Store
  Store
  Store
  Store
  Store
  Store

கைவிடப்படும் பெற்றோர்கள்


     மது ஸ்ரீ குரு மிஷன் அறகட்டளை மூலம் வஸ்திர தானம் செய்வது என்று முடிவு செய்தவுடன் அதை அரும்பராம்பட்டு கிராமத்தில் செய்தால் நன்றாக இருக்குமென்று நமது விழாக்குழு ஒருங்கினைப்பாளர் திரு. மா.முருகன் கருத்து தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அந்த கிராமம் மிகவும் பின்தங்கியது சரியான சாலை வசதிகூட கிடையாது இந்த காலத்திலும் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றாலும் சுமார் ஏழு கிலோ மீட்டர் நடந்து தான் குழந்தைகள் போகவேண்டும். பஸ் வசதியும் சரிவர இல்லை கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருமே விவசாய கூலிகள் அன்றாடம் வேலைக்கு போனால் தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் வாழ்பவர்கள் அப்படி பட்ட ஜனங்களுக்கு நாம் சிறிதளவு உதவி செய்தாலும் அது அவர்களுக்கு பெரிதளவாக இருக்கும் என்பதாகும்.

திரு.மா.முருகன் சொன்ன கருத்துக்களை யாரும் மறுக்கவில்லை உடனடியாகவே செய்துவிடலாம் என்று எல்லோரும் ஒத்துகொண்டார்கள். அதன் அடிப்படையில் கிராமத்தில் உள்ள ஏழைமக்கள் எத்தனை பேர் அதில் கண்டிப்பாக உதவி தேவைபடுபவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது அந்த கிராமத்தில் மொத்தமே எழுபது குடும்பங்கள் மட்டுமே வாழுகிறார்கள் அவர்களில் அனைவருமே ஏறக்குறைய ஒரே வறுமை நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது எனவே ஒட்டுமொத்த கிராமத்திற்கும் ஆடைகள் வழங்குவது சிரமமாக இருக்காது செய்துவிடலாம் என்று முடிவும் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த மாதம் வஸ்திர தானம் வழங்குவதற்கு முழு தொகையும் ஏற்றுகொண்ட கோவை இராம நாராயணன் தான் நூற்றி எட்டு குடும்பங்களுக்கு வஸ்திர தானம் வழங்க விரும்புவதாக தெரிவித்தார் எழுபது பேரை இந்த கிராமத்திலும் மீதமுள்ளவர்களை வெளிகிராமத்திலும் தேர்ந்தெடுப்பது சரியாக வராது எனவே அரும்பராம்பட்டை அடுத்த மாதம் கவனித்து கொள்ளலாம் இந்த மாதம் வடகரை தாழனுரை தேர்ந்தெடுப்போம் என்று முடிவு செய்ய பட்டது.


முன்பு எடுத்த முடிவின் படி தாழனுருக்கு அடுத்ததாக அரும்பராம்பட்டு கிராமம் மே மாத சேவை திட்டத்தை பெற தயாரானது கிராமத்தின் முக்கிய பிரமுகர் திரு.அரங்கநாதன் தலைமையில் ஆடைகள் வழங்கும் விழாவும் இந்து சமய விழிப்புணர்வு விழாவும் 27/05/2012 அன்று ஞாயிற்று கிழமை மாலை ஆறுமணி அளவில் துவங்கியது. விழாவிற்கு ஒட்டுமொத்த கிராமமே வந்திருந்தது எனலாம் விழாவில் பேசப்பட்ட எல்லா விஷயங்களையும் மக்கள் கவனத்துடன் கேட்டார்கள். விழாவில் குருஜி கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். அவர் தமது பேச்சில்

ஒரு காலத்தில் பெற்றோர்களால் குழந்தைகள் குப்பை தொட்டியில் வீசப்பட்டனர் இன்று நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. பிள்ளைகளால் பெறோர்கள் தூக்கி வீசப்படுகிரார்கள் தள்ளாடும் வயதில் அரவணைக்க கரம் இல்லாமல் அவதி படுகிறார்கள் அன்பான வார்த்தை ஒன்றாவது தான்பெற்ற பிள்ளைகளிடமிருந்து கிடைக்காதா என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடத்தில் கெட்டுபோகும் மோட்டார் சைக்கிளுக்கு கொடுக்கின்ற மரியாதையை கூட தனது முதிய பெற்றோர்களுக்கு பல குழந்தைகள் கொடுக்க மறுக்கிறார்கள்.

