Store
  Store
  Store
  Store
  Store
  Store

குரங்கிலிருந்து வந்தவனல்ல மனிதன்


     யிர் என்பது அழியாத ஒரு பொருள்.  இதை பொருள் என்ற வார்த்தையில் குறிப்பிடுவது கூட தவறு என்று கருதுகிறேன்.  காரணம் பொருள்  என்றால் உருவம்.  கனம் இன்னும் பிற அடையாளங்கள் இருந்தால்தான் அதைப் பொருள் என்று கூறுவது சரியாக இருக்கும். ஆனால் உயிருக்கு உருவமோ எடையோ இருப்பதாகக் கருத முடியாது.  இருப்பினும் பன்னெடுங்காலமாக மக்கள் அறிந்தோ அறியாமலோ உயிரைத் தங்களது சுய கற்பனைக் கேற்ற பொருளாகத்தான் கருதி வருகிறார்கள்.  நாமும் அந்த மாதிரியாகக் கருதிக்கொண்டால் தான் மேற்கொண்டு இருக்கின்ற விஷயத்தை ஆராய முடியும்.

மேலும் யோக விஷயத்தையும் மனித உடற்கூறுகளைப் பற்றி நுண்ணியமான முறையில் விவரிக்கும் மிகப் பழமையான நூல்களில் உயிரானது அவரவர் கை கட்டைவிரல் அளவில் உள்ளது என்றும் அது இருதயத்திற்கு அருகில் உட்கார்ந்து உடல் முழுவதும் மின்காந்த அலைகள் போல வியாபித்துள்ளது  என்றும் கூறப்பட்டிருக்கிறது.  இதை ஒரளவு நடுநலைமை உடைய விஞ்ஞானிகளும் ஏற்கிறார்கள்.  கட்டைவிரல் என்ற குறியீடு மனிதர்களை மட்டுமே கணக்கில் வைத்து கூறப்பட்டதாகத் தோன்றும். ஆனால் உண்மை நிலை அப்படியிருக்க வாய்ப்பில்லை.  விரல்களற்ற உயினமும் விரல்களைவிட பல மடங்கு சிறிய உயினங்களும் உள்ளதனால் அந்தந்த ஜீவன்களுக்கு அதன்தன் விரல்களை உருவகப்படத்திக் கூறப்பட்டதாகவே கருத வேண்டும்.
 ஒரு விமானத்தின் இயங்கும் சக்தி அதன் சிதைவோடு முற்றுப்பெறுவது போல் இல்லாமல் உடல் அழிந்த பின்னும் உயிரானது அழிவதில்லை என்பதையும் அதன் உருவம் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும் என்பதையும் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.  ஆயினும் இந்த உடலுக்குள் உயிர் எப்படி வருகிறது அல்லது யாரால் அனுப்பி வைக்கப்படுகிறது.  உடல அழிந்தபின் உயிர் எங்கே செல்கிறது என்னவாக ஆகிறது என்பதையும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தோம் என்றால் உயிர் வாழ்வதன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் ஆவோம்.

 உயிரின் தோற்றத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஜீவாத்மா பரமாத்மா போன்றவைகளை முழுமுதற்பொருளான இறைவனைக் குறிப்பது. சாதாரண உயிர்களை ஜீவாத்மா என்று அழைக்கும்போது பரமாத்மாவில் இருந்தே முழு சார்பு பெற்று அது வந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.  அதாவது அண்ணாமலையின் மகா தீபத்தில் இருந்து சிறிய அகல் விளக்குகள் ஏற்றப்படுவதற்கு இணையாக இதைக் கூறலாம்.

 கடவுள் என்ற பரமாத்மா யாராலும் உற்பத்தி செய்யப்படாத தானே முளைத்த மகா விருட்சமாகும்.  அந்த தானே முளைத்த மகா விருட்சத்தின் இலைகளாகவும் கனிகளாகவும் இருப்பதுதான் மற்ற ஜீவாத்மாக்கள் என்றாகிறது.  அப்படியென்றால் கடவுள் எப்படி தானாகவே இருக்கிறாரோ அதைப் போன்றுதான் ஜீவன்களும் தானாக இருக்கிறது  என்றும் கொள்ளலாம்.  இறைவனிடமிருந்து வெளிப்பட்டது என்றும் கொள்ளவாம்.


