Store
  Store
  Store
  Store
  Store
  Store

கூந்தல் வளர ஜோதிடப் பரிகாரம் !




   ன் பெயர் சாவித்திரி தற்போது நான் மலேசிய நாட்டில் வாழ்ந்து வருகிறேன். நான் எழுதபோகும் இந்த கடிதத்தை பற்றி தயவு செய்து யாரும் கோபம் கொள்ள வேண்டாம். நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது அதை எல்லாம் விட்டு விட்டு இதை போய் எழுத வந்திருக்கிறாளே என்று யாரும் வருத்தப்படவும் வேண்டாம். காரணம் கடுகளவு உள்ள எறும்புக்கும் அதனளவு உள்ள பிரச்சனை பெரிது என்று குருஜி அறிவார். 

ஐயா குருஜி அவர்களே எனக்கு ஒரே ஒரு மகள் தவமாக தவமிருந்து பெற்ற பிள்ளை என்று சொல்வார்களே அதே போலத்தான் என் மகளும். அறிவிலும் சரி அழகிலும் சரி அவள் மிக சிறந்தவள். யார் மனதையும் புண்படுத்த மாட்டாள் அதிர்ந்து கூட பேச மாட்டாள் தங்கமென்றால் தங்கம் அப்படி ஒரு சொக்க தங்கம். அவளை பற்றி பேசுவது என்றாலும் எழுதுவது என்றாலும் மணிகணக்காக செய்து கொண்டே இருப்பேன். 

என் அன்பு மகளுக்கு பதினைந்து வயது முடிந்து மார்ச் மாதம் வந்தால் பதினாறாவது வயது பிறக்கிறது. இந்த வயதில் தான் பெண் குழந்தைகளுக்கு தனது உருவத்தை பற்றியும் உடைகளை பற்றியும் அதிக சிந்தனை வருமென்று படித்திருக்கிறேன். ஆண்டவன் சோதனையோ என்னவோ இந்த வேளையில் தான் என் மகளுக்கு ஒரு புதிய பிரச்சனை தோன்றி இருக்கிறது. 

அவள் படுக்கும் போதும் குளிக்கும் போதும் தலை துவட்டும் போதும் ஏராளமான தலைமுடி கொட்டுகிறது. அடர்த்தியாக அருவி போல இருந்த குழந்தையின் தலைமுடி சல்லடை போல ஆகிவிட்டது. குருஜி நீங்கள் அறியாதது அல்ல சாதாரணமாகவே பெண்களுக்கு திருமணம் என்று வந்தால் ஆயிரம் குற்றம் குறைகளை கண்டுபிடித்து பேசி மனதை நோக செய்வார்கள். 

அதுவும் அவலட்சணமாக பெண் அமைந்து விட்டால் கேட்கவே வேண்டாம். வெறும் வாயை மென்றவனுக்கு அவல் கிடைத்தது போல ஆகிவிடும். ஒரு பெண்ணின் அழகை தீர்மானிப்பது அவளது கூந்தல் அந்த கூந்தல் குட்டையாகவோ மெல்லியதாகவோ இருந்தால் கல்யாண சந்தையில் விலை போவது கடினம். ஒரு பெண்ணை பெற்ற தாயின் மனவேதனை என்னவென்று நீங்கள் அறியாதது அல்ல. எனவே எனது குழந்தையின் தலைமுடி நன்கு வளர அவளது எதிர்காலம் நல்ல முறையில் இருக்க எதாவது பரிகாரம் சொல்லுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். 
சாவித்திரி 

மலேசியா 



    னக்கு தெரிந்த ஒரு அம்மையார் அவருக்கு ஆண்குழந்தைகள் சில இருந்தாலும் பெண் குழந்தை ஒன்றே ஒன்றுதான் தனது பெண்ணின் மீது அந்த அம்மையாருக்கு அதீதமான பாசம் இருந்தது. அந்த பெண்ணின் ஒவ்வொரு செயலையும் பாராட்டி ரசிப்பார். அவளின் அழகான கூந்தலை கூட. 

நீண்டு வளர்ந்த அந்த கூந்தலை தினம் தினம் சீவி முடித்து சிங்காரிப்பதில் அந்த அம்மாவுக்கு அளப்பெரிய பெருமிதம். எனது மகளின் கூந்தல் இலக்கியங்களில் வருகின்ற கூந்தல்களின் அழகை போல அழகானது இடுப்பையும் தாண்டி உட்காரும் போது தரையில் விழுந்து கிடக்கும் கூந்தலை பார்த்து கொண்டே இருக்கலாம் பசி மறந்து போகும் என்று சொல்வார்கள். 

