Store
  Store
  Store
  Store
  Store
  Store

என் மனைவியின் ஆவி சொல்வது என்ன...?


     அன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் உங்களது இணையதளத்தை சில மாதங்களாக படித்து வருகிறேன். நீங்கள் ஆவிகளை பற்றி எழுதியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாலும் என் ஆர்வத்தை தூண்டியதாலும் எனக்கு உங்கள் மூலம் ஒரு உதவி தேவை படுவதாலும் இந்த மின்னஞ்சல் அனுப்புகிறேன். தயவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களிடம் தொடர்பு கொண்டதற்கு அவமரியாதையாக நினைக்க வேண்டாம். எனக்கு வேறு வழிகள் எதுவும் தெரியாததனால் இப்படி தொடர்பு கொள்கிறேன். 

நான் இப்போது கனடா நாட்டில் வாழ்ந்தாலும் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பிறந்தவன் நான் இந்த நாட்டிற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகி விட்டது. நான் இங்கு வந்த பிறகு இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் புனிதவதி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன் என் திருமணத்தை ஆரம்பத்தில் ஒத்துகொள்ளாத என் பெற்றோர்கள் என் மனைவியின் குணத்தை அறிந்த பிறகு மனமகிழ்வோடு ஏற்றுகொண்டார்கள். என் மனைவியும் நானும் ஐந்து வருடங்கள் மட்டுமே தாம்பத்திய வாழ்க்கை நடத்தினாலும் இன்பகரமான அந்த நேரத்தில் பல நேரம் நாங்கள் இருவரும் தாய்நாடு வந்து பெற்றோர்களை கண்டு மகிழ்சிகரமாக இருந்திருக்கிறோம்.

என் மனைவி அழகானவள் மட்டுமல்ல மிகவும் நல்லவள் கணவனின் மனமறிந்து நடப்பதில் அவளை விட சிறந்த பெண்கள் இருப்பது அரிது. நானும் அவளும் வாழ்ந்த ஆனந்தமான வாழ்வை சிலபேர் மட்டுமே வாழ்ந்திருக்க கூடும். அவள் என் மீது கொண்ட அன்பு வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. கதைகளிலும் இலக்கிய நூல்களிலும் மட்டுமே அத்தகைய நற்குணம் வாய்ந்த பெண்மணிகளை நான் படித்திருக்கிறேன். அவள்மீது நான் உயிரையே வைத்திருந்தேன் என்று சொல்வதை விட அவளுக்காகவே வாழ்ந்தேன் என்று சொல்வது சிறப்பாக இருக்கும். 

நானும் அவளும் வாழ்ந்த இன்ப நாட்களின் அடையாளமாக எங்களுக்கொரு மகன் பிறந்தான் அவன் பிறந்த ஆறுமாதம் வரை நாங்கள் இருவரும் பூலோக சொர்க்கத்தில் இருந்தோம் என்றால் அது மிகையில்லை ஆறுமாதத்திற்கு பிறகு அவள் தொண்டையில் சிறிதாக வலி வந்தது மருத்துவரிடம் சென்று பார்த்தோம் சில மாத்திரைகளை அவரும் கொடுத்தார். ஆனால் எந்தவித பயனும் ஏற்படவில்லை மீண்டும் மருத்துவமனை சென்றோம் அந்த பரிசோதனை இந்த பரிசோதனை என்று மூன்று மாதங்கள் அலைய வைத்தார்கள். கடேசியில் அவளுக்கு தொண்டையில் புற்று நோய் இருப்பதாகவும் அது அபாய கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் சொன்னார்கள். என் கண்முன்னால் என் வாழ்க்கை சிதறி விழுவதை கண்டேன். 

மிக கொடிய அந்த புற்றுநோய் என் அழகிய மனைவியை சிறிது சிறிதாக விழுங்கியது. நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க அவளால் பேச முடியவில்லை ஆனாலும் தனது வேதனைகளை மனதிற்குள் மறைத்து விட்டு என்னை பார்த்து வலியோடு சிரிப்பாள். என்னால் தாங்க முடியாமல் நெஞ்சி துடிக்க அழுவேன். எப்படியும் அவளை காப்பாற்ற வேண்டுமென்று பாடாய் பட்டேன். நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் அவளுக்காக செலவு செய்தேன். ஊரிலிருந்து அப்பாவும் நிலங்களை விற்று பணம் கொடுத்தார். பணம் கரைந்தது என் அன்பு தேவதையின் உடலும் கரைந்தது. சிறு முனங்கல் கூட செய்ய முடியாத நிலையில் அவள் நிலை பரிதாபமாக ஆனது. 