 இறைவனிடமிருந்து உயிர்கள் தோன்றின என்பதை நம்பினால் தான் உயிர்ப் பயணத்தின் தன்மைகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்.  அப்படி ஏற்றுக் கொண்டாலும் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது.  ஒரே இடத்திலிருந்து உருவான உயிர்கள் ஒத்ததன்மையுடையதாக இருக்க வேண்டும்.

 உயினங்களின் கூறுபாடுகளை ஆராய்ச்சி செய்யும்போது ஒத்த தன்மை என்பது அவ்வளவாக செயல்பாட்டு ரீதியில் இல்லை என்பதும் தெரிய வருகிறது.  இன்னொரு சிக்கலும் உள்ளது. அது என்னவென்றால் ஒரே உயிர்தான் உள்ளது.  ஆனால் அது பல உடல்களை இயக்குகிறது என்ற ஒரு சாராரும் இல்லை பல உடல்கள் இருப்பது போல் உயிர்களும் பலவாக இருக்கிறது என்று மற்ற ஒரு சாராரும் கூறுகின்றனர் இதில் எற்க தக்கது  எது?  தள்ளத்தக்க கருத்து எது?  என்று பார்க்கும் போது குழப்பம் கூடுகிறதே தவிர குறையவில்லை.

 உயிர் ஒன்றே எனக்கூறுவது ஆதிசங்கரரின் அத்வைதம் பல உயிர்கள் உள்ளன  எனக்கூறுவது மத்வாச்சாரியின் துவைதம்.  இரண்டு ஆச்சாய புருஷர்களுமே உண்மைக்குப் புறம்பாகப் பேசுபவர்கள் அல்லர். மேலும் இவர்களின் இருவரின் கருத்துக்களுமே வேதங்களை ஆதாரமாக வைத்துதான் கூறப்பட்டு இருக்கிறது.  இரு கருத்துக்களும் சரியானது தான் என்பதை நம்பி ஆழமாகச் சிந்தித்து பார்த்தால் சரியான விடை நமக்குக் கிடைக்கும்.

 ஞானநிலையில் மிக உயரிய சிகரத்தில் இருப்பவர் உடல்களின் இயக்கத்தைப் பெரிதுபடுத்துவதில்லை. அதன்உள்ளிருந்து இயக்கும் மூல சக்தியைத்தான் பிரதானமாகக் கவனிப்பார்கள்.  அத்தகைய கவனத்தைக் கொள்ளும்போது தான் இறையியலின் உண்மை தாத்பர்யத்தை அனுபிக்க முடியும்.  இந்த ரீதியில் சொல்லப்படும் சங்கரரின் அத்வைதம் சாதாரன உலகியலுக்கு ஒத்துவராது என்பதை துணிச்சலுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.  மத்வாச்சாரியின் துவைத கருத்துதான் உயிர் பற்றிய ஆராய்ச்சியில் நடைமுறைக்கு உகந்தது என்றும் பல உயிர்கள் உள்ளன என்பதனால் தான்  அவைகளுக்கு இயக்கத்தின் அடிப்படையில் ஒத்த தன்மை இல்லை என்பதை மனதில் கொண்டு மேலே செல்வோம்.

 உயிர்கள் உருவான காலத்தில் ஒருவிதமான உடலமைப்பைப் பெற்றிருந்தது என்றும் நாளாவட்டத்தில் அவைகளின் உடல்கள் வேறு மாதிரியாக மாறி அமைந்து இருக்கிறது என்றும் பரிணாம சித்தாந்தத்தில் நம்பிக்கை உடையவர்கள் கூறுகிறார்கள்.  பரிணாமத்தைப் பற்றிய விவாதம் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த விஷயத்திற்கு அவ்வளவாகக் தேவைப்படாது என்றாலும் பரிணாமம் என்பது உண்மையில் நடக்கிறதா என்பதை ஐயம் திரிபற அறிந்து கொண்டால் உயிர் எங்கே இருந்து வந்தது மீண்டும் அது எங்கே செல்கிறது என்பதை மிகத் தெளிவாகவும் துணிவாகவும் நாம் அறிவதோடு மட்டும் அல்லாது நடை முறைக்கு ஏற்க்க தக்க விதத்தில் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லலாம்.

