Store
  Store
  Store
  Store
  Store
  Store

நான் கிறுக்கன் ஆக மாட்டேன் !


  ட்ட நடு ராத்திரியில் மொட்டை மாடியில் படுத்திருந்து கருமையான வானத்தில் மின்னுகின்ற விண்மீன்களை ரசிப்பதில் உள்ள சுகத்தை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

  யாருக்கு தெரியுமோ தெரியாதோ அதைப்பற்றிய அக்கறை எனக்கில்லை.  எனக்கு தெரியும்.  அதன் சுகம் எனக்கு புரியும்.

  ஆயிரம் குழப்பங்களும் கவலைகளும் மண்டைக்குள் சுற்றி வந்தாலும் இரவு நேர வானத்தை பார்த்தவுடன் அத்தனையும் மறந்து விடும்.  அது நல்ல பழக்கமா?  அல்லது ஒரு வித மனவியாதியா?  என்பதையெல்லாம் நான் ஆராய்வது கிடையாது.   இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அம்மா சோறு ஊட்டிய காலத்திலிருந்தே இது என்னை பற்றிக் கொண்டது.


 வயசுக்கு வந்த பொண்ணு நெடு நெடுன்னு வளர்ந்து நிக்கறா.  அவளுக்கு எதாவது நல்ல காரியம் செய்யனுன்னு அக்கறையே உங்களுக்கு இல்லையா?  என்று மனைவி திட்டினாலும்,

இவன் சுத்த பைத்தியக்கார பையன் விவரம் தெரிஞ்ச நாளில் இருந்தே ஆகாசத்த பார்த்து மல்லாந்து கிடந்து கனவு காணுகிறான்.  இப்படியே போனா ஒரு நாளைக்கு சட்டையை கிழிசிட்டு மாடியிலிருந்து இறங்க போகிறான் பாரு என்று அப்பா வசவை கொட்டினாலும்,

நான் பெத்த பிள்ளை இப்படி சொரனையே இல்லாமலா இருக்கனும்.  அப்படி என்ன தான் வானத்துல அவனுக்கு மட்டும் தெரியுதோ?  யாருக்கோ வச்ச சூனியத்துல மிதிச்சதினால தான் இப்படி பேக்கு மாதிரி ஆயிட்டான் என அம்மா அர்ச்சனை செய்தாலும்,


  எங்க அப்பா ஆகாசத்த பார்த்து கனவு காணும் நேரத்திற்கு மண் வெட்டி எடுத்து தோட்டத்தில் பத்து கிணறு வெட்டியிருக்கலாம்.  தண்ணீர் பஞ்ச காலத்துல குடம் பத்து பைசாவிற்கு வித்துயிருந்தாலும் கூட நாலு வீடு கட்டியிருக்கலாம் என்று பிள்ளைகள் கிண்டலடித்தாலும்,

நீ சரியான வாத்து மடையன்டா ஊரு உலகத்துல என்ன நடக்கு, எவன் எப்படி இருக்கான் என்பதை கூட தெரிஞ்சிக்காம சாயங்காலம் ஆயிட்டா வானத்த வெறிச்சு பார்க்க ஆரம்பிச்சறே.  உன்னை கட்டி அழுவதற்காகவே உன் பொண்டாட்டிக்கு கோயில் கட்டி கும்பிடலாம் என்று நண்பர்கள் நையாண்டி பேசினாலும்,

நான் வானத்தை பார்க்கும் பழக்கத்தை விடுவதே இல்லை.  


  இத்தனை பேரும் இவனை இப்படி பேசுகிறார்கள் இவன் எந்த வேலைவெட்டியும் செய்யாமல் தெண்டத்துக்கு வாழுகிற மனிதன் போல் இருக்கிறது என்று நீங்கள் யாராவது நினைத்தால் அது முட்டாள் தனம்.  

   காரணம் படிக்கிற வயதில் பெரியதாக படிக்கவில்லை என்றாலும் சுமாராகவாது படித்தவன் நான்.  ஆண்டவன் அருளோ, என் திறமையோ, உள்ளூரில் இருக்கும் ரேஷன் கடையில் குமாஸ்தா வேலை கிடைத்து விட்டது.

