Store
  Store
  Store
  Store
  Store
  Store

மரணம் இப்படித்தான் இருக்குமா...?


  யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பதுதான். 

போகுமிடம் என்றால் என்ன?  மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்தபின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்துவிடும்.  அத்தகைய உயர்நிலையை அறிந்துகொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.


  செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் பல நபர்களின் வாக்கு மூலங்கள் முழுமையாக நமக்குக் கிடைத்து இருக்கிறது.  இருப்பினும் பெரும்பாலான வாக்கு மூலங்களில் அந்தந்த நபர்களின் சுய கற்பனைகளும் பய உணர்ச்சியால் ஏற்பட்ட வார்த்தை தடுமாற்றங்களும் நிறைந்து இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை.  ஆனாலும் அந்த வாக்கு மூலங்களில் சில உண்மைகளும் பல ஒற்றுமைகளும் இருக்கிறது.  அவைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்.

 கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 1954ம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு மரணம் அடைந்தார்.  அவர் மரணம் அடைந்து மூன்று மணி நேரம் கழித்து திடீரென தனது சாவுப்படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.  வழி தவறி அடையாளம் தெரியாத இடத்தில் அகப்பட்டு மீண்டும் தனது சொந்த இடத்தை எதேச்சையாக அடைந்த நபர் போல மிரண்டுபோய் இருந்தார். அவரிடம் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது காலையில் தன்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடலில் இனம் தெரியாத வலி இருந்தது.  அதனால்தான் மிகவும் வேதனையும் சோர்வும் அனுபவித்தேன்.  திடீரென்று தன்முன்னே வெள்ளை நிறத்தில் தேவதைகள் போல் மூன்று நபர்கள் வந்தனர்.  அவர்கள் தன்னை தன் உடலுக்குள் இருந்து வெளியே இழுத்தனர்.  அப்போது படுக்கையில் கிடக்கும் எனது உடலைப் பூரணமாக என்னால் பார்க்க முடிந்தது.  அதன்பின் அந்த மூன்று நபர்களும் வெளிச்சம் மிகுந்த ஒரு பாதையில் தன்னை அழைத்துச் சென்றனர்.  அவர்களுக்குள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டனர்.  அதில் ஒரு வார்த்தைக் கூட எனக்குப் புரியவில்லை.  சிறிது தூரம் கடந்தபின் அவர்களுக்குள் பேசி ஏதோ முடிவுக்கு வந்து என்னை மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு விட்டனர்.  அதன்  பின்னரே தான் எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறினார்.  அந்த மூன்று தேவதைகளின் முக அழகு இன்னும் தனது மனதில் பூரணமாக நிறைந்து இருப்பதாகக் கூறி சந்தோஷப்பட்டார்.


  இதே போன்ற ஒரு சம்பவம் அபுதாபியில 1975ம் வருடம் ஜனவரி மாதம் நடந்தது.  30 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் கராணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவர் இறந்து விட்டதாகக் கருதி உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர்.  உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது உறவினர்கள் பிரமிப்பு அடையும் வகையில் மரணத்திவிருந்து எழுந்தார்.  எழுந்தவர் இரண்டு நாள்  வரையில் பித்து பிடித்தவர் போல் யாரிடமும் பேசாமல் இருந்தார்.  அதன் பிறகு கூறிய விஷயங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

 என் இதய வலியை நீக்கவும் இதயத் துடிப்பை சமப்படுத்தவும் டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர்.  என் மீது என்னென்னவோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.  அறை முழுவதும் மருந்துகளின் வாடை.  எனக்கு அந்கச் சூழல் பயத்தை மேலும் அதிகரித்தது.  அப்போது என் கண் முன்னே 3 நபர்கள் தோன்றினார்கள.  அவர்கள் கால்வரையில் வெள்ளை அங்கி அணிந்திருந்தார்கள் என நினைக்கிறேன்.  அவர்கள் மூன்று பேருமே வெளிச்சமாகவும் அழகாகவும் இருந்தனர். என்னை வா என்று அழைத்தனர்.