  ஆதியில் மனிதன் மனிதனாகவே படைக்கப்பட்டு இருக்கிறான் என்று இன்று உலகில் நடைமுறையில் உள்ள அனைத்து பழமையான மத நூல்களும் கூறுகின்றன. இதை மூடத்தனமான நம்பிக்கை என்றும் மனிதன் மனிதனாகவே தோன்றியிருக்க வாய்ப்புகளே இல்லை என்றும் நவீன விஞ்ஞானிகள் மட்டுமல்ல சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விஞ்ஞானிகளும் உரத்த குரலில் கூறியிருப்பதை நாம் பார்க்கிறோம். 

  விஞ்ஞானிகள் என்று கூறிகொள்ளும் அனைவரும் மதங்களையும் மதக்கருத்துக்களையும் மூர்க்கமான முறையில் எதிர்ப்பதற்குக் காரணம் இருக்கிறது.  மேலை நாடுகளில் அளவுக்கதிகமான அரசியல் அதிகாரங்களைச் சுவை பார்த்த கத்தோலிக்க குருமார்கள் தங்களது அதிகாரங்களை நிலை நிறுத்திக்கொள்ள மதக் கொள்ளைகளை தவறான முறையில் பயன்படுத்தி தங்களது எதிர்ப்பாளர்களின் குரல்வளையை ஈவிரக்கமின்றி நெறித்தபோது மக்களின் உரிமைக்காகவும் விழிப்புணர்க்காகவும் செயல்பட்ட புரடட்சிக்காரர்கள் மதவாதிகளை எதிர்ப்பதற்குப் பதிலாக மதங்களையே ஒட்டுமொத்தமாக எதிர்க்க ஆரமபித்தனர். 

 அதன் விளைவுதான் மதங்களைப் போதைப் பொருட்களோடு ஒப்பிட்டுப் பேசியது.  நாளாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் மதவாதிகளுக்காக மதத்தை எதிர்த்தவர்கள்அப்படி எதிர்ப்பதே நாகரீகம் வெகுஜனநேசம் என முடிவு செய்து கண்மூடித்தனமாக மதங்கள் கூறும் அனைத்தையுமே  எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.  அவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  அணுகுண்டுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட சிலுவைப் போர்களாலும் புனிதப் போர்களாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது.  அதே நேரம் மதங்களின் சடங்கு சம்பிரதாயங்களோ தத்துவ கோட்பாடுகளோ இத்தகைய வன்முறைகளைத் தூண்டவில்லை என்பதையும் மதப்போர்வைக்குள் இந்த அரசியல் யுத்தங்கள் நடந்தன.  என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

 மனித இனத்தின் தோற்றத்தைப் பற்றி மதங்கள் கூறும் விஷயத்தை விஞ்ஞானிகள் மறுப்பதற்கு மேலே கூறிய காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருப்பதற்கில்லை.  ஏனென்றால் பரிணாமக் கொள்கை என்பது பல விதமான எதிர்வாதங்களால் பலகீனப்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தும் பிடிவாதமாக அதையே பற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அப்படித்தான் நம்மால்  எண்ண முடிகிறது.  பரிணாமக் கொள்கையின் பலஹீனங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொண்டால் இதை நன்றாக உணரலாம்.

