குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது ஜாதகத்தில் ஜென்மத்தில் சனி இருக்கிறது. எட்டாமிடத்தில் ராகு இருக்கிறது. ஆறாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது. இப்படி ஜாதகம் இருக்க பிறந்தவர்கள் வாழும் காலம் வரையில் நோய் நொடியோடுதான் இருப்பார்கள். அவர்களுக்கு ஆயுள் காலமும் குறைவு என்று சொல்கிறார்களே அது உண்மையா? உண்மை என்றால் அதற்கான பரிகாரம் என்ன?
இப்படிக்கு,
மதனகோபாலன்,
நாகர்கோவில்.
நீங்கள் கேட்டிருப்பது மிக நல்ல கேள்வி. கேட்க வேண்டிய கேள்வியும் கூட. ஆனால் கேட்கும் நேரம் தான் மிகவும் தவறு. காரணம் இந்த கேள்வியை முப்பது வருடத்திற்கு முன்பு கேட்டிருக்க வேண்டும். மிகவும் காலம் தாழ்த்தி கேட்கிறீர்கள் இப்போது நீங்கள் அறுபது வயதை கடந்தாகி விட்டது. ஏறக்குறைய வாழ்வின் பெரும் பகுதியை கழித்தாகியும் விட்டது. இதுவரை நீங்கள் அனுபவித்த நோய் நொடி என்ன? சரீரம் ரீதியிலான கஷ்டங்கள் என்ன என்பதை யோசித்து பாருங்கள். பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று உங்களால் சொல்ல முடியும்.
ஒரு கிரகம் இன்ன இடத்தில் இருக்கிறது என்பதனாலேயே அதனுடைய பலன் நடந்தாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஜோதிட சாஸ்திரம் அப்படி கூறவும் இல்லை. கிரகத்தினுடைய தன்மையையும் சேர்த்து கணித்தால் மட்டுமே முழுமையான பலனை தெரிந்து கொள்ளலாம். அரைகுறையாக ஜோதிடத்தை தெரிந்து தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது நல்லதல்ல.