Store
  Store
  Store
  Store
  Store
  Store

கலைஞர் வழியில் நடக்கும் ஜெயலலிதா...!


    சின்ன வயது முதற்கொண்டே ஒரு ஆசை எனக்குண்டு எங்கங்கோ உள்ள தொகுதிகளில் இடைதேர்தல் வருகிறதே நமது தொகுதியில் இடைதேர்தல் வராதா? என்ற ஆசை இன்றுவரை நிறைவேறவே இல்லை என்னடா இந்த மனிதன் தமிழ்நாட்டில் நல்லாட்சி வரவேண்டும் தலைவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று ஆசைபடுவதை விட்டுவிட்டு இடைதேர்தலுக்காக ஆசைபடுகிறானே என்று வியப்பாகவும் சிலருக்கு இருக்க கூடும்

தொகுதி முழுவதும் சாலைகள் சரியில்லை விளக்கு கம்பங்களில் வெளிச்சமில்லை சாக்கடை நீர் தேங்கியே கிடைக்கிறது கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை ரேசன்கடைகளில் அரிசி இல்லை சீனி இல்லை அரசாங்க சலுகைகளை கேட்டாலும் தருவதற்கு சரியான நிர்வாகமில்லை அதிகாரிகளோ கடவுள் மாதிரி கண்களிலே படுவதே இல்லை காசு இல்லாமல் அரசு காரியங்கள் எதுவும் நடப்பதில்லை இது தமிழக மக்களின் தினசரி தலையெழுத்து


இந்த அன்றாட மண்டை இடையிலிருந்து சில நாட்களாவது விடுதலை பெற்று வாழ்வதற்கு சராசரி மக்கள் ஆசைபடுகிறார்கள் அந்த ஆசை நிறைவேற அவர்கள் கண்களில் தெரிவது இடைதேர்தல் என்ற ஒரே ஒரு அருமருந்து தான் அந்த மருந்து யாருக்கோ எப்போதோ அத்தி பூர்த்தார் போல கிடைக்கிறது கிடைக்காதவர்கள் என்னை போல் காலகாலமாக ஏங்கி கொண்டு இருக்கவேண்டியது தான் அதை தவிர நாடு உயரவேண்டும் நல்லவர்கள் ஆளவேண்டும் என்று ஆசைபடுவது குதிரைக்கு கொம்புமுளைக்கும் கதையென்று எல்லோருக்கும் தெரிந்த சங்கதி எனக்கும் தெரியும் என்பதனால் அந்த விபரீத ஆசை எனக்கு வரவில்லை

இப்போது சங்கரன்கோவில் மக்களுக்கு பம்பர் பரிசு விழுந்திருக்கிறது அவர்கள் கேட்காமலே எல்லாம் கிடைத்தது கேட்டதும் கிடைத்தது ஒரு நல்ல கனவு சீக்கிரம் கலைந்துவிடுவது போல இதோ இடைதேர்தல் முடிவு வந்து பாவம் மக்களின் கனவு கலைந்தும் போய்விட்டது இனி அவர்களை பற்றி யார் கவலைப்பட போகிறார் யாரிடம் கேட்டால் தான் இனி அவர்கள் குறை தீரும் நம்மை போல அவர்களும் வானத்தை பார்த்து வாழவேண்டியது தான்


இடைதேர்தல் வந்துவிட்டால் அந்த பகுதி மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவது இன்று நேற்று நடக்கும் வழக்கமல்ல நாடு விடுதலை அடைந்த காலமுதல் நடந்துவருகிறது எனலாம் ஆனால் அப்போதல்லாம் சலுகைகள் என்றால் சாலைகளை சீர்படுத்துவது குடிநீர் வசதி செய்து தருவது மருத்துவ வசதிகளை அதிகரிப்பது என்ற மட்டில் இருந்தது அன்றாடம் செய்யவேண்டிய பணிகளை தேர்தல் காலத்தில் அதிகப்படியாக செய்வது சட்டப்படி குற்றமென்றாலும் அந்த குற்றம் வரம்பு மீறியது தர்மம் மீறியது என்று சொல்லமுடியாது உலகில் ஜனநாயகம் உள்ள எல்லா நாட்டிலும் நடக்க கூடிய சங்கதிதான்

