Store
  Store
  Store
  Store
  Store
  Store

ராமன் கடவுளா...?


     கோதண்டம் எடுத்து கோர அரக்கர்களை முடிவுக்கு கொண்டுவந்த கோசலையின் குமாரன் ராமன் நம்மை போல பத்து மாதங்கள் அன்னையின் மணிவயிற்றில் கருவறை வாசம் செய்தவன் தானே தசரத குமாரன் பரத சத்ருக்க லஷ்மன சகோதரனாய் இருந்தவன் தானே ஜனகனின் மருமகன் ஜானகியின் மணாளன் ஒரு மனிதன் தானே அவனை தெய்வமாக வழிபடுவது எப்படி சரியாகும்? ராம காவியத்தை முதல் முறையாக எழுதி உலகுக்கு தந்த வால்மீகி கூட அவனை அவதார புருஷனாக காட்டவில்லை அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதனாகத்தானே காட்டுகிறான். அப்படி மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்ந்த ராமனை மாமனிதன் என போற்றலாம் புகழலாம் அதற்காக கடவுளாக வழிபட வேண்டுமா? என்று சிலர் கேட்கலாம்.

இந்த கேள்விக்கான பதிலை காதுகளில் சொன்னால் பலருக்கு புரியாது. காரணம் பலர் செய்திகளை காதுகளால் மட்டுமே கேட்கிறார்கள். காதுகள் என்பது ஒலிகளை அறிய கூடிய ஒரு கருவி அவைகளால் வார்த்தைகளை கேட்கமுடியுமே தவிர புரிந்து கொள்ள இயலாது. அதனால் மனிதன் காதுகளால் கேட்பதை விட்டு விட்டு இதயத்தால் கேட்க பழகவேண்டும். எவனுக்கு இதயம் கேட்க கூடிய சக்தி படைத்தகாக இருக்கிறதோ அவனே முழுமையான மனிதனாக இருக்கிறான். ராமன் கடவுளா? மனிதனா? என்று கேள்வி கேட்பவர்கள் இதயத்தால் கேட்பவர்களாக இருந்தால் மட்டுமே நாம் இப்போது சொல்ல போகும் பதிலை உணர்ந்து கொள்ள முடியும். காதுகளை மட்டுமே நம்புவர்களுக்கு விளங்குவது சற்று கடினம் எனவே இதயத்தை திறங்கள் கம்பன் காட்டிய இலக்கிய வீதியில் ராமன் கடவுள் தான் என்று உறுதியாக உணரக்கூடிய சான்றுகள் கிடைக்கும்.


காலையில் தகப்பன் அழைத்து நாளை முதல் நீ அயோத்தியின் மன்னன் என்று சொல்கிறார். மன்னாக இரு என்று வலியுறுத்திய தந்தையே மாலையில் காட்டுக்கு போ என்கிறான். மன்னன் நீ என்று சொன்னபோது மலர்ந்த முகம் எப்படி இருந்ததோ அப்படியே காட்டுக்கு போ என்று சொன்ன போதும் வாடாமல் வதங்கி போகாமல் ராமனது அழகிய திருவதனம் துலங்கியது. மலர்ந்த முகத்தோடு வனவாசம் சென்ற நமது அண்ணல் அங்கே அடர்ந்த காட்டிற்குள் பரந்த ஞானமுள்ள ஞானியர் பலரை சந்திக்கிறான். அருளுரை சொல்ல வேண்டிய அருளாளர் அனைவரும் அண்ணலை கண்டவுடன் அரக்கர்களால் எங்களுக்கு தொல்லைகள் மிக சூழ்ந்து இருக்கிறது. காப்பாற்று ராமா என்று கண்ணீர் விட்டு சொல்கிறார்கள்.