இந்த உலக முழுவதும் உறவுகள் பந்த பாச சொந்தங்கள் அனைத்தும் பொருள்மயமாக ஆகி விட்டது பணம் கொடுத்தால் தான் தண்ணீரில் மூழ்குபவனை காப்பாற்றுவேன் என்று பேரம் பேசுகின்ற காலமாக இது இருக்கிறது. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டிய தலைவர்களும் மருத்தவ மேதைகளும் ஆன்மீக வாதிகளும் வர்த்தகர்களாக வியாபாரம் பேசுகிறார்கள். பணமிருந்தால் தான் வாழ முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது. பணம் இல்லாதவனை ஊரார் மட்டுமல்ல உறவினர்களே கூட புறக்கணிக்க துவங்கி விட்டார்கள்.


இந்த அவல நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் மக்கள் மத்தியில் அன்பு இல்லை கருணையில்லை கனிவுயில்லை அதனால் தர்மமில்லை ஒவ்வொருவரும் சுயநலத்திற்காக தனது சுய பண்பாட்டை விட்டு விட்டு போலி வேஷம் போட ஆரம்பித்து விட்டான். அதனால் கண்டதே காட்சி கொண்டதே கோலமென்ற கொடூர நிலை கோரதாண்டவமாட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான குணங்கள் இருப்பது போல ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனி தனியான கலாச்சார மரபுகள் இருக்கிறது. அந்த மரபுகளை மறக்கும் போது மனிதன் தனது சுய தன்மையை மனித தன்மையை இழந்து விடுகிறான்.

இன்று நாம் நமது சுய பண்பாடான இந்து பண்பாட்டை சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். தெரிந்தோ தெரியாமலோ நகரங்கள் துவங்கி கிராமங்கள் வரையிலும் நமக்கு சற்றும் பொருந்தி வராத அந்நிய பண்பாடு ஆக்கிரமிக்க துவங்கி விட்டது. விஞ்ஞான மயம் நவீனத்துவம் என்ற பெயரில் இளைஞர்களுக்கு எலக்ட்ரானிக் போதை அதாவது செல்போன் இன்டர்நெட் தொலைக்காட்சி என்ற போதைகள் ஊட்டப்பட்டு வருகிறது. ஆக்கபூர்வமான இந்த கருவிகள் அனைத்தும் மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை விருத்தி செய்யவே மிக அதிகமாக பயன்படுகிறது. இதனால் நமது குழந்தைகளிடமுள்ள மனித பண்பு வடிந்த நிலைக்கு வந்துவிட்டது. இதை இப்படியே விட்டோம் என்று சொன்னால் இன்று நாம் அனாதைகளாக ஆதரவற்றவர்களாக அன்பு மொழியை கேட்க தகுதி இல்லாதவர்களாக ஆனது போல நமது குழந்தைகளின் நிலையம் ஆகி விடும். அப்படி நடந்தால் பல சிறப்புகள் உடைய நமது தேசம் நிச்சயம் அடிச்சுவடு இல்லாமல் கூட அழிந்து போகும்.

எனவே நீங்கள் வாழ வேண்டுமென்றால் உங்கள் குழந்தைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றால் இந்த நாடு வளர வேண்டுமென்றால் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்றால் நமது பண்பாட்டை கலாச்சாரத்தை மரபுகளை குழந்தைகளுக்கு கற்பியுங்கள் நீங்களும் அந்த வழியிலேயே வாழ முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால் மட்டுமே பழையபடி நாம் அமைதியாக ஆனந்தமாக வாழ முடியும். என்று பேசினார். மேலும் குரு சுப்ரமணியம், ஜி.முருகன் போன்றோர்களும் பேசினார்கள்.


எழுபது குடும்பங்களுக்கு ஆடைகள் வழங்க மொத்தம் பதினையாயிரம் ரூபாய் செலவானது அந்த செலவுகள் அனைத்தையும் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் சுபஸ்ரீ தம்பதியினரும் மும்பையை சேர்ந்த கணேசன் குடுபத்தினரும் சென்னை திரு மகேந்திரனும் ஏற்றுக்கொண்டார்கள் அவர்களின் குடும்பங்கள் பரிபூரணமான இறையருளை பெற பிரார்த்தனையும் செய்யபட்டது. இடி மின்னலுடன் மழை வந்தாலும் விழா தடையில்லாமல் நடைபெற்றது. 

 தொகுப்பு - வி.வி.சந்தானம்


Contact Form

Name

Email *

Message *