  நான் அவர்களின் அழைப்பை ஏற்று எழுந்தேன்.  ஆனால் என் உடல் படுக்கையில்தான் கிடந்தது.  கருவிகள் பொருத்தப்பட்டுக் கிடந்த என் உடலைப் பார்ப்பதற்கு எனக்கு அப்போது ஏனோ வேடிக்கையாக இருந்தது.  ஆனால் அந்த மூன்று பேரும் உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.  மேலும் கீழும் மணலால் சூழப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்குள் என்னைக் கூட்டிச் செல்வது போல் இருந்தது.  அந்த நிலையில அந்த மணல் சுரங்கம் எனக்குப் பயத்தையும் இனம் புரியாத திகிலையும் தந்தது. அங்கு இதுவரை நான் அனுபவித்து இராத உயரிய நறுமணம வீசியது.  சுரங்கத்திலிருந்து ஒரு மணல் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறையினுள் வெளிச்சமும் குளிர்ச்சியும் இருந்தது.  அந்த 3 நபர்களும் திடீரென்று என்னை அந்த அறையினுள் இருந்து வெளியே கூட்டி வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர்.  அவர்கள் தள்ளிய வேகமும் உடலுக்குள் புகும்போது நான் அனுபவித்த இனம்புரியாத கிலியும் என்னை பிரம்மையில ஆழ்த்தி விட்டது என்று அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் கூறினார்.


 ஐரோப்பாவிலும் அரேபியாவிலும் மட்டுமல்ல நம் நாட்டில் உத்திரப்பிரதேசத்திலும் இத்தகைய சம்பவம் நடந்து உள்ளது.  12 வயது மாட்டுக்காரச் சிறுவன் ஒருவன் மாடு மேய்க்கும் இடத்திலேயே இறந்து விட்டான்.  அதை அறிந்த அவனது நண்பர்கள் வீட்டிற்குத் தகவல் கொடுத்து உடலை எடுத்து சென்றனர்.  இறுதிச் சடங்கிற்கு மயானத்திற்கும் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரிகைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது பாடையில் இருந்து சிறுவன் எழுந்து விட்டான்.  அதனைப் பார்த்த அங்கு இருந்த கிராம வாசிகள் பயத்தால் உறைந்து போயினர்.  சிலர் ஓடி விட்டனர்.  பாடையில் சென்ற சிறுவன் கால் நடையாக வீட்டிற்கு வந்தான். அவன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கதை கதையாகச் சொல்ல ஆரம்பித்தான்.

 மாடுகளை எல்லாம் புல்வெளியில் ஓட்டடிவிட்டு மரத்தடியில் படுத்து இருந்தேன்.  மயக்கம் மாதிரி வந்தது காலையில் சாப்பிடவில்லை என்பதனால் பசி மயக்கமாக இருக்கும் எனக்கருதி தூக்கிலிருந்த சப்பாத்திகளைச் சாப்பிட எழுந்தேன்.  அப்போது ராம்லீலா நாடகத்தில் வருவது போல் ஆடை அணிந்த 3 பேர் என் முன்னால் வந்தனர்.  அவர்களைப் பர்ப்பதற்கு எனக்குச் சந்தோஷமாக இருந்தது.  என் பெயரைச் சொல்லி தங்களோடு வருமாறு என்னை அழைத்தனர்.  நான் மாடுகளை மறந்தேன்;  பசியை மறந்தேன்.  அப்போது அம்மா அப்பா ஞாபகம் கூட எனக்கு வரவில்லை. தங்கச்சி பாப்பா மட்டும் என்னை தேடுவாளோ என்று சிந்தித்தேன்.  ஆனால் உடனடியாக அவள் நினைவும் மறைந்தது.  