ஒரு கணவனின் உண்மையான கடமை என்ன? தன்னையே நம்பி வந்த பெண்ணின் வாழ்க்கையை சகல விதத்திலும் பாதுகாக்க வேண்டும். அவள் உடலுக்கோ உயிருக்கோ கேடு வராமல் தடுத்து நிற்க வேண்டும். தன் உயிரை கொடுத்தாவது மனைவியை காப்பாற்றுவது தான் ஒரு கணவனின் தலையாய கடமை இவை அனைத்தும் தெரிந்திருந்தும் என்னால் என் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. அவள் என் கண்ணெதிரே அணு அணுவாக இறப்பதை பார்த்து கொண்டு தான் நிற்க முடிந்தது. எனக்கு ஏற்பட்ட கையால் ஆகாத நிலைமை எந்த கணவனுக்கும் ஏற்பட கூடாது. 

என் மனைவியின் உயிர் பிரியும் நேரத்தில் அவளை என் மடியில் வைத்திருந்தேன். அவள் என்னோடு எதோ பேச நினைத்தாள் அவளால் முடியவில்லை அவள் வாய் திறந்த போது ரத்தம் வடிந்ததே தவிர வார்த்தை வரவில்லை. கை சைகையால் அவள் சொன்னது அந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு புரியவில்லை அல்லது புரிந்து கொள்ளும் நிலையில் நான் இல்லை நான் பாதுகாத்த என் தோட்டத்து ரோஜா என் மடியிலேயே உதிர்ந்து விட்டது. என்னையும் என் மகனையும் அனாதையாக விட்டு விட்டு அவள் போய்விட்டாள் என் ஆனந்த வாழ்க்கை அஸ்தமித்தது விட்டது. அவள் இல்லாத போது நான் வாழ வேண்டிய அவசியமில்லை ஆனாலும் என் மகனை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரிய பொறுப்பை என் கையில் அவள் தந்திருக்கிறாள். அதை தட்டி கழித்து விட்டு இறந்து போக நான் விரும்ப வில்லை. 

ஐயா என் மனைவி இறக்கும் தருவாயில் என்ன சொல்ல நினைத்தாள். என்பது எனக்கு புரியவில்லை ஆனாலும் அதை தெரிந்து கொள்ள நான் ஆசை படுகிறேன். அவள் இறுதியாக எதன் மீதாவது ஆசை வைத்தாளா? அதை பெற நினைத்தாளா? அல்லது இதுவரை என்னிடம் சொல்லாத சொல்ல முடியாத ரகசியங்கள் எதையாவது சொல்ல முயன்றாளா? என்பதை தாங்கள் அறிந்து சொல்ல முடியுமா? அவள் ஆத்மாவோடு நீங்கள் பேசி அதை தெரிந்து சொன்னால் நான் மிகவும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். அவள் எண்ணம் எதுவானாலும் அதை நிறைவேற்றி வைக்க நான் தாயாராக இருக்கிறேன். உங்கள் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து கேட்கிறேன் தயவு செய்து எனக்கு இந்த உதவியை செய்யுங்கள் தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னித்து அருளவும். 
இப்படிக்கு 

பூபாலன் 
கனடா 



       ணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு அந்யோன்யமானது என்பது உங்கள் கடிதத்தை படித்த பிறகு புரிகிறது. தாய் தந்தை உறவு சகோதர சகோதரி உறவு ரத்த சம்மந்தபட்டது அதில் அன்பு பாசம் இருப்பது இயற்கையானது ஆனால் எங்கோ பிறந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலுக்கு முன்னால் மற்ற பாசங்கள் எல்லாம் சற்று குறைவானது தானோ என்று எண்ண தோன்றுகிறது இந்த எண்ணம் தவறாக இருக்கலாம். ஆனாலும் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை 

மனித வாழ்க்கையில் இறைவன் இன்பங்களை மட்டுமே தரவில்லை பல நேரங்களில் துக்கங்களையும் துயரங்களையும் தந்து நம்மை பரிசோதனை செய்து பார்க்கிறான். ஆயிரம் துயரங்கள் வந்தாலும் அத்தனையும் தாங்கி கொண்டு தாண்டி கொண்டு இவன் முன்னேருகிறானா? அல்லது இத்தோடு தன்னை முடித்து கொள்ளும் மடத்தனத்தை செய்கிறானா என்று கடவுள் பார்க்கிறார். அன்பு மனைவியை பறிகொடுத்தாலும் மகனுக்காக வாழ்கிறேன் என்று சொல்லும் உங்கள் உறுதி பாராட்டுதலுக்குறியது. 

