- மருத்துவர் ராமதாஸ் கைது செய்யபட்டிருப்பதை ஒட்டி வடதமிழ் நாட்டில் பல பகுதிகளில் கலவரங்கள் நடந்துவருவது எதை காட்டுகிறது?
தமிழ்நாட்டு அரசியல் தொண்டர்கள் ஆரோக்கியமான அரசியல்பாதையை இன்னும் அறியாமலையே இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. எனக்கு பிடித்தமான தலைவரை அரசாங்கம் கைது செய்கிறபோது எனது எதிர்ப்பை உண்ணா நோம்பு உள்ளிட்ட அறவழி போராட்டங்களின் மூலம் வெளிபடுத்த வேண்டுமே தவிர அரஜாகமான முறையில் வெளிபடுத்துவது எந்தவகையிலும் நாகரீக சமுகத்திற்கு ஏற்புடையது அல்ல.
பேருந்துகளை வழிமறித்தல் நெருப்பு வைத்தல் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவைகள் கட்சிகளை வளர்ப்பதற்கோ தலைவர்களின் செல்வாக்கை உயர்த்துவதற்கோ பயன்படாது. மாறாக அந்த கட்சிகளின் மீது பொதுமக்களின் அதிருப்தி அதிகமாக வளரவே செய்யும் இன்று சாலையில் இறங்கி தகராறு செய்பவர்கள் மட்டுமே ஓட்டுபோடுவது இல்லை ஊருக்கு போகமுடியாமல் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நடுவழியில் அவதி படுகிறார்களே அந்த பொதுஜனங்கள் தான் ஒட்டு போடுபவர்கள் அவர்களை தொல்லை படுத்தி ஒட்டு வாங்கலாம் என்று நினைப்பதோ கட்சியை வளர்க்கலாம் என்று கனவு காண்பதோ நிச்சயம் பலிக்காது.
- ராமதாஸ் அவர்கள் கூறுவது போல உண்மையாகவே வன்னியர் சமூகம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறதா?
ராமதாஸ் வன்னியர் சங்கம் நடத்திய காலத்தில் சங்கத்தை வளர்ப்பதற்கு காரசாரமான சில எதிரிகளை உருவாக்கினால் தான் வளர முடியும் என்று கணக்கு போட்டு ஹரிஜனங்களை வன்னியர்களுக்கு போட்டியாளர்கள் என்று ஒரு சித்திரத்தை உருவாக்கி விட்டார். அப்போது ஏற்பட்ட வன்னியர் ஹரிஜனங்கள் மோதலில் அவர் நன்றாகவே லாபத்தை அனுபவித்தார். வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக ஆக்கியபோது வன்னியர்களிடம் மட்டுமல்ல மற்ற ஜாதிகளிடமும் ஆதரவு பெற்றால் தான் வளர்ச்சியை காணமுடியும் என்ற நோக்கில் ஹரிஜனங்களுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்தார்.
பல கட்சிகளில் முதுகில் ஏறி சவாரி செய்து ஓரளவு தன்னையும் தனது கட்சியையும் பலபடுத்தி கொண்டபோது தெரிந்தோ தெரியாமலோ திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார். இந்த அறிவுப்பு பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ஒரு தற்கொலை அறிவுப்பு என்றே சொல்லலாம் காரணம் ஆரம்ப காலத்தில் ஐயா ராமதாஸ் அவர்களை வன்னியர்களில் பலர் உண்மையாகவே நம்பினர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் தங்கள் சமூகம் முன்னேறுவதற்கு அவர் உதவியாக இருப்பார் என்று கனவு கண்டனர்.
ஆனால் நாளடைவில் வன்னியர்களின் கனவு பொய்யாகி விட்டது ராமதாஸ் அவர்கள் தன்னையும் தன் குடும்பத்தாரையும் வளர்த்து கொள்வாரே தவிர தங்கள் சமூகத்திற்கு எதுவும் செய்ய மாட்டார் என்ற உண்மையை தெளிவாகவே புரிந்து கொண்டனர் இதன் விளைவாக அவரிடமிருந்து பல வன்னியர்கள் விலகி விட்டார்கள். இந்த நிலையில் கூட்டணி இல்லை என்று அவர் அறிவித்தது கட்சியின் செல்வாக்கை நிறையவே குறைத்து விட்டது. அதனால் மீண்டும் வன்னியர் மத்தியில் கட்சிக்கு நம்பிக்கையை ஏற்படுத்த ஜாதி உணர்வை தூண்டி விட அவர் விரும்புகிறார் அதன் விளைவாகவே எப்போதும் இல்லாத அபாயம் வன்னியர்களுக்கு இப்போது வந்திருப்பதாக பிரச்சாரம் செய்கிறார் அதன்விளைவே இந்த கலவரங்கள்.
- அப்படி என்றால் ஹரிஜனங்கள் மீது ராமதாஸ் கூறும் குற்றசாட்டுகள் அனைத்தும் ஆதாரம் அற்றவையா?
ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் ஐயா ராமதாசோ அவர் கட்சியினரோ ஹரிஜனங்களின் மீது பொத்தாம் பொதுவாக குற்ற சாட்டுகளை வைக்கவில்லை விடுதலை சிறுத்தை கட்சியின் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு எதிராக போராடுவதாக தான் சொல்கிறார்கள் ஒட்டுமொத்த ஹரிஜன மக்களின் பிரதிநிதி போல திருமாவளவனை ஊடகங்கள் காட்டுவதனாலையே ஒரு குறிப்பிட்ட இனத்தாரை பகவைவர் மாதிரி சித்தரிப்பதாக நமக்கு தோன்றுகிறது.
ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு ராமதாஸ் மட்டுமே பிரதிநிதி அல்ல அதே போலவே திருமாவளவன் மட்டுமே ஹரிஜனங்களின் காப்பாளரும் அல்ல இவர்கள் இருவருமே தங்களுக்கு பின்னால் தங்கள் சமூகமே அணிதிரண்டு நிற்பதாக ஒரு மாய காட்சியை உருவாக்கி அரசியல் நடத்திகொண்டிருக்கிறார்கள். எந்தவொரு சமுகமும் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் வெறும் போராட்டங்களை மட்டுமே நடத்தினால் போதாது தாழ்ந்து கிடக்கும் சமுகத்திற்கு கல்வி தொழில் பயிற்சி போன்றவைகளை வழங்க வேண்டும் அவைகளை இந்த ஜாதி தலைவர்கள் தங்கள் மக்களுக்கு கொடுப்பது கிடையாது அது தேவையென்று எண்ணி பார்ப்பது கூட கிடையாது.
தங்களை சுற்றி ஒரு கூட்டம் கொடிபிடித்து கோஷம் போடவேண்டும் அதன்விளைவாக பதவியும் அதிகாரமும் தங்களை வந்தடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள் விபரம் புரியாத அப்பாவி தொண்டர்கள் தலைவர்களே அல்லாத இந்த தலைவர்களை நம்பி தங்களது வாழ்நாளை வீணடித்து கொள்கிறார்கள். ஜாதியையும் ஜாதிய அபிமானத்தையும் விலக்க முடியாது என்று அரசாங்கம் நினைத்தால் குறைந்த பட்சம் ஜாதி சங்கங்கள் அரசியலில் நுளைவதையோ ஜாதியின் பெயரால் அரசியல் நடத்துவதையோ தடை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட தலைவர்கள் சமூகத்திற்கு தொல்லைதராமல் இருப்பார்கள்.
- ராமதாஸ் சொல்கிறபடி காதல் நாடகம் ஆடி சமூகத்தை கெடுக்கும் பழக்கம் இல்லை என்று உங்களால் கூற இயலுமா?
வசதிபடைத்தவன் வீட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்து காரியமானவுடன் தெருவில் விட்டு போகும் சமூக குற்றம் இந்த நாட்டில் பலகாலமாகவே நடந்து வருகிறது அது ஜாதிவிட்டு ஜாதியும் நடைபெறுகிறது ஜாதிக்குள்ளேயும் நடைபெறுகிறது இந்த சமூக குற்றம் ஒரு குறிப்பிட்ட கட்சி காரர்களால் திட்டமிட்டு செய்யபடுகிறது என்று ராமதாஸ் கூறுகிறார் அந்த இடத்தில் தான் அவருக்கும் நமக்கும் வேற்றுமை வருகிறது இந்த குற்றத்தை செய்யாத ஜாதியே தமிழ்நாட்டில் இல்லை அதற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து தாக்குவது எந்த வகையிலும் சரியாகாது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை ராமதாஸ் அவர்கள் உண்மையாகவே எதிர்க்க விரும்பினால் முதலில் அதை அவர் தன் சொந்த கட்சியிலிருந்து துவங்கலாம் இப்படிப்பட்ட காரியங்களை செய்பவர்களை தன் கட்சியில் இடமில்லை என்று வீட்டுக்கு அனுப்பலாம் இன்றைய வளர்ச்சியை பற்றி கவலை படுவதை விட்டு விட்டு நாளைக்கும் தனது கட்சி வளர வேண்டும் என்று ராமதாஸ் அவர்கள் நினைத்தால் சீர்திருத்தம் பெறவேண்டிய எத்தனையோ விஷயங்கள் நாட்டில் இருக்கிறது அவைகளை எடுத்து கொண்டு அதற்காக போராடினாலே பாட்டாளி மக்கள் கட்சியை பற்றிய நல்ல எண்ணம் மக்கள் மத்தியில் வளரும் அதை விட்டு விட்டு பழைய பாதையில் நடக்க விரும்பினால் ராமதாஸ் கண்டிப்பாக அதிகமான கவலையை வருங்காலத்தில் சந்திப்பார்.