Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆவியை வணங்க மதம் தடை இல்லை

  குடும்பங்களில் இறந்து போனவர்களை நினைத்து வழிபடுவது என்பது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிகழ்வாகும்.  இந்த வழிபாட்டுக்குப் பின் இறந்து போனவர்கள் தங்கள் குடும்பத்தினர்க்கு நல்லாசிகளையும் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறவும் வாழ்க்கைச் சிக்கல்களை சுமூகமாக தீர்த்துவைக்கவும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை பல்லாண்டுகளாகவே மக்களின் மனதில் வேறுன்றி உள்ளது.  எந்த ஒரு வழிபாடும் சொந்தத் தேவைகளை மையமாக வைத்து எழுந்தவைகளாகத்தான் இருக்கும்.  ஆனால் முன்னோர் வழிபாடு என்ற ஆவி வழிபாடு சொந்தத் தேவைகளையும் தாண்டி இறந்து போன மூதாதையர்கள் மேலுலகில் அமைதியுடனும் திருப்தியுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கிலும் நடைமுறையில் இருக்கிறது.

தமிழகத்தின் தென்பகுதியில் கன்னிக்குக் கொடுத்தல் என்ற வழிபாட்டுமுறை அநேகமாக எல்லாக் குடும்பங்களிலும் உள்ளது.  தங்கள் குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இறந்த போன கன்னிப்பெண்களையோ அல்லது பெண் குழந்தைகளையோ தெய்வமாகக் கருதி அவர்களுக்குப் பிடித்தமான சேலை, பட்டுப்பாவாடை, சட்டை, வளையல்கள், இன்னும் சில மங்கலப் பொருட்களைப் படைப்பார்கள்.  இந்தப் படையலில் அரிசி மாவும் பனை வெல்லமும் கலந்து செய்யப்படும் ஒருவிதமான தின்பண்டம் முக்கியப் பங்கு வகிக்கும்.  தூர தூரத்தில் உள்ள குடும்ப  அங்கத்தினர்கள் அனைவரும அந்த நாளில் ஒன்று கூடி அந்த வழிபாட்டை நிகழ்த்துவார்கள்.  இந்த முறை இன்னும் தென்பகுதி மக்களிடையே எந்த மாற்றமும் ஏற்படாமல் நடைமுறையில் இருந்து வருகிறது.  இதே போன்ற வழிபாட்டுமுறை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜூலு இன மக்களிடையே இன்றும் நடைமுறையில் உள்ளது.  ஆதி ஆப்பிரிக்கா தமிழத்தோடு ஒரு காலத்தில் இணைந்து இருந்ததை இந்த வழிபாட்டின் மூலமாகவும் வேறு சில சடங்குகளின் மூலமாகவும் நாம் அறியலாம்.

உலகப் பண்பாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆவி வழிபாட்டு முறை பேய்களின் மீது உள்ள அச்சத்தின் காரணமாகவே ஏற்பட்டது என்று கருதுகிறார்கள்.  ஆத்மாவினைப் பற்றிய நம்பிக்கை ஆவி வழிபாடு தோன்றுவதற்குக் காரணங்களாக இருக்கக் கூடும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.  எது எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் சாவு எந்த வகையில் அமைந்து இருக்குமோ அந்த வகையிலே வழிபாட்டுத் தன்மையும் அமைந்து இருக்கிறது.

ஆவி வழிபாட்டின் மூலக்கூறை பற்றி சொல்கிறார்கள் உலக சமுதாய பண்பாடுகளில் ஆழமாக வேறுன்றி இருப்பது மரணத்தைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில்தான்.  அதாவது உடலிலிருந்து உயிர் பிரிவதைச் சாதாரண மக்கள் மரணமாகக் கருதுவது இல்லை.  அந்த மரணம் எந்தச் சூழலில் எப்படி நிகழ்கிறது என்பதைப் பொறுத்து நல்லசாவு, கெட்டசாவு என்று வகைப்படுத்துகிறார்கள்.  அந்த வகைப்படுத்துதலில் ஒரு மனிதன் தன்னுடைய எல்லாவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றிவிட்டு ஆண்டு அனுபவித்து வாழ்ந்து சலித்து தன்னுடைய மக்களுக்கு மணம் முடித்து பேரன் பேத்தி எடுத்து முதுமை அடைந்து இயற்கையான முறையில் மரத்திலிருந்து சருகு உதிர்வது போல் மரணம் ஏற்பட்டால் அது நல்ல சாவு என்றும், கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டோ கொலை செய்யப்பட்டோ விபத்துக்களில் உயிர் நீத்தோ, பேரிடர்களில் அகப்பட்டு துள்ளத் துடிக்க ஆசைகள் நிறைவேறாமல் மனிதக் கடமைகள் எதையும் நிறைவேற்ற முடியாமல் இறந்தால் அதைக் கெட்ட சாவு என்றும் மக்கள் கருதுகிறார்கள்.