 நமது நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் 1980ம் ஆண்டு ஆற்றுப்படுகையில் அகழ்வாராய்ச்சி செய்த போது நெருப்புக் கோழி முட்டை ஒன்று  கண்டுபிடிக்கப் பட்டது.  அந்த முட்டையின் வயதை நவீனக் கருவிகள் துணை கொண்டு நிர்ணயித்த போது 25 000 ஆண்டுகளுக்கு முந்தைய முட்டை என்பது தெரியவந்தது அதே போன்றே அப்போதைய மேற்கு ஜெர்மன் பகுதியில் 1979ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 5 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பறவைகள் பாம்புகள் தவளைகள் ஆகியவற்றின கல் படிமங்கள் கிடைத்தன.
   25 கோடி ஆண்டு வயதுடைய குரங்கு எலும்புக்கூடு ஒன்று இதே ஆண்டில் எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.  பழைய சோவியத் ருஷ்யாவில் பழமையான குகை ஒன்றில் ஏராளமான விலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்ததையும் அதைவரைந்து 40 ஆயிரம் வருடங்களாவது இருக்கும் என்றும் ரஷ்ய தொல்லியல் அறிஞர்கள் கூறினார்கள.  ஜப்பானிலும் அமெரிக்காவிலும் மூன்று கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராட்சஸ பறவைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.  1978ம் ஆண்டின் கடைசிப் பகுதியில் டோக்கியோவுக்கு அருகில் ஒருபெரும் மணல் குன்றை அகழ்ந்த போது 30 லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த யானையின் எலும்புக்கூடு ஒன்று முழுமையாகக் கிடைத்தது.

 இப்படி உலகத்தின் பல மூலைகளிலும் அகழந்து எடுக்கப்பட்ட விலங்கினங்களின் கல்படிமங்களும் பாறை ஓவியங்களும் மிகத் தெளிவான ஒரு முடிவைத் தருகின்றது.  அதாவது 25 000 ஆண்டுகளுக்கு முன்பு நெருப்புக்கோழியின் முட்டை எப்படியிருந்ததோ அதே போன்றுதான் இன்றும் உள்ளது.  ரஷ்யக் குகையில் காணப்பட்ட யானை கரடிகளின் உருவ அமைப்பு போன்றுதான் 40 000 ஆண்டுகளுக்குப் பின்பும் மாற்றமேயில்லாது அந்த மிருகங்கள் இன்றும் காட்சி தருகின்றது.  25 கோடி வருடங்களுக்கு முன்பு எத்தியோப்பியா மனித குரங்கு எப்படியிருந்ததோ அப்படியே தான் இன்றும் இருக்கிறது.  பல கோடி அல்லது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவே மற்ற விலங்குகள் எல்லாம் இருக்க மனிதன் மட்டும் குரங்கிலிருந்து எப்படி மாறி வந்தான்?


  பரிணாம தத்துவத்தை உண்மை என்று வாதத்திற்கு எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்தைச் சிந்திப்போம்.  பல கோடி வருடங்களுக்கு முன்பு குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இன்று எந்தக் குரங்கும் மனிதனாக மாறவில்லையே  அது ஏன்?  இயற்கையாக ஏற்பட்ட பரிணாமம் குரங்கை மட்டுமே மனிதனாக மாற்றிவிட்டு மற்ற உயிரினங்களை அப்படியே வைத்திருப்பது ஏன்? இன்றைய விஞ்ஞான ஆய்வின் படி மனிதனின் உள் உருப்புகளும் பன்றியின் உள்ளுருப்புக்களும் ஏறக்குறைய ஒத்தத்தன்மையில் இருப்பதாக சொல்லப்படுகிறது அதற்காக மனிதனின் முன்னோர் பன்றிகள் என சொல்ல முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலை மானுடவியல் விஞ்ஞானம் இது வரைத் தரவில்லை.  அப்படித் தரும் போது மனிதன் மனிதனாகத் தான் பிறந்தான் என்ற மதக் கொள்கைகளைக் கைவிடுவதைப் பற்றி சிந்திக்கலாம்.

