Store
  Store
  Store
  Store
  Store
  Store

என் மகன் மீண்டும் பிறப்பானா...?




   சுவாமிஜி என்குறையை கேட்டு அது தீர வழிசொல்லுமாறு உங்களை தாழ்மையுடன் வேண்டி இந்த மின்னஞ்சலை செய்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள் பெண்குழந்தை இல்லை இரண்டு மகன்களையும் கண்ணுக்கு கண்ணாக வளர்த்து வந்தேன் மூத்தமகன் நன்றாக படிப்பான் விளையாட்டு போட்டி தனித்திறன் போட்டிகளில் பல பரிசுகளை வாங்கி தந்து தாய்தகப்பனை மகிழ்விப்பான் 


என் இரண்டாவது மகன் மூத்தவனுக்கு நேர்மாறாக நடந்து கொள்வான். சரியாக படிக்க மாட்டான் படிக்க சொன்னால் என்னை கொடுமை படுத்தாதே என் இஷ்டத்திற்கு விட்டு விடு மீண்டும் மீண்டும் வற்புறுத்தினால் எங்காவது ஓடிபோவேன் என்பான் அறியாத பிள்ளை அவன் தெரியாமல் பேசுகிறான் என்று எண்ணி பலமுறை படிக்க அவனை தூண்டுவேன். ஒருமுறை உண்மையாகவே வீட்டை விட்டு ஓடிவிட்டான் 



நானும் அவன் அம்மாவும் பதைபதைத்து போய்விட்டோம் எல்லா இடங்களிலும் உறவினர்கள் நண்பர்கள் மூலமாக வலைபோட்டு தேடினோம் கடேசியில் ஒருவாரம் கழித்து திருச்சியில் அகபட்டான் கைநழுவி போன புதையல் ஒன்று மீண்டும் கிடைத்தது போல மகிழ்ந்து போனோம் அன்று முதல் அவனை நான் எதுவும் சொல்வதில் திருந்தும் போது திருந்தட்டும் என்று விட்டு விட்டேன். 



அவன் கேட்பதை கூட மறுக்காமல் வாங்கி கொடுத்தேன் பதினைந்து வயதில் பைக் கேட்டான் கொடுத்தேன் விலைகூடிய செல்போன் வேண்டும் என்று கேட்டான் அதையும் வாங்கி கொடுத்தேன் ஆயிரம் பத்தாயிரம் என்று துணிமணிகள் கேட்பான் என் மனைவியின் வேண்டுதலால் அதையும் கொடுப்பேன் எல்லாம் பெற்றாலும் தாய்தகப்பன் மீது அவனுக்கு அக்கறை என்பது வரவே இல்லை. 



கையில் கிடைத்த பணத்தை வீட்டிலிருந்து எடுத்து போய்விடுவான் நண்பர்களோடு கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்வான் ஒருமுறை அவன் சிகரெட் பிடிப்பதை கூட நான் கண்டும் கண்டிக்காமல் விட்டு விட்டேன். இந்த நிலையில் அவனை விட வயதில் மூத்த ஒரு பெண்ணின் சகவாசம் அவனுக்கு ஏற்பட்டது.



அவளோடு எப்போது பார்த்தாலும் தொலைபேசியில் பேசிய வண்ணமே இருப்பான். இரவு உறங்க போகும் போது கூட தொலைபேசி அவன் கையை விட்டு நகராது. பக்கத்தில் நாம் சென்றால் கூட அவன் இதைதான் பேசுகிறான் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மெதுவாக பேசுவான். நாள் செல்ல செல்ல நேரம் காலம் இல்லாமலே அவளோடு பேசிக்கொண்டே இருந்தான். வெளியில் போனால் பணம் தந்தால் தான் முடியும் என்று அடம்பிடிப்பான். அவன் அம்மாவும் கொடுத்து தொலைத்து விடுங்கள் என்று கூறுவதனால் வேறு வழியில்லாமல் கொடுப்பேன். 



ஒருநாள் அவன் அம்மா தன் தாய்வீட்டிற்கு அவசர வேலையாக போய்விட்டாள் நானும் இரண்டு பிள்ளைகளும் தான் வீட்டில் இருந்தோம். இரவு சுமார் பத்து மணி அளவிற்கு ஆயிரம் ரூபாய் பணம் தாருங்கள் நான் வெளியில் செல்ல வேண்டும் என்று கேட்டான் இந்த நேரத்தில் இவ்வளவு பணம் உனக்கெதற்கு என்று கேட்டேன். காரணம் சொல்ல முடியாது பணம் தருகிறீர்களா? இல்லையா? என்றான்.



