Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதகப்படி யாரை நாய் கடிக்கும்...?



     குருஜி ஐயா உங்களோடு ஒரு அபூர்வ தகவலை பரிமாறி கொள்ள விரும்புகிறேன். சென்ற ஜூன்மாதம் என் நண்பனின் திருமணத்திற்காக கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள கவுந்தபாடி என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன். அதை ஒரு கிராமம் என்று சொல்வதை விட பெரிய ஊர் என்றே சொல்லலாம். அங்குள்ள மக்கள் எல்லோரிடமும் மிகவும் அன்பாக பழகுகிறார்கள். புதியதாக செல்லும் விருந்தாளிகளை அவர்களை போல் உபசரிப்பவர்கள் இப்போது நாட்டில் மிக குறைவு. 

அந்த ஊரில் பாட்டையன் என்று ஒருவரை சந்தித்தேன். அவருக்கு முப்பது வயது இருக்கலாம். பார்ப்பதற்கு ஒல்லியாக உயரமாக இருந்தாலும் திடகாத்திரமாக இருந்தார். விவசாயம் செய்வதே அவரது முக்கிய வேலை என்பதனால் உழைப்புக்கு ஏற்ற உடலுரம் இருந்தது. அவரிடம் ஒரு அதிசயம் அவரை இதுவரை பதினெட்டு முறை நாய் கடித்திருக்கிறது. இவர் நாய்க்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்தால் கூட. நாய்கள் இவரை தேடி தேடி கடிக்கிறது. சகலவிதமான பாதுகாப்போடு தெருவில் போனாலும் நாய்கள் இவரை உறுமலுடன் முறைத்து பார்க்கின்றன. மனிதர் பாவம் நாய்களை கண்டாலே பயந்து நடுங்குகிறார். இதனால் இவர் தனது தோட்டத்தை விட்டு அதிகமாக வெளிவருவது இல்லையாம். 

சிறிய வயது முதல் இன்றுவரை காரணமே இல்லாமல் இவரை நாய் துரத்தி துரத்தி கடிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை சிறிய வயதில் விளையாட்டு தனமாக நாய்களை கல்லால் அடித்திருந்தால் கூட அடிபட்ட நாய் தானே கடிக்க வரும். சம்மந்தமே இல்லாமல் இத்தனை வருடம் கழித்தும் நாய்கள் குறிவைத்து இவரை கடிப்பது ஏன்? என்று புரியவில்லை அதை பற்றி இவரிடம் கேட்டால் நான் எந்த காலத்திலும் நாய்களை அடித்தது இல்லை. ஒதுங்கியே போவேன் இருபது வயது வரைக்கும் எந்த நாயும் என்னை கடித்தது இல்லை முதல் முறையாக பவானிக்கு போக பஸ் நிலையத்தில் காத்திருந்த போது சாலை ஓரமாக சும்மா படுத்திருந்த நாய் ஒன்று தீடிர் என்று என்னை கடித்தது அன்று முதல் இன்றுவரை நாய்கள் அனைத்தும் என்னை பகைவனாகவே பார்க்கிறது. காரணம் என்னவென்று புரியவே இல்லை. என்று சொல்கிறார். 

எதாவது சாமி குற்றமாக இருக்குமென்று இவர் உறவினர்கள் சொன்னார்கள் அதனால் பைரவர் கோவிலுக்கும் சென்று வருகிறார் தினசரி வீட்டில் பைரவருக்கு பூஜையும் செய்கிறார். ஒரு ஜோதிடரிடம் இதை பற்றி கேட்டாராம். அதற்கு அந்த ஜோதிடர் உன் ஜாதகப்படி நீ நாய்களால் கடிபட வேண்டும் அது உன் தலையெழுத்து மாற்றுவது கடினம் என்று சொல்லி விட்டாராம். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஒருவரை நாய் கடிப்பதாக கூட ஜாதகத்தில் கிரகங்கள் இருக்குமா? நாயால் கடிபடுவதை ஜாதக மூலம் அறிய முடியுமா? இதை தயவு செய்து நீங்கள் விளக்கவும். 
இப்படிக்கு 

ராஜேந்திரன் சென்னை



       கிராமங்களில் தெருவுக்கு தெரு முன்பெல்லாம் நிறைய மரங்கள் இருக்கும் அந்த மரங்களில் காகங்கள் கூடுகட்டி அழகாக வாழும். ஒரு மரத்தில் காகம் கூடுகட்ட ஆரம்பித்து விட்டது என்றால் மீண்டும் மீண்டும் அதே மரத்தில் தான் கட்டும் காற்றடித்து கூடு விழுந்தாலும் மனிதர்கள் அதை பிரித்து போட்டாலும் அசரவே அசராது என் இடத்தை காலிசெய்ய நீ யார் நான் நகர மாட்டேன் என்று நடைபாதை ஓரம் கடை வைத்திருக்கும் வியாபாரி அடம்பிடிப்பது போல காகங்களும் அடம்பிடித்து கூடு கட்டும். 