இது சரியா என்பது வேறு விஷயம்.  நல்லாசாவில் உயிர்விட்ட ஆத்மாக்களை வழிபட்டால் தங்களுக்கு நல்லது ஏற்படும் என்றும் அபச்சாவு அடைந்த ஆவிகளை வழிபட்டால் அந்த ஆவிகள் தங்களுக்குக் நன்மை விளைவிக்காமல் ஒதுங்கி நிற்கும் என்றும் உலகம் முழுவதும் நம்பிக்கை உள்ளது. முக்கியமான உடல் சார்ந்த நோக்கில் மரணத்தை நோக்கும் போது அதன் பொருள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிடும்.  எல்லாவிதமான மிக முக்கியமான உடல் செயல்பாடுகள் நின்று போவதே மரணம் என்ற முடிவிற்கு நாம் வந்து விடலாம்.  இறப்புக்குப் பிறகும் வாழ்ககை உண்டு என்ற சித்தாந்தத்தை நம்பும் போதுதான் பல சிக்கல்கள் எழுகிறது.

மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கிருஸ்துவ சமயத்தில் இல்லை.  ஆனால் இறப்புக்குப் பின்னால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி கிருஸ்துவ சமயம் சிந்திக்கிறது.  அதனால் மூன்று விதமான மரணங்களை கிருஸ்துவ சமயம் நம்பத்தலைப்படுகிறது.  ஒன்று ஆன்மீகச் சாவு.  இது கடவுளிடமிருந்து மனிதனைப் பிரிப்பது போலாகும் என்றும், இரண்டாவது உடலின் சாவு உடலியல் வாழ்வில் அனைத்து செயல்களும் நிறுத்தப்படும் என்றும், மூன்றாவது நித்ய சாவு.  இது இறைவனிடமே மனுஷ ஆத்மாக்களை நிரந்தரமாகத் தங்க வைப்பது என்றும் அச்சமயம் கூறுகிறது.  ஏறக்குறைய இதேபோன்றே கருத்துகளைத்தான் இஸ்லாம் சமயமும் ஜப்பானிய ஹின்டோ சமயமும் கூறுகிறது.

உடலில் சாவு நித்யசாவு என்று கிருஸ்துவம் கூறும் இரண்டு சாவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் ஆன்மீகச் சாவு என்று அவர்கள் கூறுவது எதன் அடிப்படையில் என்று விளங்கவில்லை.  ஒரு வேளை கிருஸ்துவர் அல்லாதவர்களின் மரணத்தில் ஆன்மீகம் செத்து விடுகிறது என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.  ஹின்டோ மதத்தில் மரணத்தைப் பற்றிய சித்தாந்தத்தில் பெரும் குழப்பம் எதுவும் இல்லை.  இந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதாவது அரச வம்சத்தைச் சேர்நதவர்கள் மட்டுமே முழுமுதற் கடவுளான சூரியனைச் சென்றடைவார்கள்.  மற்ற சாதாரண பொது மக்கள் மரணத்திற்குப் பிறகு எந்த நிலையிலும் கடவுளை அடைய முடியாது என்று ஒளிவு மறைவு இல்லாமல் பளிச்சென்று கூறிவிடுகிறார்கள்.

டிரோவியாண்ட் தீவு மக்கள் தங்களது சமய நம்பிக்கையின் படி இறந்தவர்கள் வாழும் இடத்தைப் பிரித்துப் பார்க்கிறார்கள்.  அந்தப் பிரிவுகளின் அடிப்படையிலேயே வழிபாட்டு முறைகளைத் தங்களது சமூகப் பண்பாட்டின் வழக்கப்படி ஏற்படுத்துகிறார்கள்.  உதாரணமாக போரில் கொல்லப்பட்டோரும் தற்கொலை செய்து கொண்டோரும் நீரில் மூழ்கி இறப்போரும் நெருப்பில் அகப்பட்டு சாவோரும் மிகப் பெரும் பாதிப்புடைய இடத்தில் வசிப்பதாகக் கருதுகிறார்கள்.

  விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டோர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டோர் பில்லி சூன்யம் மற்றும் பேய்களினால் செத்தவர்கள் இரண்டாம் நிலை உயரிய ஆவிகளாகக் கருதப்படுகிறார்கள்.

  இயற்கையாக முதுமை எய்தி செத்தவர்கள் அல்லது நோய்வாய்ப் பட்டு இறந்தவர்கள் கடைநிலை ஆத்மாக்களாகக் கருதபடுதிறார்கள்.

  இயற்கை மரணத்தை அவமரணமாக இத்தீவு மக்கள் கருதுவது தொல் பழங்காலத் தமிழகத்தில் சாதாரணமாக இறந்த உடல்களை வாளால் துண்டித்து யுத்தத்தில் இறந்தவர்களாகக் கருதி அடக்கம் செய்ததற்கு ஒப்பானதாகும்.  காரணம் இறைவன் கொடுத்த உயிர் தானாகப் போகக் கூடாது.  ஏதோ ஒரு காரியத்தின் அடிப்படையில் மரணம் நேர்ந்தால்தான் உயிர்கள் மேலுலகில் இன்புற்று வாழ முடியும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் நிலவி இருப்பதே காரணமாகும்.

  வன்கொடுமை சாக்காட்டை ஒருசாரார் மங்களச் சாவு எனக் கருதுவது போல் துறவு பெற்று சாவதே சிறந்தச் சாவு என்றும் சில மக்கள் நம்புகிறார்கள்.  இதற்கு உதாரணமாக இந்திய மார்வாரி இன மக்கள் உயிர் பிரிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சன்னியாச தீட்சை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பதைக் கூறலாம்.

தற்கொலை செய்து கொள்வதாலோ கொலை செய்ய படுவதாலோ யுத்தத்தில் சாவதாலோ ஆத்மாக்கள் மேலுலகில் சிறப்பான நிலையை அடைகிறார்கள் என்ற நம்பிக்கை எஸ்கிமோ  மக்களிடையில் பரவலாகக் காணப்படுகிறது.  இதனாலேயே எஸ்கிமோ மக்களில் முதுமைச் சாவு என்பது அவ்வளவாக இல்லாததற்கு இதுவே காரணமாகும்.

 இந்தோனேஷியா மக்களிடத்தில் மரணத்தைப் பற்றிய விசித்திரமான கோட்பாடுகள் உள்ளன.  காலத்திற்கு முந்தி இறப்பதும் விதிவிலக்கான முறையில் இறப்பதும் இறந்தவர்களுக்கு உயரிய அந்தஸ்த்தைக் கொடுப்பதாகக் கருதப்படுகிறது.  ஒரு மனிதன் வாழ்ந்த காலத்தில் பிறர்ருடைய நம்பிக்கைக்குரிய வகையில் இருந்திருப்பானானால் அவனுடைய சாவுக்குப் பின்னர் அவன் அச்சத்திற்குரியவனாகிறான்.  இந்த முரண்பாடு இந்தோனிஷியர்களுக்கு இடையில் மூன்று வகையாக விளக்கப்படுகிறது.

1.  வழக்கமான சடங்குகளுக்கு மாறாக ஈமச் சடங்குகளும் புதைக்கும் இடமும் அச்சத்திற்குரிய மனிதனின் உடலுக்குத் தரப்படுகிறது.  அதாவது சவப்பெட்டி இன்றியோ அல்லது ஏனையோரைப் புதைத்த இடங்களில் இருந்து தள்ளி தனித்தன்மையான சடங்குகளோடு இத்தகையவர்களுக்குக் கடைசி கிரியை செய்யப்படுதிறது.   அல்லது அவர்களைப் புதைக்காமலே விட்டுவிடுகிறார்கள்.  அப்படி இறந்தவன் அந்நியனாக இருந்தால் நிச்சயமாக அவன் உடல் எந்த சடங்குகளும் இன்றி காடுகளில் அப்படியே விடப்பட்டு விடும்.

2.  கெட்டசாவு அடைந்தவன் அதாவது பயன் இல்லாத மரணத்தை அடைந்தவன் இறந்தவர்களின் உலகத்தை அடைய முடியாமல் பாதி வழியிலேயே தவித்துக் கிடப்பதாகக் கருதப்படுகிறான் அல்லது ஆவி குழுக்களில் சேர முடியாமல் தனிமையில் கிடந்து உழல்பவனாகவும் கருதப்படுகிறான்.