   நான் அவர்களோடு வெகு தூரம் போய்விட்டேன்.  கீழே கிடந்த எனது உடலை நண்பர்கள் உலுக்கி எடுப்பதைப் பார்த்தேன்.  அவர்கள் அப்படிச் செய்வது எனக்குச் சிரிப்பாக இருந்தது. மேகங்கள் வழியாக என்னை அவர்கள் அழைத்து போவது போல் இருந்தது.  அங்கே மிதந்து வரும் அழகான மரங்களையும் மலர்ச்செடிகளையும் பார்த்தேன்.  சில அருவிகள் கூட அங்கு இருந்தது அங்கு வெளிச்சமாக ஒருவர் இருந்தார் அவர் என்னை பார்க்கக்கூட இல்லை.  என்னை அழைத்து வந்தவர்களிடம் மட்டுமே ஏதோ பேசினார்.  நிச்சயமாக அவர் இந்தியில் பேசவில்லை.  என்ன பாஷை பேசினார் என்றும் எனக்குத் தெரியாது.  அவரை வணங்கிய அந்த 3 பேரும் என்னைத் திரும்ப அழைத்து வந்தனர்.  சிதைக்குப் பக்கத்திலிருந்த என் உடலுக்குள் என்னைக் திணிக்கப்படும்போது மட்டுமே பயமும் வேதனையும் சிறிது இருந்தது.  பின்னர் நான் எழுந்துவிட்டேன்  உயிர்  பிழைத்த இந்தியச் சிறுவன் இவ்வாறு கூறி முடித்தான்.

ஐரோப்பிய பெண்மணியின் அனுபவமும் அரேபிய இளைஞன் இந்தியச் சிறுவன் ஆகியோரின் அனுவங்கள்  மட்டுமே இங்கு கூறப்பட்டதற்கு முக்கியமாக காரணம் உண்டு.  இன்று உலகில் இருக்கும் கலாச்சாரங்களில் முக்கியமானது இந்து இஸ்லாம் கிருஸ்துவ கலாச்சாரங்களே ஆகும்.  அந்தந்த கலாச்சராத்திற்கு உட்பட்ட மனிதர்களின் எண்ண ஒட்டங்களும் தங்களது சுய கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே அமையும் என்பது உலக நியதி.  அதன் அடிப்படையில் இந்த அனுபவங்களைக் தொகுத்து பகுத்து பார்க்கும்போது காலதேச சூழநிலையில் அனுபவசாலிகளின் தன்மைகள் மாறுபட்டு இருந்தாலும் அவர்கள் கூறும் விஷயத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதை அறிய முடிகிறது.
  செத்துப்பிழைத்த மூன்று பேருமே தங்களை மூன்று நபர்கள் வந்து அழைத்ததாகவும் தங்களது பூத உடலைத் தாங்களே பார்த்ததாகவும் மீண்டும் உடலுக்குள் உயிர் நுழையும் போது சிறய அளவில் வேதனையையும் பயத்தையும் அனுபவித்ததாகவும் கூறுகிறார்கள்.  இது எதேச்சையாகக் கூறப்பட்ட விஷயங்களாகக் கருத இயலாது.  இவர்களைத் தவிர மீண்டும் உயிர்பெற்ற பலரும் ஏறக்குறைய இதே மாதிரியான அனுபவங்களைத் தான் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் இன்னும் பல நவீன கருவிகளின் வளர்ச்சியும் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில் ஒருவரைப் போல் மற்றொருவர் கற்பனை செய்து கொள்வதும் திரித்துக் கூறுவதும் இயற்கையான விஷயம் தானே அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று சிலர் எண்ணக் கூடும்.  ஆனால் அந்த எண்ணம் நியாயமானது அல்ல.  கராணம் தகவல் தொழில் நுட்பம் என்பது இல்லாத ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்னரே இந்த மாதிரியான அமானுஷ்ய விஷயங்களிலும் உலக அறிவைப் பற்றிய ஒற்றுமையான கருத்துக்கள் கூறப்பட்ட இருக்கிறது அவைகளை  தற்செயலாக நிகழந்தவைகள் அல்ல என்பதை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டால் மேலே குறிப்பிட்ட மூன்று அனுபவங்களும் உண்மைக்குப் புறம்பானவைகள் அல்ல என்பது தெரியவரும்.
   பல லட்சம் வருடங்களுக்கு முன்பு தற்போது தனித்தனியாக உள்ள ஆஸ்திரேலியா அண்டார்ட்டிகா தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தது என்றும் அதற்கு பெயர்தான் லெமூரியா கண்டம் என்றும் புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள் தொடர்ச்சியான மிகப்பெரும் கடல் கோள்களால தாக்கப்பட்டு அந்தக் கண்டம் பல கூறுகளாகப் பிரிந்து விட்டது என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  இதற்கு ஆதாராமாக ஆஸ்திரேலியா அண்டார்டிகா கண்டங்களில் உள்ள மலைத் தொடர்களின் அமைப்புகள் ஒரே மாதிரி இருப்பதாகவும் அதற்கு இரு கண்டங்களில் உள்ள கற்களின் அமைப்பை நுண்ணியமாக ஆராய்ந்த பின்பே இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

