரிக்க நாட்டு மக்களுக்கும் அதைச்செய்ய வேண்டும் அந்த நாட்டு மக்களுக்காக உலக கிறிஸ்துவ அமைப்புகள் பெருமளவில் நிவாரண நிதிகளை ஒதுக்கினால் அது பாராட்டுதலுக்குரியது. ஆனால் அவர்கள் அப்படி செய்வது இல்லை. ஆசியா, அரேபியா போன்ற நாடுகளிலுள்ள மக்களை குறியாகக் கொண்டே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் இது ஒன்றே மதம் மாற்றம் மட்டும்தான் முக்கிய குறிக்கோள் என்பதை நிரூபித்துக்காட்டும்.

கேள்வி: ஒரு முழுமையான ஞானியின் உபதேசங்கள் அரசியல்வாதிகளின் கைகளிலும், வர்த்தகர்களின் கைகளிலும் கிடைத்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் அதனால் அப்பாவி மக்கள் எத்தகைய துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பதை அறிய முடிகிறது இதிலிருந்து விடுபட மனித சமுதாயம் என்ன செய்ய வேண்டும்?

குருஜி: ஏசு ஒரு நிறை ஞானி என்பது சந்தேகத்திற்கே இடம் இல்லாதது. ஆனால் அவரை தனிப்பட்ட ரீதியில் விமர்சனம் செய்பவர்கள் அவரின் நிறைஞான தன்மைக்கே களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள் அதைப்பற்றி நமக்கு கவலையும் இல்லை. அக்கறையும் இல்லை, ஒரு ரீதியில் பார்க்க போனால் ஏசு தனது யூத மக்கள் விழிப்படைய வேண்டும், முன்னேற வேண்டும் என்று கருதினாரே தவிர மற்ற இனமக்கள் அழியவேண்டும், குறைபட்டு கிடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை ஏசுநாதர் மட்டும்தான் இன்று உலகிலுள்ள ஒரே உண்மை கிறிஸ்துவர் ஆவார். மற்றவர்களெல்லாம் வெறுமனே அவர் உபதேசங்களை பேசுகின்ற இயந்திரங்கள் ஆவார்கள். எனவே கிறிஸ்துவ அரசியல்வாதிகளாலும், மதபோதகர்களாலும் உருவாகி உள்ள சமூக சிக்கல்கள் களையப்பட வேண்டும் என்றால் இவர்கள் அனைவருமே உண்மையான கிறிஸ்துவர்களாக மாற முயற்சிக்க வேண்டுமே தவிர மற்றவர்களை மாற்ற முயற்சிக்க கூடாது.

கேள்வி: ஏசுவின் நிறைஞான தன்மையை விமர்சித்தல் என்பது விஷமத் தனமானது அவர்கள் எதற்காக ஞானத்தன்மையில் கறையை பூசுகிறார்கள்?

குருஜி: ஏதென்ஸ் நகர இளைஞர்களை கேள்விகள் கேட்டு குழப்பி கெடுதியான வழிகளில் அவர்களை நடத்த முயற்சிப்பதாகக்கூறி சாக்ரடீஸ் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அப்படி சாகும்போதுகூட சாக்ரடீஸ் தனது உடலில் விஷமானது எவ்விதம் பரவி வேலை செய்கிறது. என்பதை சீடர்களுக்கு விளக்கிக் கொண்டு இருந்தாரே தவிர மரணத்தை பார்த்து பயப்படவில்லை. ஆனால் தேவகுமாரன் என்று அழைக்கப்படும் ஏசு சிலுவையில் தொங்கும்போது என்தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கதறுகிறார். மரணத்தைக்கண்டு பயந்துவிட்ட ஒருவர் எப்படி ஞானியாக இருக்கமுடியும் என்று ஒருசாரார் விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்த விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது என்றே நான் கருதுகிறேன். சிலுவையில் ஏசு இப்படி கூறியிருக்கிறார் என்பதற்கு தகுந்த ஆதாரம் இருக்கிறது. ஆயினும் அவர் இந்த வார்த்தைகளை நாம் எண்ணுவது போல் சராசரியாக பேசி இருக்கமாட்டார், தனது பணிகள் முடிவடைவதற்கு முன்பே அதாவது தமது இஸ்ரேல் மக்கள் விழிப்படுவதை கண்களால் காண்பதற்கு முன்பே தன்னை இறைவன் அழைக்கிறாரே என்ற நோக்கிலோ அல்லது தன்னை ஒட்டு மொத்தமான யூத மக்களாக உருவகபடுத்தி கொண்டு வருங்காலத்தில் அந்த மக்கள் கைவிடப்பட்ட கதியிலேயே வாழப்போகிறார்களே என்பதை அறிந்து கொண்டோ இத்தகைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கவேண்டும். இதை அவரின் ஞானக்குறைவு என்று கூறுபவர்கள் கருத்து குருடர்களாகவே இருக்க வேண்டும். சூரியனைப்பார்த்து ஓநாய் ஓலமிட்டால் சூரியனுக்கு எந்த பங்கமும் இல்லை உலகில் உள்ள ஞான புருஷர்களில் ஏசுவும் ஒருவராக இருப்பதற்கு இதனால் எந்த இடைஞ்சலும் இல்லை.


கே.கோவிந்தசாமி Eng


Contact Form

Name

Email *

Message *