எனக்கு ஆத்திரம் வந்து விட்டது. நான் பெற்ற பிள்ளை என்னிடம் எதிர்த்து பேசுவது கூட பெரியதாக படவில்லை காரணமே இல்லாமல் பிடிவாதம் செய்து பணம் கேட்கிறானே கேட்க கேட்க கொடுத்தால் இவன் கதி என்ன ஆவது என்ற வேகத்தில் நீ காரணம் சொல்லாமல் சல்லிகாசு கூட தரமாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டேன். 



அவன் விடவில்லை பணம் தந்தே ஆகவேண்டும் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினான். சிறிது கூட பொறுப்பில்லாமல் நீ இருப்பதை விட சாவது மேல் எனக்கு நிம்மதியாவது கிடைக்குமென்று தெரியாமல் சொல்லிவிட்டேன். மிக வேகமாக வீட்டை விட்டு போன அவன் இரவு முழுவதும் வீடுவந்து சேரவே இல்லை. எப்படியும் காலையில் வந்துவிடுவான் என்று நானும் தூங்கிவிட்டேன். 



விடியற்காலையில் வீட்டுக்கதவு அவசரமாக தட்டப்பட்டது. இரண்டு மூன்றுபேர் நின்றார்கள் என் மகன் பெயரை சொல்லி அவன் இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து இறந்து போனதாக சொன்னார்கள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல ஆகிவிட்டது. பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை கண்முன்னாலையே எரிந்து சாம்பலாகி விட்டான். எனக்கு கொள்ளி போடவேண்டிய அவனுக்கு நானே கொள்ளி போடவேண்டிய நிலை வந்துவிட்டது. 



என் மனைவி ஆறுமாதமாக அழுவதை நிறுத்தவில்லை ஒழுங்காக சாப்பிடுவதும் கிடையாது. எப்போதும் அவன் நினைவாகவே இருக்கிறாள். பணத்தை கொடுக்க மாட்டேன் என்று என் பிள்ளையை கொன்று விட்டிர்களே என்று அவள் கதறும் போது என் அடிவயிறு குலுங்குகிறது. என் பிள்ளைக்கு நல்லது செய்வதாக நினைத்து கொண்டு தானே செய்தேன் அது விவரீதமாக போய்விட்டதே என்று எண்ணும் போது வாழவே பிடிக்கவில்லை. 



என் மனைவி என் பிள்ளை சாவுக்கு நீதான் காரணம் என்று சொல்லும் போது எனக்கு ஆத்திரம் வரவில்லை உதிரத்தில் சுமந்து பெற்ற அவளுக்கு தான் ஒரு பிள்ளையின் அருமை தெரியும். அவன் சாவுக்கு காரணமாகி விட்ட என்னை அவள் கொலை கூட செய்யலாம் அதில் தவறு இல்லை.



அவனை நினைத்து எனக்கு உறக்கம் என்பதே வரவில்லை எங்கும் பார்த்தாலும் அவனின் உருவமே தெரிகிறது. பணம் தராமல் என்னை கொன்றுவிட்டாயே அப்பா என்று அவன் கேட்பது போல இருக்கிறது. பெட்டியில் உறங்குகின்ற பணம் என் பிள்ளையை திருப்பி தருமா நிச்சயம் தரவே தராது. அவன் தவறுகள் செய்தால் என்ன ஒருநாள் இல்லை என்றாலும் ஒருநாள் திருந்துவான் என்று நான் இருந்திருக்க வேண்டும் ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது போல நடந்து கொண்டேன். 



ஐயா சுவாமிஜி எனக்கு அதிகமாக எழுத தெரியவில்லை உங்களிடம் என்ன கேட்பது என்றும் தெளிவாக புரியவில்லை என் மகன் ஆத்மா சாந்தி அடைந்து விட்டதா அல்லது சாந்தி அடையாமல் அலைந்து கொண்டிருக்கிறதா? அவன் ஆத்மா நல்ல நிலையை அடைய நான் என்ன செய்ய வேண்டும் மீண்டும் அவன் என் குடும்பத்தில் வந்து பிறப்பானா? என்பதை தயவு செய்து பார்த்து சொல்லவும். 