  லெமுரியா கண்டம் இருந்ததற்கான ஆதாரமும் அது மிகப் பெரும் கடல் சீற்றத்தால் அழிந்து போய் இருப்பதற்கான ஆதாரமும் 19ம் நூற்றாண்டில்தான் கிடைத்தது என்று பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கூறினாலும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே மிகப்பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டு பெரும் நிலப்பரப்பு ஒன்று அழிந்து போனதாக பாரதத்தின் புனித மிக்க பல நூல்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன.  அவற்றைப் பற்றி சிறிது பார்போம்.

 மாபெரும் ஜலப் பிரளயம் பூமியில் ஏற்பட்டது.  உலகெங்கும் உள்ள உயிர்கள் நீரில் மூழ்தி அழிந்த போது விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து மனுவையும் மற்றைய ஜீவன்களின் ஒவ்வொரு ஜோடியையும் ஒரு பேழையில வைத்து ரட்சித்ததாக மச்ச புராணம் கூறுகிறது.  மேலும் இந்தக் கடல் கோள் பற்றி அதர்வண வேதத்தில் மிக விரிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதர்வண வேதத்தில் கூறப்பட்டு இருக்கின்ற கருத்துக்களே சுமேரியர்களின் பிரளயக் கதையாக இருக்கிறது என்று டாக்டர் ஹேன் என்பவர் சுறுகிறார்.  வேத நூலில் பிரளய காலத்தில் சத்ய வரத மனு என்பவர் உயிர்த்தொகுதிகள் அழிந்து போகாமல் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.  
   பாகவத்தில் கடல்கோள் பற்றி வேதத்திலும் மச்சபுராணத்திலும் கூறப்பட்ட விஷயங்களே இருந்தாலும் உயிர் வகைகளைக் காப்பாற்றியது திராவிட பதி என்ற குறிப்பு உள்ளது.  சத்ய வரத மனுவைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும்போது அவன் பொதிகை மலையில் தவம் செய்தான் என்று இருக்கிறது. திராவிட பதியும் பொதிகை மலையில் தான் இருந்தான் என்று பாகவதம் கூறுகிறது.  எனவே இந்த இரண்டு பெயர்களும் ஒரே நபருக்கு உடையதுதான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி உள்ளது.

 தொல் பழமை காலத்தில் புகழ் பெற்ற நகரமாக விளங்கிய பாபிலோனில் ஜலப்பிரளயத்தைப் பற்றி ஒரு கதை உண்டு.  அது கி.மு. 300ம் ஆண்டுதான் எழுத்து வடிவம் பெற்றது.  பெரோஷஸ் என்பவர் இதை எழுதி வைத்தள்ளார். அதில் அணு என்பவன் பிரளயத்தின் போது உயிர்களை ரட்சித்து பாபிலோனியர்க்கு விவசாயம் செய்வது உட்பட நாகரீகங்கள் பலவற்றைக் கற்றுக் கொடுத்ததோடு மனிதத் தலைமுறைகளின் சட்டதிட்டங்களையும் வகுத்துக் கொடுத்தான் எனக் கூறப்படுகிறது.  வேதங்களில் வருகின்ற மனுவிற்கும் பெரோஷஸ் நூலில் குறிப்பிடப்படும் பிரளய காட்சிக்கும் அதிக வித்யாசம் இல்லை.

