குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் மிகவும் இக்கட்டான நிலையில் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன், எனக்கு இருபத்தி இரண்டு வயது ஆகிறது. என் ஜாதகத்தை ஒரு ஜோதிடர் பார்த்து விட்டு உனக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே விவாகரத்து நடக்கும். அந்த தோஷம் இருக்கிறது அதை நிவர்த்தி செய்யாவிட்டால் மிகவும் கஷ்டபடுவாய் என்று கூறி விட்டார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது நீங்கள் என் கஷ்டம் தீர சரியான வழிகாட்டுங்கள்.
இப்படிக்கு,
தீபா நரேந்திரன்,
டெல்லி.
கூடலும், ஊடலும் காதலுக்கு இன்பம். சண்டை இல்லாத சம்சாரம் இல்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். நாமும் அதை தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம் எந்த சண்டைக்கு வேண்டுமானாலும் பஞ்சாயத்து செய்யுங்கள் புருஷன், பெண்டாட்டி சண்டையில் மட்டும் ஒதுங்கி நில்லுங்கள் என்று அனுபவஸ்தர்கள் கூறுவதும் உண்மையாகவே இருக்கிறது.
பரமசிவன், பார்வதி துவங்கி நம் அம்மா, அப்பா வரை சண்டை போடாத தம்பதிகளே இல்லை என்று கூறலாம். சாப்பாட்டிற்கு ஊறுகாய் போல, சம்சாரத்திற்கு சண்டை இருக்கலாமே தவிர ஊறுகாயே உணவாகி போனால் ஆரோக்கியம் என்பது மரண படுக்கையில் விழுந்து விடும்.
துரதிருஷ்டவசமாக சிலரது குடும்ப வாழ்க்கை, காலையில் துவங்கி இரவு வரையிலும் போர்க்களமாகவே இருக்கிறது. சமாதான காற்று அவர்கள் வீட்டிற்குள் ஜன்னலை திறந்தாலும் வருவதில்லை. கதவை திறந்தாலும் வருவதில்லை. கூரையே வேண்டாமென்று அப்புறபடுத்தினாலும் அண்டி வந்து பார்ப்பதில்லை அந்த அளவு ரவுத்திரமான வாழ்க்கையாகி விடுகிறது.
யார் ஜாதகத்திலும் குருவும், சுக்கிரனும் ஒரே வீட்டில் இருந்தால் நிச்சயம் அவர்களது மணவாழ்க்கை சர்ச்சைக்குரிய வாழ்க்கையாகி விடுகிறது. அதுவும் குரு சுக்கிரன் சேர்ந்திருந்து, ஏழாவது வீட்டின் அதிபதி கெட்டு போய்விட்டால் கேட்கவே வேண்டாம் அவர்களது வாழ்க்கை நீதிமன்ற படிக்கட்டுகளில் அலைகழிக்கபட்டு அலங்கோலமாகி விடுகிறது.
இப்படிப்பட்டவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மிக கண்டிப்பாக சென்று இறைவனை வழிபட்டு வருவதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். இவர்களது திருமணம் மிக கண்டிப்பாக வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் ஆலயத்திலேயே நடக்க வேண்டும். அப்படி நடந்தால் நிச்சயம் நல்லது நடக்கும். கடவுள் சக்தியை விட சிறந்தது எதுவுமே இல்லை.