3.  இப்படி மேலுலகை அடையாதவன் தனிமையில் கிடப்பவனை அடிக்கடி உயிர் உள்ள மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து தீங்கு விளைவிப்பதாக நம்பப்படுகிறது.

இந்தோனேஷிய மக்களிடையே ஆவிகளைப் பற்றிய நம்பிக்கை வேறு ஒரு கோணத்திலும் இருக்கிறது.  வழிபாட்டுக்குரிய ஆவிகள் அச்சப்படுத்தும் ஆவிகள் என்று இருவகை பிரிவுகளை ஆவிகளிடத்தில் ஏற்படுத்தி உள்ள அம்மக்கள் இப்படி வகைப்படுத்துவதற்கு இறப்புச் சூழ்நிலையை எல்லா நாட்டு மக்களைப் போலவே காரணிகளாகக் கொள்கிறார்கள்.

  குழந்தைப் பேற்றின் போது இறந்த பெண்களும் இறந்து பிறந்த சிசுக்களும் வளர்ச்சி அடையாது பிறந்த குழந்தைகளும்  இறக்கும் படை வீரர்களும் விபத்தில் இறந்தோரும் தொற்று நோயின் விளைவால் மரித்தவர்களும் தூக்கில் இடப்பட்டவர்களும் ஆள் அடையாளம் தெரியாது காலமானவர்களும் அச்ச மூட்டும் ஆவிகளாக அலைந்து திரிந்து மக்களுக்கு நோய்களையும் தோல்விகளையும் மனப் பாதிப்புகளையும் தருவதாக இந்தோனேஷிய மக்களில் ஒரு பிரிவினரும் கருதுகிறார்கள்.

   இப்படிப்பட்ட ஆவிகளைத் திருப்தியுறச் செய்யவும் சாந்திப் படுத்தவும் பல விநோத வழிபாடுகளை நடத்துகிறார்கள். தென்னங் குருத்திற்குள் இருக்கும் உருண்டைப் புழுக்களை எடுத்து வளர்ந்த நாய்களின் வாய்களுக்குள் வைத்துக் கட்டி அந்த நாய்களை இப்படிப்பட்ட ஆவிகளுக்குப் பலி கொடுத்தால் நாயின் ரத்தத்தை ஆவிகள் அருந்தி அமைதியடையும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

    கொரிய நாட்டு மக்களிடத்தில் ஷாமன்ய என்ற ஒரு மந்திர மதப்பிரிவு உள்ளது.  இந்த மதப்பிரிவு முழுக்க முழுக்க ஆவிகளையும் குட்டிச்சாத்தான் மோகினிகள் ரத்தக் காட்டேரி போன்ற அதீத சக்திகளை மையமாக வைத்தே ஷாமன்ய மந்திர மதம் இயங்குகிறது.  இதில் இறந்தவர்களைப் பற்றி கூறப்பட்டு இருக்கும் கருத்துக்கள் ஆவி ஆய்வலர்களுக்கு கணிசமான அளவு ஆர்வத்தை ஊட்டக் கூடியதாக இருக்கிறது.

  இதில் நல்லமுறையில் இருக்கும் ஆவிகளை வைத்து அறுவை சிகிச்சைகள் புதிய விஞ்ஞானக் கருவிகள் கண்டு பிடித்தால் சாதாரண மனிதனையும் அசாதாரண நிலைக்குக் கொண்டு வருதல் போன்ற செயற்கரிய செயல்களை நிகழ்த்த முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

  அதே நேரம் முறைதவறி மரணம் அடைந்த தீய ஆவிகளை வைத்து புதிய நோய்களை உருவாக்குதல் மனிதர்களைப் பைத்தியம் பிடிக்கச் செய்தல் திருட்டு வேலை செய்தல் பொருட்களைக் கடத்துதல் போன்றவைகளைச் செய்யலாம் என்று கருதுகிறார்கள்.  நம் நாட்டிலும் வலுவான ஆவிகளான எட்சினிகளை வைத்து பொருட்களை இடம் மாற்றிக் கொண்டு வரலாம்.  அதாவது நம்மிடம் இல்லாதவற்றை இருப்பவர்களிடமிருந்து அபகரிக்கலாம் என்று மலையாள மாந்தரீக சாஸ்திரம் கூறுவதும் கொரிய நாட்டு ஷாமன்ய மந்திரப் பிரிவு கூறுவதும் ஒப்பு நோக்கத்தக்கது.