தென் அமெரிக்க நாட்டின் நடுப்பகுதியில் இன்கா என்ற பெயரில் பழங்குடி மக்கள் சிறிய குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் தங்களது இனம் தோன்றிய விதத்தைப்பற்றி புராதனமான நம்பிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்கள்.  ஆரம்பக்காலத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்து இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள் என்றும் அதில் ஆண் குழந்தைக்கு யானாநாம்தா என்ற பெயரும் பெண் குழந்தைக்கு டுடா நாம்கா என்ற பெயருமாக வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்களின் சந்ததியில பாகாக்கா சம்பினாம்கா என்ற இரு வாரிசுகள் பிறந்ததாகவும் இவர்களிலிருந்துதான் மனுக்குலம் பல்கிப் பெருகியதாகவும் நம்புகிறார்கள்.
 இம்மக்களின் இந்த நம்பிக்கை கதையில் மேலும் சில தகவல்கள் கிடைக்கிறது.  பூமியில் ஜனப்பெருக்கம் அதிகமாகி விட்டதனால் அது பாரம் தாங்காமல் திணறியது.  அப்போது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மண்ணிற்குள் இருந்து தண்ணீர் கொப்பளித்து பிரவாகமாக வெளிப்பட்டது.  நிலப்பகுதி முழுமைக்கும் தண்ணீரின் அளவு ஏறிக்கொண்டே சென்றதனால் பாகாக்காவும் அவனது மனைவியும் கையில் கிடைத்த உயிரினங்களை எல்லாம் பிடித்து ஒரு பேழையில் அடைத்துக் கொண்டு தாங்களும் அதில் ஏறி ஜலப்பிரளயத்திலிருந்து தப்பி தண்ணீர் வடிந்தபின் பிரஜா உற்பத்தியில் ஈடுபட்டனர்.

 ஐரோப்பாவில் தென்கிழக்கு தீபகற்கபகுதியில் உள்ள வரலாற்றுப் பெருமைமிக்க கிரேக்க நாட்டிலும் இதே போன்ற ஒரு கதை உள்ளது.  அந்தக் கதையில் டியூக்கேளியன் என்று ஒரு மனிதன் இருந்ததாகவும் அவனுக்கு பிர்ரஹா என்ற மனைவியின் மூலம் ஹெலின் என்ற மகன் இருந்ததாகவும் இந்த மகன் காலத்தில் உலகெங்கும் தீமை கோரமாகத் தலைவிரித்து ஆடியதாகவும் இதனால் கிரேக்கர்களின் பெரிய தெய்வம் கோபம் கொண்டு பூமியில் பெரும் மழையை ஏற்படுத்தியதாகவும் இதனால் வெள்ளம்  நாலாபுறமும் சூழ்ந்து உயிர்களைக் கபளிகரம் செய்ததாகவும் ஹெலினும் அவனது இளம் மனைவியும் படகில் தப்பி பூமியின் தெற்குப் பகுதிக்குச் சென்று மனித உற்பத்தியை ஆரம்பித்தாகவும் கிரேக்கக் கதை கூறுகிறது.
  கிறிஸ்தவ வேதமான விவிலியத்திலும் மகாபிரளத்தைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன.  மனுஷனுடைய அக்கிரமம்  பூமியிலே பெருகின்றது என்றும் அவன் இருதயத்தின் நினைவுகளில் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார்.  அது அவர் இருதயத்திற்கு விசனமாய் இருந்தது.

 அப்பொழுது கர்த்தர் நான் சிருஷ்டித்த மனுஷனை பூமியின் மேல் வைக்காமல் மனுஷன் முதற்கொண்டு மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கின்றனவைகளை நிக்கிரஹம் பண்ணுவேன்.  நான் அவர்களை உண்டாக்கினது.  எனக்கு மனஸ்தாபமாய் இருக்கிறது என்றார்.

 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி மாமிசமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது.  அவர்களாவே பூமி கொடுமையினால் நிறைந்தது.  நான் அவர்களை பூமியோடு கூட அழித்துப் போடுவேன்.

 நீ  கோப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உருவாக்கு.  அந்தப் பேழையிலே அறைகளை உண்டு பண்ணி அதை உள்ளும் புறமும் பிசின்களால் பூசு என்றார்.
  கர்த்தரின் கடடளைபடி நோவா கோப்பேர் மரத்தால் பேழையைக் கட்டி முடித்து அதற்கு உள்ளும் புறமும் பிசின் பூசினார்.  அந்தப் பேழையின் அளவு கர்த்தரின் உத்தரவுபடி 300 அடி நீளமும் 50 அடி அகலமும் 30 அடி உயரமும் உள்ளதாக இருந்தது.

