சென்னை என்பது வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய ஒரு பட்டணமே தவிர அதற்கென்று தனியான பாரம்பரியம் கிடையாது என்று சிலர் கூறுகிறார்கள். பல பெருமைகள் வாய்ந்த தமிழ்நாட்டுக்கு தலைநகரமாக இருக்கும் சென்னைப்பட்டிணம் வெள்ளைக்காரர்களால் உருவானது என்றால் அதில் தமிழனுக்கு என்ன பெருமை இருக்கிறது? மற்ற புகழ்பெற்ற தமிழ் நகரங்களை தலைநகராக மாற்றிக்கொள்வது தானே சிறந்ததாக இருக்கும். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கூற இயலுமா?
இப்படிக்கு,
சுரேஷ்,
திருச்சி.
தமிழ் சினிமாக்களின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறதே கோடம்பாக்கம் அந்த கோடம்பாக்கத்திற்கு அப்பெயர் வருவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? மேரு என்ற மலையை சிவபெருமான் ஒருமுறை வில்லாக வளைத்தாராம். மலை என்ற பொருளுக்கு கோடு என்ற வேறொரு பெயரும் உண்டு. சிவன் மலையை வில்லாக வளைத்ததின் நினைவாக தான் கோடன்பாக்கம் என்று அந்த பகுதி ஆதி காலத்தில் அழைக்கப்பட்டதாம். பிறகு காலம் செல்லச்செல்ல கோடன்பாக்கம் என்ற வார்த்தையில் உள்ள "ன்" என்பது மறைந்து போய் "ம்" என்ற எழுத்து உட்கார்ந்து கொண்டு கோடம்பாக்கம் ஆனது. இந்த மாதிரியான பழைய பெருமைகள் எல்லாம் நம்மில் பலருக்கு தெரியாது.
இப்படி தெரியாமல் இருப்பதற்கு நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் காரணம் அல்ல. காரணம் நமது பெருமைகளை நமக்கு சொல்ல வேண்டிய அரசாங்கம் நமது சுய வரலாற்றை கற்பிக்காமல் இர்வின்பிரபு, ஒளரங்கசிப் போன்ற அந்நியர்கள் பற்றிய வரலாறுகளை தான் நமக்கு கற்பித்து இருக்கிறது. எனவே இது அரசாட்சி நடத்துபவர்கள் மீதுள்ள குற்றம்.
கோடம்பாக்கம் என்ற ஒரு சிறிய பகுதிக்கே இத்தனை பாரம்பரியமான வரலாறுகள் உண்டு என்றால் ஒட்டுமொத்த சென்னையும் எங்கிருந்தோ வெள்ளைக்காரர்களால் தூக்கிவரப்பட்ட நிலம் அல்ல. இந்த மண்ணின் புனிதம்மிக்க ஒரு நிலபகுதியே எனும் போது அதற்கு தனியான பெருமைகள் இல்லாமலா போய்விடும் வேண்டுமானால் மதராஸ், சென்னை என்ற பெயர்கள் யாரோ நமக்கு சம்பந்தம் இல்லாத ஐரோப்பியனால் வைக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அதன் பெருமை முழுக்க முழுக்க நம்மை சார்ந்ததே ஆகும்.