   நல்ல ஆவிகள் தீய ஆவிகள்  ஆகிய இரண்டுக்குமே கொரிய நாட்டு மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.  இந்த வழிபாடு செய்வதுமே அவர்களின் சுய தேவைகளுக்குத்தான் என்பது குறப்பிடத்தக்கது. ஆவிகளை வசப்படுத்தி சில காரியங்களை நாம் செய்து கொள்ள முடியுமே அல்லாது ஆவிகளின் மேம்பாட்டிற்காக நாம் எதுவும் செய்யத் தேவை இல்லை என்று கொரிய நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.

    தென்னிந்தியா, இந்தோனேஷியா, கொரியா  போன்ற நாடுகளில் சாவு பற்றிய கருத்தாக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமைகள் காணப்படுகிறது.  இந்த ஒற்றமைகள் எந்த வகையில் அமைந்திருக்கிறது என்பதை சங்க காலத் தமிழர்களின் வழிபாட்டு முறையை சற்று ஆழந்து பார்த்தோம் என்றால் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

    சங்ககாலத் தமிழகத்தின் எல்லைகள் அல்லது உள்கட்டமைப்புகள் திணைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.  ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு கடவுள் வழிபாடு இருந்தது.  நமக்கு தெரியும்

    மாயோன் மேய காடுறை உலகமும்   
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்


  என்ற பாடல் மூலம் தொல்காப்பியம் அழகிய முறையில் எடுத்துக் கூறுகிறது.  அதாவது குறிஞ்சி நில மக்களாகிய குறிஞ்சிக் குறவர்கள் மலைவாசனான முருகப் பெருமானுக்குத் தேனும் தினைமாவும் படைத்த குன்றக் குறவை பாடி பூவும் பொறியும நாற்புறமும் தூவி மதர்த்த எருமைக் கடாவை பலியிட்டு அதன் குருதியில் சாதத்தைப் பிசைந்து அவனுக்குப் படைத்து வெறியாட்டம் ஆடி தங்களது வழிபாட்டை முருகனுக்குச் செலுத்தினார்கள் என்றும்.

    முல்லை நில மக்களாகிய ஆயர் என்ற யாதவப் பெருங்குடி மக்கள் தங்களிடமுள்ள பால், தயிர், வெண்ணை போன்றவற்றை காக்கும் கடவுளான மாயோனுக்கு அதாவது திருமாலுக்குப் படைத்து குறவை இட்டு வழிபட்டு தங்களது நன்றி உணர்வை தாங்கள் வழிபடும் கடவுகளுக்குச் செலுத்தினர்.

    பாலை நிலத்து மக்கள் போர்த் தெய்வமான கொற்றவைக்கு அதாவது துர்க்கைக்கு ஆடு மாடு போன்றவைகளையும் சில நேரம் அங்கலட்சணங்கள் பொருந்திய அழகுடன் அமைந்த வீரனையும் பலியிட்டு தங்களது வழிபாட்டை நடத்தினர்.

    மருத நில மக்கள் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு 28 நாட்கள் பெரும் விழா எடுத்து ஆடிப்பாடி அவனை மகிழ்வித்து வழிபட்டு தாங்களும் மகிழ்ந்து இருந்தார்கள்.

    நெய்தல் நிலக் கடவுளான வருணனை இலக்கியங்கள் கூறினாலும் நெய்தல் நில மக்கள் தனிப்பட்ட வகையில் அவனை வழிபடவில்லை.  தங்களுக்கு வாழ்வும் வசதியும் அளிக்கும் கடல் மாதாவையே அவர்கள் வழிபட்டனர்.  சுறாமீனின் கொம்பு என்ற அம்மீனின் முதுகெலும்பை கடற்கரை மண்ணில் நட்டு ஆணும் பெண்ணும் கூடி மது மாமிசங்களைப் படைத்து சுறா தெய்வத்தை வழிபட்டனர்.

    தொல்காப்பியத்தில் குறிப்பிடும் நான்கு திணைதேவதைகளையும் வணங்கியதோடு மட்டுமல்லாது சங்கால மக்கள் பல்வேறு தெய்வங்களை வணங்கியதாக சங்க இலக்கியங்கள் பலவற்றில் ஆதாரங்கள் இருக்கின்றன.  முக்கட் செல்வன் நான்முகன், மழுவாள் நெடியோன் இராமன், சூரமகளிர் கொள்ளிப்பாவை, வாரை மகளிர் அணங்கு, கள்ளி நிழற்கடவுள், கத்திப்பாவை, மராத்தப் பேய்க்கடவுள் என்று பல்வேறு தெய்வப் பெயர்கள் மக்களின் வழிபாட்டில் இருந்ததாக சங்க இலக்கியக் குறிப்புகளில் பார்க்கிறோம்.