 பேழை செய்யப்பட்ட பின்பு அதனுள் சகல வித மாமிசமான ஜீவன்களில் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி வீதமும் நோவாவும் அவர் குடும்பத்தினரும் பேழைக்குள் பிரவேசித்தனர்  சகல ஜீவன்களிலும் மனிதர்களிலுமாக பேழைக்குள் ஏறிக்கொண்ட ஏழு நாட்களுக்குப் பிறகு நோவாவின் 600வது வயதில் இரண்டாம் மாசத்தில் 17ம் தேதியில் மகா பாதாளத்தின் ஊற்றுக் கண்களும் பிளந்தன.  வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

 இவ்வாறாக ஜலப்பிரளயம் 40 நாள் பூமியின் மேல் உண்டானபோதும் தண்ணீர் பெருகி பேழையைக் கிளம்பப் பண்ணியது.  அது பூமிக்கு மேல் மிதந்தது.  ஜலம் பெரும் வெள்ளமாகி பூமியெங்கும் மூழ்கலாயின.  பின்னர் 7ம் மாதம் 17ம் தேதியில் பேழை ஹரராத் என்னும் மலையின் மேல் தங்கிற்று.  10ம் மாதம் முதல் ஜலம் வடியத் தொடங்கியது.  மலைச்சிகரங்களும் மலைமேல் இருந்த மரங்களும் தெரிய ஆரம்பித்தன.  (பைபிள் ஆதியாகமம் 6 முதல் 8ம் அதிகாரம் 4.5 வசனம் வரை.
   கடல்கோள் பற்றி விவிலியம் இவ்வாறு விவரிக்க திருக்குரானும் இதைப் பற்றி விஸ்தாரமாகவே பேசுகிறது.  நிச்சயாக நாம் நூகுவை அவர்களுடைய ஜனங்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்து அவரை நோக்கி உம்முடைய ஜனங்களுக்கு துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே அவர்களுக்கு (அதனை பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் என்று கட்டளை இட்டோம்.

 நமது கட்டளைப்படி நூகு அந்த ஜனங்களை நோக்கி எனது ஜனங்களே நிச்சசயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.  அவ்வாறு நீங்கள் வழிபாடுகளை இசைந்து நடத்துங்கள்.  அவ்வாறு நீங்கள் நடப்பீர்களானால் இறைவன் உங்கள் குற்றங்களை மன்னித்துக் குறிப்பிட்ட காலம் வரை உங்களை வாழ அனுமதிப்பான்.
   நிச்சயமாக (வேதனைக்குக் குறிப்படப்படும்)  இறைவனின் காலக்கெடு வரும் பட்சம் அது ஒரு சிறிதும் பிந்தாது.  இதனை நீங்கள் அறிய வேண்டாமா?  எனக் கூறினார்.

 அம்மக்கள் (தூதரை விளித்து)  நூஹே நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்தீர்.  அதுவும் அதிகமாகவே தர்க்கித்துவிட்டீர்.  நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (வீண்தர்க்கத்தை விட்டொழித்து) நீர் அச்சுறுத்தும் அந்த வேதனையை நம்மிடம் கொண்டு வாரும்.

 தூதராகிய நூஹீவுக்கு மீண்டும் வந்த இறை அறிவிப்பின் தொடர் இவ்வாறு கூறிச் செல்கிறது.

 (ஓ நூஹே) நாம் அறிவக்குமாறு நம் கண் முன்பாகவே ஒரு மரக்கலத்தை நீர் செய்யும்.  அக்கிரமக்காரர்களைப் பற்றி (இனிமேலும்) நீர் என்னுடன் பேசாதீர்.  நிச்சயமாக அவர்கள் பெரும் வெள்ளதில் மூழ்கடிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
  அவர் மரக்கலத்தைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் அம்மக்களின் தலைவர்கள் அதன் சமீபமாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்.  அதற்கு அவர் நீங்கள் எங்களை (இப்பொழுது)  பரிகசித்தால் நிச்சயமாக நீங்கள் நகைப்பது போலவே (விரைவில்)  நாங்களும் உங்களைப் பார்த்துப் பரிகசிப்போம் எனக் கூறினார்.  ஆகவே அவர் தன் இறைவனை நோக்கி நிச்சயமாக நான் இவர்களிடம் தோற்றவிட்டேன்.  எனக்கு உதவி செய்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்.  ஆதலால் வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு தாரை தாரையாக மழை கொட்டும்படிச் செய்தோம்.