கிராம சிறுவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். மே மாதத்தில் பள்ளிக்கூடம் விடுமுறை விட்டு விட்டால் போதும் காடு கரையெல்லாம் சுற்றி வருவார்கள். சுட்டெரிக்கும் வெயில் அவர்களை தொட்டு கூட பார்க்காது உடலெல்லாம் வியர்த்து கொட்டினாலும் துடைத்து விட்டு விட்டு மரப்பொந்துகளில் கிளிகுஞ்சை தேடுவார்கள் பெற்றவர்கள் இவர்களை அலைந்து திரிந்து தேடி கண்டுபிடித்து சோறு கொடுப்பதற்குள் பெரும்பாடு பட்டு விடுவார்கள். அப்படி பட்ட அசகாய சூரர்களான சிறுவர்களுக்கு காக்கை கூடு என்றால் கொண்டாட்டம் தாங்க முடியாது. கண்ணில் பட்ட கூடுகளை மரத்தில் ஏறி பிரித்து போட்டு குஞ்சுகளையோ முட்டைகளையோ எடுக்காமல் விடமாட்டார்கள். 

அவர்கள் காக்கை கூடுகளை பிரிக்கும் போது எங்கிருந்தோ ஏராளமான காக்கைகள் வந்து கூடிவிடும். மரத்தை சுற்றி சுற்றி பறந்து கூடுகளை எடுக்க போகும் பையன்களை தங்களது கூறிய அலகுகளால் முடிந்த மட்டும் கொத்தும் நம்ம வாண்டுகள் அதற்கு அஞ்சுவார்களா என்ன? ஆனாலும் காகங்கள் விட்டு விடாது. இந்த போராட்டத்தில் சில சிறுவர்களின் கண்களை கூட காகங்கள் கொத்தி காயபடுத்தி இருக்கிறது. தங்கள் கூடுகளை எடுக்கும் சிறுவர்களை அவ்வளவு சீக்கிரம் காக்கா மறக்காது. அவர்களை எங்கு பார்த்தாலும் துரத்தி துரத்தி கொத்தும். அவிழ்ந்து விழும் கால்சட்டையை பிடிக்க முடியாமல் பிடித்து கொண்டு அறை நிர்வாணமாக காகங்களுக்கு பயந்து சிறுவர்கள் ஓடும் காட்சி கண்கொள்ளாதது 

காகங்களை போலதான் நாய்களும் தெருவில் ஆயிரம் பேர் நடந்து போனாலும் சும்மா படுத்து உறங்கும் நாய் தன்னை போனமாதத்தில் கல்லால் அடித்த ஒருவர் நடந்து வந்தால் போதும் ஒருவித உறுமலுடன் தாக்குவதற்கு பின்வாங்க துவங்கி விடும். தன்னை அடித்தவர்களை மட்டுமல்ல விந்தையான ஆடை அணிந்தவர்களையும் நாய்கள் சர்வ சாதாரணமாக துரத்தும். நம்ம மனிதர்களுக்கு ஒருவன் நம்மோடு என்ன மனநிலையில் பேசுகிறான் என்பது எளிதில் புரியாது ஆனால் நாய்களுக்கு மனித மனதின் எண்ணவோட்டம் மிக எளிதாக தெரிந்து விடும். தடவி கொடுக்க அருகில் வருபவனையும் சங்கிலியால் கட்டி போட அருகில் வருபவனையும் சுலபமாக அது அடையாளபடுத்தி கொண்டுவிடும். அதே போலவே தன்னை பார்த்து பயப்படுகிறவர்களையும் அவற்றால் அறிந்து கொள்ள முடியும். ஒருவன் தனக்கு அஞ்சுகிறான் என்று அதற்கு தெரிந்தவுடன் உற்சாகம் வந்து துரத்தவோ குறைக்கவோ ஆரம்பித்து விடும். 

இது நாய்களின் இயற்கை சுபாவம் ஆனால் சில நேரங்களில் இந்த இயற்க்கை தன்மை மாறி ஒருநபரை மட்டும் நாய்கள் குறிவைத்து கடிக்க துவங்கும். உள்ளூர் நாய் அவரை பார்த்து குறைக்கிறது கடிக்க வருகிறது என்றால் மனுஷன் அதை எப்போதாவது அடித்திருப்பார் என்று சொல்லலாம். ஆனால் வெளியூர் நாய்கள் கூட இந்த நபர்களை பார்த்தவுடன் கடிப்பதற்கு பாய்ந்து வரும் இது நாய்களை அவர் எதாவதுவொரு ஜென்மத்தில் துன்பபடுத்தி இருப்பார் அதன் விளைவாக இந்த பிறவியில் நாய்களை அவரை கஷ்டபடுத்துகிறது என்று சிலர் சொல்வார்கள். இது முற்றிலும் சரியான கருத்து என்று சொல்ல முடியாது. 

நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்று நமக்கு தெரியும். சாதாரண தெருநாய் கூட ஒருவருடத்திற்கு முன்பு சாதம் போட்டவனை அடையாளம் வைத்து கொண்டு வாலாட்டுகிறது என்றால் அது அதனுடைய மோப்ப சக்தியாலே ஆகும் மனிதனுக்கு மல்லிகை பூ வாசம் மயக்கம் தருவது போல நாய்களுக்கு கருவாடு மீன் மற்றும் அழுகிய மாமிச வாசனை மிகவும் பிடிக்கும். அந்த வாசனை அடிக்கும் இடத்தில் நாய்கள் வட்டமிடுவதை பார்த்திருக்கிறோம். நாய்களிடத்தில் உள்ள மோப்ப சக்தியை பயன்படுத்தி குற்றவாளிகளை கூட கண்டுபிடிக்க படுவது இன்று சாதாரணமாகி விட்டது. மனிதனை மட்டுமல்ல வெடிகுண்டுகளை கூட நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. தக்க பயிற்சி கொடுத்தால் தனது மோப்ப சக்தியால் மனிதனை விட அதிகபடியான காரியங்களை நாய்களால் செய்ய முடியும். 

நமது மனித உடம்பில் வியர்வையால் ஒருவித வாடை வீசிக்கொண்டே இருக்கும். ஒருவருக்கு இருக்கும் உடல் நாற்றம் இன்னொருவருக்கு இருப்பது இல்லை உதட்டு ரேகையும் கைவிரல் ரேகையும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது போல வியர்வை நாற்றம் கூட வேறுபடும். சிலருடைய உடம்பில் ஒருவிதமான கற்றாளை நாற்றம் வீசும் அது நன்றாக குளித்தால் கூட போகாது சிறிது நேரம் இல்லது போலிருக்கும் அந்த கற்றாளை நாற்றம் உடனே வந்து விடும். இது பலரை முகம் சுளிக்க செய்தாலும் ஒரு மனிதனுக்காக அவனுடைய நாற்றத்தை சகித்து கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை சக மனிதனுக்கு இருக்கிறது. சக மனிதன் நாற்றத்தை சகித்து கொள்கிறான் என்றால் நாய்கள் கூட சகிக்க வேண்டுமா என்ன? 

யார் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் அடைந்து இருக்கிறானோ அவன் உடம்பில் கற்றாளை நாற்றம் மிக அதிகமாக வீசும் நாய்க்கு இந்த நாற்றம் அழுகிய மாமிசத்தை நினைவு படுத்தும். தான் விரும்பி உண்ணுகின்ற மாமிசத்தை இவன் வைத்திருக்கிறான் தனக்கு தராமல் பதுக்குகிறான் என்ற எண்ணத்தில் சும்மா கிடக்கும் நாய் கூட அவனை வந்து கடிக்க துவங்கும். பலமுறை நாய்களால் கடிபட்டவர்களுடைய ஜாதகத்தை நன்றாக அலசி பாருங்கள் எதாவது ஒருவகையில் சுக்கிரன் பலம் இழந்து அசுபதன்மை அடைந்து கட்டாயம் இருப்பான். 

இப்படி சுக்கிரன் கெட்டவர்கள் நாய்களால் கடிபடதான் வேண்டுமா? அதிலிருந்து மாற்றம் இல்லையா? என்று நினைப்பவர்களுக்கு ஒரு சுலபவழி இருக்கிறது ஒவ்வொரு வெள்ளி கிழமையும் சுக்கிர ஓரையில் உடம்பில் நன்றாக வெயில் படும்படி கால்மணி நேரமாவது இருக்க வேண்டும். சூரிய கதிர்கள் அவர்களுக்குள் அந்த நேரத்தில் புகுவதால் சுக்கிரனால் ஏற்பட்ட உடல் நாற்றம் நாளடைவில் குறைய துவங்கும். அப்படி குறையும் போது நாய்கள் இவர்களை கவனிப்பதும் குறையும். மேலும் தினசரி பைரவ வழிபாட்டை இவர்களால் செய்ய முடியாவிட்டாலும் கூட சனிகிழமை தோறுமாவது பைரவ வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும். இந்த இரண்டு பரிகாரங்களை செய்தாலே போதும் நாய்களிடம் பகைமையை மறந்து நட்போடு வாழலாம்.


Contact Form

Name

Email *

Message *