குருஜி அவர்களுக்கு வணக்கம். எங்களுக்கு திருமணமாகி பத்துவருடங்கள் ஓடி விட்டன. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. மருத்துவம், மாந்த்ரீகம் என்று பார்த்து சலித்து விட்டோம். இனிமேலும் ஓடுவதற்கு மனதிலும் உடம்பிலும் தெம்பில்லை கடைசி கட்டமாக உங்கள் வாக்கை நம்பி இந்த கடிதம் எழுதுகிறோம். எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? அதற்காக முயற்சிகளை தொடரலாமா? வேண்டாமா? என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் கூறி விடும்படி உங்கள் பாதம் தொட்டு விரும்பி கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு,
தாமோதரன் தம்பதிகள்,
வில்லிவாக்கம்.
உங்களது நியாயமான நறுக்கு தெரித்தது போன்ற கேள்விக்கு அங்கே இங்கே செல்லாமல் குறுக்கு நெடுக்கு போகாமல் நேருக்கு நேராக பதில் சொல்லி விடுகிறேன். ஒரு ஜாதகத்தில் சூரியனை தவிர மற்ற பாவ கிரகங்கள் ஐந்து அல்லது ஒன்பதாவது இடத்தில் அமைந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையாது என்று கூறுவார்கள். உங்கள் ஜாதகமும் அப்படியே இருக்கிறது எனவே உங்களுக்கு குழந்தைகள் பிறக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக சொல்லி விடலாம்.
அதே நேரம் உங்களது ஐந்தாமிடம் புதனுக்கு சொந்தமானது. அந்த இடத்தில் சனி வந்து அமைந்தால் மிக கண்டிப்பாக தத்து குழந்தையை பெறலாம். மருத்துவ செலவு அது இது என்று அலைந்து உடம்பையும் கெடுத்து உள்ளத்தையும் கெடுத்து வீணாக அலைவதை நிறுத்தி விட்டு சுவிகார குழந்தை ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அதை உங்கள் சொந்த குழந்தையாக பாவித்து வளர்த்து வாருங்கள் நல்லதை செய்யும் நாராயணன் உங்களுக்கு மட்டும் பள்ளத்தை காட்டிவிடுவானா என்ன?