  ரேஷன் கடை வேலை என்றாலே தகிடுதித்தம் செய்யாமல் இருக்க முடியாது.  சாராய கடையில் இருந்தாலும் குடிக்காதவன் மாதிரி ஒரு கிலோ சக்கரையை கூட இதுவரை வீட்டிற்கு எடுத்து வந்ததும் இல்லை, தெரிந்தவர்களுக்கு கொடுத்ததும் இல்லை.  


   அதே நேரம் சுற்றி நடக்கும் தவறுகளை மேல் அதிகாரிகளுக்கு போட்டு கொடுத்து நல்ல பெயர் வாங்கினதும் கிடையாது.  அதனால் இன்று வரையில் உத்தியோகத்தில் எதிரிகளும் இல்லை.  இடஞ்சலும் இல்லை.

அப்பா சம்பாதித்து கட்டிய ஒரு வீட்டோடு தாத்தா சம்பாதித்த சொத்துக்கள் இருப்பதினால் வருவாய்க்கும் பெரிய குறையில்லை.  விடுமுறை நாளானால் வீட்டுக்கு ஒட்டடை அடிப்பதிலிருந்து பையனுக்கு சைக்கிள் துடைத்து கொடுப்பது, அப்பாவுக்கு ஒத்தாசையாக நிலத்து வேலைகளை கவனிப்பது என்று எல்லா வேலைகளும் நன்றாகவே செய்வேன்.

 இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வேறு எந்த வேலையும் இல்லை என்றால் வீட்டில் உள்ள துணிகளை துவைத்து காயப்போட்டு மடித்து வைப்பதும் நான் தான்.


  இப்படி எல்லா வேலைகளையும் செய்யும் ஒருவன் தனக்கு பிடித்தமான ஒரு செயலை யாருக்கும் தொந்தரவு இல்லாமல் செய்தால் என்ன தவறு?

   நான் ஆகாயத்தை ரசிப்பதினால் கடல் வற்றி போய்விட்டதா? மணலில் நெருப்பு பிடித்து விட்டதா? அப்படி எதுவும் நடக்கவில்லை.

  பிறகு எதற்காக இத்தனை பேர் கிண்டலடிக்கிறார்கள்?  எனக்கு அது புரிவதில்லை.  அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெரிய ஆவலும் இல்லை.

ரேஷன் கடை செக்ரட்ரி போன மாசத்தில் ஒரு நாள் என்ன மானிக்கம் அண்ணே உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற செந்தில் நாதனுடைய பொண்ணு யாரோ ஒரு பையனோடு ஓடி விட்டாளாமே என்று கேட்டார். 



    எனக்கு அப்போது தான் செந்தில் நாதனுக்கு ஒரு பெண் இருக்கிற விஷயமே தெரியும்.  இந்த லட்சணத்தில் அந்த பெண் யாரோடு ஓடினாள்.  அவன் என்ன ஜாதி என்று எனக்கு எப்படி தெரியும்.  அதனால் அவரிடம் எனக்கு விஷயமே தெரியாது என்றேன்.

  அதற்கு அவர் அட என்ன அண்ணே நீங்க, சுத்த அசமந்தமா இருப்பீங்க போல இருக்கு என்று சொல்லி குறைபட்டு கொண்டார்.  அடுத்தவர்கள் விஷயத்தை தெரிந்து வைத்து கொண்டு அவர்களது செயல்களை விமர்சித்து வாழ்வதில் அப்படி என்ன சுகமோ?

ஆகாயம் எனக்கு கற்று தந்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று.  நான் மழை பெய்விக்கிறேன், வெய்யிலாகவும் காய்கிறேன்.  பனியை கூட சில காலம் தருகிறேன், அதற்காக சிலர் திட்டுவார்கள், பலர் பாராட்டுவார்கள், பாராட்டுக்காக மயங்குவதோ, ஏச்சுக்காக கலங்குவதோ நமது வேலையைத் தான் பாதிக்கும்.  நமது கடமையை செய்து கொண்டே போனால் யாருக்கும் பிரச்சனை இல்லை என்று அது என்னோடு பேசுவது போல் இருக்கும்.  வானம் சொல்வது நியாயம் தானே.  அவரவர் வேலையை அவரவர் கவனித்தால் சிக்கல் ஏது?