நான் சில வருடங்களாக ஆவிகளோடு பேசுவதை நிறுத்தி வைத்திருந்தேன் அதற்கு காரணம் ஆவிகளோடு பேச முற்படும் போது நமது உடல் சக்தி மிகவும் குறைய ஆரம்பிக்கும். எனவே எனது உடல் நலத்தை கருத்தில் வைத்து அதை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனாலும் உங்கள் கடிதம் என் இதயத்தை நெகிழ வைத்து விட்டது. ஒரு தூய்மையான அன்புள்ளம் கொண்டவருக்காக சிறிது கஷ்டத்தை தாங்கினாலும் பரவாயில்லை என்று என் மனது சொன்னதனால் உங்களுக்காக ஆவியோடு பேசும் கலையை மீண்டும் செய்ய துணிந்தேன். 

உங்கள் மனைவியின் ஆவியோடு நான் பேச முடியவில்லை அதற்கு காரணம் அந்த ஆவி பேசுகின்ற நிலையில் இல்லை பூமியில் வாழ்ந்த போது தான் நோயால் பேச முடியவில்லை என்றால் இறந்த பிறகும் அதே நிலையா? என்று நீங்கள் கருத வேண்டாம். பேச முடியாதற்கு உண்மையான காரணம் உங்கள் மனைவியின் ஆவி இன்னும் தனது இறப்பை ஏற்றுகொள்ளும் மனநிலையை அடையவில்லை தனது வாழ்க்கை துவங்குவதற்கு முன்பே முடிந்து விட்டதே மீண்டும் அந்த வாழ்வை தொடர முடியாதா? என்ற ஏக்கத்தில் இருக்கிறது. பொதுவாக இறந்த பிறகு இறப்பை ஏற்றுகொண்ட ஆவிகள் மட்டுமே நம்மோடு பேச விரும்பும் சரியான தகவல்களையும் தரும் மற்றவைகள் தவறான தகவல்களை தருவதோடு தங்களை தாங்களே தேவையில்லாமல் இம்சை படுத்தி கொள்ளும்.

இதனால் எனது வழிகாட்டும் ஆத்மாவோடு பேசியே உங்கள் மனைவியின் மனவோட்டத்தை அறிந்து கொள்ள முடிந்தது. உங்கள் மனைவி கடேசி நேரத்தில் தனது குழந்தைக்கு வைத்த பெயரை மாற்ற நினைத்திருக்கிறார்கள். காரணம் உங்கள் குழந்தையின் பெயர் அவர்களுடைய தம்பியின் பெயர் அவர் சகோதரனும் குறைந்த வயதில் நாட்டு சண்டையில் இறந்து போனதனால் தன் மகனுக்கு அதே பெயரை வைத்திருப்பதனால் அவனுடைய ஆயுளுக்கும் குறை வருமோ என்ற பயம் வந்திருக்கிறது. எனவே தன மகனின் பெயரை மாற்றி உங்கள் தந்தையாரின் பெயரை அவனுக்கு வைக்க விரும்பி இருக்கிறார்கள். 

மேலும் தனது நாட்டில் அதாவது இலங்கை தீவில் வாழுகின்ற தனது மூத்த சகோதரிக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடம் இருந்திருக்கிறது. ஆனால் பல நேரங்களில் உங்களிடம் அதை தெரியபடுத்தியும் நீங்கள் அதற்கு ஆர்வம் காட்டாததால் சொல்வதை குறைத்திருக்கிறார்கள். தனது மரணம் நெருங்கி வருவதை அறிந்து தமக்கையாருக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்று உங்களிடம் கேட்க விரும்பி இருக்கிறார்கள். ஆனால் பேச முடியவில்லை. மேலும் தனது குழந்தையை எந்த நேரத்திலும் கைவிட்டு விடாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பி இருக்கிறார்கள். 

இதை விட முக்கியமான செய்தி உங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு ஆட்பட்டோ வற்புறுத்தலுக்கு இணங்கியோ நீங்கள் மறுமணம் செய்து கொள்வதை உங்கள் மனைவியின் ஆவி விரும்ப வில்லை காரணம் தனது மகன் மாற்றான் தாய் கொடுமையால் அவதிபடுவான் என்ற பயம் அதற்கு உள்ளது. அதையும் சொல்ல விரும்பி சொல்ல முடியாமலே அப்பெண்ணின் உயிர் பிரிந்திருக்கிறது. இது தவிர அதிகமாக வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தி அடைய சாஸ்திரப்படி செய்ய வேண்டிய கிரிகைகளை செய்து வாருங்கள் அவர்கள் ஆத்மா நல்ல நிலையை அடைந்த பிறகு அவர்களிடமே பேசி வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். உங்கள் மனைவி ஆத்மா சாந்தி அடையவும் நீங்கள் மன ஆறுதல் அடையவும் உங்கள் மகன் சகல வளத்தை பெறவும் இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.


Contact Form

Name

Email *

Message *