தாயாரின் இத்தகைய வார்த்தைகளை கேட்டு கேட்டு பழக்கப்பட்ட அந்த பெண்ணும் தனது கூந்தலின் மீது அலாதியான மையல் கொண்டுவிட்டாள் பெண்ணின் அழகை தீர்மானிப்பது மண்டைக்குள் இருக்கும் அறிவே தவிர கூந்தல் அல்ல என்ற உண்மை அவளுக்கு தெரியவே இல்லை தனது அழகு எல்லாம் சுருள் சுருளான கேசத்திலேயே இருப்பதாக முடிவு செய்து விட்டாள். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மிக கடுமையான விஷ ஜுரம் வந்துவிட்டது. அதை போக்க எடுத்துக்கொண்ட மருந்து தனது வீரிய பக்கவிளைவுகளால் அந்த பெண்ணின் அழகான கூந்தலை கபளீகரம் செய்துவிட்டது. 

தலைமுடியோடு தனது வாழ்நாளே போய்விட்டதாக அவள் முடிவு செய்தாள் மிக கடுமையன மன அழுத்த நோய் அவளை தாக்கவே ஒருநாள் இரவு தான் செய்வது என்னவென்று அறியாமலே தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்து கொண்டாள். 

அழகின் மீது பெண்ணுக்கு ஈடுபாடு இருபது தவறல்ல ஆனால் அந்த ஈடுபாடு வெறியாக மாறும் போது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டு விடுகிறது. அந்த அம்மையார் மட்டும் தனது மகளின் முடி வளர்வதில் செலுத்திய கவனத்தில் ஒரு சிறு பகுதியை அவள் அறிவை வளர்ப்பதில் காட்டியிருந்தால் தனது ஒரே மகளை பறிகொடுத்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. இந்த கேள்வியை கேட்கும் அம்மையார் இந்த சம்பவத்தை சரியான முறையில் மனதில் வாங்கி கொண்டால் நன்றாக இருக்கும். 

இனி விஷயத்திற்கு வருவோம் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் நமது வாழ்வின் அகமும் புறமுமாக செயல்படுகிறது. அதாவது நமது மனதையும் அறிவையும் மட்டுமல்ல உடல் உறுப்புகளையும் கிரகங்கள் தங்களது ஈர்பாற்றளால் கட்டுபடுத்துகிறது. அதன் அடிப்படையில் பார்க்க போனால் மனிதனது உடம்பில் வளரும் ரோமங்களை செவ்வாய், ராகு, குரு, சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் கட்டுபடுத்துகின்றன. 

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்தில் ராகு, சனி, செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு முடி வளர்வதில் சிக்கல் வரும். குருவும் சுக்கிரனும் அமர்ந்தால் அழகான அடர்த்தியான கவர்ச்சியான தலைமுடி அமையும். உங்கள் மகளது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அதில் எந்த கிரகம் அவளது லக்கினத்தில் இருக்கிறது என்பதை பாருங்கள் சுபகிரகங்கள் இருந்தால் கவலை இல்லை மற்ற கிரகங்கள் இருந்தால் கண்டிப்பாக முடி பிரச்சனை வரும். 

பொதுவாக அடர்த்தியான தலைமுடி அமைய தினசரி உணவில் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை கூடியமானவரை பச்சையாகவும் ஜூசாக இல்லாமல் மென்று சாப்பிட்டு வாருங்கள். மிக முக்கியமாக மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். கண்ட கண்ட எண்ணெய்களையும் சாம்பூகளையும் தலையில் தேய்க்க கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. 

மேலும் துவரை உழுந்து கொண்டக்கடலை எள்ளு வெள்ளை மொச்சை பயிறு ஆகியவற்றில் தலைக்கு ஒருபிடி எடுத்து பனை ஓலை கூடையில் செம்மண் வைத்து அதில் அந்த விதைகளை மொத்தமாக போட்டு அதிகம் வெளிச்சம் இல்லாத பூஜை அறையில் வைக்க வேண்டும். இதை வியாழகிழமை குரு ஹோரையில் செய்ய வேண்டும். அன்று முதல் அடுத்த வியாழன் வரையில் தினசரி காலை உச்சி பொழுது மாலை ஆகிய மூன்று வேளைகளில் மண்ணில் போட்ட விதைகளுக்கு சுத்தமான தண்ணீர் தெளித்து கற்பூரம் சாம்பிராணி போன்றவைகள் காட்டி வணங்கி வரவேண்டும். 

எட்டு நாள் முடிந்த பிறகு வளர்ந்த விதைகளை தனியாக பிரித்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் சென்ற பிறகு குளிக்க வேண்டும். இப்படி செய்தால் கெட்டு போன கிரகங்களின் ஈர்ப்பு ஆற்றல் சரியான முறையில் கிடைத்து கூந்தல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இந்த விதைகளை தூப தீபம் காட்டி வணங்கும் போது மகாலஷ்மியை தியானிக்க வேண்டும். லஷ்மி காயத்திரி கூட மூன்று முறை சொல்லலாம் 

இப்படி வருடத்தில் மூன்று முறை செய்து வந்தால் அதை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்தால் கைமேல் பலன் கண்டிப்பாக உண்டு. நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்லது நடக்கும்.


Contact Form

Name

Email *

Message *