குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் நாங்கள் கனடா நாட்டில் வாழ்ந்து வருகிறோம் எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மூத்தவளுக்கு இருபத்தி எழு வயதாகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை மாப்பிளை ஏதும் சரிவர அமையவில்லை வருகின்ற பையன்கள் எல்லாம் கூடிவரும் போது வெட்டிக்கொண்டு போய்விடுகிறது இங்குள்ள ஒரு ஜோதிடரிடம் கேட்டதற்கு தமிழ்நாட்டில் திருமணஞ்சேரியில் சென்று பரிகாரம் செய்யுங்கள் கல்யாணம் நடக்கும் என்கிறார் எங்கள் குடும்ப சூழல் தமிழ்நாட்டிற்கு வர இயலாத நிலையில் இருக்கிறோம் காரணம் பண நெருக்கடியே நாங்கள் இங்கேயே செய்யகூடிய பரிகாரங்கள் ஏதாவது இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா நாங்கள் சிரத்தையோடு செய்து நல்ல பலனை உங்கள் தயவால் அடைவதற்கு சித்தமாக இருக்கிறோம்.
இப்படிக்கு
அனுஷயாதேவி
கனடா
பரிகாரஸ்தலங்கள் என்று சொல்லபடுகின்ற புனித இடங்களுக்கு சென்று பரிகாரம் செய்வதில் நிச்சயமாக நல்ல பலன் இல்லாமல் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட அனைவராலும் அத்தகைய புனித ஷேத்திரங்களுக்கு சென்று வர முடிவதில்லை. அப்படி பட்டவர்கள் திக்கு தெரியாமல் விழிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் இருக்கின்ற இடத்திலேயே பரிகாரங்களை செய்து கொள்வதற்கு நமது முன்னோர்கள் பலவகையான வழிமுறைகளை கூறி இருக்கிறார்கள் அவற்றை இன்னதென்று அறிந்து நடைமுறை படுத்தினாலே ஷேத்திரங்களுக்கு சென்று அடையக்கூடிய பலனை இருந்த இடத்திலேயே அடையலாம்.
உதாரணமாக நம் வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் இருந்தால் மஞ்சள் கிழங்கு எழு, பாக்கு ஏழு, வெல்லக்கட்டி எழு, மஞ்சள் தடவப்பட்ட பூணூல் எழு, மஞ்சள் வண்ணத்து மலர்கள் ஏழு, ஒருரூபாய் நாணயம் ஏழு, மஞ்சள் துணி எழுபது சென்டிமீட்டர், கொண்டை கடலை எழுபது கிராம் ஆகிய பொருள்களை சேகரித்து சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் இருக்கின்ற படத்தின் முன்னால் தாம்பாள தட்டில் வைத்து எனது மகளின் திருமண தோஷத்தை விலக்கி அவளுக்கு நல்ல வரன் அமைய துணை செய்வாய் என்று சுவாமியிடம் பிராத்தனை செய்து கற்பூர தீபம் காட்டி நாற்பது நாட்கள் பெண்ணின் தாய் வணங்கி வரவேண்டும் அல்லது தகப்பன் சகோதரி சகோதரன் கூட செய்யலாம்.
நாற்பது நாட்கள் இப்படி செய்து நாற்பத்தி ஓராவது நாளில் அந்த பொருள்களை எடுத்து கொண்டு சிவாலயம் சென்று கோவில் குருக்களுக்கு அவைகளை தானமாக கொடுத்து நம்மால் முடிந்த தட்சனையும் வைத்து அவரிடம் பெண்ணை ஆசீர்வாதம் வாங்கிவர செய்ய வேண்டும். அப்படி செய்யும் பச்சத்தில் நூற்றி இருபது நாட்களுக்குள் திருமணம் கண்டிப்பாக நடக்கும். இந்த பூஜையை வளர்பிறையில் முதல்வார வியாழன் கிழமையில் துவங்க வேண்டும்.
இதை போல திருமணம் ஆகாத ஆண்களுக்காக வெள்ளி கிழமையில் பூஜையை துவங்க வேண்டும். பரிகார பொருள்களாக சந்தன கட்டிகள் எழு, லவங்கம் எழு, கற்கண்டு எழு, பூணூல் எழு, ஒரு ரூபாய் நாணயம் எழு, வெள்ளை நிறத்து மலர்கள் எழு, பச்சரிசி எழுபது கிராம், வெள்ளை துணி எழுபது சென்டிமீட்டர் போன்றவைகளை எடுத்து சிவன் பார்வதி படத்திற்கு முன்னால் பெண்களுக்கு பிராத்தனை செய்வதை போலவே நாற்பது நாட்கள் செய்து சிவாலைய குருக்களிடம் தானம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ள வேண்டும். இதுவும் மிக கண்டிப்பாக திருமண தடையை விலக்கி நல்ல பலனை தரும். இதில் கவனிக்க வேண்டியது இந்த பரிகாரங்கள் இந்திய மண்ணில் வாழ்பவர்களுக்கு பொருந்தாது அதற்கு வேறு பரிகாரங்கள் இருக்கின்றன. கடல் தாண்டிய பிரேதேசங்களில் வாழ்பவர்களுக்கே இது பொருந்தும். நம்பிக்கையோடு செய்யுங்கள் இறைவன் கைகொடுப்பான்.