 பரிணாமக் கொள்கையில் உள்ள இந்தப் பலஹீனங்களைப் புரிந்து கொண்டால் இறைவன்தான் உயிர்களைப் படைத்தான் என்றும் அவைகளின் உருவம் மற்றும் இயக்கங்களின் படைப்புக் காலம் முதல் இன்றுவரை எந்த மாறதலும் இல்லை என்பதும தெளிவாகப் புரியும்.  உயிர்கள் புறப்பட்ட இடத்தைத் தெரிந்து கொண்டோம்.  அது தற்காலிகமாக உடல்களில் தங்கியிருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டோம்.  உடல்களைத் துறந்தபின் உயிர்கள் எங்கே போகிறது என்பதை அறியும் முன் மனிதன் மனிதனாகத்தான் படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி மத நூல்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

 உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன் அண்டசராசரங்கள் எதுவும் இல்லாது இருந்தது.  கடவுள் மண்ணுலகையும் விண் உலகையும் அதன் பின்னரே படைத்தான்.  அப்போது மண்ணுலகு எந்த உயிர்களும் இல்லாது வெறுமையாக இருந்தது.  பாதாளங்களில் எல்லாம் இருள் பரவிக்கிடந்தது.  நீர் திரள்களின் மேல் கடவுள் அசைந்தாடிக் கோண்டு இருந்தார்.  அப்போது இறைவன் ஒளி தோன்றுக எனக்கட்டளை இட்டார்.  நாலாபுறமும் வெளிச்சம் பரவியது.  ஒளியை நல்லது என்று கருதிய இறைவன் இருளை அதிலிருந்து பிரித்து எடுத்தார்.  வெளிச்சத்திற்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்று பெயரிட்டார். இப்படி பூமியில் காலையும் மாலையும் நிறைவுற்று ஒரு நாள் முடிந்தது.



 இரண்டாம் நாளில் வானிற்குக் கீழ் உள்ளது மண்ணுலகாகவும் மேலே உள்ளது விண்ணுலகாகவும் இரண்டாகப் பிரித்து மூன்றாவது நாளில் விண்ணுலகிற்குக் கீழ் உள்ள நீர் எல்லாம் ஓர் இடத்தில் சேரும் படியும் கட்டளையிட்டும் நீர் இருந்த பகுதிகள் எல்லாம் மண்  தரை ஆகும் படியும் கட்டளை இட்டார்.  நிலம் கடல் என்பவைகள் இவ்வாறு உருவாயிற்று.  பின்னர் புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும் கனி தரும் பழ மரங்களையும் உருவாகும்படி ஆணை இட்டார்.  அது அதன்படியே ஆனது.  பின்னர் தொடர்ச்சியாக காலத்தை நிர்ணயம் செய்வதற்கு சூரியனையும் சந்திரனையும் படைத்தார்.  நட்சத்திர மண்டலங்களையும் உருவாக்கினார்.  தண்ணீலிருந்து பலவிதமான உயிர்கள் உற்பத்தி ஆவதற்கும் கட்டளை இட்டார்.

நீரிலும் நிலத்திலும் வாழும் உயினங்களையும் பறந்து செல்லும் பறவைகளையும்  படைத்த இறைவன் நிலத்தில் கால்நடைகளையும் காட்டு விலங்குகளையும் ஊர்வன வகைகளையும் தோற்றுவித்தார்.  முடிவாக இறைவன்  மானிடரைத் தம் உருவிலும் தம் சாயலிலும் உண்டாக்கி கடலையும் வானத்தையும் நிலத்தையும் உயிர் உள்ள அனைத்து ஜீவன்களையும் ஆண்டு கொள்ள உத்திரவு கொடுத்து ஆண் மகனையும் அவனின் விலா எலும்பிலிருந்து பெண் மகளையும் படைத்து பூமியில் விட்டார்.

இது உலக உற்பத்தியைப் பற்றி கிருத்துவ மத ஆதார நூலான பைபிள் கூறும் தகவல்கள் ஆகும்.

இனி இந்து மதப் புராணங்கள் உலக உற்பத்தியை எப்படிக் கூறுகின்றன என்பதைப் பார்போம்.



 அண்டம் வெறுமையாக இருந்த காலத்தில் பகலும் இரவும் ஆகாயமும் பூமியும் காற்றும் நீரும் சூரியனும் சந்திரனும் இருளும் ஒளியும் சாத்வீக தாமச ராஜச குணவிலாசங்களும் மற்றும் எந்த விதமான வஸ்துக்களும் இல்லாமல் மூலப்பிருகிருதி ஒன்றுமட்டும் சமஸ்டா புருஷ ரூபமாக இருந்தது.  அது நீர்த்திவலைகளின் மேல் சயனித்து தனக்குள்ளும் தனக்கு வெளியேயும் சலனத்தை உண்டாக்கிற்று.  அந்தச் சலனமானது வைகாயிகம் தைஜவும் பூதாதி என்ற அகங்காரங்களாக வெளிப்பட்டது.