ஆனால் காலம் செல்ல செல்ல மனிதர்களின் மூளை மிகவும் குறுக்கு வழியில் செல்ல துவங்கிவிட்டது சாலை போடுவதனால் தண்ணீர் வசதி தருவதனால் பத்து பேரை போல எனக்கும் லாபம் ஆனால் எனக்கு மட்டுமே தனிப்பட்ட லாபம் என்ன இருக்கிறது சாலை நன்றாக இருக்கிறது என்பதனால் நான் அங்கே சென்று படுக்க முடியுமா? குடிதண்ணீர் கிடைக்கிறது என்றால் அதை நான் குடித்தால் என்ன சுகம் இருக்கிறது வேறு எதாவது தண்ணீர் தந்தால் நன்றாக இருக்கும் என்று மக்களை சிந்திக்கும்படி சில சுயநலமிகள் தூண்டிவிட்டதனால் இன்று விதி மீறல் ஒன்று மட்டுமே நிரந்தரமென்ற அடிப்படையில் இடைத்தேர்தல்கள் நடைபெற ஆரம்பித்து விட்டன


ஓட்டுக்கு காசு கொடுப்பது சாராயம் கொடுப்பது வேறு பல சகாயங்களை ஏற்படுத்தி கொடுப்பது இப்போது எழுதப்படாத வழக்காமாகி விட்டது சரியாக சொல்வது என்றால் கடந்த கலைஞர் ஆட்சியில் திருமங்கலம் தொகுதி இடைதேர்தலில் இருந்து ஆளும் கட்சியாக இருந்தாலும் அதிகப்படியான பணம் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைமை வந்து விட்டது

சங்கரன் கோவில் இடைதேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு போட்டியாக நின்ற அனைவருமே டெபாசிட் தொகையை இழக்கும் படி வந்திருக்கிறது இது இதுவரை ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஆட்சியில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற பல நல்ல விஷயங்களுக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று ஆளும் கட்சியை தவிர வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் ஏன் அவர்களே கூட மனசாட்சிபடி அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்

தேர்தல் தேதி அறிவிக்கபடுவதற்கு முன்பே ஆளும்கட்சி களம் இறங்கிவிட்டது அரசாங்க சலுகைகள் இலவச திட்டங்கள் அனைத்தையும் போட்டிபோட்டுக்கொண்டு நடைமுறை படுத்தியும் விட்டது கோட்டையில் அமைச்சர்களுக்கு உருப்படியான வேலைகள் எதுவும் இல்லை என்று முப்பதுக்கு மேல்பட்ட அமைச்சர்கள் சங்கரன் கோவிலுக்கு அனுப்பட்டு விட்டார்கள் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் மக்களுக்கு பரிசு கொடுக்கும் உற்சவம் நடந்து கொண்டே இருந்தது தெளிவாக சொல்வது என்றால் திருமங்கலத்தில் திமுக ஆரவாரமாக செய்த விதி மீறல்களை சங்கரன் கோவிலில் அதிமுக அடக்க ஒடுக்கமாக செய்து முறைகேடுகள் செய்வதில் நாங்களும் கலைஞரை போல கைதேர்ந்தவர்கள் தான் என்பதை சொல்லாமல் சொன்னார்கள்

ஜனநாயக விதி முறைப்படி இந்த தேர்தல் நடந்திருந்தால் கண்டிப்பாக ஆளும் கட்சி வெற்றிதான் பெற்றிருக்கும் ஆனால் அந்த வெற்றி இத்தகைய அசுரத்தனமான வெற்றியாக இருந்திராது காரணம் திமுகவின் நிஜமான கொடூர முகத்தை இன்னும் மக்கள் மறக்கவில்லை அவர்கள் காலத்தில் நடைபெற்ற அராஜகங்களை அவ்வளவு விரைவில் நினைவில் இருந்து அகற்றிவிட முடியாது அதே போல தேமுதிகவின் பக்குவமில்லாத அரசியல் அணுகுமுறையை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டார்கள் வைக்கோவின் சொந்த பகுதியாக அது இருந்தாலும் அங்கே அவர் கட்சிக்கு அவ்வளவாக அனுதாபிகள் கிடையாது ஆகவே வேறு வழியின்றி ஆளும் கட்சிக்கே ஒட்டுப்போடவேண்டிய சூழலில் தான் மக்கள் இருந்தார்கள்

ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு பயன்தரத்தக்க செயல்கள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை தேவையற்ற விவகாரங்களில் அதாவது சமசீர் கல்வி அண்ணா நூலகம் போன்றவற்றை மாற்றி அமைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டதை தவிர நாட்டுக்கு வளம் சேர்க்கும் எந்த செயலும் நடைபெறவில்லை திமுக்காவின் முன்னாளைய அமைச்சர்கள் செய்த சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொள்ளுதல் துணிச்சலாக சசிகலாவை வெளியேற்றுதல் இவைகளை தவிர வேறு எதையும் ஜெயலலிதா சாதித்ததாக சொல்லிவிட முடியாது இவைகள் கூட அம்மையாரின் தனிப்பட்ட ஆசைகளே தவிர வேறொன்றும் இல்லை

மின்சார பாதிப்பால் தமிழக தொழில்வளங்கள் எல்லாமே முடங்க கூடிய அபாய நிலையில் இறக்கிறது இப்பிரச்னையை சீர்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்று இதுவரை மக்களுக்கு தெரியவில்லை ஆனால் இல்லாத மின்சாரத்திற்கு கூடுதலாக கட்டணம் செலுத்தவேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள் ஆற்று மணல் முந்தய ஆட்சி போலவே கன ஜோராக சூறையாடப்பட்டு ஆறுகள் மலடுகளாகி தமிழக மக்கள் நிரந்தர குடிநீர் பிரச்சனைக்கு மிக வேகமாக தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள் பேருந்து கட்டணம் பால்விலை எல்லாமே வழக்கத்தை விட அதிகமாக உயர்ந்துவிட்டது


மக்கள் படும் அவஸ்தையை கண்டு கொஞ்சம் கூட கவலைபடாமல் கருணாநிதி எப்படி ஆட்சி நடத்தினாரோ அதே போன்ற ஆட்சி தான் இப்போதும் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது இன்னும் சொல்லபோனால் கருணாநிதியை விட ஜெயலலிதா மக்களை ஏமாற்றுவதில் ஒருபடி மேலே நிற்கிறார் என்று சொல்லவேண்டும் கடந்த பஞ்சாயத்து தேர்தலில் கூடங்குளம் மக்களுக்கு நான் உங்கள் பக்கம் இருக்கிறேன் உங்களில் ஒருத்தியாக இருக்கிறேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு இப்போது தனது வாக்குறுதிக்கு தானே முரணாக நடந்து வருகிறார்

அணுஉலை தமிழ்நாட்டுக்கு தேவை அவற்றால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் நம்பினால் அதை முன்பே சொல்லியிருக்க வேண்டும் அப்போது மக்களின் உணர்ச்சியை தூண்டிவிடுவது போல பேசிவிட்டு இப்போது முற்றிலும் மாறுபட்டு நடப்பது நாகரிகமான செயல் அல்ல அணுவுலை தேவையா? தேவையில்லையா? என்ற விவாதம் இங்கே அவசியமற்றது அதற்கு அம்மையார் கொடுத்த வாக்குறுதி சரிதான அதை இப்போது மாற்றி கொண்டது நியாயம் தானா என்பது தான் நமது கேள்வி

கலைஞரை போலவே முறைகேடுகளில் ஈடுபடுவது தேர்தல் தில்லுமுல்லுகளை நடத்துவது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவது போன்றவைகளை ஜெயலலிதாவும் செய்தால் தமிழக முதல்வராக வயதான காலத்தில் கலைஞரே நீடித்திருக்கலாமே இவருக்கு ஏன் ஒட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் இதை அம்மையார் உணர்ந்தால் அவருக்கு நல்லது இல்லையென்றால்....!

Contact Form

Name

Email *

Message *