நாடாள வேண்டிய நான் காடாள வந்துவிட்டேன் ஆதரவுக்கு யாருமே இல்லாத அகதியாக நானிருக்கிறேன் அன்பு மனைவியையும் அருமை தம்பியையும் காக்க வேண்டிய நான் அரக்கரோடு சண்டை போட்டால் அவர்கள் பகையை சம்பாதித்து அமைதியை இழக்க வேண்டும் நாடும் இல்லாமல் படைபலமும் இல்லாமல் தனிமனிதனாக நிற்கும் நான் பாதுகாப்பும் இல்லாமல் வாழவேண்டிய சூழ்நிலை வந்துவிடும் அதனால் உங்களை காக்க முடியாது என்று சொல்லியிருக்கலாம் முறையிட்ட முனிவர்களும் ராமனின் கூற்றில் உள்ள நியாயத்தை புரிந்து ஒதுங்கி போயிருப்பார்கள் ஆனால் ராமன் அப்படி சொல்லவில்லை ராமனின் அருள் வார்த்தையை கவிசக்ரவர்த்தி கம்பநாடான் எப்படி தருகிறான் என்பதை பாருங்கள்.


ஆவுக் காயினும் அந்தணர்க் காயினும்
யாவர்க் காயினும் எளியவர்க் காயினும்
சாவர்ப் பெற்றவரே தகையன் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவான்

ஒரு நாட்டு மக்களுக்கு உணவு என்பது அத்தியாவசிய தேவை உணவு இல்லை என்றால் உறக்கமில்லை ஒழுக்கமும் இல்லை அதனால் தான் பசிவர பத்தும் பறந்து போகும் என்றார்கள் மனிதரின் பசிப்பிணியை போக்கும் பெரிய மருத்துவம் வேளான்மையாகும் அந்த உழவு தொழிலுக்கு உயிராக இருப்பது செல்வம் என்று போற்றபடுகிற மாடுகள் அப்படி பட்ட மாடுகளை காப்பதற்காகவும்

அறம் வளர்க்கும் அந்தணர்களுக்காகவும் அந்தணர்கள் என்றால் பிராமணர்களாக பிறந்தவர்களை மட்டும் குறிப்பிடவில்லை தர்மத்தை காத்து தர்ம வழியில் நின்று எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் கருதும் உயரிய ஜீவன்கள் அனைவருக்காகவும்

தர்மத்தை பற்றிய விழிப்பு இல்லாமல் அறியாமையில் கிடக்கும் அனைத்து ஜீவன்களுக்காகவும் திக்கற்று ஆதரவற்று காப்பதற்கு யாருமே இல்லாமல் கலங்கி நிற்கும் எளியவர்களுக்காகவும் போராடி உயிரை விடுவதே மேலான வாழ்வு பிறரின் உயர்வுக்காக உயிரையும் கொடுக்கும் உத்தம புருஷர்களே தேவர்களிலும் மேலானவர் என்று கருதபடுவார் எனவே எத்துன்பம் எனக்கு வரியினும் உங்கள் துன்பம் போக்குவதே எனது கடன் என்று ராமன் சொல்கிறான். அதாவது உயிரை இழந்தாலும் பொது தொண்டு செய்வதே உயர்ந்த கடமை என்று சொல்லிய ராமன் கடவுள் அல்லாமல் வேறு யார்? மேலும் ராமனின் இயல்பை கம்பன் படம் பிடித்து காட்டுகிறான் அதையும் பார்ப்போம்.


பிறந்த நாள் தொடங்கி யாரும்
துளைபுக்க பெரியோன் பெற்றி
மறந்தநாள் உண்டோ என்னை
சரண் என வாழ்கின்றானே
துறந்த நாட்கு இன்று வந்து
துன்னினான் சூழ்ச்சியாலே
இறந்தநாள் அன்றோ என்றும்
இருந்தநாள் ஆவது