 பூதாதி அகங்காரமானது விகாரப்பட்டு சப்தத்தை உண்டு பண்ணியது. அந்தச் சப்தத்தினால் ஆகாயம் உருவானது.  ஆகாயத்திலிருந்தும் ஸ்பரிச தன்மாத்திரை  வெளிப்பட்டு வாயு உருவானது.  அந்த வாயுலிருந்து கந்தம் உருவானது.  அதிலிருந்து ப்ரித்வி பிறந்தது.  பின்னர் ஐம்பூதங்களையும் ஒருங்கினைத்து ஜலத்தில் ஜீவ அசைவை ஏற்படுத்தினார்.  பின்னர் நிலப்பகுதியில் வாழும் புல்பூண்டு மர வகைகளையும் பறவைகளையும் விலங்குகளையும் படைத்தார்.  அதன்பின் தேவ அசுர கந்தர்வ மனுஷ்ய வகையறாக்காளை உருவாக்கினார்.

 இந்து பூராணங்கள் உலகம் மற்றும் உயிர்களின் சிருஷ்டியை இப்படி விவரிக்கிறது.  வேறு பல மதங்களில் உள்ள நூல்களும் உயிர்களின் உருவாக்கத்தை ஏறக்குறைய இப்படித்தான் கூறுகின்றன என்றாலும் இவ்விரண்டு மத நூல்களையே ஆதாரத்திற்கு இங்கு எடுத்துக் கொள்ளக் காரணம் உள்ளது.  யூத மத பூர்வ நூல்களில் இருந்தே பைபிளும் குரானும் உருவாகி இருப்பதை உலக சமய அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.  அதே நேரம் இந்து மதப் புராணங்களில் பெரும்பாலானவை யூத நூல்களைவிட வயது முதிர்ந்தவைகளாகும்.  எனவேதான் இந்த இரு துருவ நூல்களிலும் ஆதாரங்களைத் தேடினாலே அனைத்து மதங்களிலும் அதே போன்ற விஷயங்கள் மட்டுமே இருக்கும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.



 மேலே குறிப்பிட்ட இருமத நூல்களிலும் உள்ள ஒற்றமைகளைப் பார்க்க வேண்டும்.  இரண்டு மதங்களிலுமே இறைவன் நீரின் மேல் சயனித்து இருந்தான் என்ற அதிசயத்தக்க செய்தி உள்ளது.  முதல் உயிர் நீரில்தான் உருவானது என்பதிலும் மனிதன் தனிப்படைப்பாகத்தான் படைக்கப்பட்டான் என்பதும் அவனுக்கு முன்னரே நீர்வாழ்வனவும் மரங்களும் விலங்குகளும் படைக்கப்பட்டு விட்டது என்பதும் தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது.

புராணங்களையும் விவிலியத்தையும் உலக உற்பத்தயைப் பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சி செய்யும் போது சில முரண்பாடான நம்ப முடியாத விஷயங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியபவிட்டாலும் விஞ்ஞானிகள் உலகத் தோற்றத்தைப் பற்றியும் உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும் கூறியிருக்கும் பல விஷயங்கள் இந்தப் புனித நூல்களோடு ஒத்துப்போகக் கூடியதாகவும் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.  இனி வரும் காலங்களில் புராணங்களை வெறும் கட்டுக்கதைகள் புளுகு மூட்டைகள் என்ற கருத்தை மாற்றி அதற்குள்ளும் உண்மைகள் ஒளிந்திருக்கலாம் எனக்கருதி அறிவியல் நோக்கோடு மக்கள் சார்பு அற்று ஆராய்ச்சி செய்தால் பல நல்ல முடிவுகள் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.





Contact Form

Name

Email *

Message *