இது மட்டுமல்லாது ஊர்க்காவல் தெய்வங்கள், நகரக் காவல் தெய்வங்கள், கோட்டைக்காவல் தெய்வங்கள் எனப் பல்வேறு தெய்வங்கள் இருந்ததாகவும் அதற்கு சதுக்கபூதம், அந்தணர் பூதம், அரசர் பூதம், வணிக பூதம், வேளாள பூதம் எனப் பெயர்கள் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளன.  மேலும் சாத்தன் என்ற தெய்வம் இருந்தாலும் அக்கோவிலுக்கு தேவித்தி என்பவர் அன்றாடம் சென்று வழிபாடு நடத்தினார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.  மேலும் அக்காப்பியத்தில் இல்லுரை தெய்வங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியான குலதெய்வங்கள் இருந்ததாகவும் அதற்குத் தினந்தோறும் பெண்கள் மலர்களும் அன்னங்களும் படைத்து வழிபட்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    இங்கே குறிப்பிடப்பட்ட சூரமகளிர் கொல்லிப்பாவை, வாரை மகளிர், கன்னி நிழற்கடவுள் மற்றும் பல்வேறு பூத தெய்வங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுவது பூமியில் வாழ்ந்து மறைந்து போன மாபெரும் ஆத்மாக்களை வழிபட்டதையே குறிக்கும்.  அதாவது ஆதி தமிழர்கள் ஆவிகளுக்கு இந்த மாதிரியான பெயர்களைச் சூட்டி வழிபட்டார்கள் என்பது வருகிறது.  இதை இன்றைய சிறு தெய்வ வழிபாடுகளை மையமாக வைத்து நோக்கினோம் என்றால் நன்கு புலப்படும்.

    குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறு தெய்வ வழிபாட்டின் மூலக்கூறுகளை ஆராய்ச்சி செய்தோம் என்றால் பழங்காலத் தமிழர்களின் ஆவி வழிபாட்டு முறையை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.  உதாரணமாக முத்துப்பட்டன் வழிபாட்டை ஆய்வு செய்தால் ஆவி வழிபாடு ஏன் நிகழ்கிறது என்பதை நன்கு அறியலாம்.

ஆரிய நாட்டில் அந்தணர்கள் மரபில் ஆறு அண்ணன்களுக்குத் தம்பியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன் ஆவான். இவன் ஒரு நாள் அண்ணன்மார்களுக்குத் தெரியாமல் கொட்டார நாட்டிற்கு அதாவது மலையாள நாட்டிற்குச் சென்று விட்டான்.  ஆறு அண்ணன்மார்களும் கேரள மன்னனிடம் தம்பி இருப்பதை அறிந்து மன்னனின் அனுமதி பெற்று தம்பியைத் தங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வர முயற்சித்தனர்.  மன்னனும் முத்துப்பட்டனின் பணிக்காகப் பெரும் பொருளை ஊதியமாகக் கொடுத்து அனுப்பி வைத்தான்.  பொருட்களோடு அண்ணன்மார்கள்அழைக்க பொதிகை மலையைக்கடந்து அரசர்அடித்துறை என்ற பகுதியில் இருக்கும் சொரிமுத்தையன் கோவிலருகில் வந்தார்கள்.  அப்போது முத்துப்பட்டன் தனக்குத் தாகம் எடுப்பதாகவும் நீர்அருந்திவிட்டு தான் பின்னால் வருவதாகவும் பொருட்களோடு அவர்கள் முன்னால் செல்லுமாறு வேண்டி நீர் அருந்தப் புறப்பட்டான்.