 அன்றி பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டு) பாய்ந்து ஒடச் செய்தோம்.  ஆகவே குறிபிட்ட ஓரளவுக்கு இரு ஜலங்களும் கலந்தன.  நாம் அவரையும் அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் மரக்கலத்தின் மீது சுமந்து கொண்டோம்.  அது நம் கண் முன்னே பிரளயத்தின் மிதந்து சென்றது.

 மேலும் அந்தப் பிரளயத்தினால் பூமியில் எத்தனை விதமான அழிவுகள் கொடூரமான முறையில் விவரிக்க முடியாத பயங்கரமாக இருந்தது என்பதை குர்ஆனின் இன்னொரு வசனம் பறைசாற்றுகிறது.  அலைகள் சீறிவரும் போது அதிலிருந்து நெருப்புப் பிழம்பு வந்ததாகவும் ஒவ்வொரு நீர்த்திவலையும் கருங்குன்றுகள் போல் பூமியைத் தாக்கியதாகவும் இதனால் உயினங்கள் ஓலமிட்டு மரணவாயிலில் அடுக்கடுக்காக விழுந்ததாகவும் மலைகள் எல்லாம் எரிமலை சீற்றத்தால் வெடித்துச் சிதறுவது போல் தூள் தூளாக நொறுங்கி கடலில் கலந்ததாகவும் குர்ஆன் வர்ணனை செய்கிறது.
 குர்ஆன் பைபிள் போலவே சிலப்பதிகாரமும் இந்த மகா ஊழிக் காலத்தை

பஃறுளியாற்றுடன்
பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும்
கொடுங்கடல் கொள்ள

என்று கூறுகிறது.  அதாவது கடைச் சங்க காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தை (லெமுரியா) கடல் கொண்டபோது தற்போது இருக்கும் இமயமலையை விட பல மடங்கு பெரிதான குமரிக்கோடு என்ற மாமலையையும் அதிலிருந்து உற்பத்தியான குமரி ஆறு பஃறுளியாறு ஆகிய இரு நதிகளையும் கடல் கபளீகரம் செய்திருப்பதைத் தமிழ் பேரகராதி குமரி ஆறு என்ற தலைப்பின் கீழ் இவ்வாறு குறிப்பிடுகிறது.

இது தென்பாற் கண்ணதாகிய ஒராறு இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாடுகள் கடையூழி இறுதிக் காலத்தில் கடல் கொண்டழிந்து போயின.  அதன் வடபால் நாடு பின்னர்க் குமரிநாடு என்றும் அக்கடல் குமரிப் பௌவ மென்றும் பழைய பெயரே பெற்று வழங்கப்படுவன வாயின

  இப்படி உலகம் முழுவதும் உள்ள புராண இதிகாசங்களும் கர்ண பரம்பரை நம்பிக்கைகளும் ஜலப்பிரளயம் ஒன்று பூமியில் ஏற்பட்டு ஒரு கண்டத்தையே அழித்த விதத்தை பல கோணங்களில் வேறு வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டாலும் அவைகள் அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் கூறுகின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது.

இப்படி பிரளயத்தப் பற்றிய ஒற்றுமைக் கூற்றுகள் உள்ளது போலவே சாவு அனுபவங்களைப் பற்றியும் ஒற்றுமையான கருத்துக்கள் தான் சொல்லப்பட்டுள்ளன இத்த கூற்றுக்கள் எவற்றையும் அறிவியல் ஏற்றுக் கொள்ளாது மாறாக எள்ளிநகையாடும் என்று நமக்குத் தெரியும் ஆனால் உண்மைகள் எப்போதும் விஞ்சானத் தன்மை பெற்றதாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவே மரண அனுபவம் இப்படியும் இருக்கலாம் என நாம் நம்பலாம் இருப்பினும் இன்னும் சரியான முறையில் ஆய்வுகள் நடந்தால் பல உண்மைகளை மனிதகுலம் பெறலாம்






  • ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்


  • Contact Form

    Name

    Email *

    Message *