தகாத செயல் செய்த தமயன் இலங்கை வேந்தனை விட்டு தம்பி விபிஷணன் ராமனிடம் சரணடைகிறான் ராம சேனையிலிருந்த அத்தனை வீரர்களும் விபிஷ்ணானை இணைக்க கூடாது துண்டிக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டுமென கூக்குரலிடுகிறார்கள் சேவையின் வடிவாக நின்ற அனுமன் ஒருவன் மட்டுமே அவன் நல்லவன் நம்மோடு இருக்க தக்கவன் என்கிறான். அதை கேட்ட ராமன் வானர வீரர்களிடம் சொல்கிறான் விபிஷணன் நல்லவன் என்பதனால் அல்ல அவன் நம்மோடு சேர்வதினால் நமக்கு நன்மை ஏற்படும் என்பதனால் அல்ல அவன் நம்மிடம் சரண் என்று வந்திருக்கிறான் சரணாகதியாக வந்தவனை புறம் தள்ளிவிட்டால் அந்த நாள் நமக்கு இறந்த நாளாகி விடும். என்கிறான் அதாவது அடைக்கலம் கேட்டவனுக்கு அடைக்கலம் தரவில்லை என்றால் படைக்களம் பெற்ற மன்னாதி மன்னனும் இறந்தவனாகவே கருதபடுவான் அரவனைப்பது ஒன்றே வாழ்வதன் அடையாளம் என்கிறான். எவன் மனதில் அன்பு மட்டுமே குடிகொண்டு இருக்கிறதோ அவனே இறைவனாவன் அதனால் ராமனும் இறைவனே

அன்பு வடிவான ராமன் சக்ரவர்த்தியின் திருமகன் அவன் வேடர்குலத்தில் பிறந்த குகனையும் தன்னோடு இணைத்து இன்றுமுதல் எனக்கு தம்பிகள் நால்வர் என்கிறான். வேடனை மட்டுமா அவன் சகோதரனாக ஏற்றான் வானரதலைவனான சுக்கிரவனை கூட சகோதரனாக ஏற்றுகொண்டான் அத்தோடு நின்றதா ராமனின் அன்பு வெள்ளம் அரக்கர் குல விபிஷ்ணனையும் தம்பியாக ஏற்று தசரதனுக்கு எழு மக்கள் என்று பறை சாற்றினான் தன்னை அண்டியவருக்கு மட்டுமா ராமனின் அன்பு கிடைத்தது அல்ல அவனது அன்பு மனைவியை கடத்தி சென்று துன்புறுத்தி அசோக வனத்தில் கடும் சிறை வைத்து கோரகூத்தாட்டம் போட்ட ராவணனுக்கு கூட ராமனின் அன்பு கிடைத்தது.


ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அமைந்த
பூளையாயின கண்டனை இன்று போய் போருக்கு
நாளைவா என நல்கினன் நாகு இளம்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்

எதிரே நிற்பவன் மனைவியை கவர்ந்து சென்ற கயவன் தன்னை அவமான படுத்திய பகைவன் ஆனால் அவன் இப்போது படையிழந்து தான் ஏறி வந்த தேரையும் இழந்து யாருக்கும் வணங்காத முடி என் முடி என்று ஆணவம் பேசிய வணங்கா முடியாகிய மணிமகுடத்தை இழந்து தன்னம் தனியாக சமர்க்களத்தில் தலைகவிழ்ந்து நிற்கிறான். வெற்றி வீரனான ஜெயராமன் அவனை நோக்கி பேசவேண்டிய அவசியமே இல்லை வாளெடுத்து வீசி தலைகொய்ய வேண்டியதுதான் பாக்கி ஆனால் நிராயுதபாணியை கொள்வது தர்மம் ஆகாது என்று அவன் மீதும் இறக்கம் காட்டி இன்று போய் நாளாய் வா என்று அறக்கருனையோடு பேசுகிறான் வஞ்சகனுக்கும் இறக்கம் காட்டும் நெஞ்சம் தான் கடவுளின் நெஞ்சம் அது ராமனிடம் நிறையவே உள்ளது எனவே ராமன் இறைவனே.


Contact Form

Name

Email *

Message *