Store
  Store
  Store
  Store
  Store
  Store

அழகு பெற ரகசிய வழி...!


    ழகு என்பது என்ன? கண்ணுக்கு தெரிகின்ற பொருள்களில் அழகு இருக்கிறதா? கண்ணுக்கு தெரியாதவைகளில் அழகு இருக்கிறதா? இது நீண்ட நாட்களாக கேட்கப்பட்டு வரும் ஒரு கேள்வி ஆனால் பதில் மட்டும் இதுவரை இது தான் அழகு என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியவில்லை. 

அவன் ஒரு இளைஞன் திருமண வயதை தொட்டவுடன் வாழ்க்கை துணைவியை தேடி கொள்ள பெண்பார்க்க ஆரம்பித்தான். வாரத்தில் இரண்டு நாட்களாவது பெண்பார்க்கும் படலம் நடந்தது. இப்படி ஒருவாரம் அல்ல இருவாரம் அல்ல மூன்று வருடங்கள் பெண்களை பார்த்து கொண்டே இருந்தான். அவன் பெண் பார்க்கும் படலத்திற்கு கொடுத்த பயண செலவு இரண்டு கல்யாணமே பண்ணலாம். அவ்வளவு செலவு செய்தும் பெண் அமையவில்லை இது என்ன அதிசயம் பார்த்த பெண்ணெல்லாம் இவனை வேண்டாமென்று மறுத்துவிட்டார்களா? இல்லை இவன் தான் அவர்களை மறுத்தான். காரணம் இவன் எதிர்பார்ப்பது போல் அவர்கள் அழகாக இல்லையாம். 


ஒருத்திக்கு கண் சரியில்லையாம். இன்னொருத்திக்கு கழுத்து அழகாக இல்லையாம். ஒருத்தி நிறமாக இல்லையாம் வேறொருத்தி அதிக நிறமாக இருக்கிறாளாம். இதனால் அவள் இவனை மதிக்க மாட்டாளாம். நடக்கும் போது ஆண்பிள்ளை போல நடககிறாளாம். ஒருத்தி பேசும் போது அதிர்ந்து பேசுகிறாளாம் வேறொருத்தி. இப்படி அவன் கண்டுபிடித்த குறைகள் எண்ணிக்கையில் அடங்காது. ஏராளம் ஏராளம் எது தான் அழகு? ஒரு பட்டியல் போடு என்றால் பத்து நடிகைகளின் அங்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு உருவத்தை வரைந்து தருகிறான். அப்படி ஒரு பெண்ணை கண்முன்னால் நிறுத்தினாலும் அவளிடத்திலும் குற்றம் காண்கிறான். அவள் கட்டிய புடவை நன்றாக இல்லையாம். 

இவனால் அழகி இல்லை அவலட்சனமானவள் என்று புறக்கணிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே திருமணம் ஆகாமலா வீட்டில் இருந்து விட்டார்கள்? அவர்களை பிடித்த நல்ல மாப்பிள்ளைகள் கட்டிக்கொண்டு போய் சந்தோசமாக குடும்பம் நடத்துகிறார்கள். இவனுக்கு அழகற்றவர்களாக தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அழகாக எப்படி தெரிந்தனர்? ஒருவேளை இவன் முன்னால் அவலட்சன வேஷம் போட்டார்களா? இல்லை என்றால் இவனது கண் மட்டும் விஷேச தயாரிப்பா அல்லது அவர்களை பார்த்த மற்ற மாப்பிள்ளைகளுக்கு கண்களில் குறைபாடா? இதில் எதுவுமே இல்லை.


இவன் கருத்தில் தான் குறைபாடு இருக்கிறது. இப்படி சொல்வது கூட தவறு இவன் அழகு என்று கருதுவது வேறு விதமாக இருக்கிறது இவன்கற்பனைக்கு ஏற்றவாறு எந்த உருவத்தையும் காணவில்லை அதனால் தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதனால் எல்லாவற்றையும் அழகுகள் அல்ல என்று புறக்கணிக்கிறான். ஆகவே ஒன்றை அழகாக காண்பதும் அழகு அற்றதாக காண்பதும் கண்களில் இல்லை மனதில் இருக்கிறது. என்பது நன்றாக தெரிகிறது என்றாலும் உலகில் உள்ள எல்லா மனதும் ஏற்றுகொள்ளும் அழகு என்று எதாவது தனியாக இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டால் அழகு என்பது புறத்தில் உள்ளதா? அகத்தில் உள்ளதா? என்ற நமது ஆரம்ப கேள்விக்கு சரியான பதில் கிடைத்து விடும். 

