ஐயா, என் மகன் இப்போது பனிரெண்டாவது வகுப்பு படிக்கிறான். அடுத்த வருடம் அவனை கல்லூரியில் சேர்க்க வேண்டும். கணினி துறையில் அவனை படிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன். அவன் ராசிப்படி அது சரியாக வருமா? அவன் நன்றாக படிப்பானா? படித்தவுடன் அவனுக்கு வேலை கிடைக்குமா? என்பதை தயவு செய்து கூறுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
குணசேகரன்,
காட்பாடி
இன்று பல பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை. படிப்பு என்பது அறிவை வளர்ப்பதற்கு என்ற நிலை மாறி வயிறை வளர்ப்பதற்கே படிப்பு என்ற நிலை வந்துவிட்டது. இது காலத்தின் கொடுமை என்பதை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் படிக்கும் பிள்ளைகளுக்காவது அவர்கள் விரும்புவதை படிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் போய்விட்டது.
நான் டாக்டராக ஆசைப்பட்டேன். என் அப்பாவின் சம்பாத்தியம் அதற்கு ஒத்துவரவில்லை. எனவே டாக்டராக வேண்டிய நான் கம்பவுண்டராக கூட அல்ல. மளிகைக்கடை வைப்பவனாக ஆகிவிட்டேன். எனவே நீ டாக்டராகவே ஆகி தீர வேண்டும் என்று குழந்தைகளை கட்டாயப்படுத்த துவங்கி அவர்களின் சுய தன்மைகளுக்கு சமாதி கட்டி அவர்களது வாழ்க்கையையும் சூன்யமாக்கி விடுகிறோம். எனவே இந்த நிலையை நாம் மாற்றி கொள்ளவில்லை என்றால் வருங்கால சமூகம் இதயமற்ற சமூகமாகவே மாறிவிடும்.
நம் பிள்ளைகளுக்கு என்ன படிப்பு வரும், அவர்கள் எதை விரும்புவார்கள், என்பதை அவர்கள் ஜாதகத்தை பார்த்து கூட தெரிந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் உங்கள் குமாரனின் ஜாதகத்தை பார்க்கும் போது அவனுக்கு ஆசிரியர் படிப்பே விருப்பம். அதில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றத்தை அடைவான் என்று தெரிகிறது எந்த ஜாதகத்திலும் லக்கினம் அல்லது ஐந்தாம் இடம் அல்லது தொழில் ஸ்தானம் ஆகிய இடங்களில் சந்திரன், புதன், குரு ஆகிய கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் அவர்கள் நல்ல அசிரியர்களாக வருவார்கள், வளருவார்கள் எனலாம்.