Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனிதனை தேடி கடவுள் வரலாம்


  ன்று சங்கடகர சதுர்த்திதி விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு அமர்ந்திருந்தேன்   நமது சிஷ்யர்கள் எல்லோருக்கும் அந்த நிகழ்வு அதிசயமாகப் பட்டிருக்க வேண்டும்

பொதுவாக எனக்கு இந்த பூஜை புனஸ்காரம் இவைகளிலெல்லாம் அவ்வளவாக நாட்டம் கிடையாது

காரணம் பூஜை செய்பவர்களிடத்தில் எதற்காக செய்கிறீர்கள் எனக்கேட்டால் கடவுளிடம் பிராத்தனை வைக்கிறோம் என்பார்கள் அல்லது இறைவனை மகிழ்விக்க என்பர்கள் 


   என்னைக் கேட்டால் இவைகள் எல்லாமே முட்டாள்தனம் என்பேன் கடவுளிடம் எதற்காக பிராத்தனை செய்யவேண்டும்

நாம் பிராத்தனை செய்தால்தான் நமக்கு என்ன வேண்டுமென அவனுக்குத் தெரியுமா

அப்படித்தான் தெரியும் என்றால் எல்லாம் அறிந்தவன் என்ற பட்டம் அவனுக்கு எதற்கு

மனிதற்களான நாம் நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொன்னால்தான் கடவுள் புரிந்துக் கொள்வானா

அல்லது கடவுளுக்கே புத்தி சொல்லுகின்ற அளவுக்கு மனிதன் வளர்ந்து விட்டானா

மனிதன் வளர்ந்துவிடவும் இல்லை கடவுள் அறியாமையிலும் இல்லை 

  எல்லாம் அறிந்த கடவுளுக்கு நம் குறைகள் என்னவென்று தெரியாதா அதைவேறு நாம்பூஜை போட்டு சொல்லவேண்டுமா

வேண்டுதலுக்காகவும் இல்லை கடவுளின் ஞானத்தை குறைவு படுத்துவதற்காகவும் இல்லை நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவனை மகிழ்விப்பதற்காகவும் பூஜைசெய்கிறேன் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது

ஒருவன் நமக்கு எந்த உதவியும் செய்யவேண்டிய அவசியம் இல்லாத நிலையில் இருக்கிறான் அப்படி இருந்தும் நமது இயலாமையைக் கண்டு இறங்கி வந்து உதவுகிறான் 


   அப்படி செய்வதன் பெயர்தான் உதவி அதற்கு காட்டப்பட வேண்டியதுதான் நன்றி

குழந்தைக்கு நடைவண்டி வேண்டும் பசியார உணவு வேண்டும் உடல் மறைக்க துணிமணி வேண்டும் என்றால் அதை தாய் தகப்பன் உடனடியாக செய்யவேண்டும் செய்தே ஆகவேண்டும்

பாலூட்டியதற்காக அம்மாவுக்கு பாராட்டு விழாவா எடுக்க முடியும் எடுக்கத்தான் வேண்டுமா அதை எதிர்பார்ப்பவளா அம்மா

தாயிலும் சாலப்பரிவுடையவன்  அல்லவா இறைவன் அற்ப நன்றியை எதிர்பார்த்தா நம்மை படைத்திருப்பான்


நமது பூஜைகளால் இறைவன் மகிழ்கிறானா நிச்சயமாக அதை சொல்ல முடியுமா

தூபதீபம் காட்டுவதிலும் அபிஷேக ஆராதனைகள் புரிவதிலும் கடவுள் பூரித்துப் போகிறானா

மேதைகளுக் கெல்லாம் மேதையாக இருப்பவன் கிலுகிலுப்பை சத்தத்திலும் தண்ணீரை அளைந்து விளையாடுவதிலுமா தன்னை மறக்கிறான்

ஒருக்காலும் இருக்க முடியாது எதிர்பார்ப்பே இல்லாத இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்பது பேதமை அல்லவா

 உலகத்து ஆனந்தம் எல்லாம் அவனுக்குள் அடங்கி இருக்கிறது அப்படி இருக்க வெளியிலிருந்து எது அவனை சந்தோஷப் படுத்திவிட முடியும்  




  எல்லாம் கொடுக்க வேண்டியவன் அவன் அவனுக்கு யாரால் கொடுக்க முடியும்

குயவன் பானை செய்கிறான் அந்த பானையையே அவனுக்கு பரிசாகக் கொடுத்தால் நன்றாகவா இருக்கும்

அவனிடம் உள்ளதையே அவனுக்கு கொடுப்பதில் என்ன சிறப்பு உள்ளது

அதேப் போல்தான் கடவுளிடம் எல்லாமே இருக்கிறது பிறகு எதை அவனுக்கு அர்ப்பணிப்பது

அவனுக்கு அன்னியமாக இந்த உலகத்தில் ஒரு பொருள் இல்லையே பிறகு எப்படி நாம் கொடுப்பதினால் அவன் சந்தோஷப்பட முடியும்