இப்போது நான் ஆவிகளோடு பேசவில்லை என்று காரணம் காட்டி என்னை புறக்கணித்து விடாதீர்கள் நீங்களும் என்னை புறக்கணித்து விட்டால் நான் பயித்தியமாகி விடுவேன். நீங்கள் என்ன கேட்டாலும் நான் தருகிறேன் எதை வேண்டுமானாலும் செய்கிறேன் தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள் ஆறுதல் தாருங்கள். 


இப்படிக்கு 

சோமசுந்தரம் 
நாகர்கோவில் 




    யா சோமசுந்தரம் அவர்களே உங்கள் எழுத்து ஒவ்வொன்றிலும் உணர்சிகள் கொப்பளிக்கிறதே தவிர அறிவு பூர்வமாக நீங்கள் சிந்தித்திருப்பதாக நான் நினைக்கவில்லை புத்திர சோகம் என்பது எவ்வளவு கொடுமையானது என்பது எனக்கு தெரியும் பல நாடு நகரங்களை வெற்றிகொண்டு மாற்றான் தலைகளை தேங்காய்களை போல வெட்டி வீழ்த்திய மாமன்னர்கள் கூட புத்திர சோகத்தால் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். ஏன் நமது தசரத சக்கரவர்த்தி புத்திரனை பிரிந்ததனால் உயிரையே விட்டிருக்கிறார். அவர்களே அப்படி எனும் போது நீங்கள் ஒருசராசரி மனிதர் உங்களுக்கு எவ்வளவு சோகம் இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் சில உண்மைகளை உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமை என்று நினைக்கிறேன். 

நீங்கள் பணம் கொடுக்காமல் உங்கள் மகனை சாகடித்து விட்டதாக நினைப்பது பெரிய தவறு பல நேரங்களில் ஒரு தந்தைக்குரிய கடமையை சரிவர செய்யாமல் அன்று மட்டுமே உங்கள் கடமையை செய்திருக்கிறீர்கள் என்று சொல்வேன். கிராமத்தில் முருங்கையை முரித்து வள, பிள்ளையை அடித்து வள என்று சொல்வார்கள். அதாவது நன்றாக வளர்ந்த முருங்கை மரத்தை வருடத்திற்கு ஒருமுறை சிறிய கிளைகளையும் இலைகளையும் முறித்துவிட வேண்டும். அப்படி முறித்தால் தான் மரம் நன்றாக காய்க்கும் குழந்தைகளும் முருங்கை மரத்தை போன்றவர்கள் தான். நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் தாறுமாறாக வளர்ந்து எந்த பயனும் இல்லாமல் போய்விடுவார்கள். 

நீங்களும் உங்கள் மனைவியும் அவன் ஒருமுறை வீட்டை விட்டு ஓடியதனால் மீண்டும் அவன் ஓடக்கூடாது என்ற எண்ணத்தில் அளவுக்கதிகமான இடம் கொடுத்து அவன் கெட்டு போக வழி செய்து விட்டீர்கள். அவன் தவறுகள் செய்யும் போதெல்லாம் அவ்வபோது திருத்தி இருக்க வேண்டும். கேட்ட நேரமெல்லாம் பணத்தை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்க கூடாது. அவன் தவறுகளை ஒளிந்து மறைந்து செய்ய வில்லை. உங்கள் கண்ணுக்கு நேராகவே பகிரங்கமாக செய்திருக்கிறான். அப்படி இருந்தும் அதை கண்டிக்காதது உங்களது அறிவீனம். 

மேலும் உங்களை போன்ற பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுப்பது என்பது அவன் கேட்ட நேரமெல்லாம் கேட்ட பொருளை எல்லாம். வாங்கி கொடுப்பது என்று நினைக்கிறீர்கள். சிறிய பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியாது. அதை பெரியவர்கள் தான் தெரிய வைக்க வேண்டும். அவன் கேட்கிறான் என்பதற்காக கொள்ளிகட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்ள கொடுத்துவிட முடியுமா? இன்றைய தலைமுறை கெட்டு போவதற்கு உங்களை போன்ற பொறுப்பில்லாத பெறோர்கள் என்று துணிந்து சொல்லலாம். 

திருத்த வேண்டிய நேரத்தில் திருத்தாமல் இப்போது அழுது புலம்புவதில் அர்த்தமில்லை அறிவுபூர்வமாக சிந்தித்து பார்த்தால் அவன் சாவுக்கு அவனது முட்டாள் தனமே காரணமே தவிர நீங்கள் அல்ல உங்கள் ஸ்தானத்தில் நான் இருந்திருந்தால் இதைவிட கடினமாக நடந்திருப்பேன். எனவே நீங்கள் வீணான கற்பனையில் மனதையும் உடம்பையும் கெடுத்து கொள்வது புத்திசாலித்தனம் ஆகாது. 