சில யோகிகள் சொல்கிறார்கள் நீ தொடர்ச்சியாக நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் நல்ல வார்த்தைகளால் நிரப்பபட்டவனாக இருந்தால் உனது தோற்றம் கவர்ச்சி மிக்கதாக மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்துவிடும் என்பது அவர்களின் கருத்து. இது உண்மை தான் இன்றைய ஆண் அழகர்கள் அனைவருமே காந்தி என்ற கிழவனின் அழகு முன்னால் தூசி போல பறந்து விடுவார்கள் காரணம் காந்தி என்ற மகாபுருஷனின் அழகு புறத்தோற்றத்தை வைத்து தீர்மானிக்கபடவில்லை அவரின் அகதோற்றமே அவர் அழகுக்கு இலக்கணமாக இருக்கிறது. இதை வேறொரு விதத்திலும் சொல்லலாம்.


யாரிடத்தில் ஸ்ரீதேவி நிறைந்து நிற்கிறாளோ அங்கே அழகு இருக்கும். ஸ்ரீதேவியின் இலக்கணம் என்ன? அன்பு அருள் கருணை இன்பம் புத்துணர்ச்சி முயற்சி உற்சாகம் இவைகளே அந்த தேவதையின் இலக்கணம். இந்த பண்புகள் நிறைந்த மனிதன் இன்பம் என்பதை பஞ்சமில்லாமல் பெற்றவனாக இருப்பான் அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் திருவடியாக இருக்கும், தோல்வியும் துன்பமும் துயரமும் அவனை அணுகவே அணுகாது.

ஸ்ரீதேவியின் எதிர்பதம் மூதேவி இவளின் பண்புகள் நாம் அறியாதது அல்ல பொறாமை பேராசை கோபம் காமம் போன்றவைகள் இந்த உணர்வுகள் எங்கே மண்டிகிடக்கிறதோ அங்கே அவலட்சணம் இருக்கும். இந்த உணர்வுகள் நிரம்பி வழியும் மனிதர்கள் மன்மதனை போல காட்சி தரலாம் ஆனாலும் அவனை நோக்கி யாரும் ஈர்க்கப்பட மாட்டார்கள் என்னை பார் என் அழகை பார் என்று அவன் நம் முன்னும் பின்னும் நடந்து காட்டினாலும் கூட அவனை நம்மால் ஏறடுத்து பார்க்க இயலாது. 

எனவே நாம் அழகு என்றால் எது என்பதை மிக சுருக்கமாகவே தெரிந்து கொள்ளல்லாம். நற்பண்புகள் நிறைந்த ஒருவன் கருப்பாக இருக்கலாம் ஆனாலும் அவன் பகவான் கிருஷ்ணனை போல் வணங்க தக்கவனாக இருக்கலாம் நற்பண்புகள் நிறைந்த ஒருவன் வறியவனாக எளியவனாக வனாந்தரத்தில் சுற்றி திரிபவனாக இருக்கலாம் ஆனாலும் அவன் ஸ்ரீ ராமனை போல் போற்ற தக்கவனாக இருக்கலாம் அவனது கண்கள் குழிவிழுந்து சதைகள் மூடி இருக்கலாம் ஆனாலும் அந்த கண்களுக்குள் தெரிகின்ற அறம் என்ற வெளிச்சம் அனைவரையும் சுண்டி இழுக்க கூடியதாக இருக்கும். அவன் மேனியில் அழுக்கு அடர்த்தியாக படர்ந்திருந்தாலும் அது மழைமேகம் சூழ்ந்த வானத்தை போல் எழிலாக இருக்குமே தவிர காண சகிக்காததாக இருக்காது. 


வெளித்தோற்றம் தான் அழகு என்று சொல்வோரும் அகத்தின் அழகே சிறப்பு என்று சொல்வோரும் நல்ல பண்புடைய மனிதன் மட்டுமே அழகானவன் என்று சொன்னால் எதிர்க்க மாட்டார்கள் என் கண்களுக்கு கீழே கருவளையம் விழுகிறதே சர்மம் எல்லாம் வறண்டு போகிறதே முகத்தில் எண்ண முடியாத பருக்கள் அணிவகுக்கிறதே நான் எப்படி அழகாக இருக்க முடியும். என்று யோசித்து தன்னை தானே முடக்கி கொள்ளும் பலகீனமான மனிதர்கள் தங்களை அழகுபடுத்தி கொள்ள அலங்கார பொருள்களை தேட வேண்டாம். அதற்கு அவசியமும் இல்லை நல்ல பண்புகளை வளர விடுங்கள் நல்ல பண்புகள் உங்களை அழகர்களாக ஆக்கி விடும். 

ஒரு நல்ல வார்த்தை நல்ல சிந்தனையை உருவாக்கும் ஒரு நல்ல சிந்தனை ஒரு நல்ல செயலை உருவாக்கும் ஒரு நல்ல செயல் நல்ல பண்பாட்டை உருவாக்கும் ஒரு நல்ல பண்பாடு உலகம் முழுவதையும் அழகு பொருந்தியதாக ஆக்கி விடும். எனவே சுத்திகரிக்க படவேண்டியது உருவம் அல்ல உடலும் அல்ல மனதும் மனதால் இயங்கும் நமது செயலுமே ஆகும் இது தான் அழகாக மாறுவதற்கு உள்ள ஒரே ரகசியம்.




Contact Form

Name

Email *

Message *