இந்த மாதிரி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்ற ஒருவன் திடீரென ஒருநாள் மடி ஆச்சாரத்தாடு பூஜை செய்வதைப் பார்த்தால் யாருக்குத்தான் வியப்பாக இருக்காது 


 இத்தனை நாட்கள் இவன் பேசியது பொய்யா அல்லது இப்போது நாம் காணுவது பொய்யா என்ற எண்ணம் கூட ஏற்படலாம்

சிலர் பெரிய மனிதர்கள் என்றாலே பேச்சி ஒன்றும் செயல் ஒன்றுமாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது என்ற முடிவுக்கும் வரக்கூடும்

ஆனால் நம்ம மனுஷாளுக்கு அந்த மாதிரியான சிந்தனைகள் வந்ததாக சொல்ல முடியாது

குருஜிசெய்வதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் அதுதான் எது என்று புரியவில்லை அது எதுவாக இருக்கும் என்றுதான் வியப்படைந்து இருக்கிறார்கள் என்பது அடுத்ததாக அவர்களிடமிருந்து வந்தக் கேள்வியிலேயே புரிந்தது

பூஜைகளில் அதிக நாட்டம் இல்லாத நீங்கள் திடீரென பூஜையில் ஈடுபட்டதன் ரகஸியம் என்ன வென்று கேட்டார்கள்

கேள்விகள் கேட்பதும் பதில்கள் பெறுவதிலும்தானே அறிவின் விரிவாக்கம் இருக்கிறது எவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும் தன் செயலுக்கு யாரும் எதிர் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்கிறானோ அவன் தானும் சிதைந்து மற்றவர்களையும் சிதைக்கிறான் என நம்புகின்றவன் நான் 


   எனவே பதில் சொல்லலானேன் நிஜமான பூஜை என்பது என்ன? மலர்மாலை சாற்றுவதோ அர்ஜனை செய்வதோ அல்ல!

சிலர் மணிக்கணக்காக பூஜை செய்கிறேன் ஜெபிக்கிறேன் என்று சொல்கிறார்கள் அப்படிப்பட்டவர்களில் பலர் கடவுள் சந்நிதானத்தில் உட்கார்துக் கொண்டு தங்கள் சொந்தக் குழப்பங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்

இப்படிப் பட்டவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவகளையும் ஏமாற்றுகிறார்கள் எத்தனை நேரம் பூஜை  செய்கிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு நேரம் நம் மனது கடவுளோடு ஐக்கியப்பட்டு இருக்கிறது என்பதுதான் முக்கியம்

உண்மையில் பூஜை என்பது புறச்செயல் அல்ல அகச்செயல் அற்பணிப்பாகும் நம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படத்தலே பூஜை!

உங்கள் நல்ல எண்ணங்களால் கடவுளுக்கு அபிஷேகம் செய்யுங்கள் நல்ல செயல் என்ற சந்தனத்தை எடுத்து அவன் திருவடிகளில் பூசுங்கள்

கருணை என்ற ஊதுவத்தி ஏற்றி அன்பு என்ற சாம்பிரானிப் தூபத்தால் சமூகத்தை வாசனை மயமாக்குங்கள்

அறமுரசு கொட்டி அஹிம்சை மணியொலி எழுப்பி ஒழுக்கம் என்ற சங்கநாதம் செய்து ஞான தீபம் ஏற்றி அன்றாட வாழ்வின் ஒவ்வொறு மணித் துளியிலும் பூஜை செய்யுங்கள் !

இதுதான் இதுமட்டும் தான் நிஜமான பூஜை! இத்தகைய வழிபாட்டை நினைவு படுத்துவதுதான் நித்திய பூஜையின் தத்துவம்

நான் பூஜை செய்வது ஏன் தெரியுமா? அந்த நேரத்தில் அம்மாவின் மடியில் தனியாக தலைவைத்து படுத்தது போன்ற சந்தோஷம் எனக்கு ஏற்படுகிறது

 அதாவது என் நித்திய சொந்தக்காரனான கடவுளோடு தனித்திருப்பதாக உணர்கிறேன் என் நல்லதும் கெட்டதும் முழுமையக அறிந்த அவனோடு முழு உறவை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்ள நான் முயல்கிறேன்

அந்த முயற்ச்சி எனக்கு நிறைவைத் தருகிறது ஆனந்தக் கடலில் என்னை தள்ளுகிறது எப்போதெல்லாம் தளர்ச்சியும் சோர்வும் எனக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பூஜை செய்கிறேன் புத்துணர்வைப் பெறுகிறேன் நீங்களும் இப்படி செய்து பாருங்கள் கடவுள் உங்களையும் தேடி வரலாம்





Contact Form

Name

Email *

Message *