அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் மிக நன்றாக துணிகள் தைப்பேன், துணிகளின் மீது பூ வேலைபாடுகள் செய்வதில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. அதனால் குழந்தைகளுக்கான ஆடைகளை வடிவமைத்து தைத்து விற்பனை செய்யலாம் என்று விரும்பினேன். அதற்கு என்னிடம் போதிய பணம் இல்லாததால், என் தமையனாரிடம் பணம் கேட்டேன் அவரும் தருவதாக கூறி இருக்கிறார். எனக்கு தருகிறேன் என்று சொன்ன நேரமோ என்னவோ தெரியவில்லை அவருக்கும் சரியான விதத்தில் பணம் வந்து கிடைக்கவில்லை என் ஜாதகப்படி நான் அந்த தொழிலை செய்ய முடியுமா? என் அண்ணன் அதற்கு உதவி செய்வாரா? என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள் உங்கள் அறிவுரைப்படி நடந்து கொள்கிறேன்.
இப்படிக்கு,
முத்து லஷ்மி,
தூத்துக்குடி.
உதவிகள் என்பது இரண்டு வகையானது ஒன்று நாம் வலிய சென்று கேட்டு பெறுவது, இன்னொன்று நம்மை வலிய வந்தடைவது. முதலில் கூறிய உதவியை நமது முயற்சியின் பயன் என்று எடுத்துக்கொண்டாலும், இரண்டாவதாக சொல்லப்பட்ட உதவியை நமது பூர்வ புண்ணியம் என்று எடுத்துக்கொண்டால் அது தவறல்ல.
ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பதாவது இடத்தை ஆராய்ச்சி செய்தால் அவர் சென்ற பிறவியில், புண்ணிய கர்மங்கள் செய்திருக்கிறாரா? பாவ கர்மங்கள் செய்திருக்கிறாரா? என்பதை தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பாவம் கர்மத்தை அறிந்து கொள்வதற்கு பனிரெண்டாம் இடத்தை பார்க்க வேண்டும் என்றாலும் ஒன்பதாம் இடத்தை கவனத்தில் வைத்து கொள்வது நல்லது.
எதிர்பாராமல் வருகிற உதவிகளை ஒன்பதாம் இடத்தை வைத்து தெரிந்து கொள்வது போல எதிர்பாராமல் வருகிற கஷ்டங் களை எட்டாம் இடத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஒன்பது, எட்டு ஆகிய இரண்டு இடங்களையும் கூட்டாக ஆய்வு செய்தால் நாம் கேட்டு பெறுகின்ற உதவிகள் கிடைக்குமா? கிடைக்காதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் ஜாதகப்படி சகோதர ஸ்தானம் மிக நன்றாக இருக்கிறது. நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் பெறுகின்ற அன்பையும், அரவணைப்பையும் தமையனாரிடம் பெறுவீர்கள் என்று உறுதியாக கூறலாம். உங்கள் அமைப்பின்படி கேட்டு பெறுகிற உதவி கண்டிப்பாக உங்களுக்கு உண்டு என்றாலும் தற்போதைய கிரகங்களின் அமைப்பின்படி சற்று தாமதமாக உதவி கிடைக்கும். இன்னும் இரண்டொரு மாதங்கள் பொறுத்திருங்கள் கண்டிப்பாக அண்ணன் உதவி செய்வார் ஆண்டவனும் அருள் செய்வார்.