பெரியவர்கள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செய். காரணம் கேட்காதே! என்று கூறுகிறார்களே இது சரியா? சர்வதிகாரம் போல் தெரிகிறதே?
இப்படிக்கு,
வினோத்குமார்,
கன்னியாகுமரி.
இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்போனால் மார்பில் அடித்து கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு அழு என்று நமது பெரியவர்கள் சொல்கிறார்கள். இது என்ன அசிங்கமாக மார்பில் அடித்து கொண்டு சத்தம்போட்டு அழுவது? அழுவதாக இருந்தால் மெளனமாக அழலாமே அது தானே நாகரிகம் என்று நமக்கு தோன்றும்.
நாகரீகம் என்று தோன்றுவதெல்லாம் நல்லது என்று முடிவு செய்துவிட முடியாது. மெளனமாக அழலாம் அதில் தப்பு இல்லை ஆனால் அப்படி அழுவதனால் மனதில் அழுத்தமும், பாரமும் அதிகரிக்கும்.
யாருக்காவது மாரடைப்பு வந்தால் மருத்துவர் முதலில் என்ன செய்கிறார். மார்பை நன்றாக அடித்து அழுத்தி விடுகிறார் அல்லவா? அந்த சிகிச்சையின் மாற்று வடிவம் தான் மாரடித்து ஒப்பாரி வைப்பது.
துக்கம் நமது நெஞ்சை அழுத்தும் போது பலகீனமான இதயம் நின்று கூட போகும் அதை தவிர்பதற்கு தான் பெரியவர்கள் அப்படி சொன்னார்கள். இப்படி அவர்கள் கூறுகிற ஒவ்வொரு காரியத்திலும் எதாவது நல்லதும், நல்ல கருத்தும் இருக்கும் அதனால தான் உன் அறைகுறை அறிவை பயன்படுத்தி கேள்வி கேட்டு கால நேரத்தை வீணடிக்காதே என்று சொல்கிறார்கள்.