   இந்த ரகசியம் எத்தனை பேருக்கு தெரிகிறது.  இப்படி தான் இரண்டு நாட்களுக்கு முன்பு என்னோடு வேலை பார்க்கும் சிவானந்தத்தின் தம்பி எங்கோ ஒரு ஒயின் ஷாப்பில் நின்று கொண்டிருந்தானாம்.  அதை சங்கர் பார்த்து இருக்கிறான்.  பார்த்தவன் அதை அப்படியே வந்து சிவானந்தத்திடம் சொல்ல ஒரே சண்டை. 

 அந்த ஒயின் ஷாப்பில் வேலை செய்பவன் 500 ரூபாய் பணம் வாங்கி ஆறுமாசமாகியும் தரலை.  அத வாங்கிட்டு வரச்சொல்லி தான் என் தம்பியை அனுப்பினேன்.  இவன் என்னடான்னா அவன் குடித்து ஆட்டம் போட்டதாக கதை கட்டி விடுவான் போல இருக்கு.  இவன் பெரிய யோக்கியனா?  இவன் குடும்பத்தில் உள்ளவனனெல்லாம் தப்பே செய்யாத உத்தமர்களா?  என்று பிலு பிலுவென்று பிடித்து கொண்டான்.  இருவரும் இப்போது பேசுவது கிடையாது.

மற்றவர்கள் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டால் வம்பு தும்புகள் தான் வந்து சேரும்.  சின்ன வயசில் இருந்தே சண்டை, சச்சரவுகள், பிரச்சனைகள் என்றாலே ஒதுங்கி போகும் சுபாவம் எனக்கு வந்துவிட்டது.  அந்த சுபாவம் தான் வானத்தோடு உறவாடுகின்ற மனோநிலையை உருவாக்கியது. 


  கல்யாணமான புதிதில் மனைவியிடம் கேட்டேன். உனக்கு வானம் பிடிக்குமா?  அதிலுள்ள நிலா, நட்சத்திரம் பிடிக்குமா?  என்று கேட்டேன்.  ஒரு விசித்திரமான விலங்கை பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்த மனைவி இன்று வரை அந்த அபிப்பிராயத்தை மாற்றி கொள்ளவில்லை.

நம்ம பொண்ணு உங்க அக்கா மகனை விரும்புகிறாள் போலிருக்கு அக்காவிடம் பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று அவள் சொன்ன போது நீ விருப்பப்படுவது போல அக்காவும் விருப்பப்பட்டால் பரவாயில்லை.  ஒரு வேளை அக்காவுக்கு விருப்பம் இல்லையென்றால் வீணான மனஸ்தாபம் தான் வரும் என்றேன்.

  முகத்தை தோள்பட்டையில் இடித்து கொண்டு அவள் இதை உங்ககிட்ட சொன்னதுக்கு மரம் மட்டைகிட்ட சொல்லியிருக்கலாம்.  எதாவது பிரயோஜனமானா இருக்கும் என்றவள் எப்படியோ அக்காவிடம் பேசி நிச்சயதார்த்தம் வரை போய்விட்டாள்.


  அப்போது கூட ஆகாயம் தான் சபாஷ் சொன்னது.  பார்த்தாயா நீ சொல்லிருந்தால், எப்படியாவது சொதப்பி இருப்பேன். உன் வேலையை மட்டும் நீ பார்த்து கொண்டதினால நடக்க வேண்டியது நடந்தது.  நானும் உன்னை மாதிரி தான்.  இடிக்க வேண்டுமென்றால் இடிப்பேன்.  மின்ன வேண்டுமென்றால் மின்னுவேன்.  குளம் குட்டையும் நிரம்பும், எவனாவது சாவதாக இருந்தாலும் சாவான்.  இரண்டுக்கும் நான் பொறுப்பல்ல.

இதையெல்லாம் ஏன் சொல்ல வருகிறேன் என்றால் நான் இருப்பது போல் எல்லோரும் இருங்கள்.  எதிலும் பட்டு கொள்ளாதீர்கள் என்பதற்காக அல்ல.

  என் வேலை சம்பாதிப்பது வீட்டுக்கு தேவையான வேலைகளை செய்வது அவ்வளவு தான்.  வீட்டு வேலையை கவனிப்பது.  குடும்பத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது யாராவது ஒருவர் தான் செய்ய வேண்டும்.  ஒரு இடத்தில் இரண்டு உடல்கள் வேலை செய்யலாம்.  இரண்டு அறிவு வேலை செய்ய கூடாது.  செய்தால் விபரீதங்கள் தான் ஏற்படும்.