நீங்கள் பரவாயில்லை ஒருமகன் போனாலும் இன்னொருமகன் இருக்கிறான் சிலபேருக்கு இருந்த ஒரே ஒரு மகன் கூட கடவுளால் பறிக்கப்பட்டு விடுவான். அவர்கள் நிலைமையை சற்று எண்ணி பாருங்கள் உங்கள் துயரம் ஒன்றுமே இல்லாதது என்பது புரியும். நீங்கள் அவன் ஒருவனுக்கு மட்டும் தந்தை அல்ல இன்னொரு மகன் இருக்கிறான் அவனுக்காக நீங்கள் வாழ்ந்தே ஆக வேண்டும். அவனை நினைத்து பார்க்காமல் இறந்தவனையே நினைத்து கொண்டு இவனையும் கஷ்டப்டுத்தாதீர்கள். ஒரு தாயின் உள்ளம் பிள்ளையை பறிகொடுத்தால் அவ்வளவு சீக்கிரம் ஆறாது. காலம் செல்ல செல்ல மனபுண் ஆரதுவங்கும். மனைவிக்கும் மகனுக்கும் தெம்பையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டிய நீங்களே அழுது புலம்பிக்கொண்டு திரிந்தால் எல்லாம் கெட்டு விடும். 

நான் என் வழிகாட்டும் ஆத்மாவின் மூலம் தெரிந்தவரையில் உங்களது மகன் ஆன்மா இன்னும் சாந்தி அடையவில்லை முட்டாள் தனமாக காலத்தை முடித்து கொண்டோமே என்று ஏங்கி கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு உயிர் பிரிந்து ஒரு வருடத்திற்கு பிறகே அது சாந்தி அடைவதும் அடையாததும் தெரியும். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது அவனுக்கான முறைப்படியிலான கர்மாக்களை செய்து வாருங்கள் அது போதும். 

நமது பகுதியில் ஒரு தவறான பழக்கம் இருப்பதாக சொல்லலாம். இறந்து போன உயிர் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரியாக இருந்தால் அதற்கான கிரிகைகளை சரிவர செய்வது கிடையாது. கல்யாணம் ஆனவர்களுக்கே கிரிகைகள் செய்ய படுகிறது. இது முற்றிலும் தவறு வேண்டுமானால் திருமணம் ஆகாமல் இறந்து போனவர்களுக்கு ஒருசில கிரிகைகளை நிறுத்தி கொள்ளலாமே தவிர மாதாந்திர வருடாந்திர கர்மாக்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. காரணம் மரித்த பிறகு ஆத்மா ஆத்மாவாக மட்டுமே இருக்கிறதே தவிர குடும்பஸ்தன் பிரம்மச்சாரி என்று வித்தியாசமாக இருப்பது இல்லை.

மேலும் ஒரு ஆத்மா மறுஜென்மம் எடுப்பது எங்கே எப்போது என்று நம்மால் கணித்து சொல்ல இயலாது. அது இறைவனின் சித்தபடி அவரவர் கர்மாவை பொறுத்து அமையலாம். அது தான் முன்பு பிறந்த குடும்பமாகவே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வேறு குடும்பமாகவும் இருக்கலாம் நாடாகவும் இருக்கலாம். ஒருவேளை பழைய குடும்பமாகவும் இருக்கலாம். அதை நம்மால் சொல்ல இயலாது. 

நீங்கள் உங்கள் மகனுக்காக எதையாவது செய்ய நினைத்தால் உங்கள் மகனை போல ஊதாரித்தனமாக நடக்கும் பிள்ளைகளை திருத்த பாருங்கள். அவர்களுக்காக பிரயத்தனம் எடுத்து பாடுபடுங்கள் அது உங்கள் மகனின் ஆத்மாவையும் சாந்தியடைய செய்யும் பல குடும்பங்களையும் வாழ வைக்கும் வார்த்தைகளால் எந்த மருந்து போட்டாலும் ஆறாத உங்கள் மனபுண் திருபாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் திருவருளால் ஆறட்டும் ஆறுதல் அடையட்டும்.உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன்.





Contact Form

Name

Email *

Message *