    முத்துப்பட்டன் அரசர்அடித்துறையில் ஆற்றில் நீராடி லிங்கம் பிடித்து இறைவனை வழிபட்டான். அப்போது வால்க பகடை என்ற சக்கிலியன் மகள்களான பொம்மக்கால்,  திம்மக்கால் என்ற இரண்டு பெண்களும் பசுக் கூட்டத்தை காவல்காக்கும் தந்தைக்கு உணவு எடுத்துச் செல்ல ஆற்றங்கரை வழியாக வந்தார்கள்.அவர்கள் இருவரையும் பார்த்த முத்துப்பட்டன்.  அவர்கள் மீது மையல் கொண்டான்.  அவர்கள் தாங்கள் கீழ்ச்சாதியான சக்கிலியப் பெண்கள் என்றனர். பட்டன் கண்களை சுய ஜாதி அந்தஸ்த்தை காதல் மறைத்தது.  எது எப்படியாயினும் இருவரையும் மணப்பது உறுதி என்று சூளுரைத்தான். பெண்கள் பட்டனின் சூளுரையைத் தந்தையிடம் சொன்னார்கள்.தந்தை பட்டனிடம் வந்து தன் பெண்களை நீ மணந்தால் செத்த மாடு தூக்க வேண்டும்.  செருப்பு வடம் தைக்க வேண்டும். மதுக்குடங்கள் சுமக்க வேண்டும்.  மாட்டுக்கறி உண்ணவேண்டும். என்றெல்லாம் நிபந்தனை விதித்தான். பட்டனும் அதை ஒத்துக் கட்டுப்பட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தான். பொம்மக்கா, திம்மக்கா ஆகிய பெண்களும் பட்டனின் உயர்ந்த எண்ணத்தையும், அழகிய வடிவத்தையும் உணர்ந்து மெய்மறந்து போயினர்.

    பட்டனுக்கும், வால் பகடையின் பெண்களுக்கும் இனிதே திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்று வால்பகடை காவல் புரிந்த பசுக்கூட்டத்தை ஊத்துமலை வன்னியனும் உக்கிரங்கோட்டை மறவனும் திருடிக்கொண்டு போவதாகச் செய்தி வந்தது.  உடனே பட்டன் பசுக்கூட்டங்கள் மீட்க சண்டைக்குப் புறப்பட்டான்.  ஆதலால் மனைவியர் இருவரும் பூனை குறுக்கிடுவதையும் ஒற்றைப் பார்ப்பான் எதிரில் வருவதையும் கைம்பெண் ஒருத்தி நெருப்பைக் கொண்டு குறுக்கே வருவதையும் எடுத்துக்கூறி சகுணம் சரியில்லை என தடுத்துப் பார்த்தனர்.  தாங்கள் முந்திய நாள் கெட்ட கனவு கண்டதாகவும் அதனால் தற்போது சண்டைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு நாளை மறுநாள் செல்லலாம் என்றும் சொல்லிப் பார்த்தனர்.

    பட்டன் அவர்கள் பேச்சை எடுத்துக் கொள்ளவில்லை.  புதுமாப்பிள்ளை முறுக்கோடு சண்டைக்குப் புறப்பட்டான்.  அங்கு திருடர்கள் நூறுபேரை வெட்டி வீழ்த்தி பகக்கூட்டங்களைக் கைப்பற்றவும் செய்தான்.  சண்டை செய்த களைப்பு அதிகரிக்க யுத்த களத்திலேயே சாய்ந்து படுத்தான். அப்போது பிணங்களுக்கு இடையில் மயங்கிக் கிடந்த நொண்டித்திருடன் என்பவன் மயக்கம் தெளிந்து எழுந்து இளைப்பாறிக் கொண்டு இருந்த பட்டனின் மார்பில் கத்தியைப் பாய்ச்சினான். நெஞ்சில் பாய்ந்த நீளக்கத்தியை உருவிய பட்டன் அதே கத்தியால் திருடனைக் கொன்று தானும் உயிர் விட்டான்.

  பட்டன் வீழ்ந்ததும் அவனது காவல் நாய்களான ஆச்சிநாயும் பூச்சிநாயும் விரைந்து சென்று பொம்மக்கா,  திம்மக்காவின் புடவையைப் பிடித்து இழுத்து வந்தன.  படுகளத்தில் கணவன் முத்துப்ட்டன் இரத்தவெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்த இரண்டு பெண்களும் கதறி அழுது நெருப்பு மூட்டி கணவனோடு உடன் கட்டை ஏறி தங்களது இன்னுயிரை நெருப்புக்கு அர்ப்பணித்தனர். இறந்த முத்துப்பட்டனை தெய்வமான சொரிமுத்தையன் தனது தளபதி ஆக்கிக் கொண்டான்.