  எல்லோரும் என்னை அசமந்தம் அப்பிராணி என்று சொல்லுகிறார்களே என ஒரு நாள் நானும் மற்றவர்கள் செய்யும் வேலையை கவனித்து பார்க்க ஆரம்பித்தேன்.

 அன்று ரேஷன் கடையில் மண்ணென்னய் போட்டார்கள்.  நிறைய கூட்டம் எல்லோருக்கும் அளந்து ஊத்தியவர் ஒரு லிட்டரில் நூறு மில்லியாவது குறைத்து தான் ஊற்றினார்.  இப்படி செய்வது சரிதானா என்று சேல்ஸ்மேனிடம் கேட்டேன்.  பாரல் வரும் போதே பத்து லிட்டர் குறைவாக தான் வரும்.  அந்த கணக்கை ஈடு செய்ய இப்படி செய்வதை தவிர வேறு வழியில்லை என்று சொன்னார்.

  ரேஷன் அட்டையில் கோதுமை மட்டுமே வாங்கியவனுக்கு அரிசியும் வாங்கியதாக வரவு வைக்கிறீர்களே இது தப்பில்லையா?  என்று கேட்டேன்.  அதற்கு அவர் பள்ளிக்கூடத்துல போய் தூங்குகிற வாத்தியாருக்கு 25,000 சம்பளம்.  ரிட்டையர்டு ஆகி வீட்டில் போய் தூங்கினாலும் கூட பென்ஷன் உண்டு.  நம்ம வாங்குற சம்பளம் வாய்க்கும் கைக்குமே எட்டாது.  குடும்பத்த நடத்தும்னா இப்படி எதாவது பண்ணினால் தான் உண்டு.



  என்ற அவரின் பதில் என்னை பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.  மண்ணென்னய் குறைப்பது யார்?  ஏன் குறைக்கிறார்கள், ஒவ்வொரு லிட்டருக்கும் 100-மில்லி என்றால் ஒரு அட்டைக்கு அரை லிட்டர் குறைந்து விடுகிறதே?  வாங்குபவன் அந்த அரை லிட்டருக்கும் சேர்த்து தானே காசு கொடுக்கிறான்.  அரசாங்க கடையிலேயே மக்கள் கொள்ளையடிக்கப்பட்டால் தனியார்கள் எந்தளவு கொள்ளையடிப்பார்கள்.  நினைக்கும் போதே தலை சுற்றியது.

நியாயப்படி கொடுக்க வேண்டிய அரிசியை கொடுக்காமல் வெளி மார்க்கெட்டில் கொடுக்கும் அரிசி மில்லுக்கு சென்று பளபளப்பாகி கடைக்கு வரும் போது பலமடங்கு விலையில் மீண்டும் மக்களுக்காக விற்கப்படுகிறது.  ஆக மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்.

   ஒரு சின்ன ஊருக்குள் ஒரு சிறிய அலுவலகத்திலேயே இத்தனை மோசடிகள் என்றால் பரந்து விரிந்த உலகத்தில் எவ்வளவு தில்லு முல்லு நடக்கும்.  இதை நினைத்து பார்க்கும் பொழுதே இரவு உறக்கம் போய்விட்டது.


  ஒரு நாள் உலகத்தை கவனித்ததற்கே உறக்கம் போய்விட்டது என்றால் ஒவ்வொரு நாளையும் கவனித்து கொண்டு இருக்கின்ற மனிதர்களுக்கு எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது.  என்னை  அசடன், அசமந்தன் என்று எப்படி வேண்டுமென்றாலும் பேசட்டும், அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை.

  இவைகளையெல்லாம் கவனித்து மற்றவர்களிடம் பாராட்டை பெற்று என் அமைதியை துலைக்க நான் தயாரில்லை.  என் ஆயுட்காலம் மிக குறைவு தான்.  அந்த குறைந்த காலத்தில் பைத்தியம் பிடிக்காமல் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் நானும் என் ஆகாயமும் பிரியாமல் இருக்க வேண்டும்.

Contact Form

Name

Email *

Message *