    இவ்வாறு சொல்லப்படும் முத்துப்பட்டன் கதையில் தமிழ் மரபுகள் பல அடங்கி உள்ளது. காதலுக்கு குல வேறு பாடு இல்லை. ஆநிரைக் கவருதல், ஆநிரை மீட்டல், உடன்கட்டை ஏறுதல்,  வீர ஆத்மாக்களை வழிபடுதல் என்பவை அவற்றுள் சில.முத்துப்பட்டன் தெய்வமான பின்பு பிடிமண் வாயிலாக மாவட்ட முழுமைக்கும் கொண்டு செல்லப்பட்டு வழிபடப்பட்டான்.  பட்டனுக்கு முத்துராசா, பட்டவராயன் போன்ற பெயர்களை வைத்தும் மக்கள் இன்றுவரை வழிபட்டு வருகிறார்கள்.

    மன்னனின் மைந்தர்களான இந்துப் பெருங்குடி மக்களும் அயல் நாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவ முகமதிய மதங்களை ஏற்றுக் கொண்ட தமிழ்பெருங்குடி மக்களும் ஆவிகள் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். உதாரணமாக செயின்ட் ஆண்டனி என்ற கிறிஸ்துவத் துறவியின் சமாதி இருக்கும் நெல்லை மாவட்டம் புளியம்பட்டி என்ற ஊரில் அந்தோணியார் குருசடி என்ற ஆலயம் நிறுவப்பட்டுள்ளது.இந்த ஆலயத்தில் இந்துக் கோவில்களில் நடைபெறுவது போன்ற வழிபாட்டு முறையில் தேங்காய் உடைத்தல், மாலை சாற்றுதல் சாமி ஊர்வலம் வருதல் போன்ற வழிபாட்டு முறைகளே பின்பற்றப்படுகிறது

  புனித அந்தோணியாரின் தூய ஆவி பைத்தியத்தைத் தெளிவிப்பதாகவும் நோய் நொடிகளை நீக்குவதாகவும் பேய்களை விரட்டுவதாகவும் மக்கள் நம்புகிறார்கள். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் புனித அந்தோணியார்க்கு முடிகாணிக்கையும் இங்கு செலுத்தப்படுகிறது.  இது மட்டுமல்லாது கிறிஸ்துவர்களிடம் உள்ள கல்லறைத்திருநாள் என்பது ஆவி வழிபாடே ஆகும்.  ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 2ம் நாளை இறந்த முன்னோர்களை வழிபடும் நாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கொண்டாடுகிறார்கள்.  அன்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்குச் சென்று மாலை அணிவித்து மெழுகு வர்த்திகளை ஏற்றி முன்னோர்கள் தங்களுக்கு நலமளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

    இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது என்று கண்டிப்பான சட்டதிட்டங்கள் உடைய முகமதியர்கள் இடத்திலே ஆவி வழிபாடு அன்றுமுதல் இன்று வரை நடந்து வருகிறது. துறவு நெறியை மேற்கொண்டு யோகி என்ற நிலையை அடைந்த முகமதிய ஞானிகள் சமாதியான கலலறைகளை வணங்கும் வழக்கம் இந்தியா,  பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள முஸ்லீம்களிடம் வழக்கத்தில் உள்ளது.

   அந்த யோகியின் கல்லறையைச் சுற்றி குத்துவிளக்குகளும் கற்களால்ஆன விளக்குகளும் வைத்து கல்லறையை பச்சைப்பட்டுத்துணியால் போர்த்தி மலரும் சந்தனமும் வாசனைத் திரவியங்களும் தெளித்து பழங்கள் முதலியவனைவற்றைப் படைத்து பாத்தியா ஓதி வணங்குகிறார்கள். இத்தகைய வழிபாட்டு முறையை நமது தமிழ்நாட்டில் நாகூர்,  ஏர்வாடி,  கங்கை கொண்டான் போன்ற இடங்களல் காணலாம்.  மேலும் தர்க்காக்கள் என்று அழைக்கப்படும் அனைத்து இஸ்லாம் வழிபாட்டு இடங்களும் ஆவி வழிபாட்டுத் தலங்களே ஆகும்.

  ஆவிகள் வழிபாடு என்பது மக்களின் இன மொழி மதப்பாகுபாடுகளைக் கடந்து உலகம் முழுவதும் எந்த விதத் தங்குதடையும் இல்லாது நடந்து வருகிறது.  புண்ணிய ஆவிகளும் தங்களால் இயன்றவற்றை மக்களுக்குச் செய்து வருகிறது.




 

Contact Form

Name

Email *

Message *